search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus accident"

    • உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 பேர் நேற்று மதியம் ஆட்டோ மூலம் குச்சிபாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்கு பிராமண மங்களம் வழியாக சென்றனர்.

    ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று பிராமணமங்களம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த வேண்டா, சாந்தி, முருகம்மாள், ராதா, தேவராஜ், சரளா, வள்ளி, கலாவதி, இளவரசன், இளையராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் வேண்டா உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை, உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதேப்போல் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்ததும் பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒரே நேரத்தில் 2 பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்றன.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. 2 பேருந்துகளிலும் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக பல்லடம் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை , உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    சமீபத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது அரசு பஸ்சின் படிக்கட்டு அருகே நின்ற பயணி ஒருவர் வாசல் வழியாக கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலியானார். அதேபோல் பயணிகள் சிலர் பஸ் மோதி காயமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று விபத்துக்குள்ளான பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இயக்கப்பட்ட அரசு பஸ், நேரம் காரணமாக அதிவிரைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பஸ்சில் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மேலும் பல்லடம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறுகிறது. அங்கு காய்கறிகள் மற்றும் சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்து வதற்கு இடம் இல்லாமலும், பஸ்கள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது.
    • விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 5மணி அளவில் பஸ் மூலம் சென்னை திரும்பினார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ரிஷிகவுதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஷரவன் (வயது10). இவர், அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சுதந்திர தினவிழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாணவர் ஷரவன் தனது சைக்கிளில் தேசியக்கொடி கட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்றார். விழா முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்குள்ள சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவர் ஷரவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 30 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி இன்று அதிகாலை 4.45 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அத்தியந்தல் அருகே வரும்போது பஸ் டிரைவரின் கட்டு ப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது தடுப்பு சுவரை இடித்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

    இதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் கண்டக்டர் ஜனார்த்தனனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் ஒரு பயணியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    மதுராந்தகம்:

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 5.30 மணியளவில் அரசு பஸ் மதுராந்தகம் அருகே உள்ள தபால் மேடு என்ற இடத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லேசாக மழை பெய்தது.

    இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென முன்னாள் சென்று கொண்டு இருந்த திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. திருநெல்வேலியில் இருந்து வந்த பஸ்சின் பின்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் கணேஷ் நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 46) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த திருவண்ணாமலை போகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன், சென்னையைச் சேர்ந்த சதீஷ், சைதாப்பேட்டை கேபி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரவண சங்கர், மாரியப்பன், சென்னை சூளையை சேர்ந்த வினோத் குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

    மேலும் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த 2 பஸ்களையும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதமானதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர்.
    • பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிச்சாகவுண்டன்புதூர் அருகே இன்று காலை 5 மணிக்கு காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இதனை சுரேஷ் (41) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதுபோல் கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதனை விஜயகுமார் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

    2 அரசு பஸ்களும் காங்கயம் கோவை சாலையில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் பிச்சாகவுண்டன்புதூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பல்லடம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு நின்றது.

    அப்போது பின்னால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென, டவுன் பஸ் மீது மோதியது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ் கோவை பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் அரசு டவுன் பஸ், கோவை பஸ்சின் பின்பகுதி, மற்றொரு அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர். பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பெண்கள் அடங்குவார்கள். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே அதிகாலை நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    • லாரி மீது மோதாமல் இருக்க திரும்பிய போது விபரீதம்
    • 50 பயணிகள் உயிர் தப்பினர்

    வந்தவாசி:

    வேலூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் கோடீஸ்வரன் ஓட்டினார்.

    வந்தவாசி அடுத்த புளிவாய் கிராமம் கூட்டுச்சாலை அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே லாரி ஒன்று வேகமாக சென்றது.

    லாரி மீது அரசு பஸ் மோதாமல் இருக்க திரும்பிய போது சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் புகுந்தது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து தப்பித்து வெளியே வந்தனர். பின்னர் மாற்று பஸ்சில் ஏற்பாடு செய்து பயணிகளை பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
    • நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.

    காவேரிபட்டணம்:

    தருமபுரி மாவட்டம், நூலகஅள்ளி அருகேயுள்ள எம்.சவுளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 12 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வி.கொட்டா என்ற இடத்தில் உள்ள கத்தாழை தொழிற்சாலையில் தங்கி பணிபுரிவதற்காக இன்று காலை ஒரு டிராக்டரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

    இந்தநிலையில் சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இன்றுகாலை 7 மணி அளவில் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்கள் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை நிமிர்த்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து நசுக்கியதில் அதில் அமர்ந்து வந்த தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முத்து (வயது20), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி என்ற 3 மாத பெண் குழந்தை, வசந்தி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் புஷ்பா (35), காசி (35), அருண் (18), முருகன் (45), சதீஷ் (21), செல்லம்மாள் (19) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த முனுசாமி மற்றும் 3 மாத பெண்குழந்தை வர்ஷினி ஆகியோரின் உடல்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையிலும், மற்ற உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை நடந்த இந்த கோர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் விபத்தில் சிக்கிய டிராக்டர் மற்றும் பேருந்தை சாலை ஓரமாக போலீசார் அகற்றினர்.

    இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    • பைக் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (வயது35) என்பவர் ஓட்டி வந்தார்.

    திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலை ம.மு.கோவிலூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே பைக் வந்தது. அதன்மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொது மக்கள் பயணிகளை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் ஸ்ரீதர்பாண்டி(36), கண்டக்டர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி சிங்கராஜ் (43) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கொசவபட்டி ஜெசிகா (31), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மூணாறுக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் சென்றது.

    பஸ்சில் ஏராளமான தொழிலாளிகள் இருந்தனர். பஸ் மூணாறை அடுத்த நேரியமங்கலம், சக்குறிச்சி வளைவு அருகே சென்ற போது திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இதில் அடிமாலி பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 20 பேர் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பஸ்சின் டயர் வெடித்ததால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×