என் மலர்
நீங்கள் தேடியது "Covid 19"
- இதுவரை 6 பேர் நிபாவினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது
- செப்டம்பர் 24 வரை கல்வி நிலையங்களை மூட உத்தரவு
2019 கடைசியில் தொடங்கி 2020 ஆரம்பத்தில் உலக மக்களை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையும் ஆட்டம் காண செய்தது கோவிட்-19 பெருந்தொற்று.
தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் மக்களிடையே பரவி வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்க பட்டுள்ளதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைய் 6 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இத்தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நோய் பரவல் அதிகரிப்பதனால் இதற்கான சிகிச்சைக்கு தேவையான மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் (monoclonal antibodies) எனும் எதிர்ப்பு மருந்தை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா கேட்டிருக்கிறது.
இதற்கிடையே இந்த நிபா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தலைமை பொறுப்பிலுள்ள டாக்டர். ராஜிவ் பால் (Dr. Rajiv Bahl) தெரிவித்திருப்பதாவது:-
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்பவர்களின் விகிதாசாரம் 3 சதவீதம் எனும் அளவில் இருந்தது. ஆனால் நிபா தொற்றின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இறப்பு சதவீதம் 70 வரை இருக்கும். இந்தியா நிபா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2018-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து 10 நோயாளிகளுக்கு பயன்படும் வகையில்தான் கையிருப்பு உள்ளது. இந்தியாவிற்கு வெளியே இந்த நோய்தொற்றில் பாதிப்படைந்தவர்களுக்கு இது தரப்பட்டபோது அவர்கள் முழுவதுமாக குணமடைந்தனர். இதுவரை இந்த மருந்தின் பயன்பாட்டிற்கான முதல் கட்ட ஆய்வு மட்டுமே நிறைவடைந்துள்ளது.
இவ்வாறு டாக்டர். பால் கூறினார்.
இதற்கிடையே நிபா வைரஸ் பரவுதல் அதிகரித்துள்ளதால், கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் செப்டம்பர் 24 வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
"தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் உடன் தொடர்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 1080 வரை இருக்கும். அதில் 327 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள்" என நிலைமையை கண்காணித்து நிர்வகித்து வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருக்கிறார்.
கேரளாவின் மற்றோரு அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும்படி அங்குள்ள மக்களை வலியுறுத்தியுள்ளது.
- முதலில் அக்டோபர் முதல் வாரத்தில் இப்பணி தொடங்குவதாக இருந்தது
- தகுதியுள்ளவர்கள் தாங்களாக முன்வர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்
இங்கிலாந்தில், கொரோனா பெருந்தொற்றின் அடுத்த மாறுபாடு (BA.2.86) பரவுவதாக அந்நாட்டு சுகாதார துறை கண்டறிந்தது. இதனையடுத்து அத்துறை, குளிர்காலத்தில் எளிதாக வைரஸ் தொற்றால் பாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இன்றே துவங்கி விட்டது. இது முன்னதாக அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குவதாக இருந்தது.
"முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், வீட்டிலேயே இருந்து வருபவர்களுக்கும் இந்த வாரத்தில் இருந்து, அதிக பாதிப்புக்குள்ளாக கூடிய மற்றவர்களுக்கு அக்டோபர் மாதத்திலும் தடுப்பூசி செலுத்தப்படும்" என பிரிட்டனின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரியவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும், வருடாந்திர ஃப்ளூ தொற்றிற்கான தடுப்பூசியும் ஒரே சமயத்தில் செலுத்த தொடங்கி விட்டதாக தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
"கொரோனா வைரஸ் BA.2.86 மாறுபாட்டின் பரவும் தன்மை, தாக்கும் தீவிரம் மற்றும் மருந்துகளுக்கு எதிராக போரிடும் சக்தி ஆகியவை குறித்து போதுமான தரவுகள் இல்லாததால், இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து இப்போது உறுதியாக கூற முடியாது," என பிரிட்டனின் தேசிய சுகாதார பாதுகாப்பு முகமையின் மருத்துவர் ரேணு பிந்த்ரா கூறியுள்ளார்.
"வைரஸ்-இன் புது மாறுபாடு குறித்து பரவும் கவலை கொள்ள செய்யும் தகவல்களால், தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் தாங்களாகவே அதனை செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்" என தேசிய சுகாதார சேவை அமைப்பின் தடுப்பூசி திட்ட இயக்குனர் டாக்டர். ஸ்டீவ் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
"வயதானவர்களும், நோய் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க தடுப்பூசி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. எனவே, அப்படிப்பட்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தகுதியுள்ள தங்களின் அன்புக்குரியவர்களையும் செலுத்திக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்" என பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு சக்தித்துறை தலைவர் டாக்டர். மேரி ராம்சே கூறினார்.
இரு தினங்களுக்கு முன் இங்கிலாந்தின் நார்ஃபோல்க் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்த 38 பேரில் 33 பேருக்கு இந்த புது தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. இருப்பினும், இதுவரை இப்புது தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கொரோனா பெருந்தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டதற்காக உலக சுகாதார அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கிறார்கள்
- 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்
கொரோனா தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ரஷிய- உக்ரைன் போர் ஆகியவற்றால் உலகின் பல நாடுகளில் 2020 முதல் தற்போது வரை சுமார் 16 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை நேற்று தெரிவித்தது.
சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020- 2023 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 7.5 கோடி மக்கள் கடுமையான வறுமையிலும், 9 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழேயும் வாழ்கிறார்கள்.
ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2023-ல் அவர்களின் வருமானம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சென்றிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மக்களை வறுமைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு வலைகளை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ள நாடுகள், மக்கள் வறுமையில் விழுவதை கணிசமான எண்ணிக்கையில் தடுத்துள்ளன.
ஆனால் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளில் அந்நாடுகளின் கடனுக்கும், முறையற்ற சமூக செலவினங்கள் மற்றும் வறுமையின் அதிகரிப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) எனும் அமைப்பின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியாக போராடும் நாடுகள், கடனை திருப்பிச் செலுத்துவதை ஒரு இடைநிறுத்தம் செய்து சமூக வளர்ச்சி செலவினங்களுக்கும், பொருளாதார அதிர்ச்சிகளின் விளைவுகளை எதிர்ப்பதற்கும் செலவிடும்படி அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. சிக்கலான பிரச்சனையென்றாலும் தீர்வு எட்டும் தூரத்தில்தான் உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.
இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட மற்றொரு ஐ.நா அறிக்கையின்படி, சுமார் 330 கோடி பேர் (3.3 பில்லியன்); அதாவது (கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் பாதி), கல்வி மற்றும் சுகாதாரத்தை விட கடனுக்கான வட்டிக்கு அதிகமாகச் செலவழிக்கும் நாடுகளில் வாழ்கின்றனர்.
வளரும் நாடுகள் குறைந்த அளவிலான கடனைக் கொண்டிருந்தாலும், அதிக வட்டியை செலுத்துகின்றன.
புதிதாக ஏழ்மைக்கு தள்ளப்பட்டிருக்கும் 165 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வருடாந்திர செலவு 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என இந்த அறிக்கை கூறுகிறது.
இந்த வார தொடக்கத்தில், சர்வதேச நிதி நிறுவனங்களை சீர்திருத்தம் செய்ய அழுத்தம் கொடுத்து வரும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "நமது காலாவதியான உலகளாவிய நிதி அமைப்பு, அது உருவாக்கப்படும்போது இருந்த காலனித்துவ ஆதிக்க கொள்கைகளையே இன்றும் பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
- 69 லட்சம் பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
- உருமாற்றம் அடைந்து கொண்டு வருவதால் இதுவரை தொற்று முடிவுக்கு வரவில்லை.
கொரோனா... இந்த வார்த்தையை கேட்டாலே பயப்படாத யாவரும் இல்லை எனலாம்... 21-ம் நூற்றாண்டில் உலகத்தையே புரட்டிப்போட்ட மிகப்பெரிய கொடூர தொற்றாகும்.
முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு உலகத்தையே அஞ்ச வைத்தது. ஒட்டுமொத்த உலக மக்களையும் வீட்டிற்குள்ளேயே முடக்கியது. உலக பொருளாதாரம் தலைகீழாக சென்றது.
இதுவரை உலக அளவில் 68,12,24,038 மக்களை கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது. 68,81,401 பேர் உயிரை குடித்துவிட்டது.
தற்போது உலகம் சகஜ நிலைக்கு வந்துவிட்டாலும், கொரோனா முடிவுக்கு வரவில்லை. உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தியே வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் உலகம் ஒரு பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியது தேவை என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த பெருந்தோற்றுக்கு தயாராக வேண்டியது தேவை. இது கொரோனா பெருந்தொற்றைவிட கொடியதாக இருக்கும்.
கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவு என்பது உலகளாவிய கொரோனா சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது என்பதில்லை.
நோய் மற்றும் மரணத்தின் அளவை அதிக அளவில் ஏற்படுத்தும் மற்றொரு உருமாற்றம் அச்சுறுத்தல் உள்ளது. அடுத்த தொற்று நம் கதவை தட்டும்போது ஒன்றாக இணைந்து அதை எதிர்கொள்வதற்கு நாம் தயராக இருக்க வேண்டும்.
76-வது உலக சுகாதார மாநாட்டில் டெட்ரோஸ் அதனோம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
- ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது.
- கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மே 12 ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
அந்த வகையில், "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், காண்டிராக்டர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு மே 11 ஆம் தேதியில் இருந்து நீக்குகிறோம். இதே நாளில் இருந்து கொரோனா வைரஸ் பொது சுகாதார எச்சரிக்கை காலமும் முடிவுக்கு வரும்," என்று வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜனவரி 2021-இல் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தடுப்பூசி அவசியம் என்ற விதிகள் மற்றும் பிரமாண்ட தடுப்பூசி பிரசாரம் காரணமாக பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த தேசிய சுகாதார அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.
- அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர்.
- அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
ஆக்ரா:
அமெரிக்காவில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் கடந்த வாரம் உத்தரபிரதேசத்துக்கு வந்தனர். இந்த சுற்றுலா குழு வாரணாசி நகரை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 10-ந் தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு வந்தது. அப்போது அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்க சுற்றுலா பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தற்போது அந்த குழு ராஜஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில் ஆக்ரா சுகாதாரத்துறை அதிகாரிகள் ஜெய்ப்பூர் நகர சுகாதாரத்துறைக்கு இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.
- சீன பயணிகளுக்கு பிரான்ஸ் விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக தகவல்.
- சீன பயணிகள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என ஸ்பெயின் அரசு அறிவிப்பு
உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 சீனாவில் மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி உள்ளது. சீனாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் விமானங்களில் பயணிப்போர் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் காண சீன பயணிகளுக்கு விமான நிலையங்களில் பிசிஆர் சோதனை நடத்தப்படுவதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஸ்பெயின் அரசும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதார அமைச்சர் கரோலினா டேரியாஸ், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஸ்பெயின் அழுத்தம் கொடுக்கும் என்றார்.
- 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
- 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.
கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
- கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது.
சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஊடுருவியபோது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை தாரக மந்திரம் போன்று கடைபிடித்தனர். ஒரே நேரத்தில் சிலர் 2 முககவசங்களை பயன்படுத்தினர்.
முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டியவர்களிடம் அரசாங்கம் அபராத நடவடிக்கைகளை கையில் எடுத்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கொரோனாவின் கொட்டம் அடங்கிப்போனாலும், இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினந்தோறும் இந்த தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.
இந்த தொற்று உயிர் பலி அதிகம் வாங்கிய நேரத்தில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்திருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால் மக்கள் மத்தியில் அச்சமும் விலகி விட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்கள், தியாகராயநகர் உள்பட கடை வீதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் முககவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடுகள் கானல்நீராய் போனது. அரசின் அபராத நடவடிக்கைகளும் அடங்கிப்போனது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலர் மட்டும்தான் முககவசம் அணிந்து செல்வதை காண முடிகிறது.
கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில் எச்-1 என்-1 இன்புளுயன்சா வைரசும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாகவும் முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர்.
தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்கள் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை கோயம்பேடு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ராஜேஷ்:-
கொரோனாவுக்கு பின்னர் முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்த நேரத்தில் அதை அணிவது சற்று சிரமமாகதான் இருந்தது. ஆனால் நோய் கிருமிகள் நம் உடலுக்கு செல்வதை தடுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது என்பதை உணர்ந்து அணிய தொடங்கினேன். தற்போது முககவசம் அணிவது என் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. புது புது வைரஸ்கள் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் வெளியே செல்லும்போது முககவசம் அணிவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
முககவசம் அணிவது நம்மை மட்டுமின்றி நம் வீட்டில் உள்ள பெரியவர்களையும் நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சுகன்யா:-
கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் முககவசம் அவசியம் தேவைப்பட்டது. தற்போது இந்த தொற்று பாதிப்பு பெரிதளவில் இல்லை. எனவே முககவசம் தேவைப்படவில்லை. முககவசம் அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மூச்சு முட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறது. எனவே நான் முககவசம் அணிவதை நிறுத்திவிட்டேன். தற்போது நன்றாக சுவாசிக்க முடிகிறது.
மேலும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது முகத்தில் 'மேக்-அப்' போட்டு செல்வோம். முககவசம் அணிந்தால் 'மேக்-அப்'பை கலைத்து முகத்தை அலங்கோலமாக்கி விடுகிறது.
அயனாவரத்தை சேர்ந்த இல்லத்தரசி லில்லி:-
சாலையில் செல்லும்போது தூசுகள், வாகன புகைகள் உடலுக்கு பகையாகிறது. எனவே முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
எனவே முககவசம் அணிவதன் மூலம் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். வீட்டில் சமையல் செய்யும்போது நெடி ஏற்படும்போது தும்மல் வருவதை தடுக்கிறது. பூ அணிவது போன்று முககவசம் அணிவதை நான் பழக்கப்படுத்தி கொண்டுள்ளேன். பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதில் தனிகவனம் செலுத்துகிறேன்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் துணியிலான முககவசங்கள் விற்பனை செய்து வரும் முருகேசன்:-
கொரோனா பரவலுக்கு முன்பு நான் பல்வேறு வியாபாரங்கள் செய்து வந்தேன். கொரோனா பரவலுக்கு பின்னர் முககவச வியாபாரத்தில் ஈடுபட்டேன். இந்த தொற்று வேகமாக பரவிய நேரத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட முககவசங்கள் விற்பனை ஆகும். தற்போது ஒரு நாளைக்கு 5 முககவசங்கள்தான் விற்பனை ஆகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நீங்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. ஆரம்பத்தில் லாபகரமாக இருந்த இந்த தொழில் தற்போது நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தீபாவளி நேரத்தில் மக்கள் வாங்கும் புதிய உடைக்கு ஏற்ப முககவசங்கள் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அதிக முககவசங்களை வாங்கி உள்ளேன். இந்த முககவசங்கள் விற்பனையாகாவிட்டால் இந்த தொழிலை ஓரங்கட்டி விடுவேன்.
சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் மருந்தகம் நடத்தி வரும் சங்கர்:-
கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது. அதேபோன்று கைகளை சுத்தம் செய்யக்கூடிய 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.
இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனாவா? அப்படின்னா? என்று கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். எனவே முககவசம் அணிவது, கிருமி நாசினிகள் பயன்படுத்தும் பழக்கத்தை பலர் கைவிட்டுவிட்டனர். இதனால் முககவசம், கிருமி நாசினி விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்பத்தில் உயிர்க்கொல்லி நோயாக கருதப்பட்ட கொரோனா இன்றைக்கு சாதாரண காய்ச்சல் போன்று உடனடியாக குணப்படுத்த கூடிய நோயாக மாறி இருப்பதால், கொரோனா பற்றிய கவலை போய்விட்டது. எனவே முககவசம் அணிவது இல்லை என்பது பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது.
கொரோனா வைரஸ் கிருமி உருமாறும் தன்மை கொண்டது. இந்த தொற்று வீரியம் அடைந்தால் அசுர வேகத்தில் பரவும் ஆபத்து உள்ளதாக ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கொரோனா கிருமி இந்த பூமியில் இருந்து ஒழிந்துவிட்டது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் முக்கியம் என்பது டாக்டர்களின் அறிவுரையாக உள்ளது.
- நேபாள அதிபர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார்.
- இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்.
காட்மாண்டு:
நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி (61) திடீர் உடல் நலக் குறைவால் 2 நாட்களுக்கு முன்பு காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்த நிலையில் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் பித்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என மருத்துவர்கள் நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். எனினும் இன்னும் சில நாட்களுக்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவர் காஃப்லே கூறியுள்ளார்.