என் மலர்
நீங்கள் தேடியது "எல் முருகன்"
- தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
- சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
சென்னை:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய ரெயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது.
இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொரு பதிவில்,
தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு ரெயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஐதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற ரெயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மதுரை:
மார்ச் 1-ம் தேதி மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் 2-வது மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிலையில் பொது கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-
அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதியரசர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தி.மு.க. ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி 23-ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும் என்றார். பொது கூட்டத்துக்கு முன்பாக மேலும் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது.
எங்களுடைய கூட்டணியின் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும்.
- பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது.
புதுச்சேரி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட் இப்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதலாக 10 சதவீத நிதி கோரியுள்ளனர். இதன் பின்னர் தான் மாநிலம், யூனியன் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கப்படும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
புதுச்சேரியில் 800 ஏக்கரில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் 6 ஆயிரம் இளைஞர்கள் நேரடியாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.
2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும். புதுச்சேரி, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, கேரளாவை இணைத்து சாலை, ரெயில் வளர்ச்சி, கிழக்கு கடற்கரை சாலை வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். சென்னை, ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் 2047-க்குள் மிகப் பெரிய வளர்ச்சியடையும். வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி செல்லும்போது அனைத்து மாநிலமும், அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியடைவர். அதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது. மீண்டும் பிரதமர் தமிழகம், புதுச்சேரிக்கு வருவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். பல கட்சி களோடு பேசி வருகிறோம். தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் பா.ஜ.க.வினர் அல்ல, நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெறும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்ட ஒன்று, தி.மு.க. வீட்டுக்கு செல்லும் நாள் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் இன்று வரை யார் உள்ளார்கள்? என்றே தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து கூட்டத்தையே நடத்தி விட்டோம். எங்கள் கூட்டணி, வலுவான கூட்டணி, ஆட்சி அமைக்கும் கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. பிரசார பணிகளை வியூகம் அமைத்து முன் னெடுத்து உள்ளன.
கட்சியின் முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களை மேற்கொள்ள ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலை சந்திக்க ஒவ்வொரு தொகுதியையும் தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் 2 முதல் 7 சட்டசபை தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குனேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்ணாமலை-சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜாவும் எழும்பூர், ராசிபுரம், பர மத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி.துரைசாமியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தமிழ்நாட்டு வளர்ச்சியில் அனைவரும் பங்கெடுப்போம். மக்களிடம் இருந்து மக்களுக்காகஎன்ற கோஷத்தோடு மக்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் பிரசார பயணத்தை இன்று தொடங்குகிறது.
இதன் தொடக்க விழா இன்று அமைந்தகரை அய்யாவு மகாலில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் இந்த கருத்து கேட்பு வாகனத்தை தொடங்கி வைக்கிறார். மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த வாகனம் தமிழ்நாடு முழுவதும் செல்லும். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன தேவைகள்? மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிந்து அதன் அடிப்படையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதுவையிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. சார்பில் மக்களி டம் கருத்துக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படிவத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா புதுவை கடற்கரை காந்தி திடல் அருகே இன்று மாலை வெளியிடுகிறார்.
உங்களின் விருப்பம், எங்களின் வாக்குறுதி எனும் தலைப்பில் இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் கருத்து தெரிவிப்பவரின் பெயர், தொகுதி, தொலைபேசி எண் உட்பட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படை யில்தான் தேர்தல் வாக்குறுதி அமையும் என கூறப்படுகிறது.

- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
- பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
திருப்பரங்குன்றம்:
மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதற்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்கள். கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் இங்கு வந்து முறையிடுவதும், அவர்களை கைது செய்து, அடைத்து வைப்பதும் என ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
எனவே இது தொடர்பாக பக்தர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த பிறகும் கூட தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் எந்த அளவுக்கு அராஜகமும், அட்டூழியமும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
சி.ஐ.எஸ்.எப். வீரர்களையும் அனுமதிக்க முடியாத அளவிற்கு தி.மு.க.வின் அரசாங்கமும், காவல் துறையும், ஸ்டாலினும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறார்கள். அம்பேத்கரை மதிக்காத அரசாங்கம் என்றால் அது தி.மு.க. அரசாங்கம் தான். தமிழக மக்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மக்க ளுக்கு துரோகத்தை இழைத்து கொண்டிருப்பவர் திருமாவளவன். அறுபடை முருகனும் தமிழகத்தில் நடக்கும் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இன்னும் இரண்டு மாதத்தில் பதில் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
- கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் நிதி. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை ஒரு பைபாஸ் சாலை வேண்டும், அதற்கான வேலைகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.
தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
தி.மு.க. எப்போது பார்த்தாலும், ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்புகிறது. அதுக்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், உடனே அவரை ஒரு மிகப்பெரிய ஒரு எதிரியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் ரவி சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவர் மீது வன்மம் கொண்டுள்ளது.
கரூர் சம்பவத்தை பொறுத்த அளவுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு அவர்களுடைய அறிக்கைகளை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதை பத்தி பேசுகிறேன்.
ஊடகங்கள் முடக்கப்படுவது தமிழக அரசின் மிகப்பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது. தி.மு.க., எப்போதுமே பத்திரிகையாளர்கள், மீடியாக்களை நசுக்குவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டால் அவர்கள் நல்லவர்கள். எதிராக வெளியிட்டால் உடனே அவர்கள் கெட்டவர்கள்.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் பூத்களை வலிமைப்படுத்தும் பணி ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியான எங்களது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இணைந்து, வேலைகளை வேகப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கரு.மாரிமுத்து (கோவை வடக்கு), தர்மண் (நீலகிரி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்டசெயலாளர்கள் உமாசங்கர், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- காங்கிரஸ்-தி.முக. கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது வெறும் ரூ.878 கோடி மட்டும் தமிழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய அரசு தமிழகத்துக்கு தீட்டி வரும் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
மத்திய மந்திரி எல்.முருகன் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதில்லை என்கிற கோரிக்கையை நான் சுற்றுப்பயணம் செய்யும் போது மக்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை நான் மத்திய அரசிடம் எடுத்து சென்றேன்.
அதன்படி நாளை (18-ந்தேதி) முதல் 38 ரெயில்கள், 38 ரெயில் நிலையங்களில் நின்று செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்துள்ளார்.
ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, இருங்கூர், சிங்காநல்லூர், வள்ளியூர், மேலப்பாளையம், ஆரல்வாய்மொழி, நாங்குனேரி, கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி உள்ளிட்ட 38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும்.
பிரதமர் மோடியை பொறுத்தவரையில் தமிழக நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார். இந்த நிதியாண்டில் மட்டும் ரெயில்வே துறைக்கு ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மத்தியில் காங்கிரஸ்-தி.முக. கூட்டணி 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது வெறும் ரூ.878 கோடி மட்டும் தமிழகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. எழும்பூர் ரெயில் நிலையம் மட்டும் ரூ.800 கோடி செலவில் விமான நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக ரெயில்வே துறையில் 2,587 கிலோ மீட்டர் நீளமுள்ள ரெயில்வே பாதைகள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரெயில்களும் தமிழக பயணிகளின் நலனுக்காக விடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்வதன் மூலமாக 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் திட்டங்களுக்காக ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் நிலையங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறி இருப்பது தவறான தகவல் ஆகும். ரெயில்வே துறையில் மட்டுமின்றி உற்பத்தி துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு துறைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் கொண்டு உள்ள அக்கறையை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
- பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 22-ந்தேதி வருகைதர உள்ளார். நெல்லையில் 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது பற்றி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
கேள்வி:- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு தி.மு.க. பயப்படாது என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும், 'நாங்கள் ஈடி-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என்று கூறி இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:-அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய 2 அமைப்புகளும் தன்னிச்சையான அமைப்புகளாகும். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தங்களது வேலைகளை அந்த அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இதுபோன்ற சோதனைகளை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அதுபற்றி மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமானதாக இல்லை.
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.
எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற கோஷத்தோடு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி மக்கள் ஆதரவுடன் அவரது பிரசார யாத்திரை எழுச்சி பெற்றிருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உள்ளார். எனவே தான் இது போன்ற குற்றச்சாட்டுகளை அவரும், தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள்.
கேள்வி:-அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்கள் விலகிச் சென்று தி.மு.க.வில் இணைந்திருப்பதால் அது கூட்டணியை பலவீனப்படுத்தி விடாதா?
பதில்:-2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் இது போன்று ஒரு கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வது வழக்கமானது தான். நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த போது தி.மு.க.வில் இருந்து விலகி பலர் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர்.
இப்போது தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் இணைவதற்காக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அது போன்று யார்-யார் எங்களிடம் பேசுகிறார்கள், இணைப்பு விழா எப்போது நடைபெறும் என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக தி.மு.க.வில் இருந்து பலர் வெளியில் வருவார்கள்.
கேள்வி:-தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை கூறி இருக்கிறாரே?
பதில்:-தி.மு.க. கூட்டணியில் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இதுபோன்று மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணியில் இருந்து எங்கே வெளியேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர் உள்ளார். அவருக்கு தேவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீட் தான். பட்டியல் இன மக்களை பற்றி அவர் எப்போதுமே கவலைப்பட்டது இல்லை.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை எதற்குமே திருமாவளவன் முறையாக குரல் கொடுக்கவில்லை. பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார். இன்றைக்கு பட்டியல் இன மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் உள்ளன.
நான் பட்டியல் இனத்தில் காலனியில் இருந்து வந்தவன். நான் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பொறுப்பில் இருந்தபோது பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் நிலையை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி இருக்கிறேன். அதுபற்றியெல்லாம் திருமாவளவன் பேச மாட்டார்.
எனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்கள் விஷயத்தை பொறுத்தவரையில் தகுதியான நபர்களுக்கு மாற்றுப் பணிகளையும் வழங்க வேண்டும். அவர்களை தூய்மை பணியாளர்களாக மட்டுமே எப்போதும் வைத்திருக்கக் கூடாது.
உதாரணத்துக்கு ஓட்டுனர் வேலை தெரிந்தவராக தூய்மை பணியாளர் ஒருவர் இருந்தால் வாய்ப்பு வரும் போது அவருக்கு டிரைவர் பணியை வழங்கலாம். அதே நேரத்தில் கல்வியறிவு பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணிகளை வழங்கலாம்.
கேள்வி:-ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறதே?
பதில்:-ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரெயில்வே துறையிடம் எடுத்து கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
- கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.
சென்னை:
மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர். அவர் சொல்வதுதான் வேதவாக்கு.
தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. தி.மு.க. கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது.
எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. தமிழக அரசிடம் நிதி இல்லாததால் தான் அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்கிறார்கள். கோவிலை விட்டு அரசாங்கம் வெளியேற வேண்டும்.
சமூக நீதி விடுதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. அங்கு எந்த வசதியும் இல்லை. விடுதியை முதலமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.
அம்பேத்கர் வழியில் நடப்பதை பற்றி சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.
இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் செய்யவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் செய்கிறார்கள்.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
- பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள்.
- பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது.
சென்னை:
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரதமரின் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சேவைகள் மற்றும் பிரதம மந்திரி திவ்யாஷா மையத்தின் சார்பில் மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று நடந்தது.
இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கேலிக் கூத்தை அரங்கேற்றி இருக்கிறார். எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்கள் படிக்கின்ற விடுதியை சமூக நீதி விடுதி என்று பெயர் வைத்து இருக்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன். அவர் ஏதாவது ஒரு விடுதியை போய் பார்த்து இருக்கிறாரா? அந்த விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்.
எஸ்.சி.,எஸ்.டி. விடுதியில் ஒரு மாணவர் படிக்கிறார் என்றால் அவர் அதை விட ஒரு கொடுமையை வாழ்க்கையில் அனுபவித்து இருக்கவே முடியாது. அது போன்ற விடுதிகளில் பெயரை மட்டும் மாற்றினால் சரியாகி விடுமா? எதுவுமே நடக்காது.
பா.ஜ.க. ஆட்சி செய்கிற மத்தியபிரதேசத்தில் எஸ்.சி., எஸ்.டி. விடுதியை பார்த்து விட்டு கற்றுக் கொண்டு வாருங்கள். அங்கு சிறப்பான வசதியை செய்து கொடுத்திருக்கிறோம். கர்நாடகா, தெலுங்கானாவிலும் போய் பார்த்து விட்டு வாருங்கள்.
தமிழகத்தில் உள்ள விடுதியில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மாணவர்களுக்கு சொறி சிரங்கு ஏற்படுகிறது. எந்த விடுதியிலும் சுத்தம் கிடையாது. தமிழகம் முழுவதும் இது தான் நிலை.
சென்னை சட்டக் கல்லூரியில் உள்ள விடுதியின் நிலையும் இதுதான். மாணவர்கள் மீது முதலமைச்சருக்கு பற்று இருந்தால் அவர் ஒவ்வொரு விடுதியையும் சென்று பார்த்து விட்டு அதன் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்த வேண்டும்.
அதே போல் காலனிகளை ஒழித்து விட்டோம் என்கிறார். பல கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமை இருக்கிறது. இரட்டை சுடுகாடு இருக்கிறது. பல கிராமங்களில் கோவில்களுக்கு போக முடியாத சூழ்நிலை இருக்கிறது.
சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை தமிழக அரசு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். எனது தொகுதியில் இருந்து தொடங்கும் இந்த சுற்றுப் பயண தொடக்க விழாவில் நானும் பங்கேற்கிறேன். சிறுபான்மை மக்கள் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் ஆதரவு கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், மருத்துவ கண்காணிப்பாளர் புஷ்பலதா, துணை மருத்துவ கண்காணிப்பாளர்கள் சிவகுமார், பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
- நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
திருச்சி:
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. சி.டி.ஏ.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.
இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற ஓய்வு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று மாலைக்குள் 6 ஆயிரம் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கும் தீர்க்கப்படும். இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது.
ஒரு காரிடார் உத்தரபிரதேசத்திலும் 2-வது தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.
நம்முடைய நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
- மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஸ்டூடியோவுக்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது. நேற்று தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு இரவு 7.10 வரை நீடித்தது.
இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாசாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






