என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட திட்டமா?- அவரே அளித்த பதில்
- எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள்.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது அவர் கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் அவர் கரூர் தொகுதியில் இருந்து இடம் மாறி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். தான் கோவையில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். தி.மு.க.வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள். மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க.வும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதி மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.
நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு என்றார்.






