என் மலர்
நீங்கள் தேடியது "நலம் காக்கும் ஸ்டாலின்"
- மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’
- நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்திலன் கீழ் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.
முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள்
இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,
மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் 'நம்பர் 1' என உறுதிசெய்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
- அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது.
- முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் எம்.சத்தியகுமார் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் தன்னார்வலர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் மக்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதே போன்ற கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.
இதனையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
- 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
- அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில், தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்கள் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-வது வாரத்தில் 48,418 பேரும் பயன்பெற்றுள்ளனர். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அன்று அரசு விடுமுறை என்பதுடன், அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாளாக உள்ளது. எனவே, வரும் வாரம் சனிக்கிழமை அன்று, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அடுத்த வாரம் சனிக்கிழமை, 38 மாவட்டங்களிலும் முகாம் நடத்தப்படும். ஆறு மாதங்களில், 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமீரா ரெட்டி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
- மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்திலன் கீழ் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும். இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "9 வருடங்களுக்கு முன்பு எனக்கு முடி உதிர்தல் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்பட்ட பின்புதான் எனது உடல்நலம் குறித்து நான் கவலைப்பட ஆரம்பித்தேன்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள், நோய் பாதிப்புகள் அதிகமான பின்புதான் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. இதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இது பல உயிர்களைக் காக்கும்.
குறிப்பாக கிராமப்புற மக்களிடமும் நவீன மருத்துவ சேவை சென்றடையும் வகையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார தடையின்றி அனைத்துத்தரப்பு மக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது" என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
- வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.
- கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 1256 நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு முகாம் வீதம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சுழற்சி முறையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 வகையான துறை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்.பி. சினேகாபிரியா, தங்கத்தமிழச்செல்வன் எம்.பி., மகாராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர். வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.
அதன் பிறகு பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் முன்னிலையில் மகாராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. அவரிடம் இருந்து அடையாள அட்டையை பறித்து தான் வழங்க முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிக் கொண்டதால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதைக் கேட்காமல் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறி கூட்டத்தை புறக்கணித்தார். அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் விழாவில் தனக்கு வழங்கப்படவில்லை என தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. தெரிவித்து வெளியேறினார். இதனால் முகாமிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பேசிக்கொண்ட வீடியோ சமூக வளைதலங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
- கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
சென்னை:
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும்.
* இன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளி, மனநல பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம்.
* என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
* கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
* நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டம்
* மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே நலன் காக்கும் ஸ்டாலின்
*முகாமிற்கு வருவோரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது.
- கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.
சென்னை:
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.
நாட்டு மக்களின் நலனே எனது நலன். மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி ஆற்றுவதே என் விருப்பம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.
கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபையை விருது கொடுத்து பாராட்டி உள்ளது.
என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்கள் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும். மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் என்றார்.
- மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
- சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.
சென்னை:
சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
* சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1164 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
* மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்
* சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.
* நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் .
* உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும் என்றார்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
- மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல்வடிவத்தில் கொண்டுவந்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம்.
அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டத்து வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், ஒவ்வொரு மனிதரின் தேவைகள், கோரிக்கைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றைச் செய்து தரும் வகையில், அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, மருத்துவச் சேவைகளைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தைச் செயல்வடிவமாக்க, பல்வேறு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.
அதனடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர், கடந்த 21.04.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், "உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 2-ஆம் நாளன்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள்தொகை 10 லட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
இம்முகாமில் பங்கு கொள்ளும் பயனாளர்களுக்குக் கீழ்க்கண்ட மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.
ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று (ம) மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் கண்காணிக்கப்படும் இம்முழு உடல்பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.
இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






