என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vck"

    • வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
    • சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் ஒற்றை உத்தரவால் நேற்று திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு, கலரவம் உண்டாகும் சூழல் நிலவியதாக பல்வேறு தரப்பினரும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள்  'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தை விட்டு விட்டு, வரலாற்று ஆதாரங்களுக்கு மாறாக வேறு ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்தார்கள். அவர்களது ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி சுமூகமான முறையில் தீபத் திருவிழாவை தமிழ்நாடு அரசு நடத்தியது.

    இந்நிலையில் அங்கு ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு வெளியூர்களில் இருந்து வந்த சனாதனப் பயங்கரவாதக் கும்பல் அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு பொதுச் சொத்துகளையும் நாசப்படுத்தியது. கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    திருப்பரங்குன்றத்துக்கு வெளியூர்களிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்த நிலையில் அங்கு வன்முறையைத் தூண்டும் விதமாக தீபம் ஏற்றுவதற்குப் பயங்கரவாதிகளை அனுமதித்தது மட்டுமின்றி அவர்களுக்குத் துணையாக உயர் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்பியுள்ளார்.

    இது அப்பட்டமான அதிகார மீறல் மட்டுமின்றி அரசமைப்புச் சட்டத்துக்கும், வழிபாட்டுத் தலங்கள் ( சிறப்பு விதிகள் ) சட்டம் 1991 க்கும் எதிரானதாகும். இப்படி சட்டத்துக்கு எதிராக செயல்பட்டதோடு, நேற்று முழுவதும் மதுரை, திருப்பரங்குன்றம் பகுதிகளில் தேவையில்லாத சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகத் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் ஜி.ஆர்.சுவாமிநாதனை நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்." என குறிப்பிட்டுள்ளார். 

    • சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது.
    • தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை பாஜக அரசு நிராகரித்திருக்கிறது.

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, " 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)

    7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்" என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

    2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தோம் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.

    மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.

    கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்.
    • காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    விழுப்புரத்தில் நூலக கட்டிடத்தை வி.சி.க. பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ரவிக்குமார் திறந்து வைத்தார். அப்போது 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. ஆட்சியில் பங்கு கேட்குமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு ரவிக்குமார் பதில் அளித்ததாவது:-

    * கட்சி தொடங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் முழக்கம்

    * காலம் கனியும்போது ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்போம்.

    * 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்பதற்கான வாய்ப்பு இல்லை.

    * தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்

    * கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.

    * 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் விசிக-வுக்கு திமுக இடங்கள் வழங்கும்.

    இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

    • இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
    • ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவ முடிந்தது?

    உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்?

    பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.

    உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வி.சி.க. சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் .

    பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை வி.சி.க. மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

    குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.
    • எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.

    சென்னை:

    வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-

    பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம் பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க பல நூறு அல்லது பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.

    பழங்குடி மக்கள் குறிப்பாக பழங்குடி இருளர், நரிக்குறவர் உள்ளிட்ட அலைந்து திரிந்து வாழும் பழங்குடி மக்கள் பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பு இல்லை.

    ஒவ்வொரு வாக்காளரும் 2002-2004 சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொருவருக்கும் நீண்ட நேரம் தேவைப்படும்.

    இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளோம். அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு நடவடிக்கையை அறிவித்து இருப்பது நீதியை மறுப்பதாகும்.

    தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை 2002-2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு உத்தேசமாக பொருத்திப் பார்த்ததில் சுமார் 40 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்களே முழுமையாகப் பொருந்துகின்றன எனக் கூறப்படுகிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும் 10 முதல் 20 விழுக்காடு வாக்காளர்களின் பெயர்கள் இதில் விடுபட்டுப் போகும்.

    அதாவது தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்நாடு சட்டசபை தேர்தலை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி என்று கருத வேண்டி உள்ளது.

    மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்க்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வரும் வரை இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் அதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இதற்கிடையில் எஸ்.ஐ.ஆர். குறித்து இங்கே பங்கேற்றிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
    • அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.

    நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..

    கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

    தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.

    அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..

    கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

    அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.

    அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.
    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.

    * விஜயை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

    * கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    * கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    * விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது.

    * பொறுப்புடன் வந்த முதலமைச்சருக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

    * சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்.

    * விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள்.

    * உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்றார். 

    • தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள்.
    • பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்துக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 22-ந்தேதி வருகைதர உள்ளார். நெல்லையில் 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பூத் கமிட்டி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது பற்றி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

    கேள்வி:- அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு தி.மு.க. பயப்படாது என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார். தி.மு.க. எம்.பி. கனிமொழியும், 'நாங்கள் ஈடி-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என்று கூறி இருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:-அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய 2 அமைப்புகளும் தன்னிச்சையான அமைப்புகளாகும். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தங்களது வேலைகளை அந்த அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இதுபோன்ற சோதனைகளை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அதுபற்றி மத்திய அரசு மீது குறை கூறுவது நியாயமானதாக இல்லை.

    தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகி வருகிறது.

    எங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற கோஷத்தோடு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்படி மக்கள் ஆதரவுடன் அவரது பிரசார யாத்திரை எழுச்சி பெற்றிருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உள்ளார். எனவே தான் இது போன்ற குற்றச்சாட்டுகளை அவரும், தி.மு.க.வினரும் கூறி வருகிறார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன், அன்வர் ராஜா உள்ளிட்ட 2-ம் கட்ட தலைவர்கள் விலகிச் சென்று தி.மு.க.வில் இணைந்திருப்பதால் அது கூட்டணியை பலவீனப்படுத்தி விடாதா?

    பதில்:-2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடையும். தேர்தல் நேரத்தில் இது போன்று ஒரு கட்சியினர் மாற்று கட்சிகளுக்கு செல்வது வழக்கமானது தான். நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த போது தி.மு.க.வில் இருந்து விலகி பலர் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர்.

    இப்போது தி.மு.க. தலைவர்கள் பலர் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வில் இணைவதற்காக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அது போன்று யார்-யார் எங்களிடம் பேசுகிறார்கள், இணைப்பு விழா எப்போது நடைபெறும் என்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமாக தி.மு.க.வில் இருந்து பலர் வெளியில் வருவார்கள்.

    கேள்வி:-தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திருமாவளவன் மாறுபட்ட கருத்துக்களை கூறி இருக்கிறாரே?

    பதில்:-தி.மு.க. கூட்டணியில் தன்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திருமாவளவன் இதுபோன்று மாறி மாறி பேசி வருகிறார். கூட்டணியில் இருந்து எங்கே வெளியேற்றி விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவர் உள்ளார். அவருக்கு தேவை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீட் தான். பட்டியல் இன மக்களை பற்றி அவர் எப்போதுமே கவலைப்பட்டது இல்லை.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவை எதற்குமே திருமாவளவன் முறையாக குரல் கொடுக்கவில்லை. பல விஷயங்களில் வாயை திறக்காமலேயே இருந்துள்ளார். இன்றைக்கு பட்டியல் இன மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் எந்தவித வசதிகளும் இல்லாமல் உள்ளன.

    நான் பட்டியல் இனத்தில் காலனியில் இருந்து வந்தவன். நான் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பொறுப்பில் இருந்தபோது பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். அப்போது பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் நிலையை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் வலியுறுத்தி இருக்கிறேன். அதுபற்றியெல்லாம் திருமாவளவன் பேச மாட்டார்.

    எனவே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பட்டியல் இன மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்கள் விஷயத்தை பொறுத்தவரையில் தகுதியான நபர்களுக்கு மாற்றுப் பணிகளையும் வழங்க வேண்டும். அவர்களை தூய்மை பணியாளர்களாக மட்டுமே எப்போதும் வைத்திருக்கக் கூடாது.

    உதாரணத்துக்கு ஓட்டுனர் வேலை தெரிந்தவராக தூய்மை பணியாளர் ஒருவர் இருந்தால் வாய்ப்பு வரும் போது அவருக்கு டிரைவர் பணியை வழங்கலாம். அதே நேரத்தில் கல்வியறிவு பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணிகளை வழங்கலாம்.

    கேள்வி:-ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறதே?

    பதில்:-ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரெயில்வே துறையிடம் எடுத்து கூறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து தெரியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர்.
    • குப்பை அள்ளுபவனின் பிள்ளை தான் குப்பை அள்ள வேண்டும் என்பதா?

    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியது தி.மு.க. அரசு. தி.மு.க. செய்கின்ற பாவ மூட்டையை திருமாவளவன் சுமக்க வேண்டாம். தி.மு.க. சொல்வதை திருமாவளவன் அறிக்கையாக வெளியிடுகிறார். சேரக்கூடாத இடத்தில் திருமாவளவன் சேர்த்து விட்டார். தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குவதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது:-

    தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல.

    குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது.

    தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து தெரியாதவர்கள் அவதூறு பரப்புகின்றனர். குப்பை அள்ளுபவனின் பிள்ளை தான் குப்பை அள்ள வேண்டும் என்பதா? தலித் பிரச்சனை என்றால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என்று சொல்வதே சாதி புத்தி. ஏன் தலித் பிரச்சனை பற்றி அதிமுக பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த பொறுப்பு இல்லையா? என்றார்.

    சமீப காலமாக அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • திருமாவளவனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அனைவரும் கண்ணியம், சம உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில்,விசிக தலைவர் திருமாவளவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைவரும் கண்ணியம், சம உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புக்காக நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு நிற்போம்" என்று தெரிவித்துள்ளார். 

    • பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான்.
    • சாதிதான் என்னுடைய முதல் எதிரி என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:

    திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானது அல்ல. அதில் பல தழும்புகள் இருக்கிறது. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

    அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அங்கீகாரம் பெறுவதே சிரமம்.

    என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் என்னுடைய முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை.

    ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் அளவிட முடியும் என அம்பேத்கர் கூறியுள்ளார். பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான் என தெரிவித்தார்.

    • நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
    • FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

    * சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?

    * சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

    * சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். 

    ×