என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore"

    • தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் தாக்குதலின் எதிரொலியாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓட்டல் சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கோவையில் தற்போதைக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

    • 50 பக்கத்தில் முதல் குற்றப்பத்திரிகையும், 220 பக்கங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் என 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
    • அரசு தரப்பு வக்கீல் பி.ஜிஷா, எதிர்தரப்பு வக்கீல் சசிகுமார் ஆகியோர் வாதம் செய்தனர்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி விட்டு மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி(வயது30), கார்த்தி என்ற காளீஸ்வரன்(21) மற்றும் இவர்களது உறவினரான மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி(20) ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பீளமேடு போலீசார் 8 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வந்தது. 50 பக்கத்தில் முதல் குற்றப்பத்திரிகையும், 220 பக்கங்களில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் என 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    குற்ற சம்பவ இடத்தில் கைப்பற்றிய தடயங்கள், மரபணு பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு தடயங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் கடந்த மாதம் 2-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பர், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று சாட்சி பதிவுகள் முடிவடைந்தன.

    அரசு தரப்பு வக்கீல் பி.ஜிஷா, எதிர்தரப்பு வக்கீல் சசிகுமார் ஆகியோர் வாதம் செய்தனர். கடந்த 27-ந்தேதியுடன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் மார்ச் 7-ல்(இன்று) தீர்பளிக்கப்படும் என நீதிபதி சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

    அதன்படி இன்று இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 

    இதனை தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவித்து மூவருக்கும் சாகும்வரை சிறை தண்டனையை அறிவித்தார். 

    குற்றம் நடந்த 4 மாதங்களில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 28-ந் தேதி கஸ்தூரியின் மகன் டாக்டர் ராம்குமார் குட்டி வெளிநாடு சென்று விட்டார்.
    • வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் அவரது கணவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது82).

    கோபாலன் குட்டி இறந்துவிட்ட நிலையில் கஸ்தூரி தனது மகனான ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார்.

    ராம்குமார் குட்டி தனது தாயார் கஸ்தூரியை பராமரித்து கொள்ள நேபாள நாட்டை சேர்ந்த சுர்ஜா என்ற வேலைக்கார பெண்ணை நியமித்து இருந்தார். கடந்த 4 மாதமாக சுர்ஜா கஸ்தூரியை பராமரித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரி வீட்டில் உள்ள படுக்கையறை கட்டிலில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி போலீஸ் கமிஷனர் வசந்தராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கஸ்தூரி வீட்டில் இருந்து சுர்ஜா உடன் ஒரு ஆணும் வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    விசாரணையில், வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் ஒரு ஆண் சேர்ந்து கஸ்தூரியை கொலை செய்து நகையை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

    கடந்த 4 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுர்ஜா, கஸ்தூரியின் வீட்டில் அதிக நகை, பணம் இருக்கும் என்று எதிர்பார்த்து, அதை கொள்ளையடிக்க கூட்டாளிகளுடன் திட்டம் போட்டு இருக்கிறார்.

    இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி கஸ்தூரியின் மகன் டாக்டர் ராம்குமார் குட்டி வெளிநாடு சென்று விட்டார்.

    இதனால் சுர்ஜா கஸ்தூரியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டார். இதற்காக அவர் தனது கணவரை திட்டமிட்டு நேற்று முன்தினம் கோவைக்கு வரவழைத்துள்ளார்.

    இந்த நிலையில், கஸ்தூரி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து சிங்காநல்லூரில் வசிக்கும் தனது மகள் சுஜாதா வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது வேலைக்கார பெண் சுர்ஜாவும் அவருடன் காரில் சென்றுள்ளார். அதன்பிறகு 2 பேரும் இரவு 7 மணிக்கு அங்கிருந்து வீட்டிற்கு வந்தனர்.

    அதன்பிறகு சுர்ஜா தனது கணவரை தொடர்பு கொண்டு கஸ்தூரியின் வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

    பின்னர் இரவு 12 மணிக்கு 2 பேரும் சேர்ந்து கஸ்தூரியின் வாய் மற்றும் கை கால்களை சேலை, துப்பட்டா, துண்டு மூலம் கட்டி கொலை செய்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் நகை, பணம் இருக்கிறதா என தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த நகை, பணம் கிடைக்கவில்லை. இதனால் கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து விட்டு 2 பேரும் குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் தப்பி சென்ற வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் அவரது கணவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து தனிப்படை போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    சுர்ஜாவை பிடித்தால் தான் கொலை பற்றிய முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • ராம்குட்டி மற்றும் அவரது சகோதரிகள் அவ்வப்போது இங்கு வந்து தாய் கஸ்தூரியை பார்த்து செல்வார்கள்.
    • வீட்டிற்குள் மூதாட்டி துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.

    கோவை:

    கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது82). இவரது கணவர் குட்டி இறந்து விட்டார்.

    கஸ்தூரிக்கு ராம்குட்டி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் ராம்குட்டி டாக்டராக உள்ளார். மேலும் அவர் கோவை பிச்சனூரில் மருத்துவமனையும் நடத்தி வருகிறார். கஸ்தூரியின் மகன், மகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இவர்கள் அனைவரும் அருகருகே வசித்து வந்தனர். இந்த வீட்டில் கஸ்தூரி மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    ராம்குட்டி மற்றும் அவரது சகோதரிகள் அவ்வப்போது இங்கு வந்து தாய் கஸ்தூரியை பார்த்து செல்வார்கள். மேலும் தினமும் காலையில் தங்களது தாய்க்கு போன் செய்து விசாரிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இன்று காலை டி.வி.எஸ்.நகரில் வசித்து வரும் கஸ்தூரியின் மகள், தனது தாயாருக்கு போன் செய்தார். ஆனால் போன் நீண்ட நேரமாகியும் எடுக்கப்படவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து தனது தாயார் வீட்டின் அருகே வசிக்க கூடிய ஒரு பெண்ணுக்கு போன் செய்து, தகவலை தெரிவித்து, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

    அந்த பெண்ணும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கஸ்தூரி துணியால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். அருகே சென்று பார்த்தபோது கஸ்தூரி உயிரிழந்த நிலையில் இருந்தார்.

    இதனால் அந்த பெண் அதிர்ச்சியானார். உடனடியாக சம்பவம் குறித்து அந்த பெண், கஸ்தூரியின் மகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் தனது தாயின் வீட்டிற்கு வந்தார். மேலும் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் வசந்தராஜ் மற்றும் ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    அப்போது வீட்டிற்குள் மூதாட்டி துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர் எதற்காக கொல்லப்பட்டார்? நகை ஏதாவது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்டவை அப்படியே இருந்தது. 2 பவுன் செயின் மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் நகைக்காக தான் இந்த கொலை நடந்திருப்பது உறுதியானது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் பின்னர் நின்று விட்டது.

    இதையடுத்து போலீசார் உயிரிழந்த கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு அதில் யாராவது சந்தேகத்திற்கிடாக வந்து சென்றுள்ளனரா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கொலை நடந்த வீடு உள்ள பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த குடியிருப்பின் நுழைவு வாயிலில் காவலாளிகளும் பணியில் உள்ளனர். எனவே வெளியில் இருந்து வந்து ஆட்கள் கொலையை செய்து நகையை கொள்ளை அடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த நபர் யாராவது தான் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

    இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், கஸ்தூரியை பார்த்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நேபாள பெண் இன்று காலை முதல் வேலைக்கு வரவில்லை. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரை பிடிக்கவும் போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கோவையில் தனியாக இருந்த டாக்டரின் தாயை கொலை செய்து, நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    தொழில் நகரான கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வளைகுடா நாடுகளான குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வெட்கிரைண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இந்த வழித்தடமானது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்தும் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வந்தது.

    தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாலும், இந்த வழியாக சரக்கு போக்குவரத்து நடத்தப்படாது என முக்கிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளதாலும், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் சரக்கு போக்குவரத்து 20 முதல் 25 நாட்கள் வரை தாமதமாகிறது என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும்போது தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்தால் குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபடுகிறது. அத்துடன் போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய நிலை போன்ற அபாயங்களும் ஏற்பட்டுள்ளது.

    ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்த போர் பதற்றத்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோன்று வெட்கிரண்டர் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்க போர் பதற்றத்தால் வெட்கிரைண்டர்கள் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.

    இதுதொடர்பாக வெட்கிரைண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கோவையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கிரைண்டர்கள் ஏற்றுமதியாகின்றன.

    மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றத்தால் கடந்த சில நாட்களில் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களின் ஆர்டர்களை ரத்து செய்து விட்டனர். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனுப்பப்படாமல் தேங்கியுள்ளன.

    மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான 450 வெட் கிரைண்டர்கள், ஐக்கிய அரசு அமீரகத்தின் ஜபல் அலி துறைமுகத்தில் முடங்கியுள்ளது.

    வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருளுக்கான பணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் பதற்றத்தால் உயர்ந்துள்ள செலவினங்களை ஈடுகட்டும் வகையில் ஏற்றுமதிக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.
    • பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள சூர்யகுண்ட மண்டபத்தில் பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அந்த வரிசையில், இந்த ஆண்டு சிங்கபதி, சாடிவயல், நல்லூர்பதி, முள்ளங்காடு, தானிக்கண்டி, மடக்காடு, சர்க்கார்பதி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியினக் குடியிருப்புகள் மற்றும் போளுவாம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை ஈஷா பிரம்மச்சாரிகள் வழங்கினர்.

    ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி மற்றும் கிராமப்புற பகுதிகளில் பொருளாதாரம் அல்லது குடும்பச் சூழல் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.



    இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள் பி.எஸ்.ஜி, ராமகிருஷ்ணா, வி.எல்.பி ஜானகியம்மாள், கலைமகள், அவினாசிலிங்கம் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகளில் மேற்கல்வி பயின்று வருகின்றனர். இதில் முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள் அடங்குவர்.

    குறிப்பாக, இளங்கலை வணிகவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தடய அறிவியல் மற்றும் குற்றவியல், விமான நிலைய மேலாண்மை, தாவரவியல், வேதியியல் மற்றும் ஆங்கில இலக்கியம் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து இம்மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    ஈஷா கல்வி உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமில்லாமல், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கான பயிற்சி, மென்பொருள் துறை சார்ந்த பயிற்சிகள், வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் மற்றும் 'சயின்ஸ் ஸ்பார்க்' என்ற பெயரில் அறிவியல் தொடர்பான பல்வேறு சிறப்புப் பயிற்சிகளையும் இந்த மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் ஈஷா இலவசமாக வழங்கி வருகிறது.



    இத்திட்டத்தின் மூலம் பயின்ற பல மாணவர்கள் இன்று ஐடி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பொறியாளர்கள், கணக்காளர்கள், முன்னணி மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் ஈஷா யோக மையத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

    இவ்விழாவில் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் அவர்களது பெற்றோர், முந்தைய ஆண்டுகளில் கல்வி உதவித் தொகை பெற்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவர்கள் தங்களின் அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இதனுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவின் அனைத்து அம்சங்களையும் மாணவர்களே முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.. 

    • சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
    • மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

    மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிநேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவரது வழிகாட்டுதலின்பேரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதிமுருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.

    மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 சட்டசபை தொகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    • இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி காதலருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி, 3 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் 6 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர்.

    இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 6-ந் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நேற்று இந்த வழக்கில் 15 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை நடத்தினார்.

    மேலும் இந்த வழக்கில் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவி, காதலன், போலீசார், பொதுமக்கள் என மொத்தம் 42 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

    வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார் கமலேஷ்.
    • மகள் எக்ஷிதா ஏஞ்சல் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் எக்ஷிதா ஏஞ்சல் (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கமலேஷின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேஷும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.

    இதற்கிடையே கமலேஷ் உயிர்மாய்ப்பு தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகததால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.

    இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாகதான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
    • மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

    இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.

    20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • நம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை மற்றும் நீண்டகால வணிக உறவுகள் ஆகியவை ரிதம் சேப்டரின் வெற்றியின் அடிப்படை
    • ஒவ்வொரு உறுப்பினராலும் சராசரியாக ரூ.2.11 கோடி வணிக மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூரில் இயங்கி வரும் ஒரு புகழ்பெற்ற BNI தொழில்முறை நெட்வொர்க்கிங் குழுவான ரிதம் சேப்டர் தனது 5ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்பிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் குழு பணியால் சிறப்பான வணிக வளர்ச்சியை இந்த சேப்டர் பதிவு செய்துள்ளது.

    50க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ள ரிதம் சேப்டர், இதுவரை 12,000க்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது. சமீபத்திய கூட்டங்களில் மட்டும் 75க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றது, சேப்டரின் வலுவான தாக்கத்தையும், நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

    இதுவரை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மூலம் 6,582 உறுதிப்படுத்தப்பட்ட வணிக பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு, மொத்தமாக ரூ.7,52,64,647 (7 கோடி 52 லட்சம் 64 ஆயிரம் 647) மதிப்புள்ள வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினராலும் சராசரியாக ரூ.2.11 கோடி வணிக மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.



    எதிர்கால நோக்கமாக ரிதம் சேப்டர் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட வணிக மதிப்பை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது தொழில்முனைவோர்களுக்கு நீடித்த வளர்ச்சி மற்றும் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சேப்டரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த கோர் கமிட்டி மற்றும் தொடக்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த குழுவாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருவதாக நிர்வாக குழு தெரிவித்தது.

    இதன் ஐந்தாம் ஆண்டு விழாவில் பேசிய நிர்வாகிகள், நம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை மற்றும் நீண்டகால வணிக உறவுகள் ஆகியவை ரிதம் சேப்டரின் வெற்றியின் அடிப்படை எனக் குறிப்பிட்டனர்.

    • எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள்.

    கோவை:

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது அவர் கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில் அவர் கரூர் தொகுதியில் இருந்து இடம் மாறி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். தான் கோவையில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

    தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். தி.மு.க.வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள். மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க.வும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதி மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.

    நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு என்றார். 

    ×