என் மலர்
நீங்கள் தேடியது "vck"
- போதைப்பொருள் கலாசாரத்தை எதிர்த்ததே ஆகாஷ் குறிவைக்கப்பட்டதற்கு அடிப்படை பின்னணி
- திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கின் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்து வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தற்போதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை வழக்குகளில் ஒருசிலவையே மக்களுக்கு வெளிச்சமாகி பெரிதாக வெடித்தவை.
அந்தவகையில் அஜித்குமார் மரணவழக்கை தொடர்ந்து தற்போது அரங்கேறிய கொடூரம்தான் மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரணம். மூச்சுத்திணறல் மரணத்திற்கு காரணம் என காவல்துறை கூற, ஆகாஷின் வாக்குமூலங்களும், பிரேத பரிசோதனை அறிக்கையும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையையும் வழங்கினர். இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மரணத்திற்கு காரணம் காவல்துறையே என தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் மரணத்துக்கு காவல் துறையின் மூர்க்கத்தனமும், மருத்துவத் துறையின் அலட்சியமுமே காரணம். சம்பந்தப்பட்ட காவலர்களை உடனே கைது செய்ய விசிக வலியுறுத்துகிறது. போதைப்பொருள் கலாசாரத்தை எதிர்த்ததே ஆகாஷ் குறிவைக்கப்பட்டதற்கு அடிப்படை பின்னணி. ஆகாஷ் மரண விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும்.
- நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்
மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
"ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முதலானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படுகின்றன. சூழ்நிலையை முன்னுணர்ந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம்.
பொதுமக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப்புணர்வோடு செயல்படாத ஒன்றிய பாஜக அரசின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றிக் கிடைப்பதற்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஈரான் நாட்டை அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் தாக்குவதற்கான தயாரிப்புகளை செய்து கொண்டிருந்தபோதே, இந்தியாவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு போற்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பலரும் எச்சரித்தனர். ஆனால், அந்த எச்சரிக்கைகளை மதிக்காமல் மோடி அரசு அலட்சியமாக இருந்தது. இப்போது வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், எரிவாயு விநியோகம் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் 'எஸ்மா சட்டத்தை' ஒன்றிய பாஜக அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்படுகின்றன. மாணவர் விடுதிகளில் உணவு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'சில வாரங்களுக்கு கையிருப்பு உள்ளது' என்று ஒன்றிய அரசு சொன்னாலும் பெரும்பாலான மாநிலங்களில் சிலிண்டர் விநியோகம் செய்ய முடியவில்லை. மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லியிருக்கிறோம் என்று மோடி அரசு சொன்னாலும் அது உடனடியாக நடக்கப் போவதில்லை. இந்தக் குழப்பங்களுக்கு மோடி அரசின் கையாலாகத்தனமே காரணம்.
கொரோனா வந்த போதும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட போதும் இதே போலத்தான் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் மோடி அரசு நடந்து கொண்டது. அதனால் கொரோனாவின்போது இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இப்போதும் மோடி அரசு அதே போலத்தான் நடந்து கொள்கிறது.
நாட்டுக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை இல்லாமல் தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அதில் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்ற விதத்திலேயே மோடி அரசு செயல்படுகிறது. இப்போதும் கூட அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய மோடியின் கூட்டாளி அம்பானிக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கு அம்பானிக்கு உதவும் மோடி அரசு இந்திய மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.
எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதாலே எரிவாயு விநியோகம் முறையாக நடந்து விடும் என்று நம்புவதற்கு இல்லை. எஸ்மா சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தவே மோடி அரசு முயற்சிக்கும். எனவே இப்படி நாடகமாடி மக்களை ஏய்ப்பதை நிறுத்திக்கொண்டு உருப்படியாக மக்களுக்கு உதவுவது எப்படி என ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும்.
போர் முடிந்தாலும்கூட எரிவாயு விநியோகம் சீரடைய பல மாதங்கள் பிடிக்கலாம். எனவே, மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும். மின்சார அடுப்புகளை மானிய விலையில் கிடைக்கச் செய்யவேண்டும். கிராமப்புற மக்களுக்குக் கூடுதலாக மாதம் 10லிட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கவேண்டும். சோலார் மின்வசதி ஏற்படுத்திக்கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்கவேண்டும்.
தேவையான இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கவேண்டும். இவற்றுக்கான நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் 'பிஎம் கேர்ஸ்' நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சியை ஓ.பி.எஸ். மேற்கொண்டார்.
- திராவிட பாரம்பரியத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பணியாற்றி வளர்ந்தவர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். அவர் உடன் அவரது மகன் மற்றும் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் குமார், மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி. அய்யப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது தொடர்பாக பேசிய திருமாவளவன்,
"ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்தது தி.மு.க.விற்கு மட்டுமல்ல, அதன் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம், அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சியை அவர் மேற்கொண்டார். குறிப்பாக எடப்பாடி உடன் இணைய முயன்றார். பா.ஜ.க. போன்ற கட்சிகளில் சேராமல் தி.மு.க.வில் சேர்ந்தது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. அவர் திராவிட பாரம்பரியத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் பணியாற்றி வளர்ந்தவர்.
அத்தகைய பாரம்பரியத்தை பாதுகாக்கும்வகையில் மீண்டும் தன்னை திராவிட பாசறையில் இணைத்துக்கொண்டது வரவேற்க்கத்தகுந்தது." என தெரிவித்தார்.
- இந்த அறிவிப்பு களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
- திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.24) வெளியிட்டார்.
அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது "உதவித்தொகை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இந்த பெரும்தொகை அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன்,
'இது ஒரு தேர்தல் வித்தை. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று அவர்கள் (அதிமுக) நம்புகிறார்கள், அதனால்தான் இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருக்கிறார்கள். திமுக ஏற்கனவே மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்து, அவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது அதிமுகவும் தங்கள் வெற்றிக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.
- அணுசக்தி உற்பத்தியில் விபத்துகள் / போழிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அணு உலை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை
- ன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 12ந்தேதி பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விசிக, சிபிஐ(எம்), சிபிஐ (எம்.எல்) விடுதலை கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையை விசிக தலைவர் திருமாளவன் வெளியிட்டுள்ளார். அதில்,
"ஒன்றிய பாஜக அரசின் மிகவும் கொடூரமான நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலுக்கு எதிராகவும் 2026 பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியத் தொழிற்சங்கங்கள், தொழில்வாரியான சம்மேளனங்கள், ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் மீது அப்பட்டமான தாக்குதலை நடத்தி வருகிறது. தொழிலாளர்கள் 100 ஆண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் ஆதரவாக நான்கு தொகுப்புச் சட்டங்களாக திருத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர்.
அதிக ஆபத்தான அணுசக்தி உற்பத்தித் துறையில், லாப நோக்கத்துடன் செயல்படும் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைவதற்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக "இந்தியாவை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதில், அணுசக்தி உற்பத்தியில் விபத்துகள் / போழிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான அணு உலை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் வெளிநாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. இது நமது நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் மட்டுமல்லாமல் மனித உயிரை மதிக்காத போக்குமாகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தை ஒழித்துக் கட்டியும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியும் விபிஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கடுமையான வேலையின்மையால் தவிக்கும் இந்த நேரத்தில், இந்த புதிய சட்டம் உரிமைகள் அடிப்படையிலான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஒழித்துக்கட்டி, வேலை அளிப்பதை ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாக மாற்றி, 40 சதவிகித நிதிச் சுமையையும் மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அத்துடன், அறுவடைக் காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது. இது கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் வேலை உரிமையை பறிக்கும் செயலாகும்.
இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தும் உரிமையை வழங்குகிறது. ஒன்றிய அரசு, விக்சித் பாரத் சிக்க்ஷா அதிஸ்தான்-2025 என்ற சட்ட முன்வடிவையும் நிறைவேற்றியுள்ளது. இது கல்வித்துறை அதிகாரங்களை மத்தியில் குவிக்கவும் பெருமளவில் வணிகமயமாக்கவும் வழிவகுக்கிறது.
விதை சட்டமுன்வடிவையும், 2025 மின்சார (திருத்த) சட்டமுன்வடிவையும் மோடி அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டால், அவை விவசாயம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன மின் நுகர்வோர், எளிய மக்கள் மற்றும் நமது நாட்டின் பொது மின்சாரத் துறைக்கு போழிவை ஏற்படுத்திடும். இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களாகவும் அமைகின்றன. மேலும், 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிடமிருந்து வரி இல்லாமல் இறக்குமதி செய்வது என்ற அமெரிக்கா -இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இறையாண்மை, விவசாயம், பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
மோடி அரசின் இந்த அனைத்து கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்தி வரும் இயக்கங்களுக்கு வாலிபர், மாணவர், மாதர், மாற்றுத்திறனாளி போன்ற வெகுமக்கள் அமைப்புகளும் தங்களது ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளன. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் அமைப்புகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்திய நாட்டின் வளங்களை சூறையாடி கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்கவும் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிடும் வகையில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும், தமிழக உழைப்பாளி மக்களும், வணிகப் பெருமக்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்.
- கூட்டணியில் கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை
அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக, திமுக கூட்டணியில் இணையலாம் என்று தகவல் வெளியானது.
பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய திருமாவளவன், "பா.ம.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டே முடிவெடுத்து விட்டோம். பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ராமதாஸை கூட்டணியில் இணைப்பது பற்றி தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். கூட்டணியில் ராமதாஸ் இணைவது பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
தற்போது மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள திருமாவளவன், "கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும். கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. சாதிய, மதவாத கட்சிகள் இடம் பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்ற நிலைப் பாட்டில் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்பதை திருமாவளவன் மீடனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார்.
- ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர்,
"திருமாவளவன் அவர்களே, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள், ஆனால் உங்களுடைய கட்சி இங்கு மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. நீங்களும், 20 பேரும் மட்டும் தான் கட்சியில் இருக்கிறீர்கள். விசிகவில் 20, 30 தலைவர்கள் மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொண்டர்கள் அனைவரும் இங்கு மாறிவிட்டார்கள். அறிவாலயத்தில் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இன்றைக்கு வரைக்கும் ஏன் சிலை வைக்கவில்லை. திருமாவளவனை திமுகவினர் அடியாளாக பயன்படுத்துகின்றனர். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு." எனப் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு விசிக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தநிலையில் அதற்கு விளக்கமளித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு...
இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன்.
'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...' என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது' என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற, உறவாடுகிற தலைவராக திருமாவளவன் இருந்துவருகிறார்கள்.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்' என திருமாவளவன் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி 'முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்' என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, 'வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக' நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள்.
வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின்மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின்மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த 'ஒடுக்குமுறை' பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான்.
அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும்.
வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருத்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்' என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்துவருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு.
'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு' என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு இந்த திட்டம் அடிப்படை காரணமாகும்.
- மன்மோகன் சிங் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இடதுசாரிகள், விசிக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால், தி.மு.க, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் "தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005" செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்று இருக்கும் ஊரகப் பகுதி தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு, 2006 பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட தொடக்க விழாவில் பேசிய அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இத்திட்டத்திற்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது என தெரிவித்தார்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முன்னோடி திட்டமாக திகழும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூக சொத்துக்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன; வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளன; தீவிரமாகி வந்த நகரமயமாகும் வேகம் தணிந்து வேலை தேடி கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்து செல்வது குறைந்துள்ளது. பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என சமூகத்தின் பலவீனமான பகுதியினர் வருமான வாய்ப்பு காரணமாக சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கைச் சூழலை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடிப்படை காரணமாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, உரிய காலத்தில் நிதி வழங்காமல் இழுத்தடிப்பது என அடியோடு அழித்தொழிக்கும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, வளர்ந்த பாரதம் - வேலைக்கான உறுதியளிப்பு மற்றும் ஊரக வாழ்வாதாரம் திட்டம் 2025 (விக்ஷித் பாரத் - கேரண்டி பார் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் 2025) என்ற புதிய மசோதாவை 16.12.2025 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத மக்கள் ஒற்றுமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக, மதவெறியூட்டி செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்திகள் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியை 1948 ஜனவரி 30ல் ஆர்.எஸ்.எஸ். படுகொலை செய்தது. அவர் இறந்த பிறகும் மகாத்மா காந்தியின் பெயரையும் கூட சகிக்க முடியாமல் அவரின் பெயரிலான திட்டத்தையும் படுகொலை செய்துள்ளது.
புதிய விபி-ஜி ராம் ஜி திட்டம் சட்டப்பூர்வ வேலை பெறும் உரிமையை பறித்து விட்டது. இந்தத் திட்டத்திற்கான செலவில் 40 சதவீதம் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துகிறது. இதனால் மாநில அரசுகள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன.
முந்தைய சட்டத்தில் வேலை கேட்டு முறையிட்டால் 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. வேலை வழங்க முடியாத நிலையில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதித்து வசூலிக்கவும் வகை செய்யப்பட்டிருந்தது. புதிய திட்டத்தில் ஒன்றிய அரசின் பொறுப்புகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டு, கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் மூலம் வேலை அட்டை பெற்றுள்ள சுமார் 14 கோடி குடும்பங்களையும், அதில் இணைந்துள்ள 26 கோடி தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய வி பி - ஜி ராம் ஜி என்ற வகுப்புவாத சார்பு கொண்ட வஞ்சகத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 23.12.2025 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளன.
இந்த முடிவின் படி இடதுசாரி கட்சிகள் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்புகள், ஒருங்கிணைந்து, ஊரகப் பகுதி உழைக்கும் மக்களை பெருமளவில் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது?
- அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்றும், தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் ) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம். இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 'இம்பீச்மெண்ட் நோட்டீஸில்', அவர் ஒருதலைச் சார்போடும் ,அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார்; ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ; ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
இந்நிலையில், அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது. 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-மத்திய அரசுகளை அவமதிப்பதுமாகும். குறிப்பாக, இந்திய அரசின் உள்துறை செயலாளரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைத்திருப்பது உள்நோக்கம்கொண்டதாகவுள்ளது. இந்திய மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? அவரிடம் இவர் என்ன எதிர்பார்க்கிறார்? நீதிமன்ற அவமதிப்புக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறார்? அதிகார வரம்பை மீறி இந்த மூவருக்கும் அழைப்பு அனுப்பியிருப்பது இவரே எடுத்த முடிவாகத் தெரியவில்லை.
இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது. திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.
அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி வில வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
- 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 39 பாராளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மண்டல செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரையில் பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் வீதம் இருந்தனர். அந்த கட்டமைப்பை மாற்றி தற்போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளரும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மண்டல துணை செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில் 6 தொகுதிகளுக்கு 3 மண்டல துணை செயலாளர்கள் பொறுப்பு புதிதாக உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கட்சி தலைவர் தொல். திருமாவளவன் புதிய மண்டல செயலாளர்கள், துணை செயலாளர்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் 156 பொறுப்புகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
திருவள்ளூர் மண்டல செயலாளர் தளபதி சுந்தர், மண்டல துணை செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி-ஏகாம்பரம், மாதவரம், ஆவடி-ராமதாஸ், பூந்தமல்லி, திருவள்ளூர் தொகுதிகள்-செஞ்சி செல்வம்.
வட சென்னை
மண்டல செயலாளர்-அம்பேத் வளவன், துணை செயலாளர்களாக திருவொற்றியூர், ராயபுரம் தொகுதி நீல மேகவண்ணன், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு எஸ்.எம். மணி, திரு.வி.க. நகர், கொளத்தூர் தொகுதிகளுக்கு புரசை அன்பு.
தென் சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர் கார்த்திக், துணை செயலாளர்கள் கதிர் ராவணன், அசோக், வீரமணி. மைய சென்னை மண்டல செயலாளராக இரா.செல்வம், துணை செயலாளர்களாக தலித் நூர் செல்வம், அர்ஜன், ராவண சங்கு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் அசோகன், துணை செலயாளர்கள் ஜிம் மோகன், தங்க தியாகு, மாயவன், தர்மபுரி மண்டல செயலாளர்-தமிழண்பன், துணை செலயாளர்கள் செந்தில்குமார், மின்னல் சக்தி ஜானகிராமன்.
திருவண்ணாமலை மண்டல செயலாளர் அம்பேத் வளவன், துணை செயலாளர்கள்-சின்ன பையன், ஜெயமூர்த்தி, முருகேசன், திண்டுக்கல் மண்டல செயலாளர்-ஜான்சன்கிறிஸ்டோபர், துணை செயலாளர்கள் சந்திரன், ஜனா முகமது, அன்பரசு, கரூர் மண்டல செயலாளர்கள்-வேலுசாமி, துணை செயலாளர்கள் கதிரேசன், ஜெயராமன், செல்வராஜ்.
மண்டல செயலாளர்-தமிழாதன், துணை செயலாளர்கள்-பொன் முருகேசன், பிரபாகரன், திருமறவன், பெரம்பலூர் மண்டல செயலாளர்கள் ஸ்டாலின், துணை செயலாளர்கள் நீலவாணன், பெரியசாமி, லெனின்.
கடலூர் மண்டல செயலாளர்-பரச. முருகையன், துணை செயலாளர்கள் இரா.செம்மல், அதியமான், ஆலப்பாக்கம் ஜெயகுமார், சிதம்பரம் மண்டல செயலாளர்-செல்லப்பன், துணை செலயாளர்களாக தடா கதிரவன், செல்வராஜ், கருப்பசாமி,
மயிலாடுதுறை மண்டல செயலாளர்-அறிவழகன், துணை செயலாளர்கள் காமராஜ், முருகதாஸ், ராஜ்குமார், நாகப்பட்டினம் மண்டல செயலாளர் எம்.டி. இளவரசு துணை செய லாளர்கள் ஜாகீர் சாதிக் விதா செல்வம், சீமா மகேந்திரன், தஞ்சாவூர் மண்டல செயலாளர்-சிவக்குமார். துணை செயலாளர்கள்-மன்னை ரமணி, சொக்கா ரவி, ஆத்மா ஆனந்தகுமார்.
ஆரணி மண்டல செயலாளர்கள்-நன்மாறன், துணை செயலாளர்கள் ஜெய்சங்கர், குப்பன், தனஞ்செழியன், விழுப்புரம் மண்டல செயலாளர்- திலீபன். துணை செயலாளர்கள்-இரணியன், ஆதித் தமிழன், ஓவியர் இளங்கோவன், கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர்-சீதா துணை செயலாளர்கள்-பொன்னி வளவன், ராமமூர்த்தி, நாராயணன்.
ஸ்ரீபெரும்புதூர் மண்டல செயலாளர்-கதிர்நிலவன், துணை செயலாளர்கள்-ரூபஸ், கண்ணன், தேவ அருண்பிரகாசம், காஞ்சீ புரம் மண்டல செயலாளர்-இரா.தமிழரசன், துணை செலயாளர்கள், மதி. ஆதவன், பொன்னி வளவன், இளைய வளவன்.
அரக்கோணம் மண்டல செயலாளர் தமிழ்மாறன். துணை செயலாளர்கள்-பிரபா இளையநிலா, வெற்றி வளவன், தமிழ். வேலூர் மண்டல செயலாளர்-சந்திரன், துணை செயலாளர் சஜின் குமார், செல்வன், கோவேந்தர்.
சேலம் மண்டல செயலாளர்-நாவரசு, துணை செயலாளர்கள்-ஓமலூர் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், வேணுநாயகன், நாமக்கல் மண்டல செயலாளர் பழனிமாறன், துணை செயலாளர்கள்-அரசன், காமராஜ் பெருமாவளவன், ஈரோடு மண்டல செயலாளர்-ஜாபர் அலி. துணை செயலாளர்கள்-சவுமியா, செம்மணி, பிரீத் ஜான் நாட், திருப்பூர் மண்டல செயலாளர்-சிறுத்தை வள்ளுவன், துணை செயலாளர்கள்-திருமாவளவன், அம்பேத்கர், துறைவளவன்.
ராமநாதபுரம் மண்டல செயலாளர்-விடுதலைசேகரன், துணை செயலாளர்கள்-ஜெயபாண்டி, பழனிகுமார், பாலகிருஷ்ணன், தூத்துக்குடி மண்டல செயலாளர்கள்-திருள்ளூவன், அர்ஜூன் கதிரேசன்.
தென்காசி மண்டல செயலாளர்-இசக்கி பாண்டியன், துணை செயலாளர்கள்-லிங்கவளவன், சித்திக், தாமஸ், திருநெல்வேலி மண்டல செயலாளர்கள்-களக்காடு சுந்தர், துணை செயலாளர் கள்-கரிசல் சுரேஷ், வெற்றி மாறன், ராஜ்குமார், கன்னியாகுமரி மண்டல செயலாளர்-பகலவன், துணை செயலாளர்கள், திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன், டேவிட் மேரி.
சிவகங்கை மண்டல செயலாளர்-பெரியசாமி, துணை செயலாளர்கள்-சின்னுபழகு, சங்கு உதய குமார், முத்துராஜ், மதுரை மண்டல செயலாளர்-இன்குலாப், துணை செயலாளர்-மூர்த்தி மோகனா, கதிரவன்.
தேனி மண்டல செயலாளர்-ரபீக் முகமது, துணை செயலாளர்கள்-முருகன், நாகரத்தினம், சுருளி.
விருதுநகர் மண்டல செயலாளர்-முருகன், துணை செயலாளர்கள் கலைச் செல்வன், போத்தி ராஜன், சதுரகிரி, நீலகிரி மண்டல செயலாளர்-ராஜேந்திர பிரபு, துணை செயலாளர்கள் மன்னரசன், சகாதேவன், ஜெகன் மோகன்.
கோவை மண்டல செயலாளர்-கலையரசன், துணை செயலாளர்கள்-தங்கவளவன், துறை செயலாளர்கள்-இளங்கோ, குமணன். பொள்ளாச்சி மண்டல செயலாளர்-கேசவ் முருகன், துணை செயலாளர்கள்-நிலா மணிமாறன், பிரபு, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த கட்டமாக ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகிறது.
- வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
- சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஒற்றை உத்தரவால் நேற்று திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு, கலரவம் உண்டாகும் சூழல் நிலவியதாக பல்வேறு தரப்பினரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.
இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார்.
இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார்.
- சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது.
- தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை பாஜக அரசு நிராகரித்திருக்கிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, " 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)
7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்" என்பதாக அவர் கூறியிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தோம் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.






