என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்ப காலம்"

    • ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
    • 7 மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, 'நீரிழிவு நோய் வகை -1' விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தேசிய நலவாழ்வு குழுமத்துடன் இணைந்து பணியாற்றும் பங்குதாரர்களை சிறப்பித்தார்.

    அதைதொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கர்ப்பகால நீரிழிவு நோயினை தடுப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கினால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்காது என்பது குறித்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான மாதிரி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.

    சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நெல்லை, தர்மபுரி, திருச்சி ஆகிய 7 மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2.5 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.

    நீரிழிவு நோய் பாதிப்பு இந்திய அளவில் 12 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 13 சதவீதமாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பாதிப்புகள் இருந்தாலும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ், பொது சுகாதார இயக்குனர் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி இயக்குனர் சுகந்தி ராஜகுமாரி, ஊரகநலப்பணிகள் இயக்குனர் சித்ரா, நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் ஷேசையா மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

    • எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும்.
    • சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    பெண்களை பொருத்தவரை கர்ப்ப காலங்களில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அவர்களில் பலரும் தங்களின் சந்தேகங்களை அவர்களது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. என்னிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை தொடர்பான பலவித சந்தேகங்களை கேட்டுள்ளனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    அந்த வகையில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

    பெண்களின் கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்கள், நடுவில் உள்ள 3 மாதங்கள் மற்றும் கடைசியில் உள்ள 3 மாதங்கள் ஆகிய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

    ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் கரு உருவான பிறகு அது வளரத் தொடங்கும். அந்த கருவானது பெரிதாக வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகி விரிவடையும். சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் பக்கத்தில் இருக்கும். கர்ப்பப்பை விரிவடையும்போது சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக காணப்படும்.

    எனவே அதுபோன்ற கால கட்டத்தில் சிறுநீர்க்குழாய் தொற்றானது, கர்ப்பப்பையில் மிகவும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு அந்த கர்ப்பப்பை வளர்ந்து பெரிதாகும்போது, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தேக்கம் என்பது அதிகம் இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்த நிலையில் காணப்படும். அப்படி சாய்ந்த நிலையில் கர்ப்பப்பை இருக்கும்போது, அது சிறுநீர்க்குழாய்க்கு அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிறுநீரானது திரும்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்க்குழாயில் தொற்று உருவாகும்.

    சிறுநீர்க்குழாய் தொற்று உருவாவதற்கான முக்கிய காரணங்கள்:

    மேலும் இதற்கு முக்கிய காரணமே சிறுநீர்க்குழாய் மற்றும் யோனிப்பகுதி ஆகியவை கர்ப்பப்பையின் பக்கத்தில் இருப்பதுதான். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு பல நேரங்களில் அறிகுறி எதுவுமே இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். அறிகுறி இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி வரும் என்றால், பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வரும், குளிர் ஜுரம் வரும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும் அவர்கள் சிறுநீரை அடக்கமுடியாமல் சிரமப்படுவார்கள்.

    இந்த அறிகுறிகளானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்பதால் கர்ப்பிணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறுநீர்க்குழாய் தொற்றுக்கும் இதே அறிகுறிகள் தான் என்பதை பெண்கள் கவனிக்க தவறி, தவறு செய்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் சிறுநீர்க்குழாய் தொற்று பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று அதிகரித்து காணப்படுவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். பொதுவாகவே சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் மிகவும் பக்கத்தில் இருப்பதால், கர்ப்பப்பை வளரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் தேங்குவது என்பது அதிகம் இருக்கும். பல நேரங்களில் அதனால் சிறுநீர்க்குழாய் தொற்றானது அறிகுறி இல்லாமல் இருக்கும்.

    எனவே தான் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்பை அறிகுறியற்ற பாக்டீரியூரியா (ஏசிம்டமேட்டிக் பாக்டீரியூரியா) என்று சொல்கிறோம். அறிகுறியற்ற பாக்டீரியூரியா என்றால் இந்த காலகட்டத்தில் அறிகுறியே இல்லாமல் சிறுநீரில் தொற்றுக்கள் இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    சிறுநீர்க்குழாய் தொற்றுக்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை:

    அதனால் தான் எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கூடவே ஒரு யோனி ஸ்வாப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை கண்டறியும் பரிசோதனை ஆகும். ஏனென்றால் அறிகுறியே இல்லாமல் தொற்றுக்கள் பரவும் நிலையில், இந்த தொற்றுக்களானது கர்ப்பப்பையில் இருக்கும் கருவையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

    அதனால்தான் அறிகுறியற்ற பாக்டீரியூரியாவினால் நிறைய பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பது, குறை மாதத்தில் பனிக்குட நீர் உடைவது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது போன்ற பல்வேறு வகை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.

    அதற்காகத்தான் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 4-வது மாதத்தில் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியமானதாகும். இந்த பரிசோதனையின்போது தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து முழுமையாக சரிசெய்து விடுவோம். இதில் ஒரு லட்சம் தொற்றுக்கள் இருந்து, ஆனால் அதற்குரிய அறிகுறி இல்லாவிட்டால் கூட கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

    கர்ப்பகாலத்தில் இந்த சிறுநீர்க்குழாய் தொற்றுக்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்கு குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக சிறுநீரை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள நீராகாரங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை எளிதாக கழிப்பது போன்ற சூழல்களை உருவாக்கி்க கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சிறுநீர்க்குழாய் தொற்று இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர்க்குழாய் தொற்றுக்கான மருந்துகள் மாத்திரைகள் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை சிறுநீர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் சிறு நீர்க்குழாய் தொற்று பிரச்சனை முழுமையாக சரியாவதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு பின்நாட்களில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்க முடியும்.

    பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?

    பெண்கள் பலரும் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சரியான நேரத்தில் வந்தால், மாதவிலக்கு தள்ளிப்போன ஒரே நாளில், அதாவது 31-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.

    ஆனால் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவது 35 நாட்கள் அல்லது 45 நாட்கள் என தள்ளித் தள்ளிப்போகும். ஆனால் எதுவாக இருந்தாலும் முதலில் அவர்கள் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    ஒரு வாரம் கழித்தும் மாதவிலக்கு வரவில்லை, ஆனால் நீங்கள் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மீண்டும் ஒரு வாரம் கழித்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    தேவைப்பட்டால் சில நேரங்களில் ரத்த பரிசோதனையில், பீட்டா எச்.சி.ஜி. என்ற ரத்த பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை மூலமாக, கருவின் ஆரம்ப நிலையிலேயே அதனுடைய வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான பரிசோதனை ஆகும்.

    மாதவிலக்கு குறிப்பிட்ட காலத்தில் வராத பெண்கள் எப்போது கருமுட்டைகள் வெளியானதோ, அதில் இருந்து 17-வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் எங்களிடம் வரும் பெண்களுக்கு, எந்த நாளில் முட்டை வெளியானதோ, அந்த நாளில் இருந்து 17-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

    பொதுவாக ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்கிற பெண்களுக்கு, கருவை கர்ப்பப்பையில் எடுத்து வைத்த பிறகு 15-வது நாள் பரிசோதனை செய்து பார்க்க சொல்கிறோம். இந்த காலகட்டத்தில் அந்த கருவின் டிரோபோபிளாஸ்ட் பார்மேஷன் (கருவை சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு) சரியாக இருக்கும். அதுதான் பீட்டா எச்.சி.ஜி. வருவதற்கான அடிப்படையான செல்களாக அமையும். இந்த செல்களில் இருந்து வெளியேறும் ஹார்மோன்களை வைத்து தான் கர்ப்பம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும்.

    • பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும்.
    • பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும்.

    பெண்கள் சமீப காலமாக சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை 15 வயது முதல் 40 வயது வரையிலான பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த 2 வகை பாதிப்புகளிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்:

    லூபஸ் பாதிப்பு கொண்ட பெண்களுக்கு கருத்தரிப்பதிலும், கர்ப்ப காலத்திலும் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனது 30 வருட அனுபவத்தில் இந்த லூபஸ் பாதிப்புடன் நிறைய பெண்கள் குழந்தையின்மை சிகிச்சை மூலம் கருத்தரிப்பதற்கு வருவதை பார்த்திருக்கிறேன். இது மிகவும் சவால் நிறைந்த குழந்தையின்மை பிரச்சனை ஆகும். ஏனென்றால் இவர்களுக்கு நிறைய பாதிப்பு காரணிகள் இருக்கிறது.

    அவர்களுக்கு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படலாம், இருதயம் பழுதாகலாம், நுரையீரல் பழுதாகலாம். இதுபோன்ற பல சிக்கல்கள் அந்த பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையும் பாதிப்படைந்து பல பிரச்சனைகள் உருவாகும்.

    லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுமா என்று என்னிடம் பலரும் கேட்பதுண்டு. லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண் என்னிடம் வந்து கேட்டார். டாக்டர், 'நான் திருமணம் செய்து கொள்ளலாமா? குழந்தைப்பேறு பெற முடியுமா?' என்று கேட்டார். கண்டிப்பாக திருமணம் செய்யலாம், குழந்தைப்பேறு பெறலாம்.

    இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு 2 காலகட்டங்கள் இருக்கிறது. அதாவது ஒன்று நோய் தீவிரம் அடையும் காலகட்டம். மற்றொன்று நோய் குணமடையும் காலகட்டம் ஆகும். இதில் நோய் தீவிரம் அடையும் (எக்சாசர்பேசன்) காலகட்டத்தில் பெண்கள் கருத்தரிக்க கூடாது. அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் நன்றாக குறைவாகும் (ரெமிசன்) காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்கலாம்.

    இந்த காலகட்டத்தை நிர்ணயிப்பதற்கு சில வரையறைகள் இருக்கிறது. இந்த பெண்கள் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும்போது சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்படும். அதில் ஆன்டிபாடி உற்பத்தி மிகவும் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சினைப்பையில் முட்டைகள் குறையும் அபாயம்:

    இவை தவிர பெண்கள் இந்த நோய் தாக்கத்துக்காக பல மாத்திரைகளை எடுத்து இருப்பார்கள். இதில் குறிப்பாக செல்களில் அழற்சியை குறைப்பதற்கு கொடுக்கின்ற மருந்துகள் எல்லாம் புற்றுநோய்க்கு கொடுப்பது போன்றது ஆகும். இவை செல்களில் உள்ள அழற்சியை குறைப்பது போல, கர்ப்ப காலத்தில் கொடுத்தால் கரு வளர்ச்சியையும் பாதிக்கும்.

    இதனால் அந்த பெண்களுக்கு கர்ப்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அவர்களுக்கு குறைபாடு உள்ள குழந்தை உருவாகலாம். இது கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதால் குறையுள்ள குழந்தை பிறக்கலாம். அதனால்தான் இந்த காலகட்டத்தில் சீரிய மருத்துவம் என்பது இவர்களுக்கு தேவையான ஒன்றாகும்.

    இந்த பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கர்ப்பம் தரிப்பதற்கு தேவையான சினைப்பையின் முட்டைகளையும் குறைக்கும். சில நேரங்களில் சினைப்பைக்கு போகின்ற ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டால், அதில் உள்ள திசுக்கள் குறைவாகி, சினைப்பையில் உள்ள முட்டைகளும் குறைவாகும். பல நேரங்களில் சினைப்பையில் உள்ள முட்டைகளின் இருப்பே குறைந்துவிடும். அதனால் அவர்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இதற்கு எடுத்துக் கொள்கின்ற மாத்திரைகள், மருந்துகள் எல்லாமே பைபுரோசிசை உருவாக்கும். ஏனென்றால் செல்களில் அழற்சி இருக்கும்போது அதே கட்டுப்படுத்துவதற்கு கொடுக்கின்ற மருந்து, மாத்திரைகள் எல்லாமே அந்த செல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் திசுக்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டு கருத்தரிப்பதிலும் பிரச்சனைகள் உருவாகலாம். இந்த மாதிரியான பெண்களுக்கு கருசிதைவு ஏற்படுவது மிகவும் அதிகம். அவர்களுக்கு திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படும். 2 மாதம், 3 மாதம், 4 மாதங்களில் கருச்சிதைவு ஏற்படும். பல நேரங்களில் 8 மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகமாகி, கர்ப்பத்திலும் ரத்த அழுத்தம் அதிகரித்து கருவில் இருக்கும் குழந்தை இறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

    பிரசவ நேரத்தில் குழந்தையின் ரத்த ஓட்டம் நின்று போகும், தாய்க்கு ரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு ஏற்படலாம், தண்ணீர் சத்து குறையலாம், குழந்தைக்கு துடிப்பு நின்று போகலாம், எடை குறைவான குழந்தை பிறக்கலாம். இந்த மாதிரியான எல்லா சிக்கல்களும் இந்த பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் தான் லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு குறிப்பிட்ட காலகட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே தான் இந்த நோயின் தாக்கம் குறையும் காலகட்டத்தில் அவர்கள் கருத்தரிக்க முயல வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை:

    குறிப்பிட்ட காலகட்டத்தில் நோய் குணமடைந்த நிலையில், நோய் பாதிப்பு இல்லாவிட்டாலும் கூட, இவர்களுக்கு ஏற்கனவே இருந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் அதிகமாகலாம், குறை பிரசவம் ஏற்படலாம், கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் அதிகமாகலாம். பல நேரங்களில் மூளைக்கு செல்கின்ற ரத்த குழாய்கள் பழுதாகி வலிப்பு ஏற்படலாம். கை, கால்கள் விழுந்து போகலாம். சில நேரங்களில் கோமா நிலைக்கு கூட செல்லலாம். அவர்களுக்கு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் சிறுநீரகம் பழுதாகி, சிறுநீரக பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே கண்டிப்பாக கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு ஒரு சவால் நிறைந்த விஷயம். அந்த பாதிப்பு அவர்களுக்கு எப்போது குறைவாக இருக்கிறதோ, அப்போது கருத்தரிப்ப தற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    இவர்களுக்கு முக்கியமான சிகிச்சை முறைகளில் எச்.சி.கியூ. (ஹைட்ராக்சி குளோ ரோகுயின்) மருந்து கொடுக்கிறோம். அதை கொடுக்கும்போது, லூபஸ் பாதிப்பால் ஏற்பட்ட அழற்சியை குறைத்து கருவளர்ச்சிக்கு உதவி செய்கிறது. தாயின் உடல் நிலையையும் பாதுகாக்கிறது. அந்த வகையில் தற்காலத்தில் ஸ்டீராய்டு, ஆஸ்பிரின் உள்ளிட்ட மருந்துகள் கர்ப்ப காலத்தில் குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையானது. கருத்தரிப்பதில் 2 அல்லது 3 முறை தோல்வி அடைந்தால், முதலில் முக்கியமாக லூபஸ் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இந்த லூபஸ் இருக்கிறவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் லூபஸ் வரலாம். அதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் ஆகியவை ஏற்படலாம். இந்த பெண்களுக்கு லூபஸ் பாதிப்பு இருந்தால் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனம் மற்றும் கண்காணிப்பு தேவை.

    அவர்களுக்கு பலவிதமான மருந்துகள் கொடுக்க வேண்டி இருக்கும். அவை அனைத்துமே கருவின் வளர்ச்சிக்கும் தாயின் பாதுகாப்புக்கும் முக்கியமான தேவை. இவை தவிர இதற்கு வாத நோய் மருத்துவ நிபுணரும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் தாய்க்கு பாதிப்பு வரக்கூடாது. அதேபோல் சிறுநீரகவியல் நிபுணர், நரம்பியல் நிபுணர், தோல் நிபுணர் ஆகிய அனைவருமே சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பெண்ணுக்கு தன்னுடைய நிலையும் பாதிக்காமல், குழந்தையின் வளர்ச்சியையும் பாதுகாக்க முடியும்.

    அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்:

    என்னுடைய அனுபவத்தில் லூபஸ் பாதித்தவர்கள் சுமார் 45 பெண்களை பார்த்து இருக்கிறேன். இதில் ரொம்ப சவாலே 2 முறை மற்றும் 3 முறை கருச்சிதைவு, 6 மாதத்தில் குழந்தை இறப்பு, வலிப்பு, உடனடியாக ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரகம் பழுது போன்ற பாதிப்புகளுடன் வந்தவர்கள் நிறைய பேர். இதனை முறையாக சரி செய்து, பின்னர் கருவுற்ற பிறகு கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    இவர்களுக்கு சிறப்பான கண்காணிப்புடன் சிகிச்சை கொடுத்தால் கண்டிப்பாக குழந்தைப்பேறு பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். ஏனென்றால் இவர்கள் எல்லோருக்குமே ஒரு பயம் இருக்கும், திடீரென்று பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்பதுதான் அந்த பயம். இதனால் கண்டிப்பாக அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு தேவை. ஏனென்றால் இந்த பெண்களுக்கு அந்த மாதிரி பாதிப்புகள் வரலாம். எனவே முறையாக தேர்ச்சி பெற்ற, இதில் அனுபவம் வாய்ந்த மருத்துவர் தான் அவர்களின் கர்ப்பத்தை கண்காணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தேவையான மருந்துகள் எல்லாமே சீராக கொடுக்க வேண்டும். தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு வராமல் பார்க்க வேண்டும். அது சவால் நிறைந்தது தான். ஆனால் முறையாக செய்தோம் என்றால் இந்த பாதிப்பை சரி செய்து, அந்த பெண்ணை குழந்தைப்பேறு பெற வைக்க முடியும்.

    பல நேரங்களில் கர்ப்பகாலம் என்பது அவர்களுக்கு லூபஸ் பாதிப்பில் குணமடையும் நிலையை கொடுக்கும். குழந்தை பெற்றவுடன் அவர்கள் இதில் இருந்து முழுமையாக குணம் அடைவதற்கான வாய்ப்புகள் கூட அதிகம். கண்டிப்பாக லூபஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே கருத்தரித்தால் கூட உங்களது கர்ப்பகால சிகிச்சை மற்றும் பிரசவத்தை ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவரின் கண்காணிப்பில் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் முக்கியமான ஒன்று, கர்ப்ப கால சிகிச்சையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

    • பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
    • சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும்.

    இப்போதைய நவீன காலகட்டத்தில் பெண்கள் புதிதாக ஒரு நோய் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள். சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் எனப்படும் இந்த நோயானது, சுருக்கமாக எஸ்.எல்.இ. என்று அழைக்கப்படுகிறது. இன்னும் எளிதாக புரியவேண்டும் என்றால் இதை லூபஸ் என்று அழைக்கிறார்கள். இது ஒருவகையான திசு குறைபாடு நோய் ஆகும்.

     சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு:

    தற்போது ஒரு லட்சம் பெண்களில் 20 முதல் 40 பெண்களுக்கு இந்த திசு குறைபாடு நோய் ஏற்படுகிறது. சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசிஸ் நோய்த்தாக்கம் கொண்ட பெண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்களின் கை, கால்களில் சில நேரங்களில் அரிப்புகளுடன் கூடிய அலர்ஜி வரலாம்.

    பல நேரங்களில் அவர்களுக்கு முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு முகத்தின் தோலில் கருப்பு கருப்பாக மாறி நிறமிழப்பு (பிக்மன்டேஷன்) வரலாம். உடலின் தோல் பகுதியில் பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீர்க்குழாயில் பிரச்சனைகள் உருவாகலாம். சிறுநீரகத்திலும் பிரச்சனை ஏற்பட்டு சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படலாம். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதால், சிறுநீரக செயல்பாடு குறைவாகலாம்.

    இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு பைபுரோசிஸ் ஏற்படும். அதாவது காயம் ஏற்பட்ட இடங்களில் உருவாகும் வடுவில் உள்ள இணைப்பு திசுக்களில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் சேரும் நிலையே பைபுரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் நுரையீரல், வயிறு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கூட இந்த பைபுரோசிஸ் ஏற்படலாம்.

     

    குறிப்பாக இந்த பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. 15 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்ற நோயும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடலில் உள்ள சிறுசிறு மூட்டு பகுதி இருக்கும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய 2 வகையான விஷயங்களிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் பாதிப்பால் ஏற்படுகிற நோய் ஆகும். வழக்கமாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் நமது உடலை நோயில் இருந்தும், நோய்க்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக திரும்பி, நமது உடலில் பாதிப்பை உருவாக்குகிறது.

    கருத்தரிப்பதிலும், கரு வளர்ச்சியிலும் ஏற்படும் சிக்கல்கள்:

    லூபஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிக்கப்பட்டு, உடலில் உள்ள செல்களுக்கே, இவை எதிரான எதிர்ப்பு உயிரியை உருவாக்கி விடும். அதனால் தான் இந்த லூபஸ் எரித்தமட்டோசிஸ் பாதிப்பின்போது செல்லுலர் நியூக்ளிக் அமிலத்துக்கு (செல்களின் உட்கரு அமிலம்), நியூக்ளியர் ஆன்டிபாடி (எதிர்ப்பு உயிரி) உருவாகிறது.

    இதுபோன்று நியூக்ளியர் ஆன்டிபாடி உருவாவதால், நியூக்ளியர் செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிப்படைந்து, அதனால் அந்த செல்கள் சேதம் அடையும். அதன் காரணமாக தோல் நோய்கள், ரத்தக்குழாய் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதிலும் சரி, கரு உருவாகும்போது கரு வளர்ச்சியிலும் சரி, பிரசவத்திலும் சரி, எல்லா விஷயங்களிலுமே பல சிக்கல்கள் உருவாகின்றன.

    ஏனென்றால் இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு நமது உடலில் உள்ள தோல், ரத்தக்குழாய்கள், நரம்பு செல்கள், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் இருக்கின்ற பல செல்களுக்கு எதிராக, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே மாறுபாடு அடைந்து எதிர்ப்பு உயிரியாக உருமாறி அவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த தன்னியக்க எதிர்ப்பு உயிரிகள், குறிப்பாக டி.என்.ஏ. ஆன்டிபாடி, ஸ்மித் ஆன்டிபாடி ஆகிய எதிர்ப்பு உயிரிகள் தோன்றி தோல், சிறுநீரகம், ரத்தக்குழாய்கள், மூட்டுகள், தசைநார்கள் ஆகியவற்றில் உள்ள செல்களை பழுதாக்கி அதில் வீக்கங்களை ஏற்படுத்தி, நோய்த்தாக்கத்தை உருவாக்கி பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    இதன் காரணமாக தோலில் பல இடங்களில் ஆங்காங்கே அலர்ஜி போல ஏற்படும். தோலில் மாற்றங்கள் இருக்கும். இது சிறுநீரகத்தை தாக்கினால் சிறுநீரகம் பாதிப்படைந்து, அதில் சேதம் ஏற்பட்டு, அதனுடைய செயல்பாடு குறைந்து விடும். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். இந்த தாக்கம் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும். அந்த வீக்கமானது ரத்தக்குழாய்களை பாதித்து அதனால் ரத்தக்குழாயில் ஆங்காங்கே ரத்த உறைவு ஏற்படும்.

    மூட்டுகளில் வலி, கை கால்களில் வீக்கம்:

    இந்த எதிர்ப்பு உயிரிகளால் குடலுக்கு போகின்ற ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டால் அந்த குழாயில் ரத்த உறைவு உருவாகலாம். காலில் ரத்த உறைவு ஏற்படலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு அந்த உறுப்புகள் பழுதடையவும் வாய்ப்பு இருக்கிறது. மூட்டு பகுதிகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டால் மூட்டழற்சி வரலாம். மூட்டுகளில் வலி ஏற்படலாம். கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    இதனால் நடக்க முடியாமல் போகும். வேலை செய்ய முடியாது. இந்த மாதிரி ஒவ்வொரு இடங்களிலும் உள்ள எல்லா இணைப்பு திசுக்களும் பழுதடைந்து பைபுரோசிஸ் உருவாகும். அதனால் தான் இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

    ஏனென்றால் ஒவ்வொரு செல்களையும் இணைக்கின்ற இணைப்பு திசுக்களில் தான் இந்த எதிர்ப்பு உயிரிகள் உருவாகிறது. அதனால்தான் இந்த எதிர்ப்பு உயிரியானது, ரத்தக் குழாய்கள், சிறுநீரகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் உள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கும். இது பல உறுப்புகளிலும் பல பிரச்சனைகளை உருவாக்கும்.

    இந்த லூபஸ் நோயின் முக்கியமான விஷயமே, சில காலகட்டங்களில் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். சில நேரங்களில் இந்த நோயின் பாதிப்பு தானாக குறைந்து விடும். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் ஏற்படுகிற சில மாறுபாடுகளை பொறுத்து இந்த விஷயங்களில் நிவாரணமும், குணமடைவதும் ஏற்படும்.

    சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும். காய்ச்சல் பாதிப்பு இருக்கும். சில நேரங்களில் சிறுநீரக செயல்பாடு குறைவாகி சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். பல இணைப்பு திசுக்கள், தோல், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அது செல்கின்ற உறுப்புகள் எல்லாம் பழுதாகி பல பிரச்சனைகளை உருவாக்கலாம். பல நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தான நிலையை கூட ஏற்படுத்தலாம்.

    திரும்பத் திரும்ப ஏற்படும் கருச்சிதைவுக்கு காரணம்:

    இந்த மாதிரியான விஷயங்கள் இளம்பெண்களை பாதிப்பதால் அவர்கள் முக்கியமான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நோய்த்தாக்கம் என்பது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இதேபோல் தான் இன்னொரு பிரச்சனை ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ். நமது மூட்டு இணைப்புகளில் சைனோவியல் எனப்படும் ஜவ்வு பகுதி உள்ளது. இந்த ஜவ்வு பகுதிதான், மூட்டுகள் இயல்பாக இயங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

    அந்த பகுதிக்கு எதிரான எதிர்ப்பு உயிரி உருவாகி அந்த இணைப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கை கால்கள் எல்லாம் வீங்கிவிடும். மூட்டு ஜவ்வு இருக்கின்ற நிறைய சிறுசிறு இணைப்பு பகுதிகள் எல்லாம் பாதிப்படைந்து, அந்த பகுதிகளில் வீக்கம் உருவாகி, விறைப்புத்தன்மை ஏற்பட்டு வேலை செய்ய முடியாமல் போய் விடும். இதனால் கால்களை மடக்க முடியாது, நீட்ட முடியாது. வலி இருந்துகொண்டே இருக்கும். பல நேரங்களில் இந்த ஜவ்வு பகுதியானது சேதம் அடைந்து பழுதாகி கை, கால்களில் மாற்றங்களும் ஏற்படும். இது ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

    தற்காலத்தில் தான் இந்தநோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் கர்ப்பம் முதற்கொண்டு பலவிதமான பிரச்சனைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு தான் அடிப்படையான காரணமாக இருக்கிறது. கருத்தரிக்காமல் இருப்பது மற்றும் கருத்தரித்து திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படுவதற்கு கூட நோய் எதிர்ப்பு சக்தி பழுதாவது தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்யும்போது, அதில் கருவானது கருப்பையில் ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

    இந்த வகையில் சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்திலும் இவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம். அது என்னென்ன பிரச்சனைகள்? இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பாதுகாப்பாக குழந்தைகளை பெற்றெடுப்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது.

    நமது உடலின் ஆரோக்கியத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதேபோல் பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.

    ஆனால் நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. எனவே எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் இருக்க, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.

    மாதவிடாய் காலத்தில் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படலாம்:

    பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த காலகட்டத்தில் புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும். அதாவது பெண்களுக்கு மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் அவர்களின் பி.எச். அளவு மாறுபடும். அதனால்தான் இந்த புரோபயாட்டிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்.

    மாதவிடாய் வருகிற காலத்தில் வரும் ரத்தமானது காரத்தன்மை (ஆல்கலைன்) கொண்ட பி.எச். ஆகும். இது அந்த குழாய் வழியாக வரும்போது அதனுடைய இயற்கையான அமிலத்தன்மை கொண்ட பி.எச். தன்மையில் இருந்து மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் வெள்ளைப்படுதல் ஏற்படும்போது பாதிக்கப்படலாம். வெள்ளைப்படுதல் என்பது ஒரு ஆல்கலைன் சுரப்பாகும். அது கர்ப்பப்பையில் இருந்து வரும். அதுவும் இந்த புரோபயாடிக்கை பழுதாக்கும்.

    பல நேரங்களில் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்திலும் இந்த யோனிப்பகுதியில் சீரான புரோபயாடிக் வருவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இந்த வகையில் புரோபயாட்டிக் பழுதாவது, மாதவிலக்கு வரும்போது வரலாம். எனவே இந்த புரோபயாட்டிக் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் பல நேரங்களில் ஆன்டிபயாடிக் எடுக்கும் போது கூடவே லேக்டோபேசிலிஸ் (நல்ல பாக்டீரியா) மருந்து கொடுக்கிறோம். பல நேரங்களில் வயிற்றுப்போக்கு வந்தால் முதலில் கொடுப்பதே லாக்டோபேசிலிஸ் கொண்ட மருந்து தான். இவை உங்களுடைய நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும் போது கிருமி தொற்றுக்கள் வராமல் தடுக்கவும் முடியும். ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கவும் முடியும்.

    எளிதாக கிடைக்கும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர்:

    சரி டாக்டர், இந்த புரோபயாடிக் நல்ல பாக்டீரியா என்பது எவ்வளவு காலமாக எல்லோருக்கும் தெரியும் என்று பலரும் கேட்பதுண்டு. கிட்டத்தட்ட 1945-ம் ஆண்டில் இருந்தே இந்த புரோபயாடிக் பாக்டீரியா பற்றி நிறைய விஷயங்கள் கண்டுபிடித்தார்கள்.

    ஏனென்றால் பாக்டீரியாவை முதலில் மைக்ரோஸ்கோப்பில் பார்த்து கண்டுபிடித்த உடனேயே காற்று, தண்ணீரில் இருக்கிற எல்லா பாக்டீரியாக்களை பற்றியும் நிறைய ஆய்வுகள் கண்டுபிடித்தார்கள். அதிலும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தி பலவிதமான நல்ல பாக்டீரியா நமது உடலில் இருப்பதையும் உறுதி செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிசை கண்டுபிடித்தார்கள். புரோ என்றாலே நமது உடலுக்கு சாதகமானது என்று அர்த்தம். அதனால்தான் புரோபயாடிக் கண்டிப்பாக உணவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூடுதலாக புரோபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர் ஆகும். தயிர் மற்றும் மோரில் நிறைய புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த அல்லது நொதிக்க வைத்த அனைத்து உணவுப்பொருட்களிலும் புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த பொருட்கள் என்றால் பாலை தயிராக மாற்றுகிறோம்.

    இந்த தயிரில் இருப்பதுதான் சிறந்த புரோபயாடிக். அதனால் தான் ஒரு காலத்தில் தயிர் சாதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நிறைய பேர் நன்றாக ஆரோக்கியமாக இருந்தார்கள்.

    வயிற்றுப்போக்கு, பேதி வந்தால் தயிர் கொடுங்கள், தயிர் சாதம் கொடுங்கள் என்று சொல்கிறோம். வைரஸ் பாதிப்பால் வயிறு பிரச்சினை ஏற்பட்டால் தயிர் சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். இதில் இருக்கிற புரோபயாடிக் நமது குடல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. எந்த ஒரு வியாதிக்கும் இந்த புரோபயாடிக் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அந்த வகையில் நாம் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியமாகும்.

    நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்:

    நாம் அன்றாடம் சாப்பிடுகிற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் ரசாயன பொருட்கள் மற்றும் கிருமிகள் இருக்கிறது. இதில் இருந்து நமது உடலை பாதுகாப்பது இந்த புரோபயாடிக் தான். இதனால் தான் நமது உணவுகளில் எப்போதுமே புரோபயாடிக் நிறைந்த தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கின்ற புரோபயாடிக் குடலுக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.

    பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் உள்ள யோனிப்பகுதியில் பூஞ்சை தொற்றுக்கள், அரிப்பு, எரிச்சல், திரிதிரியாக வருதல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றால் வரும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீர்க்குழாய் பகுதிகளில் ஏற்படுகிற தொற்றுக்கள் ஆகியவற்றை தடுக்க இந்த புரோபயாடிக் பாக்டீரியா கண்டிப்பாக தேவை. அதனால்தான் அந்த நேரங்களில் ஆன்டிபயாடிக் கொடுக்கும்போது புரோபயாடிக்கை சேர்த்து கொடுக்கிறோம்.

    மேலும் உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக புரோபயாடிக் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதனால் தான் பெண்களுக்கு அந்த நேரத்தில் கூடவே புரோபயாடிக் மருந்துகளை கொடுக்கிறோம்.

    நமக்கு பாதுகாப்பு கொடுக்கிற இந்த புரோபயாடிக்கை என்னென்ன உணவு பழக்க வழக்கங்கள் மூலம் மேம்படுத்தலாம் என்று பார்த்தால், ஒன்று மாத்திரைகளாக சாப்பிடலாம். இரண்டாவதாக இந்த புரோபயாடிக்கை யோனியில் வைக்கலாம், இதன் மூலமாக இந்த புரோபயாடிக் மேம்படும். மூன்றாவதாக உணவு பழக்க முறைகளால் அதிகரிக்கலாம்.

     

    திரும்ப திரும்ப வரும் தொற்றுக்களுக்கு தயிர் மூலம் தீர்வு:

    தயிர், மோர், புளித்த பாலாடைக்கட்டி (சீஸ்), ஆகியவற்றில் புரோபயாடிக் உள்ளது. ஆனால் அது பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டியாக இருக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் பாலாடைக்கட்டி நல்ல ஒரு புரோபயாடிக்கை கொடுக்கிறது. சீனர்கள் சாப்பிடும் கிம்ச்சி என்ற உணவும் ஒருவகையான நொதித்த, புரோபயாடிக் நிறைந்த உணவுதான்.

    நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஊறுகாய் கூட நொதித்தல் தன்மை கொண்ட உணவுதான். அதிலும் புரோபயாடிக் இருக்கிறது. அதனால் தான் நிறைய நேரங்களில் தயிர் சாதமும், ஊறுகாயும் சாப்பிடும்போது உடலுக்கு நல்லது என்று சொல்கிறோம். ஆனால் ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கிறது. ஊறுகாயை உப்பு குறைவாக போட்டு நொதிக்க வைத்தால் அது ஒரு நல்ல உணவாக மாறும்.

    இது தவிர முக்கியமாக நீங்கள் சாப்பிட வேண்டியது, புளித்த மாவில் செய்யும் இட்லி, தோசை போன்ற உணவாகும். புளித்த மாவில் நிறைய லாக்டோபேசிலிஸ் இருக்கிறது. கையில் திடீரென்று ஒரு புண் வந்தால், உதாரணத்துக்கு சூடுபட்டு காயம் உண்டானால், உடனடியாக நீங்கள் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக புளித்த தோசை மாவில் கையை வைக்க வேண்டும். அந்த லாக்டோபேசிலிஸ் உடனடியாக பாதுகாப்பு கொடுக்கும். அதன் மூலம் காயம் விரைவில் குணமாகும். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களிலும் நொதிக்கப்பட்ட உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களுடைய யோனிப்பகுதி, கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கிறது. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தயிர் கொடுங்கள், உணவுகளில் தயிரை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் ஒரு ஆன்டிபயாடிக் எடுக்கும்போது உங்களுடைய டாக்டரிடம் புரோபயாடிக் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.

    பல நேரங்களில் உங்களுக்கு ஒரு தொற்றானது திரும்ப திரும்ப வந்தால் அது சிறுநீர் தொற்றுக்களாக இருக்கலாம், யோனிப்பகுதி மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கக்கூடிய தொற்றுக்களாக இருக்கலாம், அல்லது பேதி, வயிற்றுப்போக்காக இருக்கலாம்.

    இப்படிப்பட்டவர்கள் உணவுகளில் கண்டிப்பாக தயிர் சேர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமாகும். குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது. தொற்றுக்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தும். நாம் ஆரோக்கியமாக வாழவும் வழி வகுக்கும்.

    • அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
    • கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.

    பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:

    மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.

    வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.

    பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.

    பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

    ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.

    ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.

    அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

    இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.

    பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?

    மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

    அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.

    கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.

    கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.

    என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

     

    கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?

    தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.

    கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள்.
    • கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம்.

    தாய்மை அடையும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும். எனவே பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது கர்ப்பகாலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை தான். இதைத்தான் ஒவ்வொரு பெண்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறார்கள். அந்த அளவுக்கு கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் கூறும் தவறான அறிவுரைகள்:

    கர்ப்ப காலமும், பிரசவ நேரமும் எல்லா பெண்களுக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாக அமைவதில்லை. கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்தியேகமான விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்களில் பெண்கள் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும், வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள்.

    ஆனால் அந்த அறிவுரைகளில் சரியான விஷயங்களும் இருக்கும், சில நேரங்களில் தவறான விஷயங்களும் இருக்கும். அதாவது தவறான விஷயங்களை தவறு என்று அறியாமலேயே அவர்கள் சரியானது என்று கூறுவார்கள். அப்படி நிறைய விஷயங்கள் கர்ப்பிணிகளின் காதில் வந்து விழும்.

    ஆனால் இவற்றில் எது நல்லது? எது கெட்டது என்பது பல நேரங்களில் அந்த கர்ப்பிணி பெண்கள் அறியாத ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் இன்றைக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற முக்கியமான விஷயமான கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது மிகவும் சீரான முறையில், நல்ல முறையில் இருக்க வேண்டும். அந்த கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல், நல்ல மகிழ்ச்சியோடு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். பிரசவத்தின்போது தாய் சேய் இருவரும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.

    இந்த வகையில் கர்ப்ப காலத்தின்போது பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவை எக்கச்சக்கம் இருக்கிறது. மேலும் சமுதாய ரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளும் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது.

    வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:

    மருத்துவத்துறை இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் வீட்டில் பிரசவம் பார்க்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவம் எங்கு, எப்படி, யாரால் பார்க்கப்படுகிறது என்று கடந்த 2018-ம் ஆண்டிலேயே உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் நிறைய பேர் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து உள்ளனர். இன்றும் நிறைய பேர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை நாம் கேள்விப்படுகிறோம். யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்று நிறைய பேர் கூறுகிறார்கள்.

    பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு போனால் குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள், ஊசி போடுகிறார்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்கிறார்கள், தையல் போடுகிறார்கள் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பிரசவம் என்பது இயற்கையாக ஏற்படுவது தானே? கர்ப்பம் இயற்கையாக உருவாகும் நிலையில், பிரசவமும் இயற்கையாகத்தானே இருக்க வேண்டும் என்பது போன்று பலரது கருத்துக்கள் உள்ளன.

    அந்த கருத்துக்களில் தவறு இல்லை என்றாலும் கூட, அதை முழுக்க முழுக்க சரியென்று பலரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் ஆகவில்லையா என்கிற நம்பிக்கையோடு, தேவையில்லாமல் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகமாக உள்ளது.

    இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆய்வுகளில் சொல்லியிருக்கக்கூடிய விஷயம், படித்தவர்கள் நிறைய பேர் வசிக்கும் சுவீடன் போன்ற நாடுகளில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதமாக உள்ளது.

    ஆனால் மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்ப்பது 19 முதல் 20 சதவீதமாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்:

    வீட்டில் பிரசவம் பார்த்தவர்களில், பிரசவம் சரியாக நடந்த ஒருவர் வேண்டுமானால் அதை யூடியூப்பில் போடலாம். ஆனால் வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே அதை யூடியூப்பில் போடுவதில்லை. ஏனென்றால் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்க்கும்போது தாயும், குழந்தையும் ஒருவேளை இறக்க நேரிட்டால் அது மிகப்பெரிய பிரச்சனையாகி விடும். எனவே யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்.

    அந்த வகையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒரு கர்ப்ப காலத்தில் பலரும் பலவிதமான மாற்றுக் கருத்துக்களை கூறுவார்கள். இன்றைக்கும் அந்த காலத்து பெரியவர்கள் சிலர் சொல்லுவார்கள். நாங்கள் அந்த காலத்தில் வீட்டில் தான் பிரசவம் பார்த்தோம். இன்றைக்குத் தான் பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்துள்ளன. பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்படி சொல்கின்ற அந்தக்கால பெண்கள் அதிகம்.

    காலம் காலமாக பழகி வந்த கலாசாரம் மற்றும் அவர்களுடைய சமூக பழக்க வழக்கம் ஆகியவற்றை பின்பற்றி கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு அந்த காலத்து பெண்கள் நிறைய அறிவுரைகளை சொல்வார்கள். நான் நிறைய பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரியாதா என்று விமர்சனம் செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    அவர்கள் இப்படி விமர்சனம் செய்வதற்கு அறிவியல் ரீதியாக பிரசவம் பற்றிய புரிதல் இல்லாததுதான் முக்கியமான காரணம் ஆகும். கர்ப்பம் மற்றும் பிரசவம் என்கின்ற இயற்கையான விஷயத்தின் அறிவியல் அடிப்படையே அவர்களுக்கு தெரிவதில்லை. இது தொடர்பான புரிதல் என்பது மிகவும் முக்கியம்.

    அந்த புரிதல் இல்லாததால் தான் பிரசவத்தின்போது வருகிற சவால்கள், என்ன நடக்குமோ என்கிற குழப்பங்கள், இதனால் வருகிற பாதிப்புகள் பற்றி தெரியாமல், நிறைய பேர் ஒரு சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறார்கள்.

    மேலும் பிரசவம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற தவறான கருத்துக்களையும் சொல்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு கர்ப்ப காலத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் கருச்சிதைவு அபாயம்:

    இதேபோல் கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு, எல்லோரும் பலவிதமான அறிவுரைகளை சொல்வார்கள். நான் இதைத்தான் சாப்பிட்டேன், எனது குழந்தை நல்ல கலராக இருந்தது. நான் இதை சாப்பிட்டேன், குழந்தை மோசமாக இருந்தது என்பார்கள்.

    இந்த மாதிரி பலவிதமான உணவு பழக்க வழக்க முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும், அவர்கள் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தங்களுடைய அனுபவத்தில் இருந்து, இதுதான் சரி என்று எண்ணி, தவறான கருத்துக்களை சொல்வது இன்னும் அதிகமாக இருக்கிறது.

    இன்றைக்கும் சமூக வலைதளத்திலோ அல்லது யூடியூப்களிலோ யாராவது எளிதாக சொல்லி விடுவார்கள். நான் கர்ப்பமாக இருக்கும்போது இதைத்தான் சாப்பிட்டேன், அதனால் எனது குழந்தை நல்ல கலராக இருந்தது என்று பதிவிடுவார்கள். ஆனால் அது உண்மையான தகவலாக இருக்காது.

    அந்த காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் தான் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால் குங்குமப்பூவில் இருக்கிற பல விதமான விஷயங்கள் கருவுக்கும், கரு வளர்ச்சிக்கும் பிரச்சனையாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.

    இந்த வகையில் கருச்சிதைவு என்பது குங்குமப்பூ அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பதை பல ஆய்வுகளில் உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் நிறைய பேர் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக இருக்கும், நல்ல நிறமாக இருக்கும் என்கிறார்கள்.

    இதெல்லாம் தவறான கருத்துக்கள். இப்படி பலரும் சமூக ஊடகத்தில் சொல்லும் தவறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களை, கர்ப்பிணிகள் சரியானது என்று கருதி, அதை பயன்படுத்தி, அதனால் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    குங்குமப்பூ விஷயம் போலவே, அடுத்ததாக கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்கள் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

    • பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா?
    • ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள்.

    வருடத்துக்கு ஒருமுறை ஆயுத பூஜை என்கிற பெயரில் மெஷின்களுக்குக் கூட பூரண ஓய்வு அளிக்கிறோம். இன்னும் வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பில் இருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ஆனால், ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கிற உயிருக்கு, குறிப்பாக பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா? பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களை பற்றி பார்ப்போம்.

     மாதவிலக்கு:

    இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால்தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும். அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும். இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.

    மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.

     பிரசவத்துக்குப் பிறகு:

    வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.

    கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.

    அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்த பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.

    பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்' என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.

    தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.

    சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.

    மெனோபாஸ்:

    மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி, படபடப்பு, கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும். மூளையில் உண்டாகிற ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.

    எந்த விடயத்திலும் பிடிப்பே இருக்காது. உடல் மற்றும் மனதளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது. அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள். பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

     வயதானவர்கள்:

    முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம், கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இவர்களுக்கான அவசியத் தேவை.

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது.
    • ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது.

    பிரசவத்துக்கு பிறகு மார்பகம் பால் உற்பத்தி செய்வதில்லை. மார்பகத்தில் மஞ்சள் நிற திரவம் கருவுற்ற காலத்திலேயே வெளியேற கூடும். இது கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது. பால் சுரப்புக்கு முன்பு மார்பகத்தில் இருந்து வரக்கூடிய குழந்தையின் முதல் ஊட்டச்சத்து இது.

    இந்த கொலஸ்ட்ரம் என்னும் மஞ்சள் நிற பாலானது கருவுற்ற 14 வது வாரத்தில் இருந்தே உற்பத்தி ஆக கூடும். கருவுற்ற துவக்கத்தில் குழந்தை உணவு உற்பத்தி செய்யப்படுவது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இதுதான் உண்மை.

    கர்ப்பகாலத்தில் மார்பக கசிவு சங்கடமாக இருந்தாலும் இது சாதாரணமானது. கர்ப்பகாலத்தில் உண்டாகும் இந்த கொலஸ்ட்ரம் என்னும் தெளிவான திரவம் குழந்தையின் உணவை ஆரோக்கியமாக தயார் செய்வதற்கான அறிகுறியாகவே உணரலாம்.

    ஏனெனில் இவைதான் குழந்தைக்கு தேவையான செரிமானத்துக்கு உதவும். இது புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு. இதில் சர்க்கரை அளவும் குறைவு. குழந்தை எவ்விதமான நோய்த்தொற்றுக்கும் ஆளாகாமல் காக்கும் ஆன்டிபாடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பகாலத்தில் எல்லா பெண்களுக்கும் மார்பகத்தில் கசிவு இருக்கும் என்றாலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். சில பெண்களுக்கு இரண்டாவது ட்ரைமெஸ்டரில் மார்பக கசிவு இருக்கலாம்.

    கர்ப்பிணி பெண்களுக்கு உண்டாகும் பொதுவான நிகழ்வு இது. எனினும் கர்ப்பத்தின் 12 அல்லது 14 வது வாரங்களில் அதாவது முதல் ட்ரைமெஸ்டர் காலங்களிலும் மார்பகங்களில் கசிவு உண்டாக கூடும்.

    இறுதி மூன்றாவது மாதங்களிலும் இவை உண்டாக கூடும். பிரசவக்காலம் நெருங்கும் போது இந்த கசிவு அதிகரிக்கவும் செய்யும்.

    சிலருக்கு பிரசவத்துக்கு பிறகு இந்த கசிவு இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இது குறித்து கர்ப்பிணி பெண் கவலை கொள்ள தேவையில்லை. இன்னும் சில பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகும் மார்பகத்தில் கசிவு இருக்காது. இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவையாக இருக்கும்.

    கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் மார்பக கசிவு வருவது சாதாரணமானது.

    மார்பகத்தில் நீர் கசிவு என்பது இயல்பானது சாதாரணமானது என்று சொல்வார்கள். ஆனால் இது அசாதாரணமான அறிகுறிகளை கொண்டிருக்கும் போது தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

    பால்கசிவு தொடர்ந்து நிற்காமல் இருந்தால் அது அசாதாரணமானது. பாலில் ரத்த புள்ளிகள் ஏதேனும் இருந்தால் அதுவும் அசாதாரணமானது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது பால் குழாய்கள் முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாவதுண்டு.

    எனினும் பாலூட்டிக்குழாயில் எக்டேசியா அல்லது அடைக்கப்பட்ட பால் குழாய் மருத்துவரால் எளிதில் சிகிச்சை அளிக்க கூடியவை. அதனால் அசாதாரணமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு இது குறித்து சந்தேகம் இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும்.
    • கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல.

    கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

    கர்ப்பமாக இருக்கும்போது உடலை ஆக்டிவாக வைத்திருப்பதும் முக்கியம். உங்கள் வயிற்றில் இருக்கும் சிறிய குழந்தையை நீங்கள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணிகள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வீக்கம் மற்றும் முதுகுவலியை ஏற்படுத்தும். சமைக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்து, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். 

    கர்ப்பிணி பெண்கள் வீட்டை துடைப்பது, துணி துவைப்பது, தரையை சுத்தம் செய்வது போன்ற வளைந்து கொடுக்கும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.

    கர்ப்பிணிகள் மலையிலோ, ஏணியிலோ ஏறுவது நல்லதல்ல. குழந்தையின் பாதுகாப்பிற்காக, இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்.

    பெரும்பாலான வீட்டு வேலைகள் கர்ப்பத்தின் முதல் சில மாதங்களில் செய்யப்படலாம். இருப்பினும், சில வீட்டு வேலைகளை ஆரம்ப கர்ப்பத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தி பிறக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மீண்டும் மீண்டும் இதே போன்ற பணிகளைச் செய்யும்போது மன அழுத்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்.

    • முதல் முறையாக கருவுற்றவர்களுக்கு பிரசவம் குறித்து அதிக பயம் இருக்கும்.
    • கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

    முதல் முறை கருவுறுதலின் போது சந்தோஷமாக உணரும் நேரத்தில் பிரசவம் குறித்தும் அதிகம் பயப்படுவார்கள். கர்ப்ப காலம் முழுக்க பிரசவ வலி, பிரசவ நேரம் குறித்த சந்தேகம் இருக்கும்.

    அதே சமயம் பிரசவ வலிக்கும், பொய் வலிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி கர்ப்பிணிப் பெண்கள் அறிந்து கொள்வது அவசியமானது.


    பொதுவாக பிரசவ வலி என்பது மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் கவலையும் இருக்கும். பெண்ணின் கர்ப்பகாலத்தில் மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இந்த வலி உணர்வு தொடங்கும். முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று மருத்துவமனைக்கு செல்லும் நிகழ்வுகளும் நடக்கும்.

    பல பெண்கள் தங்களது இறுதி மூன்று மாதங்களில் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டதாக நினைத்து அடிக்கடி மருத்துவமனை செல்கிறார்கள். இது பொய் வலி அல்லது சூட்டு வலி என்பதை அறிந்த பிறகு வீடு திரும்புகிறார்கள்.

    பொய் வலி விட்டு விட்டு இருக்காது. தொடர்ந்து இருக்கும். உட்கார்ந்தால், நின்றால், படுத்தால் என நிலை மாறும் போது வலி குறையும். இடைவிடாத வலி இருந்தாலே அது பெரும்பாலும் பொய் வலி தான்.


    பிரசவ வலிகள் கீழ் முதுகில் தொடங்கி பின் அடிவயிற்றில் பரவி சில சமயங்களில் கால்கள் வரை பரவும். சில சமயங்களில் வயிற்றில் வலியை உண்டாக்கும். சிலநேரங்களில் வயிற்றுப்போக்குடன் இருக்கலாம்.

    கர்ப்பப்பை வாய் விரிவடைதல் மற்றும் வெளியேற்றத்தின் ஆரம்பமாக இருக்கலாம். குழந்தையின் தலை இடுப்புக்குள் இறங்கி இருக்கலாம். கர்ப்பிணியின் இடுப்பு மற்றும் மலக்குடல் மீது அதிக அழுத்தத்தின் உணர்வு இருக்கும்.

    ×