என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coronavirus"

    • ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதாக மே 28-ந்தேதி அறிவித்தது.
    • மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டன.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று, புதிய வைரஸ் உருமாற்றம் காரணமாக கடந்த மே மாதத்தில் மீண்டும் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாநில அரசுகளை எச்சரித்த மத்திய அரசு, கொரோனா பரவலை தீவிரமாக கண்காணித்து வந்தது. புதிய வகை கொரோனா தொற்று, சுகாதார அபாய நிலையை ஏற்படுத்தாது என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கையில் இதுகுறித்து கூறி இருப்பதாவது:-

    உலக சுகாதார நிறுவனம், கிழக்கு மத்திய தரைகடல் நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதாக மே 28-ந்தேதி அறிவித்தது. மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டன.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வகை வைரஸ் உருமாற்றத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா மே மாதம் வேகமெடுத்து ஜூன் 13-ந் தேதி உச்சம் தொட்டிருந்தது. அதன்பிறகு சரிவடைந்துவிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    • 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர்.

    இந்தியாவில் ரெயில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கடந்த 2014-15 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டு முதல் புறநகர் மற்றும் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.

    அதே சமயம் கொரோனாவுக்குப் பிறகு இந்திய ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளின் முன்பதிவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

    மத்திய தர வர்க்கத்தினரின் செலவழிக்கும் திறன் அதிகரித்துள்ளதால் ரெயில்களில் முன்பதிவு செய்து அதிக அளவில் பயணிக்கின்றனர்.

    அதிகாரப்பூர்வ ரெயில்வே தரவுகளின்படி, 2014-15 மற்றும் 2020-21ம் ஆண்டுக்கு இடையில் ஒப்பிடும்போது, 2021-22ம் ஆண்டுகளில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கும் பயணிகளின் விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    குறிப்பாக புறநகர் பகுதிகளில், தொடர்ச்சியாக 2020 ம் ஆண்டிலிருந்து இது அதிகரித்து வந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 2194 மில்லியன், 2022-23ம் ஆண்டில் 3,834 மில்லியன், 2023-24ல் 4,026 மில்லியன் மற்றும் 2024-25ம் ஆண்டில் 4,201 மில்லியன் என தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

    அதே நேரம் புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 2014-15 மற்றும் 2019-2020ம் ஆண்டு வரையில் இது அதிகரிகரித்தே இருந்தது. 2014-15ம் ஆண்டு மட்டும் 807 மில்லியன் மக்கள் பயணித்துள்ளனர். ஆனால் கொரோனாவுக்குப் பிறகு சட்டென புறநகர் அல்லாத பகுதிகளில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை 76 மில்லியனாக குறைந்தது.

    இந்த எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக 2021-22ல் 582 மில்லியனாகவும், 2022-23ல் 1,826 மில்லியனாகவும், 2023-24-ல் 2,150 மில்லியனாகவும், 2024-25ல் 2,360 மில்லியனாகவும் மீண்டும் அதிகரித்தது.

    2014-15 மற்றும் 2019-20ம் ஆண்டில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் டிக்கெட் விற்பனை ஊக்கமளிப்பதாக இருந்தது. 2020-21ம் ஆண்டில் மட்டும் புறநகர் பகுதியிலிருந்து 925 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். கொரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 2,214 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ரெயில்வே தரவுகளில் தெரியவந்துள்ளது.

    • ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    • வீடியோவை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்தது.
    • தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கடந்த 2 வாரங்களாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த வைரஸ் அதிக வீரியம் இல்லாதது என்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு தகவல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் மத்தியில் எப்படி உள்ளது? என்பது தொடர்பாக இதுவரை 5 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதல் கட்ட ஆய்வு நடந்த போது தமிழக மக்களில் 32 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம் பேருக்கும், மே மாதம் நடந்த ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது உறுதியானது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆய்வில் 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்தது.

    தற்போது (2025) கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக மக்களில் 97 சதவீதம் பேருக்கு கொரோனா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா நோயின் தீவிர தன்மை மிகப்பெரும் அளவுக்கு குறைந்தே இருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொது சுகாதாரம் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

    • திருப்பதியில் நேற்று 67,284 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    அதன்படி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று. பக்தர்கள் பீதியடைய வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,284 பேர் தரிசனம் செய்தனர். 31,268 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஒமைக்ரான் ஜே.என்-இன் மாறுபாடான எல்.எப்.7 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    ஒமைக்ரான் வைரசின் துணை வகை வைரசால் கொரோனா தொற்று வேகமாக பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒமைக்ரான் ஜே.என்-இன் மாறுபாடான எல்.எப்.7 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.

    இதனைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகாராஷ்டிர மாநிலத்தில் 506 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.
    • தமிழ்நாட்டின் முந்தைய தினத்தைவிட நேற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

    நேற்றைய நிலவரப்படி நாட்டில் 3 ஆயிரத்து 961 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    நாட்டில் கேரளாவில் அதிகபட்ச தொற்று உள்ளது. அங்கு 1435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் 506 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகத்தில் 253 பேரும், தமிழ்நாட்டில் 189 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 157 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். புதுச்சேரியில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முந்தைய தினத்தைவிட நேற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    தற்போதைய கொரோனா பரவலில் உயிர்ப்பலி எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 32 ஆக அதிகரித்து உள்ளது. நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
    • மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.

    சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2019-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    * கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல பெயர்களில் உலா வருகிறது.

    * இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் இல்லாதது.

    * முகக்கவசம் அணிவது போன்ற வழக்கமான வழிமுறைகளையே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * இணை நோய் இருப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.

    * பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது எப்போதும் உள்ள நடைமுறை.

    * தமிழ்நாட்டில் போதுமான அளவு மருந்துகள் தயார்நிலையில் உள்ளன.

    * புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

    * வீரியம் குறைந்த பாதிப்பே இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    * பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அறிவுறுத்தல்தான்.

    * 2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    * கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது.

    * மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்
    • அரசு சார்பில் முகக்கவசம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

    நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது.

    உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயம் அணிய வேண்டும் என தகவல் பரவிய நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    * கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்

    * பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை. அரசு சார்பில் முகக்கவசம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    * வீரியம் இ ல்லாத கொரோனா என்பதால் நோய் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
    • சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.

    நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதிலும், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

    உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை தீநுண்மியின் உட்பிரிவுகளான ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்லாது சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.

    இருந்தபோதிலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சாா்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறாா்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும்.
    • அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை.

    வாஷிங்டன் :

    கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் செலுத்தி கொண்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புதிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. உங்கள் பழைய தடுப்பூசி அல்லது உங்கள் முந்தைய கொரோனா தொற்று உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்காது.

    அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை. வானிலை குளிர்ச்சியாகி வருகிறது. மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள்.

    எனவே கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,892 பேர் நலம் பெற்றுள்ளனர்.
    • இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 862, நேற்று 830 ஆக இருந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 880 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,892 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது 20,821 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் நேற்று மேகாலயா, மிசோரத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 4 பலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது.

    ×