என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus accident"

    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
    • 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதும், நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

    உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், உயரிய சிகிச்சை அளிக்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும், விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் சமீபகாலமாக, தொடர்ந்து பேருந்து விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.

    பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

    • அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்

    தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று சொந்த ஊர் திரும்பிய மூன்று சகோதரிகள் உடல்கள் நசுங்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று பேர் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த இளைய சகோதரிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் விகாபாரபாத் மாவட்டம் பேர்க்கம்பள்ளியை சேர்ந்த எல்லையா என்பவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

    அவர்களில் மூத்த மகளின் திருமணம் ஹைதராபாத் அருகே உள்ள தாண்டூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மூத்த மகளின் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்று இருந்தனர்.

    திருமணம் முடிந்தபின் நேற்று காலை தாண்டூரிலிருந்து இளைய சகோதரிகளான இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் நந்தினி, இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் சாய்பிரியா, பிளஸ் டூ படிக்கும் தனுஷா ஆகியோர் விபத்தில் சிக்கிய பேருந்தில் ஹைதராபாத் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் சகோதரிகள் மூன்று பேரும் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்த நிலையில் உடல்கள் நசுங்கி மரணம் அடைந்து விட்டனர்.

    இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியது.

    இந்த நிலையில் விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது

    • விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 



    • பைக் மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை வத்தலக்குண்டுவை சேர்ந்த ஸ்ரீதர் பாண்டி (வயது35) என்பவர் ஓட்டி வந்தார்.

    திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலை ம.மு.கோவிலூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே பைக் வந்தது. அதன்மீது மோதுவதை தவிர்க்க டிரைவர் திடீர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு பொது மக்கள் பயணிகளை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் டிரைவர் ஸ்ரீதர்பாண்டி(36), கண்டக்டர் நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி சிங்கராஜ் (43) மற்றும் பஸ்ஸில் பயணம் செய்த கொசவபட்டி ஜெசிகா (31), உசிலம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி (35), மதுமிதா (17), பாரதிபுரம் பவித்ரா (23), சசிகலா (38) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 30பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.
    • நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.

    காவேரிபட்டணம்:

    தருமபுரி மாவட்டம், நூலகஅள்ளி அருகேயுள்ள எம்.சவுளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 12 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள வி.கொட்டா என்ற இடத்தில் உள்ள கத்தாழை தொழிற்சாலையில் தங்கி பணிபுரிவதற்காக இன்று காலை ஒரு டிராக்டரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சமையல் பொருட்கள், பாத்திரங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

    இந்தநிலையில் சிவகாசியில் இருந்து பெங்களூரு நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

    இன்றுகாலை 7 மணி அளவில் காவேரிப்பட்டணம் அருகே எர்ரஅள்ளி என்ற இடத்தின் அருகே டிராக்டர் வந்த போது பின்னால் வந்த சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்கள் கவிழ்ந்து கிடந்த டிராக்டரை நிமிர்த்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து நசுக்கியதில் அதில் அமர்ந்து வந்த தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முத்து (வயது20), மல்லி (65), முனுசாமி (50), வர்ஷினி என்ற 3 மாத பெண் குழந்தை, வசந்தி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

    மேலும் புஷ்பா (35), காசி (35), அருண் (18), முருகன் (45), சதீஷ் (21), செல்லம்மாள் (19) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் இறந்த முனுசாமி மற்றும் 3 மாத பெண்குழந்தை வர்ஷினி ஆகியோரின் உடல்கள் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையிலும், மற்ற உடல்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி (50) என்பவரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை நடந்த இந்த கோர விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து முடங்கியது. பின்னர் விபத்தில் சிக்கிய டிராக்டர் மற்றும் பேருந்தை சாலை ஓரமாக போலீசார் அகற்றினர்.

    இந்த கோர விபத்தில் உயிரிழந்த 5 பேரும் தருமபுரி மாவட்டம், சவுளூர் அருகேயுள்ள மலைக்காரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லாரி மீது மோதாமல் இருக்க திரும்பிய போது விபரீதம்
    • 50 பயணிகள் உயிர் தப்பினர்

    வந்தவாசி:

    வேலூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் கோடீஸ்வரன் ஓட்டினார்.

    வந்தவாசி அடுத்த புளிவாய் கிராமம் கூட்டுச்சாலை அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே லாரி ஒன்று வேகமாக சென்றது.

    லாரி மீது அரசு பஸ் மோதாமல் இருக்க திரும்பிய போது சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் புகுந்தது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து தப்பித்து வெளியே வந்தனர். பின்னர் மாற்று பஸ்சில் ஏற்பாடு செய்து பயணிகளை பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர்.
    • பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிச்சாகவுண்டன்புதூர் அருகே இன்று காலை 5 மணிக்கு காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இதனை சுரேஷ் (41) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதுபோல் கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதனை விஜயகுமார் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

    2 அரசு பஸ்களும் காங்கயம் கோவை சாலையில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் பிச்சாகவுண்டன்புதூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பல்லடம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு நின்றது.

    அப்போது பின்னால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென, டவுன் பஸ் மீது மோதியது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ் கோவை பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் அரசு டவுன் பஸ், கோவை பஸ்சின் பின்பகுதி, மற்றொரு அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர். பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பெண்கள் அடங்குவார்கள். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே அதிகாலை நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    • பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    மதுராந்தகம்:

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 5.30 மணியளவில் அரசு பஸ் மதுராந்தகம் அருகே உள்ள தபால் மேடு என்ற இடத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லேசாக மழை பெய்தது.

    இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் திடீரென முன்னாள் சென்று கொண்டு இருந்த திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. திருநெல்வேலியில் இருந்து வந்த பஸ்சின் பின்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் திருவாரூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் கணேஷ் நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 46) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த திருவண்ணாமலை போகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன், சென்னையைச் சேர்ந்த சதீஷ், சைதாப்பேட்டை கேபி கார்டன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சரவண சங்கர், மாரியப்பன், சென்னை சூளையை சேர்ந்த வினோத் குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அசோக்குமார் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    அதிகாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

    மேலும் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த 2 பஸ்களையும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதமானதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி இன்று அதிகாலை 4.45 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அத்தியந்தல் அருகே வரும்போது பஸ் டிரைவரின் கட்டு ப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது தடுப்பு சுவரை இடித்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

    இதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் கண்டக்டர் ஜனார்த்தனனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் ஒரு பயணியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×