என் மலர்
நீங்கள் தேடியது "விசிக"
- சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது.
- இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டது. 2006 முதல் 2011 வரை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்றனர். ஆனால் அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை.
திரு எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அவரது வாரிசாகக் கூறிக்கொள்ளும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வலியுறுத்தியும் அவர் செயல்படுத்தவில்லை.
திமுக அரசு அமைந்ததும் இதை சுட்டிக்காட்டி மாண்புமிகு முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் அவர்களுக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினேன்.
சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதில்லை என்பதால் இதை செயல்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல. சனாதனக் கருத்தியல் செல்வாக்கால் தமிழ்நாட்டில் சாதிய காழ்ப்பு அதிகரித்துவரும் சூழலில் சமத்துவத்தை நோக்கிய இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.
தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்திட உரிய வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.
- இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பிறகு 2018ம் ஆண்டு சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக சுபாரஷ்கரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.
ஆனால், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வின் முன் வந்தது.
இதில், சுபாஷ்கரன் தரப்பில் ஆஜரானி வழக்கறிஞர், "இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர். அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், "இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது. ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது என தெரிவித்தனர்
மேலும், "இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" எனக் கூறினர்
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகப் போராடியதால், அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவே அவரை இந்தியாவில் குடியமர்த்த வேண்டும்" என மீண்டும் கோரினார்.
ஆனால் நீதிபதிகள் அவ்வாறு அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்குமேயானால் அவர் வேறு நாடுகளை அணுகலாம், எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கை தமிழர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது. மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா? என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஆட்சியர் குறுக்கீடு செய்தார்.
- மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.
மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி விசிகவினர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆட்சியரை மாற்றக்கோரி சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி பெரியார் பேருந்து நிலையம் முன்பாக விசிகவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஆட்சியர் சங்கீதா குறுக்கீடு செய்தார். மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.
- சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு விசிகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
- மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் செல்ல முடியாதவாறு டோல்கேட் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.
மதுரை மாவட்ட கலெக்டர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறார். கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுக்கிறார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி டோல்கேட் இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
- நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
- எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லை என்கிற நிலை தான் நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த இயலாத நிலையிலும் கூட காதணி விழாவுக்கும், மஞ்சள் நீராட்டு விழாவுக்கும், இல்லத் திறப்பு, திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பிடிவாதமாக வந்து மணிக்கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து இழுத்து செல்வதிலேயே தோழர்கள் குறியாக இருக்கிறார்கள்.
24 மணி நேரமும் உங்களோடு இருக்க வேண்டும் என்பதிலே எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் எந்த பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது.
அலுவலகத்திலே போய் தலைமையகத்தில் காத்திருந்தால் 1 மணி நேரத்தில் பார்வையாளர்களை முடித்துவிடலாம் என்றால் ஒருநாளும் என்னால் முடியவில்லை. அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண விழா போன்றவற்றுக்கு அழைப்பதை நிறுத்துங்கள். கட்சியில் உள்ள அடுத்த நிலையில் இருக்கிற முன்னணி தோழர்களையும், மூத்த பொறுப்பாளர்களையும் அழைத்து செல்லுங்கள் என்று பல முறை வேண்டுகோள் விடுத்தும் அதனை பின்பற்ற தவறும் நிலை எனக்கு கடும் அழுத்தத்தை உருவாக்குகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் தேவையற்ற உரையாடல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். சாதிய, மதவாத சக்திகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தி.மு.க. தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பதால் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள்.
ஏதோ நாம் தி.மு.க.வை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் ஒரு தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசி யலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை.
எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதலான பேரம் பலிக்கிற இடத்திலே உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கின்றோம் என்றால் அதற்கு துணிவு, தெளிவு, தொலை நோக்கு பார்வை வேண்டும்.
தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்பு சீட்டு விடுதலை சிறுத்தைகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாகவுள்ளன.
- திமுக கூட்டணி மாறாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதுபற்றி தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.-பா.ம.க. கூட்டணி வதந்தி தான் என விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்து உள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கே: பா.ம.க. உங்கள் கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கும் செல்லலாம் என்று பேசப்படுகிறதே? அதனால் தான் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளிவருவது உண்மையா?
பதில்: நீங்களே முணு முணுப்புகள் என்று சொல்லி விட்டீர்கள். புறந்தள்ளுங்கள். தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
கே: பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி குறித்து உங்கள் பதில் என்ன? இந்த கூட்டணி உங்களுக்கு எதிரான வலிமையான கூட்டணி என நினைக்கிறீர்களா?
பதில்: இது தி.மு.க. அணி யால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல, இரு முறை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக் கால நிகழ்வுகள் இருந்தன.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.க.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அ.தி.மு.க.வையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
கே: மும்மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உள்ள மற்றொரு சர்ச்சைக் குரிய பிரச்சினையாகும். இந்தி திணிப்பு பற்றிய நிலைப்பாடு தற்பெருமையா? அல்லது உண்மையிலேயே அச்சமா?
பதில்: இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தித் திணிப்பினால் வடமாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த 50 ஆண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அதுதான் இன்றைய தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி, பண்பாட்டின் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு உறுதியுடன் எதிர்ப்பதற்கு காரணம், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பா.ஜ.க. அரசின் மறைமுகத் திட்டம் என்பதால்தான்.
கே: நீங்கள் பிரிவினை மற்றும் வெறுப்பு அரசியலை மேற்கொள்கிறீர்கள் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்: அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்?
வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன. மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது.
நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று, அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ் நாட்டைப் பார்த்து-தி.மு.க.வைப் பார்த்து, பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது.
கே: உங்கள் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சியின் சில அம்சங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் மதுபான கொள்கையை பற்றி விமர்சிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: தோழமைக் கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோழமைக் கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.
கே: மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என்று உங்கள் அரசு ஒப்புக்கொள்கிறது. அதில் இருந்து எப்படி மீள்வீர்கள்?
பதில்: தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு காலி கஜானாவை விட்டுச் சென்ற ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. அதன் பிறகு நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து திறம்பட்ட நிதி மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. 10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரச் சூழலை நாங்கள் முன்னேற்றியுள்ளோம்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பது தமிழ்நாட்டின் அடையாளமாகியுள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் முன்னேறுகிறோம். தேவைப்படும் அளவிற்கு கவனமாக பொறுப்புடன் அதனைப் பெற்று மாநில முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
கே: தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களிடையே போதைப் பொருட்களின் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளதாக தெரிகிறது. உங்கள் பதில்?
பதில்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக்கூடிய ஒன்றை, தமிழ்நாட்டிற்கு உரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது.
அ.தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு-போதைப் பொருள் விற்போரின் வங்கி கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகபட்ச சிறை தண்டனை பெற்றுத்தருவது எனத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
குட்கா போன்ற போதை பொருட்கள் கடந்தகால ஆட்சியில் எந்தளவுக்குப் புழங்கின என்பதும், அன்றைய அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் வரை அதில் தொடர்பு டையவர்களாக இருந்ததையும் தமிழ்நாடு அறியும்.
தற்போது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் நார்க்கோடிக் வகைகள், இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுகிறது என்பதைப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம் தான் உள்ளது.
கே: பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர்கொள்ளும் போது அவர் அமைச்சராக தொடர்வது குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடுமையான கேள்வி கேட்டுள்ளதே? இதில் அரசின் நடவடிக்கை சரியானதா?
பதில்: வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இக்கேள்விக்கு கருத்துச் சொல்வது பொருத்தமாக இருக்காது.
கே: ஜனவரியில், சிந்து சமவெளி நாகரீக இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளை புரிந்து கொள்வதற்காக நீங்கள் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து இருக்கிறீர்கள். இது திராவிட-ஆரியப் போராட்டத்தின் நீட்சியா?
பதில்: 3000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருதுகோளை வெளியிட்டவர் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறைத் தலைவரான சர் ஜான் மார்ஷல்.
அந்த ஆய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டில், சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டது. இது ஆரிய-திராவிட போராட்டத்தின் நீட்சியல்ல.
ஆரியத்துக்கு முந்தைய இந்த மண்ணின் பண பாடான திராவிடத்தை ஆய்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிலைநாட்டும் முயற்சி. எழுத்து வடிவம் குறித்த வெற்றிகரமான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கி றேன்.
கே: துணை முதல்-அமைச்சர் உதயநிதியின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள்?
பதில்: துணை முதல்-அமைச்சர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார்.
கே: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்ததை ஒரு எதேச்சதிகார செயல் என்றும் கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாசம் என்று நீங்கள் கூறி இருந்தீர்கள். ஆனால் நீட் செயல்படுத்தப்பட்டபோது தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்ததே?
பதில்: தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வைப் பரிந்துரைத்தபோதே அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கவில்லை. மாநிலங்களின் விருப்ப உரிமையாக அது அமைந்தது. தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே "நீட் தேர்வு செல்லாது" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து விட்டது. தி.மு.க ஆட்சியில் இருந்த காலம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வு நடக்கவில்லை.
"நீட் தேர்வு செல்லாது" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு பா.ஜ.க. ஆட்சி காலத்தில் தான் திரும்ப பெறப்பட்டது. பா.ஜ.க.விடம் தங்களை அடகுவைத்துவிட்ட அ.தி.மு.க. தலைவர்கள், பதவியில் நீடிப்பதற்காக-பா.ஜ.க. விருப்பப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்தார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும்- விசிக எம்.எல்.ஏ.
- கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் எ.வ. வேலு.
தமிழக சட்டசபையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் "முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, "கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதில் அளித்தார்.
- தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
- திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள்.
விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், அன்னை மீனாம்பாள், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை ரமாபாய் ஆகியோரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் கூறியதாவது:-
* திமுக கூட்டணியை உடைப்பதற்கு சிலர் கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம்கொடுத்து விடக்கூடாது.
* தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக, முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும். தப்பித்தவறி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்துவிடும்.
* தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விசிக துருப்புசீட்டாக உள்ளது.
* விசிகவிற்கு எத்தனை சீட்டு கிடைக்கும். 6 சீட்டு 7, 8 ஆகுமா என்று கேட்கிறார்கள். 6 சீட்டு 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியை பிடிக்க போவதில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
- தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.
- திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்" என்றார்.
திமுக - விசிக கூட்டணி குறித்து விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனாவுக்கு வி.சி.க எம்.எல்.ஏசிந்தனைச் செல்வன் பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போது அவர், " விசிகவுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
- தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு.
தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி வரையிலான ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாலை உள்பட அக்கட்சியை சேர்ந்த பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க. முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம், பாராட்டலாம். மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு," என்று தெரிவித்தார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
- கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"
என்று கூறினார்.
- தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.
மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
இதேபோன்று தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்த பட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதுடன், 4 மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தால், தேர்தலின் போது அந்த கட்சி மற்றும் அதன் வேட்பாளருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் ஆணை யம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.
தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அந்தக் கட்சி இடம் பெற்றுள்ளது.
இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.