என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ma Subramanian"

    • திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.

    பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

    • இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதம், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3 சதவீதம் மற்றவை 10.1 சதவீதம் ஆகும். 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 214 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளி குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்.
    • வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு.

    தஞ்சாவூா்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி பிள்ளையார் நத்தம் பகுதியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 50 லட்சத்து 1-வது பயனாளிக்கு இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் மருந்து பெட்டகங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தென்னங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில், கடைக்கோடி மனிதர்களுக்கும், மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு போய் சேர்க்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி, ஒரு திட்டம் துவங்கிய பிறகு, அந்த திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா என ஆய்வு செய்வதில், நமது முதலமைச்சருக்கு நிகர் அவர்தான். இரண்டு கோடி பயனாளர்களை கடந்த நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி, அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தொற்றா நோய்களை தடுப்பதில் எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்த போது, இந்தியாவில், தமிழகம் தான் என கண்டறியப்பட்டு, யுனைடெட் நேஷன்ஸ் இன்டர் ஏஜென்சி டாஸ்க் போஸ்ட் என்ற விருது கிடைத்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடியில் இரண்டு கோடியே 50-வது லட்சம் பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு பாதிப்பினால், 2012-ம் ஆண்டு 66 பேரும், 2017-ம் ஆண்டில் 65 பேர் உயிரிழந்தார்கள். இது தான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால், உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., தான். கடந்த 11 மாதங்களில், வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். இந்த 9 பேருக்கும் இணை நோய் பாதிப்பு இருந்து, சரியான நேரத்தில் மருத்துவம் பார்த்துக்கொள்ளதாவர்கள் என தெரியவந்தது. தி.மு.க., பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில், ஒரு இலக்கு எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.

    வடகிழக்கு பருவமழையின் போது காய்ச்சல் வருவது இயல்பு. ஆனால், பெரியளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முரசொலி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
    • அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.

    சென்னை சைதாப்பேட்டையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேயராக இருந்தபோது மற்றொருவருக்கு ஒதுக்கிய நிலத்தை மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு.
    • இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 24-ல் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் என சென்னை சிறப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை அப்போது சென்னை மாநகர மேயராக இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்தார்.

    இதுகுறித்து பார்த்திபன் என்பவர் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன், காஞ்சனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த 2019-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    • நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
    • சசிகுமார், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் உடன் என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

    சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.

    அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.

    படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.

    படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில கோவில்களில் முழுமையாக கட்டணத்தை ரத்து செய்கிறோம்.
    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்தர்கள் அதிகமாக வருகின்ற திருத்தலங்களில் அவர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட ஏதுவாக கோவில்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்றைக்கு பார்த்தசாரதி கோவிலில் 2.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தோம்.

    அந்த வகையில் கோவிலின் மாடவீதியை சுற்றி வாகனங்களை அனுமதிப்பது இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் மாட வீதியில் 50 மீட்டர் தூரம் நடந்து வந்து இறை தரிசனம் செய்வதற்கும், ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதியோர் மற்றும் உடல் நலிவுற்றோருக்காக பேட்டரி கார் மற்றும் வீல் சேர்கள் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வரிசை முறையினை நீட்டித்து எவ்வித சச்சரவுமின்றி பக்தர்கள் அதிக அளவிற்கு விரைவில் தரிசனம் செய்திட திட்டமிட்டு இருக்கின்றோம்.

    வாகனத்தில் வருபவர்கள் தங்களது வாகனங்களை பி.வி.நாயகன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் ரோடு, சுங்குவார் தெரு ஆகிய இடங்களில் பார்க்கிங் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய நோக்கமிருந்தாலும், கோவில் பொருளாதார நிலை சூழ்நிலையை கருதி சிறப்பு தரிசன கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில கோவில்களில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ரூ.200 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அக்கட்டணத்தை ரூ.100 ஆக குறைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.

    சிறப்பு தரிசன கட்டணத்தை பொறுத்தளவில் அவற்றை முழுமையாக ரத்து செய்ய படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துறைசார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் எந்தெந்த கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யலாம் என கருத்துரு கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தந்த கோவிலின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சி.எம்.டி.ஏ.வை பொறுத்த அளவில் கடந்த ஆட்சியில் இருந்ததை விட இந்த ஆட்சியில் முழுமையாக தவறுகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

    தற்போது செயல்பாட்டில் இருக்கின்ற நடைமுறையில் இன்னும் என்னென்னல்லாம் மாற்றங்களை செய்தால் விரைவாக பணிகள் நடைபெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை ஆலோசித்து அம்மாற்றங்களை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், செயல் அலுவலர் கவெனிதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் சாம் ராஜதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த பரிசோதனைகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • யோகி பாபு தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்.
    • இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    இந்நிலையில், நடிகர் யோகி பாபு குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமைச்சர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


    அதில், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த விழாவில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
    • நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தரச்செய்வது என்கிற வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    நீட் விலக்குக்கான அந்த கோரிக்கை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்து. அப்போது குடியரசு தலைவர் மூலம், அவரது அலுவலகத்தின்மூலம், உள்துறை அமைச்சகம், சுகாதாரம், ஆயுஷ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு விளக்கங்களை கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். அது சம்பந்தமாக தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் விளக்கங்கள் அனுப்பப்பட்டது என்ற விவரங்களை தெரிவித்தோம். அதை அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டு, தங்களால் முடிந்ததை பரிசீலிப்போம் என தெரிவித்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல், சுற்றுச்சுவருடன் மட்டுமே இருக்கும் அந்த பணியை விரைந்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    எங்கள் கோரிக்கையை அமைச்சர் கேட்டார்.  எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடு ரூ.1400 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது ரூ.1900 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கான கன்சல்டன்ட் நியமிக்கவேண்டும், வரைபடம் தயாரிக்க வேண்டும். அதற்காக ஒப்பப்புள்ளி கோரப்பட்டுள்ளது, விரைவில் அந்த பணியை தொடங்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

    கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது மதுரையில் பணிகள் தொடங்கியபிறகு, கோவையில் உள்ள சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என அமைச்சர் கூறினார்.

    மேலும், மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கவிருப்பதாகவும், அதற்குப் பிறகு நல்ல ஒப்புதல் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

    30 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இது நல்ல யோசனை, கொள்கை அளவில் ஒப்புக்கொள்கிறோம் என்று கூறிய அமைச்சர், இதுபற்றி அமைச்சரவை கூட்டத்தில் கலந்து பேசி முடிவடுத்து சொல்கிறாம் என சொன்னார்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • இதுவரை 14000 ரூபாய் தற்காலிக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும்.
    • தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை

    சென்னை:

    சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2020 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அன்றைய அரசினால் ஏப்ரல் 28ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 2020 ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்டு 2300 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

    அன்று முதல் அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்கு பிறகும் பணி நீட்டிப்பு என்பது தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிடர் முடிவுக்கு வந்த சூழலில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த நிலையில் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர், பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் அவர்கள் யாருக்கும் பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்கின்ற வகையில், ஒரு மாற்று யோசனையின்படி மாவட்ட வாரியாக இருக்கிற அமைப்புகளின் சார்பில் டிபிஎச்இ மக்களை தேடி மருத்துவம், நகர்ப்புற நலவாழ்வு மையம் ஆகிய துறைகளில் இருக்கிற காலி பணி இடங்களை இவர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என அறிவுத்தினார். அந்த வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதுவரை 14000 ரூபாய் தற்காலிக பணிநியமனத்திற்காக மாத ஊதியம் பெற்று வந்த நிலையில் புதிதாக சேரும் பணியில் 18000 ரூபாய் கிடைக்கும், அது மட்டுமல்லாது ஏற்கனவே இருக்கிற தற்காலிக பணி நியமனங்களின் மூலம் அவர்களில் பெரும் பகுதியானவர்கள் தலைமை மருத்துவமனைகளில்தான் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    அவர்கள்கூட பல்வேறு மனுக்களின் வாயிலாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பக்கத்திலேயே பணி மாறுதல் வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து விடுத்து வந்தார்கள். தற்காலிக செவிலியர்களை இடமாற்றம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாவட்ட சுகாதார சங்கம் மூலம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டு, மிகப்பெரிய அளவு பணி பாதுகாப்பு இருக்கும் என்கிற அளவில் சொல்லப்பட்டது.

    இந்த நிலையில் செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போல் DMS ஒப்பந்த பணியாளர்கள் என்ற அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார்கள். தொடச்சியாக இரண்டு நாட்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தார்கள். இன்று சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து ஏறக்குறைய 2 மணி நேரம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கு தனித்தனியே கொடுக்கப்பட்ட வேலைக்குரிய ஆணையையும் எங்களிடம் காட்டினார்கள். அதிலே மிக தெளிவாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தற்காலிகமாக பணி ஆணை தரப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் நானும் துறையின் செயலாளரும் என்எச்எம் இயக்குனர், திட்ட இயக்குனர், டிபிஎச், டிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்கள் அவர்களிடம் பேசினோம். அவர்கள் என்எச்எம் நிதி ஆதாரத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தின் பணி நியமனங்கள் வேண்டாம். இங்கு டிஎம்எஸ் ஒப்பந்த அடிப்படையிலேயே நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணி அது, இப்போது அந்த நிலை இல்லை என்பதால் அது முடியாது என்ற வகையில் அலுவலர்கள் எடுத்து சொன்னார்கள். அவர்களும் பிடிவாதமாக மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக வேண்டாம் என்று சொன்னார்கள்.

    அதற்காக அவர்கள் சொன்ன காரணம், என்எச்எம் நிதி ஆதாரம் இல்லாமல் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் எங்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் மூலமும் அந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, நீங்கள் விண்ணப்பியுங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும். இதில் இருக்கிற சட்டப்பூர்வான விஷயங்கள் அனைத்தும் எடுத்துச் சொல்லப்பட்டிருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன் வரவேற்றுப் பேசினார்.
    • வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு. க. சார்பில் செம்மஞ்சேரி 200-வது வட்ட செயலாளர் இரா. நாகராஜ் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவிந்த ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன், வரவேற்றுப் பேசினார்.

    பகுதி துணை செயலாளர் வி.தனசேகரன், பொருளாளர் பி. ரவி, மாவட்ட பிரதிநிதி ஹரி, சங்கர், செந்தில்குமார், புஷ்பா, ராஜேந்திரன், ஆர். தேவேந்திரன், சேகர், எஸ். தேவேந்திரன், முனுசாமி, ராஜி, அருண், பிரகாஷ், பிரவீன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், மா. சுப்பிரமணியன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் மு. மனோகரன், 14 -வது மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி. ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜி. வெங்கடேசன், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே. ஏழுமலை, தா. பஷீர், ஆ. அரிகிருஷ்ணன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சி. பிரதீப், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் என். குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×