என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுப்பொலிவுடன் காட்சி தரும் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகள்
    X

    செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகு வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதை காணலாம்.

    புதுப்பொலிவுடன் காட்சி தரும் செம்பரம்பாக்கம் ஏரி மதகுகள்

    • கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    குன்றத்தூர்:

    பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கும். அவ்வாறு ஏரியில் நீர் நிரம்பும் நிலையில் உபரி நீர் திறப்பது வழக்கம் இதனால் கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் ஷர்ட்டர்கள், மதகுகள், மின் மோட்டார்கள் அனைத்தும் பராமரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு புதிதாக வண்ணம் பூசி புதுப்பிக்கும் பனி நடந்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷர்ட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின் சுவர்கள் போன்றவற்றில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

    வண்ணம் பூசும் பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் புதிதாக வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிக்காக மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மதகுகளின் ஷர்ட்டர்கள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.29 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 675 மில்லியன் கன அடியாகவும், சென்னை குடி நீருக்காக தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்தாலும் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை வைத்து கண்காணித்து அதன் பிறகு உபரி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் புதிய வண்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×