என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி"

    • தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
    • ICMR மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

    தடுப்பூசிகளுக்கு அவசரமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற சித்தராமையாவின் கூற்று உண்மைக்கு மாறானது என்றும், அது சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான பீக்கன் லிமிடெட் நிர்வாகத் தலைவரும் தொழிலதிபருமான கிரண் மஜும்தார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பதில்களைத் தேடுவதைக் குறை கூறுவதாகக் கருத முடியாது என்று சித்தராமையா கிரண் மஜும்தாருக்கு  பதிலளித்துள்ளார்.

    முதலமைச்சராக, மக்களின் கவலைகளை நிவர்த்தி செய்வது எனது கடமை. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்பாராத விதமாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். ஒரு விஷயத்தில் தெளிவு கோருவது தவறான பிரச்சாரம் அல்ல. தடுப்பூசிக்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

    உலகளாவிய சுகாதார அவசரநிலையின் போது இந்த தடுப்பூசி அவசரமாக அங்கீகரிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. ஒரு தொற்றுநோய் காலத்தில் இவ்வளவு அவசரம் தவறு அல்ல. ஆனால் இதன் விளைவுகளைப் புரிந்துகொள்வது நல்லது என்று கூறினார்.

    இதற்கிடையே கோவிட் தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் அறிக்கைகள் தவறானவை என்றும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் முன்பே இருக்கும் மருத்துவ நிலைமைகள் முக்கிய காரணிகள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் AIIMS இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • ஹசன் மாவட்டத்தில் 20-க்கும் அதிகமானோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
    • இதற்கு திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் 20-க்கும் அதிகமானோர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதற்கு கொரோனா தடுப்பூசி கூட காரணமாக இருக்கலாம் என கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கும், உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் மிக அரிதாகவே இருக்கும்.

    திடீர் மரணங்களுக்கு வாழ்க்கை முறையும் பிற நோய்களுமே காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்புக்கும், கொரோனா தடுப்பூசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் நடத்திய விரிவான ஆய்வுகள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மரபியல், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம் என தெரிய வந்தது என குறிப்பிட்டுள்ளது.

    • கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.
    • நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் செல்லுங்கள்.

    கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா,

    "கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

    இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் 10 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே குழுவிற்கு கடந்த பிப்ரவரி மாதமே, மாநிலத்தில் இளம் வயதினர் மத்தியில் திடீர் மரணங்களுக்கான காரணங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த தொடர்பாக, இதய நோயாளிகளை பரிசோதிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

    குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தங்கள் முழு வாழ்க்கையும் எதிர்காலத்தில் இருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும் நாங்களும் மதிப்பளிக்கிறோம், அவர்களின் குடும்பங்களின் கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.

    இதுபோன்ற விஷயங்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் பாஜக தலைவர்களின் செயல்களை நான் கண்டிக்கிறேன். கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.

    ஏனெனில் உலகெங்கிலும் சமீபத்திய ஆய்வுகள் கோவிட் தடுப்பூசிகள் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன. இந்த விஷயத்தில் பாஜக எங்களை விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் தங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும்.

    ஹாசன் மாவட்டத்திலும் மாநிலம் முழுவதும் இந்த திடீர் தொடர் மரணங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம்.

    ஒரு அரசாங்கமாக, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாங்கள் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    • விளம்பரத்தில் பெற்றோர் பிள்ளைகளின் சுயவிவரக் குறிப்பை அளிப்பர்.
    • சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாதவை. அவர்களுக்கு ஏற்றவாறு நிறம், வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருத்தம், வசதி உள்ளிட்டவற்றை பார்த்து பேசி முடித்து திருமணம் முடிப்பது என்பது அப்பப்பபா...

    வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது. இதற்காக பெற்றோர் பிள்ளைகளின் சுயவிவரக் குறிப்பை அளிப்பர். அதில் பெரும்பாலும் வயது, நிறம், கல்வித் தகுதி, சமூகம் என்று காணப்படும். ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட பலரும் ஆச்சரியத்துடன் 'என்னப்பா இது' என்று சொல்ல வைக்கிறது.



    கொரோனா அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
    • குவாட் கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஆஷிஷ் ஜா, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

    உலகளவில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் அளவு அபரிமிதமாக இருப்பதால், தடுப்பூசிகளின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான குவாட் (QUAD) கூட்டாண்மை, அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முக்கியமானது என்றும் கூறினார்.

    உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பனா ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவு குறித்து பேசிய அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கும் என்றார்.

    • 2021, அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது.
    • கடந்த ஜூலை 17-ம் தேதி 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியது.

    புதுடெல்லி:

    உலக அளவில் கொரோனா வைரஸ் 65 கோடிக்கும் கூடுதலானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

    அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னெச்சரிக்கை டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் மத்திய அரசு செலுத்தி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. கடந்த ஜூலை 17-ம் தேதி 200 கோடி டோஸ் செலுத்தி புதிய மைல்கல்லை இந்தியா அடைந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    இந்நிலையில், தொடர்ந்து நாடு முழுவதும் நடந்து வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் போடப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையானது இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.

    • மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. அதன் பரிசோதனை தரவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்டது.

    இந்த தரவுகளை மத்திய அரசு ஆய்வு செய்து மூக்கு வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23-ந்தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதன்படி ஒரு டோசின் விலை ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் உண்டு. இதனால் அனைத்தையும் சேர்த்து ரூ.1000 ஒரு டோசுக்கு செலவாகும்.

    ஒரு டோசில் 4 சொட்டுகள் கிடைக்கும். ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும். இந்த தடுப்பு மருந்தை கோவேக்சின், கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்துக்கொள்ளலாம்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26-ந்தேதிக்குள் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
    • அனைத்து சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஜப்பான் அரசு கூறியது.

    டோக்கியோ:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
    • சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

    இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

    ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

    முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது.

    சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சீனாவில் கொரோனா மேலாண்மையை 'ஏ' வகுப்பில் இருந்து 'பி' வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர். அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச பயணிகள், சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது. அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, "உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல" என கூறுகின்றனர்.

    சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர்.

    சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    ஆனால் அங்கே தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடு வீடாக செல்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தடுப்பூசியா, வேண்டவே வேண்டாம் என்று முதியோர் ஓடுகிற நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதால் ஏற்படுகிற கடும் காய்ச்சல், ரத்தக்கட்டிகள் மற்றும் பிற பக்கவிளைவுகளால்தான் தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓடுகிறார்கள்.

    இதுபற்றி 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசியினால் ஏற்படுகிற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.

    என் நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. ரத்தக்கட்டிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எனது நண்பர் இன்னொரு டோஸ் தடுப்பூசி போட விரும்பவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசிகள் எந்த அளவு பலன் அளிக்கும் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் ஷாங்காய் புடன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஜியாங் ஷிபோ கூறுகையில், "முதியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களுக்கு தொற்று என்பது ஆபத்தானது, அதனால் மரணமும் நேரிடக்கூடும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

    • மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது.
    • எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி 154' என்ற பெயரில் மூக்கு வழியே செலுத்துகிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.

    இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து, 'இன்கோவாக்' என்ற வணிகப்பெயருடன் சந்தைக்கு வருகிறது. இந்த தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை கடந்த நவம்பர் மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக (முன்எச்சரிக்கை டோஸ்) வழங்குவதற்கு கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இந்த தடுப்பு மருந்து 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது.

    இந்த தடுப்பு மருந்து கோ-வின் தளத்தில் இப்போது கிடைக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான இந்த தடுப்பு மருந்து ஒரு 'டோஸ்' விலை ரூ.800 ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த தடுப்பு மருந்து ரூ.325 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பு மருந்து, பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுந்தது. இது தொடர்பாக கொரோனா தடுப்புக்குழு தலைவர் டாக்டர் அரோரா விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை பூஸ்டராக பயன்படுத்தலாம் என்று சொல்லி உள்ளனர். ஆனால் ஏற்கனவே கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இதுவரை கொரோனாவுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பு மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    ஆனால் 4-வது முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே 2 தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசியும் பெற்று உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே உள்ளது.

    எனவே 4-வது பூஸ்டர் தடுப்பூசிக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மிக எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

    மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×