search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coronavirus Vaccine"

    • சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
    • சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

    இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

    ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

    முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது.

    சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சீனாவில் கொரோனா மேலாண்மையை 'ஏ' வகுப்பில் இருந்து 'பி' வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர். அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச பயணிகள், சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது. அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, "உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல" என கூறுகின்றனர்.

    சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர்.

    சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    ஆனால் அங்கே தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடு வீடாக செல்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தடுப்பூசியா, வேண்டவே வேண்டாம் என்று முதியோர் ஓடுகிற நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதால் ஏற்படுகிற கடும் காய்ச்சல், ரத்தக்கட்டிகள் மற்றும் பிற பக்கவிளைவுகளால்தான் தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓடுகிறார்கள்.

    இதுபற்றி 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசியினால் ஏற்படுகிற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.

    என் நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. ரத்தக்கட்டிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எனது நண்பர் இன்னொரு டோஸ் தடுப்பூசி போட விரும்பவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசிகள் எந்த அளவு பலன் அளிக்கும் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் ஷாங்காய் புடன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஜியாங் ஷிபோ கூறுகையில், "முதியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களுக்கு தொற்று என்பது ஆபத்தானது, அதனால் மரணமும் நேரிடக்கூடும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

    • சென்னையில் இதுவரை 42,35,939 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர்.
    • செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியில் நாளை 37-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் (அ) 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசியும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் இதுவரை 42,35,939 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 6,04,042 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி யானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.

    செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை விலையில்லாமல் செலுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஞாயிறு தோறும் தமிழக சுகாதார துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • 30-ந்தேதிக்கு பிறகு பூஸ்டர் டோஸ் போட வேண்டுமானால் ரூ.386.25 கட்டணத்தில்தான் தடுப்பூசி போட வேண்டியிருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இதுவரை 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று 36-வது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், மாவட்ட மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்கள் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த காலக்கெடு வருகிற 30-ந்தேதியுடன் முடிகிறது.

    இதனால் இந்த மாதம் ஞாயிறு தோறும் தமிழக சுகாதார துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் 30-ந்தேதிக்கு பிறகு பூஸ்டர் டோஸ் போட வேண்டுமானால் ரூ.386.25 கட்டணத்தில்தான் தடுப்பூசி போட வேண்டியிருக்கும்.

    இதனால் இலவச வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது.
    • சென்னையில் நடைபெற்ற 34 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41 லட்சத்து 90 ஆயிரத்து 373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டுள்ளது. 12.9.2021 அன்று முதல் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 34 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 34 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41 லட்சத்து 90 ஆயிரத்து 373 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் 4-ந் தேதி (நாளை) 35-வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் இதுவரை 42,70,342 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,54,588 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வருகின்ற 30-ந் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு இடத்தில் நிலையான முகாமும் 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது.
    • இதுவரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 38 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

    சுமார் 1 லட்சம் முகாம்களில் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று வரையில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 942 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 11 லட்சத்து 63 ஆயிரத்து 277 பேரும் போடாமல் உள்ளனர்.

    இதுவரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 38 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் நிலையான முகாமும் 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    தடுப்பூசி போடாமல் உள்ளவர்கள் பெயர் விவரம் சுகாதாரப் பணியாளர்களிடம் உள்ளதால் அவர்கள் அந்தந்த வீடுகளுக்கு சென்று முகாம் அருகில் நடைபெறுவதை கூறி தடுப்பூசி போட அழைக்க உள்ளனர்.

    முதல் தவணை தடுப்பூசி அதிகம் போடாமல் உள்ள மாவட்டங்களில் ராணிப்பேட்டை முதல் இடத்திலும் (21 சதவீதம்), கன்னியாகுமரி 2-வது இடத்திலும்(18 சதவீதம்), 3-வது இடமான தேனி மாவட்டத்தில் 17 சதவீதம் பேரும் உள்ளனர்.

    சென்னை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, கரூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

    மாவட்டம் வாரியாக தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    சென்னை -13,72,219

    கோவை -6,23,576

    கடலூர் -5,77,932

    திருப்பூர் -5,66,197

    செங்கல்பட்டு -6,30,294

    சேலம் -5,67,315

    திருச்சி -5,02,050

    மதுரை -7,14,206

    ஈரோடு -5,43,054

    திருவள்ளூர் -4,82,295

    விழுப்புரம் -2,98,783

    நாமக்கல் -5,27,697

    திண்டுக்கல் -3,02,242

    விருதுநகர் -4,31,493

    திருவாரூர் -3,91,499

    தூத்துக்குடி -3,94,921

    தஞ்சாவூர் -3,63,366

    திருநெல்வேலி -4,55,472

    காஞ்சிபுரம் -1,44,686

    கிருஷ்ணகிரி -5,05,406

    கன்னியாகுமரி -5,37,220

    திருவண்ணாமலை -2,24,895

    ராமநாதபுரம் -2,55,099

    வேலூர் -1,90,043

    தேனி -3,69,603

    புதுக்கோட்டை -2,01,737

    கள்ளக்குறிச்சி -1,77,922

    திருப்பத்தூர் -3,77,157

    சிவகங்கை -1,88,268

    ராணிப்பேட்டை -3,47,526

    அரியலூர் -76,631

    மயிலாடுதுறை -2,00,624

    நாகப்பட்டினம் -1,93,719

    தர்மபுரி -2,59,910

    தென்காசி -1,41,529

    கரூர் -83,292

    நீலகிரி -1,13,046

    பெரம்பலூர் -64,510

    • நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
    • தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் (ஊக்கத்தவணை) தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது.

    தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த மே 8-ந்தேதி கடந்த ஜூன் 12-ந்தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில் 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.

    தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகிற திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    புதுச்சேரியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி எட்டப்படவில்லை. 3½ லட்சம் பேர் முதல் தவணையே போடாத நிலை இருந்து வருவதால் மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பரவத்தொடங்கியது. இந்த தாக்கம் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 2,200 அளவுக்கு அதிகரித்தது. பலி எண்ணிக்கையும் சராசரியாக 35 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

    இந்தநிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். எனவே மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் குழு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தது இல்லை. தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது.

    விழிப்புணர்வு பிரசாரம், சிறப்பு முகாம்கள், 24 மணி நேர முகாம்கள், நிறுவனங்களில் முகாம்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடுவது என தொடர்ச்சியாக அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்தது.

    100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற இலக்கை தொட சுகாதாரத்துறை அவ்வப்போது தடுப்பூசி திருவிழா நடத்தி வருகிறது. அக்டோபர் 2-ந் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி போட முயற்சி எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த இலக்கினை எட்ட முடியவில்லை.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். ஆனாலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

    பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அதாவது, ஆரம்ப சுகாதார நிலையம் வரை வந்து விட்டு கட்டாய பரிசோதனைக்கு பயந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதெல்லாம் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

    புதுவையில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் வரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 40 ஆயிரத்து 655 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 45 ஆயிரத்து 659 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த வகையில் பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களே 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக இருப்பது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவையில் 18 வயது நிரம்பிய சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை கணக்கில்கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம். கிட்டத்திட்ட 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போட்டு வருகிறோம். கவர்னர், முதல்-அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். வருகிற 30-ந்தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கினை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்று காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தார். இந்தநிலையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

    இந்தநிலையில் நேற்று 2-வது தவணை தடுப்பூசியை ரங்கசாமி போட்டுக்கொண்டார். அவரது வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் தடுப்பூசி போட்டனர். இதன்பின் சிறிது நேரம் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். இதனால் நேற்று காலை அலுவலகத்துக்கும் வரவில்லை. பிற்பகலில் வழக்கம்போல் தனது பணிகளை ரங்கசாமி தொடர்ந்தார்.
    நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    8-ம் கட்ட முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக போதுமான அளவு டோஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டது. முடிவில் 17,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வருகிற 14-ந் தேதி தமிழகம் முழுவதும் 8-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.

    இதனால் மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 30-ந்தேதி 7-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன்மூலம் 17.14 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    ஞாயிற்றுக்கிழமை தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த மாதம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி தமிழகம் முழுவதும் 8-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

    மழைக் காலத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பட்டியலை தயார் செய்து அவர்களை வீடு வீடாக தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் முதல் மற்றும் 2-வது கட்ட தடுப்பூசி செலுத்தாவர்களை கண்டறிந்து போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்து வருகிறது.

    காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

    கன மழை பெய்த நிலையிலும் நேற்று 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரையில் 5 கோடியே 76 லட்சத்து 70 ஆயிரத்து 416 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


    குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
    பாஸ்டன்:

    இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும்.

    ஆனால், குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

    வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது எளிது. கொரோனாவை உருவாக்கும் சார்ஸ் வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ரகங்களுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

    அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள்வரை வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். அதுவரை சீராகவும், செயல்திறன் மிக்கதாகவும் தடுப்பூசி இருக்கும்.

    மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்திக்கும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருந்து நிறுவனங்களை அணுக உள்ளனர்.
    பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்து இருக்கிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
    சென்னை:

    கொரோனா தடுப்பூசியை வீடு வீடாக சென்று மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அத்திட்டத்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார்.

    அதன்படி நாடு முழுவதும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 1-வது தெரு மற்றும் பிருந்தாவன் நகர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    ஒவ்வொரு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்களிடம், ஏன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்? உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

    அதேபோல் 2-வது டோசை செலுத்திக் கொள்ளாதவர்களிடம், தாமதப்படுத்தாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியமானது. தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். அதனை நாம் கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மற்றவர்களிடமும் சொல்லி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நம் பாரதப் பிரதமர் கொரோனா தடுப்பு பணி குறித்து நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி வலியுறுத்தினார்.

    எல் முருகன்

    உலகிலேயே 100 கோடிக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்திய நாடு இந்தியாதான். தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் முதல் டோஸ் 93 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோசை தாமதிக்காமல் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இது திருவிழாக்காலம். எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முககவசம் அணிவது மிக மிக முக்கியம். வெளியில் செல்லும்போது முககவசத்தை அணிந்து செல்லுங்கள்.

    கடல்பாசி திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து பயன் அளிக்கும் திட்டம் ஆகும். இதனால் பொருளாதாரம் உயரும். இந்த திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன் முதலாக செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தமிழக அரசிடம் இருந்து சில அரசாணைகள் வெளியாக வேண்டி இருக்கிறது. அது வெளியானதும் கடல் பாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். வருங்காலத்தில் கடல் பாசி என்பது மிக முக்கிய பயனுள்ளதாக அமையும். அது உரத்துக்கும், உணவுக்கும் பயன்படுகிறது.

    ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கடல்பாசி உணவாக பயன்படுத்தப்படுகிறது. இது பெண்கள் முன்னேற வழிவகுக்கும் திட்டமாகும்.

    பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்து இருக்கிறது. மத்திய அரசு விலையை குறைத்ததை அடுத்து வாட் வரியை புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் குறைத்துள்ளன. இதனால் அங்கு பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறைந்து இருக்கிறது.

    அதேபோல் தமிழ்நாட்டிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×