என் மலர்
நீங்கள் தேடியது "தனியார் கல்லூரி"
- தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
- சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியில் வழங்கப்பட்ட உணவை அருந்திய நிலையில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்று உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் உணவு சமைக்க, குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி கல்லூரியில் இளையோர் இன்னும் ஏற்றமுற சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி
- 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர்
திருச்சி:
திருச்சி புனித வளனார் கல்லூரியில் புனித லூர்தன்னை ஆலய வளாகத்தில் உள்ள தெரேசா மக்கள் மன்றத்தில் இஞ்ஞாசியார் வழியில் உயர்வையே நோக்கிய உன்னதம் என்ற மைய நோக்கோடு இளையோர் இன்னும் ஏற்றமுற... என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்பா இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர். புனித லூர்தன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், இஞ்ஞாசியாரின் தாராள மனம் வேண்டி என்ற ஜெபத்துடன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
இக்பா அமைப்பின் செயலாளர் முனைவர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ வரவேற்றார். புனித வளனார் அறிவியல், கலைமனைகளின் அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ ஆசியுரையில் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பங்குகளில் இருந்து 91 இளையோர் பங்குபெறுவது இக்பாவின் வெற்றி வரலாற்றின் முதல் படி என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.
முதல் அமர்வு கருத்துரை யாளராக மாநில ஆலோசகர் மரிய அன்னராஜ் ஐக்கப் இளையோருக்கான இனிகோ என்ற தலைப்பில் ஆளுமைப் பண்புகளை மேலும் மேலும் வளர்த்து உயர்வடைய உன்னத வழிமுறைகளை விளக்கினார்.
இரண்டாவது அமர்வில் மதுரை லொ யோலா தொலைக்காட்சி இயக்குநர் சேவியர் அந்தோனி எழுவீர், எழுவீர் இளையோரே என்ற தலைப்பில் மதர் தெரேசா வின் தாராளமனதுடன் ஆற்றிய அரும்பணி பற்றியும், தன்னுடைய நிறை, குறைகளை இறைவனிடம் ஒப்படைத்து, அல்லவை நீக்கி நல்லவை பெருக்கும் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகளை கண்ணதாசன் அற வுரைகளைப் பற்றியும், மனித வாழ்வு கெடும் பல்வேறு நிலைகள் பற்றிய பழமொழிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
இளைய கடவுள் எங்கள் இயேசு என்ற மறையுரை யுடன் திருப்பலியை திருச்சி குருகுல முதல்வர் எல்.அந்துவான் நிறைவேற்றினார். இளையோரே முக்காலத்தையும் இணைக்கும் தலைவர்கள் என்று வாழ்த்தினார்.
மூன்றாம் அமர்வில் திருச்சி கார்மல் சமூக சேவை மைய இயக்குநர் சுரேஷ் வாருங்கள், இளையோரே, வரலாறு படைக்க என்ற தலைப்பில் இன்றைய மாய உலகில், இளையோர் பெற வேண்டிய தலைமைப் பண்புகளை இடுக்கண் என்ற குறும்படம் மூலம் விளக்கினார்.
இறுதி அமர்வில் திருச்சிலுவை கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி இளை யோரோடு எனது அனுபவம் என்ற தலைப்பில் இயேசுவோடு பவுல் வாழ்ந்ததைக் குறி ப்பிட்டு நாமும் அப்படியே இயேசுவின் வல்லமையில் என்றும் நிறைவாழ்வு வாழவேண்டும் என்று எழுச்சியுரை ஆற்றினார்.
இக்பா தலைவர் முனைவர் கே.எஸ்.அருள் சாமி நன்றி தெரிவித்து பேசுகையில், வருங்காலத்தில் இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, ஆளுமைத்திறன், இனிகோ வழியில் ஆன்மீகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று சிறந்த இறைமக்களாக விளங்க இக்பா மாதந்தோறும் பயிற்சிகளை சிறந்த வல்லுநர் குழு மூலம் நடத்தும் என்று உறுதி அளித்தார்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும், சேவியர் அந்தோனி எழுதிய இளையோருக்கான இனிகோ என்ற ரூ.500 மதிப்புள்ள அரிய நூல் முனைவர் ச.சாமிமுத்து குடும்பத்தினரின் நிதிய ஏற்பாட்டால் இலவசமாக வழங்கப்பட்டது.
- அரசு கல்லூரிகளில் மே 9-ந்தேதி முதல் கிடைக்கும்.
- மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
- திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
- தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் ஏ. ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நகராட்சி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட வேலப்பன்சாவடி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் பல இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி.
இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கிடந்தது. அதனை மோப்ப நாய் கவ்வி எடுத்தது.
அதனை போலீசார் கைரேகை நிபுணர்களிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகப்படும் படியான யாருடைய நடமாட்டமும் இல்லை. எனவே கொலையாளிகள் கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அதன்பேரில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
- 2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் 2019-ம் ஆண்டில் 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் 17 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தன.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் 7 ஆயிரம் பி.டெக். இடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சென்டாக் கவுன்சிலிங்கில் 10 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே பங்கேற்றுள்ளது.
இதில் 3 கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்புமா? என்பதே சந்தேகமாக உள்ளது. எனவே இந்த 3 கல்லூரிகளும் விரைவில் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. பி.டெக். படிப்புகள் மீது மாணவர்களிடையே மோகம் குறைந்துள்ளது.
2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொருளாதார மந்த நிலையின்போது வேலை வாய்ப்பு குறைந்தது. தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தவர்கள் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனால் என்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்தது. அதேநேரம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் சில என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டன.
இதனால் கடந்த 5 ஆண்டில் 7 என்ஜினீயரிங் கல்லூரிகள் கலை கல்லூரிகளாக மாறிவிட்டன. இந்த ஆண்டு 3 அரசு என்ஜினீயரிங் கல்லூரி, 10 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 264 இடங்கள் உள்ளன.
இதில் 50 சதவீத இடங்களாவது நிரம்பினால்தான் கல்லூரிகளை நடத்த முடியும். இல்லாவிட்டால் கல்லூரிகளை நடத்த முடியாது. இதனால் அரசு ஒதுக்கீடு இடங்களும் குறையும். மாதந்தோறும் தொழில்நுட்பம் மாறுகிறது.
அதற்கு ஏற்ப மாணவர்களை கல்லூரிகள் தயார்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோரிடம் எழுந்துள்ளது.






