என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி மனு செய்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
- அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது.
- முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வக்கீல் எம்.சத்தியகுமார் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் தன்னார்வலர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் மக்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதே போன்ற கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.
இதனையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.






