search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nurses strike"

    • நோயாளிகள் அவதி
    • போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த செவிலிய அதிகாரிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மதர் தெரேசா பட்டமேற்படிப்பு மையத்தில் செவிலிய பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்று புதன்கிழமை காலை இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்தனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சுனீலாகுமாரி தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் ஜெயராம் சியாமளா, ஸ்டெல்லா, சந்தானலட்சுமி, அமுதசரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ், அமைப்பு செயலாளர்கள் செல்வி, கிறிஸ்டினா சங்கீதா ஆகியோர் பேசினர். போராட்டத்தை வாழ்த்தி சம்மேளன ஆலோசகர் கீதா, கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன்,

    பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ஜவஹர் மற்றும் சுகாதார சம்மேளன பொதுச்செயலாளர் முனுசாமி, துணை தலைவர் விநாயகம், அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன், செயலாளர்கள் சதீஷ், கலைவாணி, பொருளாளர் கிரி ஆகியோர் பேசினர் . இணைப்பு சங்க நிர்வாகிகள் சித்ரா, தனலட்சுமி, சுதாகர், ஜெகதீசன், காயத்ரி, திருமலை, இளையதாசன், லட்சுமி, சுந்தரமூர்த்தி, திருவரசன், சரவணன், ஆறுமுகம், தனசீலன், வெற்றிவேல், பாலமுருகன், இந்திரா, வைஜெயந்திமாலா, வள்ளி, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

    சேலம்:

    கொரோனா தொற்று காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய சுகாதார குழும மூலம் தமிழகம் முழுவதும் தற்காலிக பணி அடிப்படையில் 2301 நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாகவும், இனி பணி நீட்டிப்பு இல்லை எனவும் தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை அன்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அதிகாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்று 2-வது நாளாக நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நேற்றிரவு மீண்டும் போலீசார் கைது செய்த நிலையில், இன்று 3-வது நாளாக நர்சுகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

    சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களுக்கு தங்களை முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நீட்டிப்பு கேட்டும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    • பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

    சென்னை:

    மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இதையடுத்து, செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்த நிதியாண்டில் முதல் கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார் என சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார்.

    இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    ×