என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் மா சுப்பிரமணியன்"
- தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரில் இன்று தமிழ்நாடு அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.11.82 கோடி மதிப்பில் 16 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.7.45 கோடி மதிப்பில் 13 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினர்.
விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது :-
புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருவதால் வருமுன் காக்கும் விதமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் ரூ. 5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்கு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரத்தில் செய்து கொள்ளலாம்.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
உயர் வருவாய் பிரிவினரும் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்பட 13 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல மேலும் 9 மாவட்டங்களில் கட்டண சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை கட்டணம் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு ரூ. 1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மொத்தம் 28 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ 9.50 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் ஏறக்குறைய 50 ஆயிரம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன. இக்குழந்தைகளைக் கண்காணித்து, பராமரிப்பதற்காக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
தஞ்சாவூர் மருத் வக்கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65.80 கோடி மதிப்பில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ 23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவை தமிழக முதல்வர் தஞ்சாவூருக்கு அடுத்த மாதம் வருகை தரும்போது திறக்கவுள்ளார். அரசு ராசாமிராசுதாரர் மருத்துவமனை மேலும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.
சென்னை:
சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது
அதன்படி மாதிரி மருத்துவ முகாம் இன்று நடந்தது. அதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார். அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.
இந்த மாதம் முதல் ஜனவரி 2026 வரை திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் ஈ.சி.ஜி. இதய சுருள் அறிக்கை, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் சோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
- மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் நேரில் ஆஜராகவில்லை.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.
இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மா.சுப்பிரமணியன் சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அடுத்த விசாரணைக்கு மா.சுப்பிரமணியன், காஞ்சனா ஆகியோர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போதும் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 23-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருவரும் ஆஜராக வேண்டும். தவறினால் அவர்கள் இல்லாமலேயே வழக்கின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
- எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
- 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 10 நாட்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றார்.
- தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
- தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
சென்னை:
சென்னை கிண்டியில் மாருதி நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று இருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழ் வழியில் மருத்துவக் கல்வி இல்லை என மத்திய உள்துறை அமித்ஷா குற்றம் சாட்டியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழ் வழி மருத்துவக் கல்வி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனை மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாட்டிற்கு விரைவில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார்.
- இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.
- தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:
அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் உள்ள கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை சென்னை மேயராக இருந்த போது மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்துதல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நிலஅபகரிப்பு வழக்கு இன்று மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றம் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகவில்லை. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவை கூட்டம் நடப்பதால் இன்று விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே மாதம் 6-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் அன்றைய தினம் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி ஜெயவேல் தெரிவித்தார்.
- முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
- பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை 8 மணி அளவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது கணினி மூலமாக டோக்கன் பதிவு செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ஊழியர் கணினி பழுதில் இருப்பதால் சீட்டு எடுக்க முடியவில்லை என்று கூறினார். உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருகிறார்கள்? எத்தனை மணிக்கு பணியை முடித்து செல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை அந்த பெண் ஊழியரிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பணியில் இருந்த டாக்டர்களிடம், நாள் ஒன்றுக்கு நோயாளிகள் வரும் எண்ணிக்கை, எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது? பொதுவான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் அமைச்சர் விசாரித்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகம், கட்டுப்போடும் இடம், எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் எடுக்கும் அறைகளில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள பொது நோயாளிகள் பிரிவுக்கு சென்றார்.
அங்கே சிகிச்சையில் இருந்த மூதாட்டி உள்பட நோயாளிகளிடம் சிகிச்சைகள் தரமாக வழங்கப்படுகிறதா? உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனை வளாகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த கூடன்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு பதிலளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
- 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று சென்னை திரு.வி.க. நகர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. தாயகம் ரவி பேசும் போது, நகர்ப்புறநலவாழ்வு மையம் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 708 நகர்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இவற்றில் 2023-ம் ஆண்டு 500 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 208 மையங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
- ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.
கோவை:
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை கோவை மாவட்டம் புகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த டாக்டர்களுடன் இணைந்து திடீர் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அவசரகால இதய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்த நோயாளிகளின் பெயர் விவரங்களை குறித்துக்கொண்டார்.
பின்னர் அவர்கள் சம்பந்தப்பட்ட நோயளாளிகளை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். மேலும் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து கொண்டு இருந்த நோயாளிகளிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்களின் சிகிச்சை முறை எப்படி இருந்தது, உங்களின் உடல்நிலை தற்போது எந்த வகையில் மேம்பட்டு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
அதன்பிறகு அந்த நோயாளிகளிடம் தொடர்ந்து மேல்சிகிச்சை எடுத்துக்கொள்கிறீர்களா என்ற தகவலையும் உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போது அவர்கள், தாங்கள் பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பதாக அமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு இருந்த மேலும் பல்வேறு பதிவேடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக பராமரிக்கப்படுவதுடன், முன்மாதிரி சுகாதார நிலையமாக இருப்பதாக அங்கிருந்த டாக்டர்களை பாராட்டினார்.
சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தியபோது அவருடன் மாவட்ட சுகாதார நல அலுவலர் டாக்டர் பாலுசாமி, புகலூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், உதவி மருத்துவர் டாக்டர் இலக்கியா மற்றும் நர்சுகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் சுப்பிரமணியன் ஊட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று கோவை வழியாக சென்றார். அப்போது அவர் அதிரடியாக புகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். இதனால் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
- தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
- 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மனநல சேவை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைதூர மனநல சேவை மையம் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக 14416 புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனநல ஆற்றுதல் படுத்தும் சேவை, வீடியோ பதிவு ஆலோசனை தொடர்ச்சியான வழிகாட்டு முறைகள் மனநல சேவை வழியாக அளிக்கப்படும்.
ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.
அதுபோல மன உளைச்சல் கொண்டவர்களுக்கு அதற்கான தீர்வு இதன் மூலம் வழங்கப்படும். இந்த மையத்தில் மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுதல்படுத்துபவர்கள் செயல்படுவார்கள்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை. மருத்துவமனை உரிய ஆவணங்களை மறைத்துள்ளது. அதற்காக அந்த மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
+3
- திருமணத்தையொட்டி அதிகாலையிலேயே மருத்துவமனை களை கட்டியது.
- அன்பு உபசரிப்பில் புன்னகை மகிழ சரியாக 9.15 அளவில் தீபா கழுத்தில் மகேந்திரன் தாலி கட்டினார்.
சென்னை:
இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று... என்பது போல,
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்ற பட்டதாரிகளான மகேந்திரன்-தீபா ஆகியோர் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணம் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை முன்பு உள்ள சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வேத மந்திரங்களுடன் கெட்டி மேளங்கள் முழங்க நடந்தது.
இவர்களது திருமணத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுத்து நடத்தி பரிசு வழங்கி வாழ்த்தினார்.
திருமணத்தையொட்டி அதிகாலையிலேயே மருத்துவமனை களை கட்டியது. தங்கள் வீட்டு திருமணம் போல் மருத்துவ அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் பட்டுப் புடவை மற்றும் வேஷ்டி சட்டையுடன் வந்து மணமகனையும், மணமகளையும் அலங்கரித்து திருமணம் நடக்கும் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
திருமணம் தொடங்கியது முதல் முடியும் வரை அனைத்து சடங்கு, சம்பிரதாயம் வரை அவர்களே நின்று குடும்ப விழாபோல் நடத்தி மகிழ்ந்தனர். அவர்களின் அன்பு உபசரிப்பில் புன்னகை மகிழ சரியாக 9.15 அளவில் தீபா கழுத்தில் மகேந்திரன் தாலி கட்டினார். பின்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு வெற்றியழகன் எம்.எல்.ஏ., கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் நாராயண பாபு, ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பூர்ணா சந்திரிகா வரவேற்றார்.
மணக்கோலம் கண்ட மகேந்திரன்-தீபா கூறும் போது, 'எங்கள் வாழ்க்கையில் இன்று மிகவும் சந்தோசமான மறக்க முடியாத நாள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்' என்றனர்.
- தென்காசி, மயிலாடுதுறை உள்பட 6 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
- சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை 3 விதமான கட்டணங்கள் நடைமுறையில் உள்ளது.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோய், வலி மற்றும் நாள்பட்ட நிவாரண சிகிச்சைக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் ரேடியோ அலைவரிசை சிகிச்சை கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் கருவியையும் வழங்கினார். மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் வழங்க சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ கல்வியை வட மாநிலங்களில் இந்தியில் கற்றுக்கொடுப்பதை போல் தமிழ்நாட்டில் தமிழில் கற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும்.
அதன்பிறகு கல்வியாளர்கள் ஆலோசனை பெற்று முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும்.
தென்காசி, மயிலாடுதுறை உள்பட 6 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை 3 விதமான கட்டணங்கள் நடைமுறையில் உள்ளது.
தற்போது ஸ்டான்லி ஆஸ்பத்திரி சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்கள் பயன்பெறும் வகையில் இனி முழு உடல் பரிசோதனைக்கான கட்டணம் ஸ்டான்லியில் மட்டும் ரூ.1000 மட்டுமே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.