search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chembarambakkam lake"

    • கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 797 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி அனைத்து குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 627 மி.கனஅடி (8.6 டி.எம்.சி)தண்ணீர் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 717 மி.கனஅடி (9.7டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி. தண்ணீர் குறைவாகவே உள்ளது.

    எனினும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு பெற வேண்டிய தண்ணீர் இன்னும் பெறவில்லை. எனவே வரும் மாதங்களில் கிருஷ்ண நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் தற்போது 452 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சோழவரம் ஏரியில் இருந்து 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் தற்போது 2505 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு 189 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2166 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 303 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்கு 137 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 456 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடி நீர்ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக உள்ளது.
    • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு இருப்பு 75 சதவீதமாக சரிந்து உள்ளது. 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 931 மில்லியன் கனஅடிதண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சிக்கும் மேல் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் 2 டி.எம்.சி.தண்ணீர் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரும்போது குடிநீர் தேவை அதிகரித்து ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறையும். ஏற்கனவே கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தண்ணீர் முழுவதும் வற்றியதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 745 மி.கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2404 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645மி.கனஅடியில் 3064 மி.கனஅடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில்465 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 36 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், தற்போது நீர் இருப்பு 3132 மில்லியன் கனஅடியாக உள்ளது.

    ஏரியில் இருந்து குடிநீருக்காக 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

    தொடர்ந்து ஏரியை கண்காணித்து வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்தால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தகவல்.

    • பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூரில் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று பிற்பகலில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடல் ஒன்று ஏரியில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு போலீஸ் படையுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்த பொது மக்கள் மற்றும் போலீசாரின் உதவியுடன் ஏரியில் மிதந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அழுகிய நிலையில் காணப்பட்ட வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாகவே உடல் காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட வாலிபரை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கொலையாளிகள் உடலை 6 துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் உடலை மட்டும் ஏரியில் வீசியுள்ளனர். ஒரு காலையும் அங்கேயே போட்டுவிட்டு மற்ற உடல் பாகங்களை வேறு எங்கேயோ வீசியுள்ளனர்.

    தலையில்லாத உடல் பகுதி மற்றும் ஒரு காலை மட்டுமே அங்கு சிக்கியுள்ள நிலையில் தலை மற்றும் இன்னொரு கால், கைகள் ஆகியவை ஏரிக்குள்ளேயே வீசப்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் மூலமாக உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காண்பதற்கான பணிகளை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

    குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாயமாகியுள்ள வாலிபர்களின் பட்டியலை சேகரித்துள்ள போலீசார் அவர்களின் கதி என்ன? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.


    கொலையாளிகள் வேறு எங்கேயாவது வைத்து கொலை செய்துவிட்டு உடலை மட்டும் கல்லால் கட்டி ஏரியில் தூக்கி வீசி இருக்கலாம் என்றும், மற்ற உடல் பாகங்களை ஏதாவது காட்டுப் பகுதியிலோ, அல்லது குப்பை மேடுகளிலோ வீசி இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து சுற்று வட்டார பகுதிகளில் குப்பை மேடுகள் மற்றும் புதர்கள் மண்டியுள்ள இடங்களிலும் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக தனிப் படை போலீசார் அந்த பகுதி முழுவதுமே கண் காணித்து வருகிறார்கள்.

    3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே வாலிபரை கொன்று இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் ஏரியில் உடலை வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலை மற்றும் கைகள், கால் ஆகியவை கிடைத்தால் மட்டுமே கொலை வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அப்பகுதியில் அழுக்கு படிந்த நிலையில் டிசர்ட் ஒன்று கிடந்தது. இது கொலையுண்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் அதை வைத்தும் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த டி.சர்ட்டில் "தி டிரம்மர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த அடையாளங்களும் இல்லை. இதுபோன்று ஆடைகள் கிடைக்கும்போது காலரின் பின்னால் டெய்லர் கடையின் பெயர் இருக்கும். அதை வைத்து இதற்கு முன்பு பல வழக்குகளில் போலீசார் துப்புதுலக்கி உள்ளனர்.

    ஆனால் செம்பரம்பாக்கம் ஏரியில் கைப்பற்றப்பட்ட டி.சர்ட் ரெடிமேட் டிசர்ட்டாக உள்ளது. இதனால் அதனை வைத்து துப்பு துலக்க முடியாத நிலையே இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அதேநேரத்தில் இது கொலையுண்ட நபர் அணிந்திருந்த 'டி.சர்ட்' தானா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொலையாளிகள் போலீசாரை சுற்றவிட வேண்டும் என்கிற எண்ணத்திலும், கொலையுண்ட நபரை எந்த வழியிலும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த உஷாராக செயல்பட்டுள்ளனர்.

    இதன்காரணமாகவே கொலையாளிகள் தலை மற்றும் உடல் பாகங்கள் இல்லாத உடலை மட்டும் ஏரியில் வீசிட்டு சென்றிருக்கிறார்கள்.

    இதையடுத்து இந்த கொலை வழக்கை போலீசார் சவாலாக ஏற்றுக் கொண்டு துப்புதுலக்கி வருகிறார்கள். அந்த பகுதியில் நிலங்களே அதிக அளவில் உள்ளதால் கேமராக்களும் பொறுத்தப்படவில்லை. இருப்பினும் வாலிபர் கொலை வழக்கில் சரியான துப்பு எதுவும் துலங்காததால் பொலீசார் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மத்திய குழுவிடம் வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதில் வெள்ளத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

    2015-ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பிறகு மாநில அரசு மாவட்ட நிர்வாகம் நீர் வழித்துறை அடையாறு ஆற்றை அகலப்படுத்துவது கரைகளை பலப்படுத்துவது, மதகுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனாலும் வெள்ள சேதத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    எதிர்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் தெரிவித்து கொள்கிறோம்.

    அடையாறு ஆறு மற்றும் கரைகளை ஆண்டுதோறும் தூர்வார வேண்டும். அடையாறு ஆற்றை 10 அடி உயரமும், 16 அடி அகலமும் கொண்டதாக அமைக்க வேண்டும். அடையாறு ஆற்றின் இருபுறமும் ஒரு சில இடங்களில் மட்டும் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆற்று பகுதி அனைத்து இருபுறத்திலும் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண் டும். தற்போதுள்ள தடுப்பு சுவர் உயரத்தில் இருந்து கூடுதலாக 4 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும். மழைக்காலங்களில் ராட்சத மோட்டார் பம்புகள் அமைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீரை ஆற்றில் விட வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வரதராஜபுரம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் அடையாறு ஆற்றில் விடுவ தற்கு பதிலாக முட்டுக்காடு வழியாக கடலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    செம்பரம்பாக்கம் ஏரியை 4 அடிக்கு குறையாமல் தூர்வார வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தூர்வார வேண்டும். இதனால் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கும். அதிகபடியாக தண்ணீர் வெளியேற்றத்தை தடுத்தும் அடையாற்றின் மேல் வெளிவட்ட சாலையில் கட்டப்பட்ட பாலம் அகலம் குறைவாக உள்ளதால் ராயப்பா நகர் பகுதியில் வெள்ளம் ஏற்படுகிறது.

    எனவே ராயப்பா நகரில் கூடுதல் பாலம் அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரத்தூர் ஏரியில் நீர் திறனை உயர்த்தி 4 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ள வரதராஜபுரம் பகுதி முழுவதும் தரமான சாலைகள் அமைக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு சிறப்பு சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை குழுவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். இதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து வெள்ளத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

      பூந்தமல்லி:

      சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

      மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது.

      இதைத்தொடர்ந்து பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது.

      இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 626 மில்லியன் கனஅடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவில் 90.38 சதவீதம் தண்ணீர் இருப்பு ஆகும். கடந்த ஆண்டு இதே நாளில் 10 ஆயிரத்து 47 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

      பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில்3076 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 840 கனஅடி தண்ணீர் வருகிறது. 512 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 737 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 257 கன அடிதண்ணீர் வருகிறது. 396 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 3054 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 189 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3259 மி.கனஅடிக்கு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து 485 கனஅடியாக குறைந்தது. 624 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 54 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      • மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
      • ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      திருவள்ளூர்:

      மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

      இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

      பின்னர் மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

      இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1091 கனஅடியாக குறைந்து உள்ளது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பும் 1500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

      செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3284 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

      இதேபோல் புழல், சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 239 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் உபரிநீர் திறப்பு 239 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 21.20 அடியில் 20.21 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 3054மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

      சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 790மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2924மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1610கனஅடி தண்ணீர் வருகிறது. 1009 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 118 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

      • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
      • பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது.

      'மிச்சாங்' புயலையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

      இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

      இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.23 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வருகிறது. 3-வது நாளாக ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.27 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 522 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

      சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி அகும். இங்கு தற்போது நீர்மட்டம் 16.65 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 35 அடியில் 31.74 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 370 கன அடி தண்னீர் வருகிறது.

      இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

      • குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
      • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

      காஞ்சிபுரம்:

      செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 21.23 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 2916 டி.எம்.சி. ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 609 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 3000 கன அடியாக உள்ளது மேலும் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 285 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

      மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3285 கன அடியாக உள்ளது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

      • செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
      • எவ்வளவு கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

      சென்னை:

      சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

      சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வடிய வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

      செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரே ஒரு பாதிப்பு, மாம்பலம் கால்வாய் அதை எதிர்கொள்ள திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் தண்ணீரை 4 ஆயிரம் கனஅடியாக குறைக்க சொல்லி உள்ளார்.

      அதனால் 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் அதாவது தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களின் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கும்.

      இது சம்பந்தமான விளக்கங்களை முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

      இப்போது நாம் எவ்வளவு பெரிய கால்வாய் கட்டி இருந்தாலும், கடந்த 1 மாத காலமாக ஒவ்வொரு நாளும் 5, 6 செ.மீ. மழை பொழிந்தது. அப்போது மழைநீர் ஏதும் தேங்கவில்லை. 15 செ.மீ. மழை பெய்திருந்தாலும், பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் தெரிய தொடங்கி உள்ளது.

      அந்த பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய அடுத்து 2, 3 நாட்களில் வர இருக்கிற கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இன்றைக்கே பாதிப்புக்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கு பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்களை வைப்பது போன்ற பல்வேறு நிலைகளை மேற்கொள்ள முதலமைச்சர் கூறி உள்ளார்.

      அதனால் மீட்பு படையினரும் ஏராளமான வகையில் தயார் நிலையில் உள்ளனர். 

      குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பம்பிங் ஸ்டேஷன் முழு நேரமும் இயங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

      தற்போது பல பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

      வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது.
      • சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித்தீர்த்தது.

      இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

      சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை ஏழு மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்குள் சில இடங்களில் 12 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


      செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், அது 2429 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் உபரி நீர் திறப்பு 6000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

      • செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
      • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

      சென்னை:

      சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

      இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

      இந்நிலையில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அடையாறு கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுஞ்செய்தியின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      ×