என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பரிசோதனை"

    • கொரோனா பெருந்தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது இந்தியாவில் 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா பெருந்தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 306 பேருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா, 7 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச உள்ளனர்.

    டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால் முதல் மந்திரி உள்பட அனைவருக்கும் பிரதமர் மோடி அவரது இல்லத்தில் விருந்து வைக்கிறார். டெல்லி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பிரதமர் மோடியின் வீட்டிற்கு செல்கின்றனர்.

    இந்நிலையில், பிரதமரை சந்திக்க செல்லும் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் என்ற கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடியை பார்க்க வரும் அனைவருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுவது கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    • நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.
    • அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கேரளா, டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக கேரளாவில் 2000க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.

    இன்று தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தோற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேர் குணமடைந்துள்ளனர்.

    • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
    • தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர். 

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார்.
    • கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாம்பென்:

    இந்தோனேசியாவில் பாலி நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க கம்போடியா பிரதமர் ஹன்சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள் கம்போடியா பிரதமர் ஹன்சென்னை சந்தித்து கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது நாட்டுக்கு திரும்பினார்.

    • நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
    • சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

    சென்னை :

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

    அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலைய இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், 'விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு மேற்கொள்ளப்படும் ரேண்டம் கொரோனா பரிசோதனை இனிமேல் தேவையில்லை. இந்த நிபந்தனை தளர்த்தப்படுகிறது. விமான பயணிகளில் அறிகுறி உள்ள நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி வெப்பமானி மூலம் மேற்கொள்ளப்படும் உடல் வெப்பநிலை பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

    அதேபோன்று மற்றொரு சுற்றறிக்கையில், 'அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் இதர நோய்களுக்கான சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது. அதாவது, கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றபடி அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், கர்ப்பிணி உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்' என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படுவதை உறுதி செய்ய மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது.
    • விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை (‘ரேண்டம்’) நடத்தப்படும்.

    புதுடெல்லி :

    சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ளது.

    இந்த பிஎப்.7 வைரஸ் அலை இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அந்த வகையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகிற விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை ('ரேண்டம்') நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

    மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் சர்வதேச, இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    • சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இச்சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வந்திறங்கும் பயணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நோய் அறிகுறியுடன் வருவோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுபோன்று 2 சதவீத வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    தமிழகம் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
    • கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.

    • மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது.
    • பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுபாடுகள் இன்று அமலுக்கு வந்தன. சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் வருகின்றன. இந்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை துபாய் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளின்படி தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கிறார்களா? என்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர்.

    துபாய் விமானத்தில் மொத்தம் 187 பயணிகள் வந்தனர். அவர்களில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    • மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தைப் பொருத்தவரை 1.25 லட்சம் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 72 ஆயிரம் படுக்கைகளை, கொரோனா பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3 மாதங்களுக்குத் தேவையான மருந்து கையிருப்புகள் உள்ளன. ஆக்சிஜனைப் சிலிண்டர்கள், கான்சென்டேட்டர்கள், ஜெனரேட்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. எனவே மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் ரேண்டம் முறையில் 2 சதவீதம் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று முதல் அந்த பரிசோதனைகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 4 பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், யாருக்காவது அதிகமான வெப்பநிலை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    ×