சேலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
சேலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
Published on

சேலம்:

கொரோனா தொற்று காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய சுகாதார குழும மூலம் தமிழகம் முழுவதும் தற்காலிக பணி அடிப்படையில் 2301 நர்சுகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ரூ.14,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதியுடன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதாகவும், இனி பணி நீட்டிப்பு இல்லை எனவும் தெரிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக நர்சுகள், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து இரவு வரை போராட்டம் நீடித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை அன்றிரவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அதிகாலையில் அவர்களை விடுவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து நேற்று 2-வது நாளாக நர்சுகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நேற்றிரவு மீண்டும் போலீசார் கைது செய்த நிலையில், இன்று 3-வது நாளாக நர்சுகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தற்போது பெரியார் மேம்பாலம் பகுதியில் நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள நர்சு பணியிடங்களுக்கு தங்களை முன்னுரிமை அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும், தொகுப்பூதிய அடிப்படையில் பணி நீட்டிப்பு கேட்டும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது எனவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று நர்சுகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க, போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com