என் மலர்
நீங்கள் தேடியது "கோவை"
- விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்துக்களை தடுக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உடையார். இவரது மகன் ரோஷன் (வயது20).
ரோஷன் கோவை அருகே கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் பாலக்காடுக்கு செல்ல புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சேலம்-கொச்சின் எல்.என்.டி. பைபாஸ் புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகே தேன்பண்ணை பகுதியில் சென்ற போது கொச்சியில் இருந்து சேலம் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளுடன் ரோஷன் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
சிறிது நேரத்திலேயே ரோஷன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிரிழந்த ரோஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான மாணவர் ரோஷன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்.ஏ.வின் உறவினர் மகன் ஆவார்.
ரோஷன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவருடன் படித்து வரும் சக கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விபத்து நடந்த பகுதி அடிக்கடி உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் பகுதி என்று கூறப்படுகிறது.
அந்த இடத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
- வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை:
கோவையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி காதலருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி, 3 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் ஆகியோர் 6 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் போலீசார், பொதுமக்கள் என 113 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 6-ந் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று இந்த வழக்கில் 15 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த வழக்கில் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவி, காதலன், போலீசார், பொதுமக்கள் என மொத்தம் 42 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டு வேலை நாட்களில் தினமும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- அனைத்து வகையிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
- சிறு, குறு தொழில் நிறைந்த தெற்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்து வருகிறார்.
கோவை:
கோவை ராஜவீதியில் தி.மு.க. சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தி.மு.க.வினர் இலவசமாக முட்டை வழங்கினர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளித்த நிதி முட்டை என கூறினர். மேலும் முட்டை போண்டா போட்டும் பொதுமக்களுக்கு சாப்பிட வழங்கினர்.
முடிவில் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அளித்த நிதி முட்டை என குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை பொதுமக்களிடம் தி.மு.க.வினர் காண்பித்தனர்.
முன்னதாக கடலூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் அனைத்து வகையிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மாநில அரசுக்கு வர வேண்டிய நிதியை தடுத்து மக்களுக்கு செய்ய கூடிய நலத்திட்டங்களை நிறுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செய்கிறது.
அதேபோல் கோவையில் சிறு, குறு தொழில் நிறைந்த தெற்கு தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருந்து வருகிறார். அவர் டெல்லி சென்று சிறு, குறு தொழில்துறையினர் படும் கஷ்டங்களை தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம். பட்ஜெட் குறித்தும், தமிழகத்திற்கு வரவேண்டிய கல்வி நிதி உள்பட நிதி குறித்தும் பேசலாம். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. மக்களுக்கு நல்லது செய்வது போல மக்களை ஏமாற்றி வருகிறார் என்றார்.
- கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார் கமலேஷ்.
- மகள் எக்ஷிதா ஏஞ்சல் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள சாந்திமேடு தம்புநகர் பகுதியில் வசித்தவர் கமலேஷ் (வயது 48). இவர் கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களது மகள் எக்ஷிதா ஏஞ்சல் (10). 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கமலேஷின் மனைவி இலக்கியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் பாதிப்பு குறையவில்லை என தெரிகிறது. இதனால் கமலேஷும், அவரது மனைவியும் மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் கமலேஷ் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் 3 பேரும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
இதற்கிடையே கமலேஷ் உயிர்மாய்ப்பு தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். தனது மனைவியின் உடல்நல பாதிப்பு சரியாகததால் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக வீடியோவில் பேசி உள்ளார். பின்னர் வீடியோவை அந்த பகுதியில் உள்ள ஒருநபருக்கு அனுப்பி இருக்கிறார்.
இரவு வெகுநேரத்துக்கு பிறகு வீடியோ அனுப்பியதால் அந்த நபர் உடனடியாக வீடியோவை பார்க்கவில்லை. இன்று அதிகாலை தான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையில் கமலேசும், அவரது மனைவி மற்றும் குழந்தை வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் நோய் பாதிப்பு காரணமாகதான் அவர்கள் இறந்தார்களா அல்லது எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.
- மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசு இந்த திட்ட அறிக்கைகளை நிராகரித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.
இதனிடையே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இரு நகரங்களிலும் இல்லை என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்தது.
20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஆக்ரா, போபால், இந்தூர் போன்ற பிற நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்படவில்லை. நிலம் எடுப்பதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்துவிட்டன. விரிவான திட்ட அறிக்கை மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- நம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை மற்றும் நீண்டகால வணிக உறவுகள் ஆகியவை ரிதம் சேப்டரின் வெற்றியின் அடிப்படை
- ஒவ்வொரு உறுப்பினராலும் சராசரியாக ரூ.2.11 கோடி வணிக மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இயங்கி வரும் ஒரு புகழ்பெற்ற BNI தொழில்முறை நெட்வொர்க்கிங் குழுவான ரிதம் சேப்டர் தனது 5ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்பிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் குழு பணியால் சிறப்பான வணிக வளர்ச்சியை இந்த சேப்டர் பதிவு செய்துள்ளது.
50க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உறுப்பினர்களாக உள்ள ரிதம் சேப்டர், இதுவரை 12,000க்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்றுள்ளது. சமீபத்திய கூட்டங்களில் மட்டும் 75க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றது, சேப்டரின் வலுவான தாக்கத்தையும், நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
இதுவரை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிந்துரைகள் மூலம் 6,582 உறுதிப்படுத்தப்பட்ட வணிக பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு, மொத்தமாக ரூ.7,52,64,647 (7 கோடி 52 லட்சம் 64 ஆயிரம் 647) மதிப்புள்ள வணிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினராலும் சராசரியாக ரூ.2.11 கோடி வணிக மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்கால நோக்கமாக ரிதம் சேப்டர் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட வணிக மதிப்பை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இது தொழில்முனைவோர்களுக்கு நீடித்த வளர்ச்சி மற்றும் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சேப்டரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த கோர் கமிட்டி மற்றும் தொடக்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த குழுவாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருவதாக நிர்வாக குழு தெரிவித்தது.
இதன் ஐந்தாம் ஆண்டு விழாவில் பேசிய நிர்வாகிகள், நம்பிக்கை, ஒழுக்கம், நேர்மை மற்றும் நீண்டகால வணிக உறவுகள் ஆகியவை ரிதம் சேப்டரின் வெற்றியின் அடிப்படை எனக் குறிப்பிட்டனர்.
- சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கோவை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார்.
நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து அவர் நேற்றிரவு கோவை வந்து தங்கினார். இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ரூ.19½ கோடியில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அங்கு ரூ.9½ கோடியில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.
- எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள்.
கோவை:
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். தற்போது அவர் கோவை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் அவர் கரூர் தொகுதியில் இருந்து இடம் மாறி கோவையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவலை செந்தில்பாலாஜி மறுத்துள்ளார். தான் கோவையில் போட்டியிடவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் யாராவது விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் யாராவது சேர்க்கப்பட்டுள்ளனரா? என்பதை பூத் வாரியாக ஆராய வேண்டும். அதைப் பார்த்து ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள் என்றாலும், புதிய அரசியல் கட்சிகள் என்றாலும் தி.மு.க.வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. இதுதான் தமிழக அரசியல் சூழல். விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். தி.மு.க.வை விமர்சித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க., அ.தி.மு.க. என எந்த கட்சியாக இருந்தாலும் தி.மு.க.வை மட்டுமே விமர்சிப்பார்கள். மக்களிடத்தில் வலுவான இயக்கமாக, நல் அரசு நடத்தும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால், நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க.வும் சரி, புதிதாக வந்த கட்சிகளும் சரி, எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதி மக்களிடம் ஆதரவை பெற்ற இயக்கம் தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நாங்கள் யாரையும் போட்டியாளராக பார்க்கவில்லை. யாரையும் குறைத்தும் மதிப்பிடவில்லை.
நான் கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதை நானும் பார்த்தேன். கரூர் தொகுதி எனக்கு நன்றாகத் தான் இருக்கிறது. கரூர் மக்கள் என்னை தொடர்ந்து ஜெயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர். கரூர் மாவட்டத்தில் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்க தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருப்பதால் அப்படிப்பட்ட சந்தேகம் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு என்றார்.
- கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
- எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள எந்திரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைப்பது வழக்கம்.
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையொட்டி இன்று கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் 8,391 வாக்குப்பதிவு கருவி எனப்படும் பேலட் எந்திரங்கள், 5 ஆயிரத்து 245 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவி எனப்படும் வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட சோதனை பணி இன்று கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளானது 1 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனை தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிபார்க்கும் பணியில் 19 ஆயிரம் மின்னணு எந்திரங்களும் தற்போது எந்த நிலையில் உள்ளது என பரிசோதனை செய்யப்படும். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டப்படும் பேலட் எந்திரத்தின் அனைத்து பொத்தான்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சரிபார்க்கப்படுகிறது. மேலும் அந்த எந்திரத்தில் உள்ள தேர்தல் கால தகவல்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் அழிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கோவை:
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி காரில் காதலனுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் (வயது 30), கார்த்திக் (21), குணா (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பி.எஸ்.என். சட்டத்தின் கீழ் கடத்தல், கொலை மிரட்டல், கூட்டுச்சதி, கூட்டு பாலியல் பலாத்காரம், தடயங்களை மறைத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சம்பவம் நடந்து 29-வது நாளான நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணையானது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது. வழக்கு விசாரணை விரைவில் முடிந்து குற்றவாளிகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது.
- ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அத்துடன் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் தெளிவான வானம் காணப்படும். ஆனால் 3 தினங்களாக காலை 10 மணி வரை பனிமூட்டமாகவே இருக்கிறது. 10 மணிக்கு பிறகு தான் தெளிவான வானம் தெரிகிறது. மேலும் மாலை 4 மணிக்கெல்லாம் இருள் சூழ தொடங்கி விடுகிறது.
மாநகர பகுதிகளான ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், அவினாசி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. வானமும் மேகமூட்டமாகவே உள்ளது
பனிமூட்டத்தால் அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
அதிகாலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்திலும் குளிர் காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
வால்பாறை பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டத்தால் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.
கடும் குளிர், பனிமூட்டம் காணப்படுவதால் அதிகாலையில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கம்பளி போர்த்திய ஆடைகள் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கமாக 8 மணிக்கு வேலைக்கு செல்வர். தற்போது நிலவும் பனிமூட்டத்தால் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தான் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயமும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் வெளியில் வருவதில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது.
ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றன. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் காலை நேரங்களில் ஏற்காடு காபி தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப் பாதையிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வரை கடும் பனிமூட்டம் இருந்தது. இன்று காலை முதல் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைக்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்பட்டாலும், கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.






