என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுநீர் தொற்று"

    • எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும்.
    • சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    பெண்களை பொருத்தவரை கர்ப்ப காலங்களில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அவர்களில் பலரும் தங்களின் சந்தேகங்களை அவர்களது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. என்னிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை தொடர்பான பலவித சந்தேகங்களை கேட்டுள்ளனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    அந்த வகையில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

    பெண்களின் கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்கள், நடுவில் உள்ள 3 மாதங்கள் மற்றும் கடைசியில் உள்ள 3 மாதங்கள் ஆகிய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

    ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் கரு உருவான பிறகு அது வளரத் தொடங்கும். அந்த கருவானது பெரிதாக வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகி விரிவடையும். சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் பக்கத்தில் இருக்கும். கர்ப்பப்பை விரிவடையும்போது சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக காணப்படும்.

    எனவே அதுபோன்ற கால கட்டத்தில் சிறுநீர்க்குழாய் தொற்றானது, கர்ப்பப்பையில் மிகவும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு அந்த கர்ப்பப்பை வளர்ந்து பெரிதாகும்போது, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தேக்கம் என்பது அதிகம் இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்த நிலையில் காணப்படும். அப்படி சாய்ந்த நிலையில் கர்ப்பப்பை இருக்கும்போது, அது சிறுநீர்க்குழாய்க்கு அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிறுநீரானது திரும்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்க்குழாயில் தொற்று உருவாகும்.

    சிறுநீர்க்குழாய் தொற்று உருவாவதற்கான முக்கிய காரணங்கள்:

    மேலும் இதற்கு முக்கிய காரணமே சிறுநீர்க்குழாய் மற்றும் யோனிப்பகுதி ஆகியவை கர்ப்பப்பையின் பக்கத்தில் இருப்பதுதான். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு பல நேரங்களில் அறிகுறி எதுவுமே இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். அறிகுறி இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி வரும் என்றால், பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வரும், குளிர் ஜுரம் வரும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும் அவர்கள் சிறுநீரை அடக்கமுடியாமல் சிரமப்படுவார்கள்.

    இந்த அறிகுறிகளானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்பதால் கர்ப்பிணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறுநீர்க்குழாய் தொற்றுக்கும் இதே அறிகுறிகள் தான் என்பதை பெண்கள் கவனிக்க தவறி, தவறு செய்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் சிறுநீர்க்குழாய் தொற்று பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று அதிகரித்து காணப்படுவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். பொதுவாகவே சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் மிகவும் பக்கத்தில் இருப்பதால், கர்ப்பப்பை வளரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் தேங்குவது என்பது அதிகம் இருக்கும். பல நேரங்களில் அதனால் சிறுநீர்க்குழாய் தொற்றானது அறிகுறி இல்லாமல் இருக்கும்.

    எனவே தான் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்பை அறிகுறியற்ற பாக்டீரியூரியா (ஏசிம்டமேட்டிக் பாக்டீரியூரியா) என்று சொல்கிறோம். அறிகுறியற்ற பாக்டீரியூரியா என்றால் இந்த காலகட்டத்தில் அறிகுறியே இல்லாமல் சிறுநீரில் தொற்றுக்கள் இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    சிறுநீர்க்குழாய் தொற்றுக்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை:

    அதனால் தான் எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கூடவே ஒரு யோனி ஸ்வாப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை கண்டறியும் பரிசோதனை ஆகும். ஏனென்றால் அறிகுறியே இல்லாமல் தொற்றுக்கள் பரவும் நிலையில், இந்த தொற்றுக்களானது கர்ப்பப்பையில் இருக்கும் கருவையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

    அதனால்தான் அறிகுறியற்ற பாக்டீரியூரியாவினால் நிறைய பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பது, குறை மாதத்தில் பனிக்குட நீர் உடைவது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது போன்ற பல்வேறு வகை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.

    அதற்காகத்தான் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 4-வது மாதத்தில் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியமானதாகும். இந்த பரிசோதனையின்போது தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து முழுமையாக சரிசெய்து விடுவோம். இதில் ஒரு லட்சம் தொற்றுக்கள் இருந்து, ஆனால் அதற்குரிய அறிகுறி இல்லாவிட்டால் கூட கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

    கர்ப்பகாலத்தில் இந்த சிறுநீர்க்குழாய் தொற்றுக்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்கு குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக சிறுநீரை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள நீராகாரங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை எளிதாக கழிப்பது போன்ற சூழல்களை உருவாக்கி்க கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சிறுநீர்க்குழாய் தொற்று இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர்க்குழாய் தொற்றுக்கான மருந்துகள் மாத்திரைகள் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை சிறுநீர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் சிறு நீர்க்குழாய் தொற்று பிரச்சனை முழுமையாக சரியாவதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு பின்நாட்களில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்க முடியும்.

    பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?

    பெண்கள் பலரும் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சரியான நேரத்தில் வந்தால், மாதவிலக்கு தள்ளிப்போன ஒரே நாளில், அதாவது 31-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.

    ஆனால் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவது 35 நாட்கள் அல்லது 45 நாட்கள் என தள்ளித் தள்ளிப்போகும். ஆனால் எதுவாக இருந்தாலும் முதலில் அவர்கள் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    ஒரு வாரம் கழித்தும் மாதவிலக்கு வரவில்லை, ஆனால் நீங்கள் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மீண்டும் ஒரு வாரம் கழித்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    தேவைப்பட்டால் சில நேரங்களில் ரத்த பரிசோதனையில், பீட்டா எச்.சி.ஜி. என்ற ரத்த பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை மூலமாக, கருவின் ஆரம்ப நிலையிலேயே அதனுடைய வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான பரிசோதனை ஆகும்.

    மாதவிலக்கு குறிப்பிட்ட காலத்தில் வராத பெண்கள் எப்போது கருமுட்டைகள் வெளியானதோ, அதில் இருந்து 17-வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் எங்களிடம் வரும் பெண்களுக்கு, எந்த நாளில் முட்டை வெளியானதோ, அந்த நாளில் இருந்து 17-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

    பொதுவாக ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்கிற பெண்களுக்கு, கருவை கர்ப்பப்பையில் எடுத்து வைத்த பிறகு 15-வது நாள் பரிசோதனை செய்து பார்க்க சொல்கிறோம். இந்த காலகட்டத்தில் அந்த கருவின் டிரோபோபிளாஸ்ட் பார்மேஷன் (கருவை சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு) சரியாக இருக்கும். அதுதான் பீட்டா எச்.சி.ஜி. வருவதற்கான அடிப்படையான செல்களாக அமையும். இந்த செல்களில் இருந்து வெளியேறும் ஹார்மோன்களை வைத்து தான் கர்ப்பம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும்.

    • கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான்.
    • கரு உருவாகும் போது, ஒருவிதமான வலி அடிவயிற்றில் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடல் மாறும் போது கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படும். பொதுவாகவே இந்த வயிற்று வலிக்கு அபாயகரமான காரணங்கள் இல்லை என்றாலும் சில தீவிரமானதாக இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் ஒரு கட்டத்தில் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் வருவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் வயிறு வலியே வரக்கூடாது, என்று நினைக்க கூடாது. வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இயல்பானது.

    பெரும்பாலான நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். ஏனெனில் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அதீத அழுத்தம் உங்கள் வயிற்றை சில நேரங்களில் அசெளகரியமாக உணர்த்தலாம்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப்போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.

    மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்....

    * கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப்போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

    * கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

    * சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

    * கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    * பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 -வது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும்.

    * நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும். இதன் அறிகுறியே நிலையான இடைவிடாத வயிறு வலி தான். இது உங்கள் வயிற்றில் நிவாரணம் இல்லாமல் நீண்ட காலத்துக்கு கடினமாக இருக்கும்.

    மற்றொன்று ரத்தம் தோய்ந்த திரவம் அல்லது பனிக்குட நீர் கசிவு. கூடுதல் அறிகுறிகளில் உங்கள் அடிவயிற்றில் மென்மை, முதுகுவலி, அல்லது ரத்தத்தின் தடயங்களை உள்ளடக்கிய திரவ வெளியேற்றம் ஆகியவை அடங்கும்.

    • UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.
    • அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல ரகசியங்களை வெளிப்படுத்தும். வயிற்றில் அல்லது உடலில் பல பிரச்னைகள் இருக்கும்போது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

    ஆனால் சில நேரங்களில் தனிப்பட்ட சுகாதாரத்தை சரியாக கவனிக்காததால், பலர், குறிப்பாக பெண்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். பல நேரங்களில், தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்த பிறகும், UTI வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.

    UTI என்பது பிறப்புறுப்பில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இதன் காரணமாக உங்களுக்கு சிறுநீர் கழித்தல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயிறு மற்றும் சிறுநீரகங்களுக்கும் பரவுகிறது.

    சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள்

    சிறுநீர் தொற்று ஏற்பட்டால், சில பொதுவான அறிகுறிகளைக் காணலாம். இது உங்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், அது சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். இதனுடன், சிறுநீரில் ரத்தப் பிரச்சனையும் அதிகரிக்கிறது.

    எனவே, இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், அவை சிறுநீர் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சிறுநீர் தொற்று மிகவும் சங்கடமாக இருக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைய அளிக்கப்படாவிட்டால், அது வயிற்று தொற்றுக்கு வழிவகுக்கும். சிறுநீர் நோய்த்தொற்றை நிர்வகிப்பதில் நீர் மிகவும் முக்கியமானது. எனவே UTI ஏற்பட்டால், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தொடர்ந்து தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் பாக்டீரியாவை வெளியேற்றவும் மற்றும் UTI களை தடுக்கவும் உதவுகிறது. எனவே, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

    பாக்டீரியாவால் சிறுநீர் தொற்று

    UTI -ன் மிகவும் பொதுவான காரணம் பாக்டீரியா ஆகும். பாக்டீரியாவால் பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தொற்றுநோயைத் தடுக்க, நீங்கள் சுகாதாரத்தைப் பேணுவது மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அல்லது அதிகரிப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிப்பது முக்கியம்.

    • ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
    • புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடின்மை அல்லது அடக்க முடியாத நிலைமையை சிறுநீர் கசிவு என்று அழைக்கிறோம். இது ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. இது பொதுவாக நான்கு வகைப்படும்.

    அழுத்த கசிவு:

    உடல் ரீதியான செயல்பாட்டால் ஏற்படுவது. உதாரணமாக இருமல், தும்மல், அதிக எடை தூக்குதல், உடல் பருமன், மலச்சிக்கல் போன்ற காரணிகள் சிறுநீர்பையில் அழுத்தத்தை உண்டாக்கி சிறுநீர்கசிவை ஏற்படுத்துகிறது.

    அவசர சிறுநீர் கசிவு:

    சர்க்கரை நோய், வயது முதிர்வு அல்லது நரம்பியல் பிரச்சனை (அல்சைமர்ஸ், பார்கின்சன், மல்டிபிள் ஸ்கிளராஸிஸ் நோய்கள்), பக்கவாதம் பாதிப்பு, சிறுநீர்பாதை தொற்று உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    நிரம்பி வழியும் சிறுநீர் கசிவு:

    இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீரை முக்கி வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெரும்பாலும் சர்க்கரை நோய் அல்லது புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.

    கலப்பு நீர்க்கசிவு:

    இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுநீர் கசிவு வகைகளின் அறிகுறிகள் இருக்கிறது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் கசிவு ஏற்பட முக்கிய காரணம்:

    1) நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் அது சிறுநீர் பாதை தொற்றுக்கு வழி வகுத்து சிறுநீர் கசிவை ஏற்படுத்துகிறது

    2) உடல் பருமன் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம்

    3) சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகளின் பாதிப்பு

    4) ஒரு சிலருக்கு கூடுதலாக உள்ள நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவு (டையூரிடிக்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், மன அழுத்தத்திற்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள்)

    சிறுநீர் கசிவை கட்டுப்படுத்தும் வழிகள்:

    * ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    * புகை, மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும்.

    * காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * இடுப்புக்குழி தசைகளும், சிறுநீர்ப்பை தசைகளும் துவண்டு விடாமல் இருக்க கீகல் பயிற்சி என்னும் அடி வயிற்று தசையை இழுக்கும் உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும்.

    * உடல் எடையை குறைக்க வேண்டும்.

    * சிறுநீர்ப்பை தசையை தளர்த்தும் மருந்துகள் (மைராபெக்ரான்), ஆண்டிகோலினர்ஜிக்ஸ் (டோல்டரோடைன், டாரிபெனாசின், சோலிபெனாசின்) போன்ற மருந்துகளை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொண்டால், * சிறுநீர் கசிவு பிரச்சனையை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவர் அனுமதியின்றி இம்மருந்துகளை உபயோகிக்க கூடாது.

    ×