search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vck"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
    • அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமரால் தேர்வு செய்யப்பட்டவர் கார்த்தியாயினி.

    சிதம்பரம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை அனைவரும் சேர்ந்து தோற்கடிக்க செய்யவேண்டும். அதனால்தான் நாம் எல்லோரும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

    யாராக இருந்தாலும் தனது அதிகார பலத்தை வைத்து முடக்கிவிடலாம் என்று நினைக்கக்கூடிய தொல். திருமாவளவனை சிதம்பரம் தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்த முறை தோற்கடித்து பாடம் புகட்டவேண்டும்.

    விசிக என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, அது விழுப்புரம் சிதம்பரம் கட்சி என்று.

    திருமாவளவன் அதிக தொகுதிகளை கேட்டாரு. பொது தொகுதியை கேட்டாரு. கூட்டணி மாறிவிடலாம் என்றுகூட யோசிச்சாரு. ஆனால் தி.மு.க. தலைமை இறங்கி வரவில்லை. திருமாவளவன் மீது திமுக வைத்திருக்கும் மரியாதை அவ்வளவுதான்.

    பா.ஜ.க. வேட்பாளர் அக்கா கார்த்தியாயினியை வெற்றிபெற செய்யவேண்டும். அக்கா கார்த்தியாயினி அரசியல் தெரிந்தவர். நிர்வாகத் திறன் மிக்கவர். மேயராக பணியாற்றியவர். அடித்தட்டில் இருந்து மேலே வந்த கார்த்தியாயினி, அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக உழைப்பார் என பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என் தெரிவித்தார்.

    • நாட்டில் உணவு பஞ்சத்தை விட கொடியது தலைமை பஞ்சம் தான்.
    • மனிதர்களை கவரும் தலைமை பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அகில இந்திய கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் லயோலா கல்லூரியில் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டில் உணவு பஞ்சத்தை விட கொடியது தலைமை பஞ்சம் தான். தலைமை பஞ்சம் வந்தால் அதனை சீர் செய்ய முடியாது. நல்ல ஆளுமைக்கு பயிற்சி வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பயிற்சி பெற்ற பிறகுதான் அதில் சிறந்து விளங்க முடியும்.

    ஆனால் தலைவர்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழகமோ, கல்லூரிகளோ பயிற்சி நிறுவனங்களோ கிடையாது. ஆனால் தலைவர்கள் தான் தேசத்தின் சக்தி. எனவே தலைவர்களுக்கு சேவை மனப்பான்மை வேண்டும். ஒரு பிரச்சினையை கையாள தெரிய வேண்டும். துறை ரீதியான அறிவு மட்டும் போதாது. புரிதல் ஞானம் வேண்டும். இது தவிர மனிதர்களை கவரும் தலைமை பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

    கிறிஸ்தவ பாதிரியார்கள் பொது வாழ்வில் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள். நல்ல தொண்டுள்ளம் வேண்டும். நல்ல தலைவர்கள் கொள்கையில் இருந்து மாறக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன
    • நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்

    தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் அவர்கள் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். அதற்கெனவே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது.

    அது அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பைத் தம்முடைய கைப் பாவையாக ஆக்கிக் கொள்வதற்கு மோடி அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அருண் கோயல் அவர்கள் கடந்த 2022 நவம்பரில் விருப்ப ஓய்வு பெற்று 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையராக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரித்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தொடர வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது.

    பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்கும் நோக்கில் மோடி அரசு, அவசர அவசரமாக சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதாவது, பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் என்று அந்த சட்டம் சொல்கிறது.

    இது ஆளுங்கட்சியின் கைப் பாவையாகத் தேர்தல் ஆணையத்தை மாற்றும் நடவடிக்கையே தவிர வேறல்ல. இந்த சட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம். அதையும் மீறி மோடி அரசால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு வெளிப்படையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துத் தேர்தல் ஆணையத்தைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர மோடி அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்படுகிறது.

    மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தப் பின்னணியில் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருக்கிறார். மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றைத் தனது விருப்பம் போல இப்போது மோடி அரசு நிரப்பப் போகிறது. அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஒட்டுமொத்தமாகத் தனது பிடிக்குள் கொண்டு வரப் போகிறது.

    'வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்' என்று ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

    அதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களது ஆதரவு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்து இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டி இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

    பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.

    எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கையும் அவசர வழக்குகளாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்.

    இந்திய தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்கும் தேர்வுக்குழுவை நியமித்துக் காலியாகவுள்ள இரண்டு ஆணையர்களை நியமிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து ' அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் நடக்கும்' என்கிற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
    • மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.

    ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார்.
    • தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த முறை போல் அல்லாமல் 2 தனித் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.

    ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட அழைத்தது. ஆனால் அவர் செல்லவில்லை. உயர் மட்டக் குழுவை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். 2 தனி தொகுதியையும், ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று உயர்மட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நிலையை விளக்க வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.


    அதன்படி முதலமைச்சரை சந்திக்க திருமாவளவன் நேரம் கேட்டிருந்தார். வெளியூர் சென்று இருந்த முதலமைச்சர் சென்னை திரும்பியதும் தன்னை அழைப்பார் என்று திருமாவளவன் எதிர் பார்த்தார்.

    ஆனால் இன்று காலை வரையில் விடுதலை சிறுத்தைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

    முதலமைச்சரை சந்தித்த பிறகுதான் தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் கையெழுத்திடுவதாகவும் உறுதியாக உள்ளார்.

    முதலமைச்சரிடம் இருந்து கட்டாயம் அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் திருமாவளவன் காத்து இருக்கிறார்.

    முதலமைச்சரை நேரில் சந்திக்கும் போது, கூடுதலாக கேட்கப்படும் பொதுத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடுதலாக ஒதுக்கப்படும் தொகுதிகூட தி.மு.க. சின்னம்தான்.


    அதனால் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்குவதால் தி.மு.க.விற்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்பதை விளக்கவும் உள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சனாதன சக்தியான பா.ஜனதாவை இத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    கடந்த தேர்தலை விட கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுவும் பொதுத் தொகுதி. கூட்டணி கட்சிகளை தி.மு.க. அலட்சியப்படுத்தக் கூடாது. தங்கள் முடிவை பரிசீலிக்க வேண்டும்.

    முதலமைச்சர் தலையிட்டால் தான் உடன்பாடு இறுதியாகும். முதலமைச்சரை சந்திக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் விடுதலை சிறுத்தைகள் இன்று சந்தித்து பேசுவதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறப்படுகிறது.

    கூடுதலாக ஒரு தொகுதிக்கு வரிந்து கட்டும் விடுதலை சிறுத்தையின் கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனை செய்வாரா? இல்லை 2 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பாரா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    • திமுக கடந்த முறை போன்று தற்போதும் இரண்டு இடங்கள் வழங்க தயாராக இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் 3 இடங்கள் கேட்டு, அதில் உறுதியாக உள்ளது.

    மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. இந்த குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 3 தொகுதிகள் கேட்கிறது. அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக கடந்த 2019 தேர்தலை போன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மூன்று தொகுதிகள் கேட்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் உள்ளது.

    தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்ய விரும்புகிறார். இதன்காரணமாக திமுக நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தனது முடிவில் உறுதியாக இருந்தால் பேச்சுவார்த்தையில் இழுபறிதான் நீடிக்க வாய்ப்புள்ளது.

    3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் திமுக கூட்டணியில்தான் இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது.
    • கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கின்ற தொலைநோக்குத் திட்டமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

    இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக வறுமை ஒழிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறி வருகிறது. தற்போது வறுமையில் இருக்கும் ஐந்து லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படுவதாக இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது ஏழை மக்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையுள்ள அரசாக இது திகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இருக்கும் குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அனைத்து குடிசை வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான மாபெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன.

    2011 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அந்தத் திட்டத்தை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. தற்போது கலைஞர் அவர்களின் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் அவர்கள், 'குடிசை இல்லா தமிழ்நாடு' திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படுமென்றும், நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதனைப் பாராட்டி வரவேற்கின்றோம். வீடு ஒன்றுக்கு 3.5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

    பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்திய "புதுமைப்பெண் திட்டம்" பெருமளவில் பயனளித்துள்ளது. அதனை ஆண்களுக்கும் விரிவு படுத்துவதற்காக 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' என்கிற புதிய திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனமுவந்து வரவேற்கிறோம்.

    புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை சிற்றுண்டித்திட்டம் இரண்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்திருப்பது எளிய மக்களின் கோரிக்கையை இந்த அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

    கோவையில் "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    அறிவு சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் "விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா" அமைக்கப்படும் என்றும்; தமிழ்நாட்டில் முதன்முறையாக "உலகப் புத்தொழில் மாநாடு" நடத்தப்படும் என்றும்; மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் "தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்" உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது என்பதற்குச் சான்றுகளாக உள்ளன.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி, ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வேலைவாய்ப்பைத் தேடும் இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

    சென்னையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கென்று பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறோம்.

    பழங்குடியின மக்களின் வாழ்விடங்களில் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'தொல்குடி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் பாராட்டி வரவேற்கிறோம்.

    ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வறுமையை ஒழிப்பதற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்குமான தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல் திட்டமாக விளங்குகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மற்றும் நிதித் துறை அமைச்சர் அவர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
    • நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

    தேர்தல் பத்திரத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

    இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திரத் திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

    பாஜக அரசு 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்த 'தேர்தல் பத்திர திட்டம்' அரசமைப்புச் சட்டத்துக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கும் எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 (1 ) (A) க்கு எதிராகத் தேர்தல் பத்திர திட்டம் உள்ளது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் நன்கொடை வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள், என்ற முழுமையான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 6 க்குள் வழங்க வேண்டுமென்றும், தேர்தல் ஆணையம் அந்த விவரங்கள் அனைத்தையும் தனது இணையப் பக்கத்தில் மார்ச் 13ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.

    2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரியவரும்.

    நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

    உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது எனவே இதை ரத்து செய்யவேண்டும் என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.

    இந்திய தேர்தல் சனநாயகத்தைக் காப்பாற்றுவதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியது போலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
    • பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ அப்படித்தான்

    ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.

    திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.

    கடந்த 2021ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.

    ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.

    இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன்,

    விடுதலைச்சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.

    பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை.

    திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம்.

    இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்டு படுகாயம் அடைந்த மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கண்டன ஆர்ப்பாட்டம்

    இந்த சம்பவத்தை கண்டித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நெல்லை வண்ணார் பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் களக்காடு சுந்தர் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் முத்து வளவன், எம்.சி. சேகர், அருள் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் காளிதாஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சுகந்தி, மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கி ணைப்பாளர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம்.
    • பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாங்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவரது தாயாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, " நாங்குநேரி சம்பவம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க கல்வி வளாகங்களில் நடைபெறும் சாதிய மோதல்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் நல்ல வழி செய்யும் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

     

    மேலும், "ஒரு நபர், அமைப்பு அல்லது சாதி தூண்டிவிட்டது என்று குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூக சூழல் தான் காரணம். சுயசாதி பெருமை பேசுகிறேன் என்ற பெயரில், வேற்று சாதியை வெறுக்கும் சூழல் ஏற்படுவதை உற்று நோக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவர்களுக்கு நல்ல வீடு, பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    "தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தனி உளவுபிரிவு உருவாக்கப்பட்டு இருப்பதை போன்றே, சாதிய மதவாத பிரச்சினைகளை கண்காணிக்க தனியாக உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தமிழ்நாட்டை குறிவைத்து இருக்கும் நிலையில், இந்த உளவுப்பிரிவு அவசியம் தேவைப்படுகிறது என்று நான் வலியுறுத்துகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

    ×