search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ma Subramanian"

    • தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முனைவர். த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், சைதாப் பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு தோழமைக் கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொகுதியில் வீதி வீதியாக இல்லம் தோறும் சென்று வாக்குகள் சேகரித்து, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைத்து பணிகளையும் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    நிறைவாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழச்சி தங்கபாண்டியன் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதியின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்திருக்கிறார். கழகத் தோழர்கள், தோழமைக் இயக்கத் தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போது நமது வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.

    • தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது.
    • கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலி நிலத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும், ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியும் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், பரந்தாமன் எம்.எல்.ஏ., மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் நாராயணசாமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.
    • தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.

    கன்னியாகுமரி:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.

    கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 48 மணி நேரத்தில் மீட்கப்படும் இவர்களுக்கு 81 விதமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
    • திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை விரைந்து மீட்டு சிகிச்சை அளிக்க இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல் மருவத்தூரில் தொடங்கி வைத்தார்.

    இதன்படி மீட்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்படுபவர்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க 237 அரசு மற்றும் 455 தனியார் என 692 ஆஸ்பத்திரிகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 48 மணி நேரத்தில் மீட்கப்படும் இவர்களுக்கு 81 விதமான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். 2 லட்சமாவது பயனாளி குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கிறார். அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் சென்று இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விக்ரமன் மனைவி கடந்த ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார்.
    • சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

    1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்ரமன். அதன்பின்னர், பூவே உனக்காக, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இவர் கடைசியாக கடந்த 2014- ஆம் ஆண்டு வெளியான 'நினைத்தது யாரோ' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன்பின் இயக்கத்தில் இவர் பெரிதாக நாட்டம் காட்டவில்லை.


    விக்ரமன் - ஜெயப்பிரியா

    விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களை கூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டதாகவும் தன் சொத்துக்களை விற்றுதான் மருத்துவ செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவ குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன், "என் மனைவிக்கு முதுகில் செய்த தவறான அறுவை சிகிச்சையினால் அவரால் நடக்க முடியவில்லை. என் நிலைமையை விளக்கி ஒரு சேனலுக்கு பேட்டியளித்திருந்தேன்.


    இதனை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையை சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து 25-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் என் மனைவியை நேரில் வந்து பார்த்து பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அரசு துணை சுகாதார மையங்களில் 8,713 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கும் செவிலியர்கள் பணியிடங்கள் உள்ளது.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்களை தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 2,250 பேரை தேர்ந்தெடுக்க தற்காலிக அடிப்படையில் ரூ.19,500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, பொது தகவல், தகுதி நிபந்தனைகள் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற விவரங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    இந்த ஒப்பந்த செவிலியர்கள் 2016, 2017 மற்றும் 2020-ம்ஆண்டு கால கட்டங்களில் பணிக்கு வந்தவர்கள்.

    அவர்களுடைய பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14,000 ரூபாயில் இருந்து மூலம் 18,000 ரூபாயாக உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

    இந்நிலையில் செவிலியர்களுக்கு தற்போது 499 நிரந்தர செவிலியர்கள் காலியிடங்கள் உள்ளது. அந்த 499 செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்களையே நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்போது எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நடைபயிற்சி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் முன்பாக இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோநகர், ரோஜ்பூங்கா, படகு குழாம் ஆகிய பகுதிகளை கடந்து மீண்டும் அதே வழியில் மாதா கோவில் முன்பு வந்து நிறைவடைந்தது.

    இதில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், நகர போலீஸ் டி.எஸ்.பி.சத்யராஜ், மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் மண்டல தலைவர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார், பச்சிராஜ் உள்ளிட்ட மாநகர கவுன்சிலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவ பிரிவு சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி சிவக்குமார் தலைமை வகித்தார். இயக்குனர் செல்வவிநாயகம் உறைவிட மருத்துவர் சைலஸ் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் முன்னிலை வகித்தனர், பேரணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினர்.

    அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மக்கள் நலன்கருதி இதுபோன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இங்கு இந்த கடற்கரை சாலை இருபுறமும் கடல்நீருடன் மரங்கள் அடங்கிய ரம்மியமான பகுதியாக உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்.

    இரண்டாயிரம் ஆண்டில் உலக இருதய தினம் கடைபிடிக்கப்பட்டு இன்று 23-ம் ஆண்டு நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் நடைபயிற்சி தற்போது உள்ள சூழ்நிலையில் அவசியம் தற்போது குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. நமது உணவு பழக்கவழக்கங்களிலும் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். நோயற்ற வாழ்வு தான் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக கிராமப்புறங்களில் 10999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தை தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு பல உயிர்கள் காக்கப்படுகின்றன. இதுபோன்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த துறை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு செயல்படுகிறது

    நான் இங்கு 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டேன். ஆனால் நான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து நடந்து 13½ கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளேன். தினசரி இதுபோன்று நான் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

    இதனால் மூன்று வேளையும் பிடித்த உணவுகளை சாப்பிடுகிறேன். பொதுமக்கள் சத்தான பழங்கள் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். புரோட்டா, பர்கர் உள்ளிட்டவைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் தினசரி நடப்போம் நலம் பெறுவோம் என்று கூறினார்.

    அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மக்கள் நலன் தான் முக்கியம் என்ற அடிப்படையில் செயல்படும் முதலமைச்சரின் சிறப்பான பணிகளின் மூலம் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும் வகையில் நடைபயிற்சி அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. அதே போல் இதயம் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெறுகிறது. உணவு வகைகள் கட்டுப்பாட்டுடன் சத்தான உணவுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். என்று பேசினார். பின்னர் பசுமையை வலியுறுத்தி மரக்கன்று நட்டனர்.

    • சென்னையில் மட்டும் 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 1260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணியும் வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம்கள், தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    கடந்த வாரம் சைதாப்பேட்டை வார்டுகளில் இந்த முகாம்கள் நடந்தது. இதன் மூலம் 1019 புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் உறுப்பினர் அட்டை கள் வழங்கப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த தொகுதியில் முகாம்கள் நடக்கிறது. அந்த வகையில், இன்று 4 இடங்களில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டடத்தில் பயனாளிகளை சேர்க்கிற முகாம் நடைபெறுகிறது.

    முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ், பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உண்மையான பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே வரும் முன் காப்போம் என்ற திட்டம் கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கு 3 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும், சென்னையில் மட்டும் 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 1260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒவ்வொரு முகாமிலும், புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும் நடந்தது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் காப்பீட்டாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரத்து 107 குடும்பங்கள் ஆகும்.

    இப்போது பல்வேறு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு புதிய பயனாளிகள் குடும்பங்களை தேர்வு செய்கிற பணி நடைபெற்று இன்றைக்கு 1 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரத்து 38 குடும்பங்களாக உயர்ந்து உள்ளது.

    2 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 62 ஆயிரத்து 231 புதிய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ துறையின் அடுத்த கட்டமாக 'மருத்துவ ஆராய்ச்சி மையம்' டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதன்படி இங்கு ரூ.100 கோடி செலவில் ஒரு மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம், கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்ற வகையில் புதிய கட்டிடம் வர இருக்கிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி முடிவுற்றுள்ளது. திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணியும் வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மிக விரைவில் டெண்டர் விடப்பட்டு, முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

    சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்று வரும் முகாம் போல் 234 தொகுதிகளிலும் புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம் நடத்தப்படும். இதில் 100 தொகுதிகளில் ஒரே நாளில் 100 முகாம்கள் நடத்தப்படும். அந்த தொகுதிகள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா தலைமையில் நடைபெற்றது.
    • தி.முக. பிரதிநிதிகள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194- வது (அ) வட்ட தி. மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈஞ்சம்பாக்கம் 194 - வது (அ)வட்ட செயலாளர் குங்பூ எஸ். கர்ணா,194 - வது வார்டு கவுன்சிலரும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை உறுப்பினருமான கே. விமலா கர்ணா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும் 15 - வது மண்டல குழு தலைவருமான வி.இ.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 160 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ. 3000 ஊக்கத்தொகை, 2500 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பை, 25 சாலை வியாபாரிகளுக்கு நிழற்குடை, 5 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்,5 சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மாவட்ட துணை செயலாளரும் சென்னை மாநகராட்சி கல்வி குழு தலைவருமான த.விசுவநாதன், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் தாஸ், ராஜா, தியாகராஜன் மற்றும் வட்ட நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஜி.சங்கர், எ.முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.
    • உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது, அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது.

    உடனடியாக மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித அடைப்பும் இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

    • அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்
    • உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×