search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Childbirth"

    • பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா?
    • ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள்.

    வருடத்துக்கு ஒருமுறை ஆயுத பூஜை என்கிற பெயரில் மெஷின்களுக்குக் கூட பூரண ஓய்வு அளிக்கிறோம். இன்னும் வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பில் இருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ஆனால், ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கிற உயிருக்கு, குறிப்பாக பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா? பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களை பற்றி பார்ப்போம்.

     மாதவிலக்கு:

    இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால்தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும். அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும். இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.

    மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.

     பிரசவத்துக்குப் பிறகு:

    வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.

    கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.

    அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்த பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.

    பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்' என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.

    தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.

    சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.

    மெனோபாஸ்:

    மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி, படபடப்பு, கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும். மூளையில் உண்டாகிற ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.

    எந்த விடயத்திலும் பிடிப்பே இருக்காது. உடல் மற்றும் மனதளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது. அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள். பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

     வயதானவர்கள்:

    முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம், கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இவர்களுக்கான அவசியத் தேவை.

    • யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெருமாள் `தாமோதரன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
    • நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது அபூர்வம்.

    மாலவனின் திருநாமங்கள் ஆயிரம். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரு திருநாமங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் முதலானவை மிகவும் புகழ் பெற்றவை. இங்கே நாம் பார்க்க இருப்பது, தாமோதரன் என்ற திருநாமத்துடன் பெருமாள் வீற்றிருக்கும் ஒரு ஆலயத்தைத்தான்.

    பக்தர்களிடம் என்றென்றும் நீங்காத அன்புடையவர், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவர், தாய் யசோதையால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தினால் வயிற்றில் தழும்பினை ஏற்றுக்கொண்டவர், தாமோதரன். சமஸ்கிருதத்தில் `தாமா' என்றால் `கயிறு', `உதாரம்' என்றால் `வயிறு' என்று பொருள்படும். இதனாலேயே பெருமாள் `தாமோதரன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

    காஞ்சிபுரத்திற்கு அருகில் புகழ்பெற்ற தாமல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தலம், திருமாலழகி உடனாய தாமோதரப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் நாபிக்கமலத்திற்குக் கீழே நீண்ட தழும்புடன் பெருமாள் காட்சி தருவது எங்கும் காணப்படாத அபூர்வ காட்சியாகும்.

    சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இத்திருக்கோவில், மத்வ சமூகத்தைச் சேர்ந்தவர் களால் ஆராதனை செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக இந்த கோவில் வழங்கப்பட்டதால் 'தானமல்லபுரம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

    பின்னர் மருவி இவ்வூர் 'தாமல்' என்றானதாக தெரிகிறது. கி.பி. 556-ம் ஆண்டு பல்லவர் செப்பேடுகளில் தாமல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தாமலில் பிறந்த பல்கண்ணன் எனும் புலவர், பாண்டியன் அறிவுடைநம்பியின் அவையில் வீற்றிருந்தவர். இவரை தாமப் பல்கண்ணனார் என்று அழைப்பர். இவருக்கு கொடையாக அளிக்கப்பட்ட ஊர் என்பதால் 'தானமல்லம்' என்று அழைக்கப்பட்டு, பின் மருவி 'தாமல்' என்று ஆகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    வெண்ணெய் திருடும் குழந்தை கண்ணன் மீது, அக்கம் பக்கத்தவர்கள் யசோதையிடம் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். யசோதாதேவி கண்ணனின் விஷமத்தைக் பொறுக்க முடியாமல், ஒரு கயிற்றைக் கொண்டு உரலுடன் சேர்த்துக் கட்டிவிட்டாள். அன்பிற்குக் கட்டுப்பட்டு கண்டுண்ட கண்ணன், உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையில் புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினான். இதைக்கண்டு அனைவரும் வியந்து போனார்கள். கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.

    வயிற்றில் பதிந்த வடுவின் காரணமாக அவருக்கு 'தாமோதரன்' என்ற திருப்பெயர் உண்டானது. கண்ணனின் இந்த லீலைகளில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள் சிலர், பெருமாளிடம் "இதே திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளி மக்களைக் காத்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட பெருமாள், மகாலட்சுமித் தாயாருடன் தாமல் திருத்தலத்தில் தாமோதரன் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளினார். இத்தலத்துப் பெருமாள் கேட்டதைக் கொடுக்கும் தாமோதரனாகவும், கேட்டதைக் கொடுக்கும் திருமாலழகியாக தாயாரும் எழுந்தருளி பக்தர்களின் பிரார்த்தனை களைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    ராஜகோபுரமின்றி சுற்றுச் சுவர்களுடன் காட்சி தரும் இக் கோவிலின் நுழைவாசல் பகுதியில், இரண்டு கருடாழ்வார்கள் சுதைச் சிற்பமாக வீற்றிருக்கிறார்கள். மூலவர் தாமோதரப் பெருமாள் கருவறையில் உபய நாச்சியார்களோடு அழகு மிளிரக் காட்சி தந்து அருள்வதைக் காணக் கண்கோடி வேண்டும். இத்திருத் தலத்தில் தாமோதரன் நான்கு திருக்கரங்களோடு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். நான்கு திருக்கரங்களும் முறையே சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத, ஊரு ஹஸ்த முத்திரைகளுடனும் காணப்படுகின்றன.

     ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் அமைந்துள்ள தேவியர்களுடன் உற்சவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய தாமோதரப் பெருமாள் என்பது இவரது பெயர். திருமாலழகி என்ற அழகிய திருநாமத்தோடு, தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் தாயார் காட்சியளிக்கிறார்.

    இந்த தாயாருக்கு நான்கு கரங்கள் உள்ளன. இவரது உற்சவத் திருமேனியின் திருநாமமும் திருமாலழகி என் பதுதான். மற்றொரு தனிச் சன்னிதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். இச்சன்னிதியில் ஆண்டாளின் உற்சவர் திருமேனியும் இருக்கிறது. முன் மண்டபத்தில் விஷ்வக்சேனர், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், குமுதவல்லி, திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பி, ராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலான ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் சிலை வடிவங்கள் காணப்படுகின்றன. ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.

    பொதுவாக பெருமாள் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் மூலவர் தாமோதரப் பெருமாள், ரோகிணி நட்சத்திரம் அன்று நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன் ராஜ அலங்காரத்தில் அருள்கிறார். மத்வர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இத்தல உற்சவர் தினமும் கஸ்தூரித் திலகத்துடன் காட்சி தருகிறார். வைகானஸ ஆகம விதிப்படி இத்தலத்தில் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தம் விபுல ஸரஸ் என்பதாகும். தல விருட்சமாக வில்வம் மற்றும் புன்னை மரங்கள் உள்ளன.

    இத்தலத்து மூலவரின் கால்களில் வெள்ளிக் கொலுசுகள் மின்னுகின்றன. குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து தாமோதரப் பெருமாளை வணங்கி, குழந்தைச் செல்வம் தந்தருளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள். தாமோதரப் பெருமாளின் திருவருளால் மழலைச் செல்வம் வாய்க்கப் பெற்ற பின்னர், இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கு வெள்ளிக்கொலுசை சமர்ப்பித்து வணங்கி மகிழ்கிறார்கள்.

    இவ்வாலயத்தில் சித்திரையில் மகாசாந்தி ஹோமம் மற்றும் கோடை உற்சவம், வைகாசி மாதத்தில் வஸந்த உற்சவம், ஆனி மாதத்தில் தாமோதரப் பெருமாள் லட்சார்ச்சனை, கருட சேவை, அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம், ஆடியில் தாயாருக்கு திருவிளக்கு பூஜை, ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீனிவாச திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதித்தல், கார்த்திகையில் ஆஞ்சநேயர் லட்சார்ச்சனை, மார்கழியில் ஆண்டாள் போகி உற்சவம், மாசியில் மாசி மகம், பங்குனியில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவம் முதலான விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    சென்னையில் இருந்து வேலூா் செல்லும் நெடுஞ்சாலையிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் தாமல் கிராமம் உள்ளது. திருப்புட்குழி என்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம்.

    • சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
    • பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

    மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

     அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

    கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.

    தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

    சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.

    ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.

    இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.

    • கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம்.
    • கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியம்.

    பொதுவாக குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பை மெதுவாக அதன் கர்ப்பத்துக்கு முந்தைய வடிவில் சுருங்க உதவுகின்றன. ஆனால் கருப்பை இயல்பு நிலைக்கு வர 7-8 வாரங்கள் வரை ஆகலாம். கர்ப்பகாலத்தில் கூடுதலாக எடுத்துகொள்ளும் உணவு கொழுப்பு வடிவில் மீண்டும் சேமிக்கப்படுகிறது. அதனால் தான் தொப்பை கொழுப்பு பிடிவாதமாக கரையாமல் எடை குறைப்பதில் சிக்கல் நேரிடுகிறது. இந்த கொழுப்பை குறைக்க சரியான நேரமும் கவனிப்பும் அவசியமாகிறது.

    பிரசவத்துக்கு பிறகு வயிற்றை பலூன் போல நினைத்து பாருங்கள். குழந்தை வளரும் போது, உங்கள் வயிறு மெதுவாக விரிவடைகிறது. இப்போது குழந்தை வெளியே வரும் போது பலூன் சட்டென்று சுருங்காது. அதில் உள்ள காற்று மெதுவாக வெளியேறுகிறது. நீங்கள் கவனித்திருந்தால் பலூன்கள் சுருங்கி, காற்றின் பெரும்பகுதி வெளியேறும் போது சிறிது காற்றை தாங்கும். அந்த காற்றை வெளியேற்ற முயற்சிக்க செய்தாலே தொப்பை இல்லாமல் செய்யலாம்.

    பிரசவத்துக்கு பிறகு தாயின் வயிறு பழைய நிலைக்கு திரும்புவது சட்டென்று நடந்துவிடுவதில்லை என்பதால் முதலில் இது குறித்து கவலை கொள்ளாதீர்கள். சிலருக்கு ஒரு மாதத்தில் வயிறு பழைய நிலைக்கு திரும்பலாம்.

    எளிமையாக குறிப்புகள்

    * பிரசவத்துக்கு பிறகு மட்டுமல்ல பொதுவாக உடற்பயிற்சியின் எளிமையான பயிற்சி நடைபயிற்சி தான். ஒரே நேரத்தில் இல்லை என்றாலும் இது உடல்வலி, தலைவலி போன்றவற்றிலிருந்து மீண்டு வரும் பொது நன்மை அளிக்கும்.

    * உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற மெலிந்த புரதம், மசாலா, க்ரீன் டீ போன்றவற்றை எடுத்துவரலாம். நச்சு நீங்கினால் உடல் எடை பழைய நிலைக்கு திரும்பும்.

    * நீங்கள் செய்யும் எளிமையான மூச்சு பயிற்சி காற்றை இழுத்து உங்கள் வயிற்றில் வைத்திருக்கும் சுவாச பயிற்சியாகும். இது வழக்கமாக தாள சுருக்கங்கள் உங்கள் வயிற்றை தொனிக்க உதவுகிறது.

    * உடல் எடை இழப்புக்கான பாடி ரேப்களை போலவே தொப்பை அல்லது மகப்பேறு பெல்ட்களும் உங்கள் வயிற்றை இழுத்து கருப்பை அதன் அசல் அளவுக்கு சுருங்க உதவும். இது நம் முன்னோர் கால வயிற்றில் துணி கட்டும் முறைதான். தொப்பை குறைய பயன்படுத்தப்படும் பழமையான வழி இது.

    * உடல் எடை குறைக்கும் போது மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிற்றை குறிவைத்து வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் மசாஜ் செய்யுங்கள்.

    • முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது.
    • நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமை வலிய அம்மாவிற்கு மட்டும் உண்டு.

    குழந்தைப்பேறு வேண்டுபவர்களின் மனக்குறையைப் போக்கிக் குழந்தைப்பேறு அளிக்கும் நாகராஜர் கோயில், கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகில் மன்னார்சாலை என்ற அமைந்திருக்கிறது.

    தல வரலாறு

    மன்னார்சாலையில் வசித்து வந்த அந்தணர் குடும்பத்துப பெண்ணிற்கு திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் கவலையடைந்த அந்த பெண் பரசுராமரை வேண்டி தனக்கு குழந்தைவரம் அளிக்குமாறு வேண்டினாள். மகாவிஷ்ணுவின் தோற்றமாக கருதப்படும் பரசுராமர் அந்த பெண்ணிடம், "பெண்ணே, சிவபெருமான் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருக்கும் பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி வந்தால் உனக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்" என்று அருளினார்.

    அந்த பெண்ணும் பரசுராமர் சொன்னபடி பாம்புகளின் தலைவரான வாசுகியை வணங்கி தனக்கு குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டி வந்தார். அவரின் தொடர் வேண்டுதலின் பலனாக வாசுகி அவர் முன்பு தோன்றி, "பெண்ணே, உன் தொடர் வேண்டுதலால் மகிழ்ந்தேன். உனக்கு முதல் குழந்தையாக ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பு ஒன்று பிறக்கும்.

    அதன் பிறகு, இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்றும் பிறக்கும். முதல் குழந்தையாக பிறக்கும் அந்த பாம்பிற்கு மரணம் என்பதே கிடையாது. இந்த உலகம் இருக்கும்வரை அந்த பாம்பும் உயிருடன் இருந்து உன்னையும், உன் மரபு வழியினரையும் பாதுகாக்கும்" என்று அருளினார்.

    வாசுகி அருளியபடி அந்த பெண்ணிற்கு முதலில் ஐந்து தலைகள் கொண்ட நாகப்பாம்பும், அதன் பிறகு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. அந்த பெண் இரு குழந்தைகளையும் ஒன்று போல் கவனித்து வளர்த்து வந்தார். இரு குழந்தைகளும் பெரியவர்களாகினர். அந்த பெண் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். தன்னுடைய விருப்பத்தை முதலாவது மகனான நாகராஜனிடம் கூறினார்.

    அதைகேட்ட நாகராஜன், "தனக்கு இந்த மனித வாழ்க்கையில் ஈடுபாடில்லை, எனவே இந்த வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பப்படி தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    "மகனே, நீ என்னைவிட்டு தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நான் இருக்கும் வரை என் கண் முன்பாகவே இருக்க வேண்டும். நீ இந்த வீட்டின் நிலவறையில் இருந்து கொள். நான் அவ்வப்போது வந்து உன்னை பார்த்துக் கொள்கிறேன்" என்று வேண்டிக் கொண்டாள் தாய்.

    நாகராஜன் தாயிடம், "அம்மா, நான் தங்கள் விருப்பப்படி இந்த வீட்டின் நிலவறையில் போய் இருந்து கொள்கிறேன். நான் இந்த குடும்பத்தினரையும், அவர்களை தொடர்ந்து வரும் மரபு வழியினரையும் இந்த உலகம் இருக்கும் வரை காப்பாற்றுவேன். தாங்கள் விரும்பும் நேரத்தில் நிலவறைக்கு வந்து என்னை பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

    நாகராஜன் தன் தம்பியிடம், "தம்பி, நான் நிலவறைக்கு சென்ற பின்பு, அதற்கு அருகில் ஒரு கோயில் அமைத்து, கோயிலின் உள்ளே எனது உருவச்சிலை ஒன்றை அமைத்து, எல்லோரும் என்னை வணங்கி வாருங்கள். என்னை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்குவேன்" என்று சொல்லி வழிபாட்டு முறைகளையும் சொன்னார்.

    அதன் பிறகு அவர் நிலவறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார். நாகராஜனின் தம்பி நிலவறையின் அருகில் கோவில் அமைத்து, அதில் நாகராஜர் சிலையினையும் நிறுவினார். அன்றில் இருந்து இன்று வரை நாகராஜர் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலுக்கு அருகில் உள்ள நிலவறையில் நாகராஜர் இருந்து அருள்வதாக பக்தர்களிடம் நம்புகிறார்கள்.

    நாகராஜர் இருப்பதாகக் கருதப்படும் நிலவறைக்கு செல்லவும், நாகராஜருக்கு பூஜை செய்யும் உரிமையும் அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணியாக கருதப்படும் "வலிய அம்மா" என்பவருக்கு மட்டுமே இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை, சிவராத்திரிக்கு அடுத்த நாள், "வலிய அம்மா" நிலவறைக்கு சென்று நாகராஜனை வழிபடுவதாக சொல்கின்றனர்.

    பக்தர்களின் வழிபாடு, சிறப்பு வேண்டுதல்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கான மேற்பார்வை போன்றவைகளையும் இவரே கவனித்துக்கொள்கிறார். இக்கோயிலில் நாகராஜனுக்கு அடுத்து முக்கியத்துவம் உடையவராக "வலிய அம்மா" இருக்கிறார். "வலிய அம்மா" வின் மரணத்திற்கு பிறகு, அந்தக் குடும்பத்தின் மூத்த பெண்மணியாக இருப்பவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

    அந்த பெண் திருமண வாழ்க்கையில் இருந்தால், அவர் தனது குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி, "வலிய அம்மா" வாக பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    உறுளி கவிழ்த்தல்

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் உறுளி என்கிற நல்ல கனமுள்ள வட்ட வடிவிலான வெண்கலப் பாத்திரத்தினை இக்கோயிலின் பூஜைப்பணிகளை செய்யும் "வலிய அம்மா"விடம் கொடுத்து வேண்டிக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த உறுளிப் பாத்திரத்தை பூஜை செய்து அதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் கவிழ்த்து வைத்து விடுகிறார்.

    அந்த தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு, தங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வந்து வலிய அம்மாவை பார்த்து, வெள்ளியில் செய்யப்பட்ட ஒரு பாம்பு உருவத்தினைக் கொடுக்கின்றனர். வலிய அம்மா அந்த வெள்ளிப் பாம்பு உருவத்திற்கு பூஜை செய்து, தம்பதியர் முன்பு கொடுத்து கவிழ்த்து வைத்திருந்த உறுளி பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து வேண்டுதலை நிறைவு செய்து தம்பதியர்களுடன், குழந்தையையும் ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

    ஆயில்யம் நாள் வழிபாடுகள்

    நாகராஜா கோயில்கள் அனைத்திலும் புரட்டாசி மாதத்தில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுவது வழக்கம். மன்னார்சாலை நாகராஜா கோயிலிலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    இந்த வழிபாட்டில் திருவிதாங்கூர் மன்னர் கலந்து கொண்டு நாகராஜரை வழிபடுவதும் வழக்கமாக இருந்தது. ஒரு முறை மன்னர் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே, அவர் அடுத்து வந்த ஐப்பசி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திர நாளில் இக்கோயிலுக்கு வருகை தந்து, புரட்டாசி மாத ஆயில்ய நாள் சிறப்பு கொண்டாட்டங்களை போன்றே சிறப்பு வழிபாடுகளை செய்து வழிபட்டார். அதற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டார், இனி ஆண்டுதோறும் இரு ஆயில்ய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தும்படி வேண்டிக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி, ஐப்பசி என இரண்டு மாதங்களில் வரும் ஆயில்யம் நட்சத்திர நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்து கொண்டாடப்படுகிறது.

    சிறப்புகள்

    இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற பல்வேறு நாடுகளில் நாக வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கோயில்களில் மன்னார்சாலை நாகராஜா கோவில்தான் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது.

    கோயில் வளாகத்தில் முப்பது ஆயிரத்துக்கும் அதிகமான நாகதேவதைகளின் சிலைகள் இருக்கின்றன. இக்கோயிலில் குழந்தைப்பேறு வேண்டி செய்யப்படும் உறுளி வேண்டுதல் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமானதாக இருக்கிறது.

    அமைவிடம்

    கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஹரிப்பாடு எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்சாலை எனுமிடத்தில் கோயில் அமைந்திருக்கிறது.

    • நிசார் முகமது வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.
    • கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அம்மா பள்ளி தைக்கால் பகுதியில் வசிப்பவர் நிசார் முகமது. வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இவர் விவசாயத்திலும், கால்நடை வளர்ப்பிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று பிரசவித்திருந்தது.

    திடீரென, அந்த பசு நேற்று முன்தினம் ஒன்றின்பின் ஒன்றாக கிடாரி, காளை என 2 கன்றுகளை ஈன்றது.

    இதனை கண்ட நிசார் முகமது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும், இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் பசுவையும், 2 கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • டாக்டர் நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு தனது கணவரை அழைத்து கொண்டு சிகிச்சை பெற சென்றார்.

    அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர், நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த பெண் சிறுநீர் சேகரிப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த கழிவறைக்கு சென்றார்.

    அப்போது கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவமாகி உள்ளது. கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது. வயிற்று வலிக்காக சிகிச்சை பெற அழைத்து வந்த தனது மனைவி, குழந்தை பெற்ற சம்பவம் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த கணவரை அதிர்ச்சியடைய செய்தது.

    கழிவறையில் பிரசவித்தது குறித்து அந்த பெண்ணிடம் டாக்டர்கள் கேட்டனர். அப்போது, தான் கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.

    இதையடுத்து அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறந்த குழந்தைக்கு தொற்று ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டி இருப்பதால் கூடுதல் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    ஆனால் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சாவக் காட்டில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    • 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம்.

    திருப்பதி:

    சதீஷ்கர் மாநிலம் பிஜப்பூர், உசூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேவா. இவரது மனைவி போஜ்ஜா.போஜ்ஜாவுக்கு ஏற்கனவே 4 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    தேவா தனது மனைவியுடன் ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

    மீண்டும் கர்ப்பமான போஜ்ஜா பிரசவத்திற்காக கடந்த 2-ந் தேதி பத்ராசலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போஜ்ஜாவுக்கு இது 8-வது பிரசவம் ஆகும்.

    அங்கு போஜ்ஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ஹீமோகுளோபின் அளவு 5.1 கிராம் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் போஜ்ஜா வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் சுகப்பிரசவத்தில் போஜ்ஜாவுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தேவாவுக்கு 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போஜ்ஜாவுக்கு ஏற்கனவே பிரசவம் பார்த்த டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    • யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
    • உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.

    *இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.

    *ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.

    *இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.

    *ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

    *மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    கவனிக்க வேண்டியவை...

    * யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    * அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

    *போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.

    *பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

    *சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.

    *சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.

    *தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

    நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
    குழந்தைகள் மற்றும் தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப கட்டுப்பாடு, கல்வி அறிவு, திருமண வயது, நல வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்) மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு கட்டங்களாக கள ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் போக்கு நிலவுவதை கள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனாக உள்ளனர்.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், இந்த விகிதம் 900-க்கும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறக்கும் பாலின விகிதம் கொண்ட ஒரே மாநிலமாக திரிபுரா உருவெடுத்துள்ளது.

    2015-16-ம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த பதின்ம வயது கர்ப்பம் 43 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது குழந்தை திருமண விகிதம் 26.8 சதவீதமாக இருந்தது. தற்போது 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதி கொண்ட இடங்களில் நடக்கும் பிரசவம் 2015-16-ல் 78.9 சதவீதமாக இருந்தது. தற்போது 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சிசேரியன் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவம் 47.4 சதவீதமாகும். அரசு மருத்துவமனைகளில் 14.3 சதவீதம் சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை (வயதுக்கு ஏற்ப உயரம்) சற்று குறைந்துள்ளது. 2015-16-ல் 38.4 சதவீதத்தில் இருந்து சமீபத்திய கணக்கெடுப்பில் 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ அதிகமான பெண்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். இது 38.4 சதவீதத்தில் இருந்து 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு கியாஸ் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதம் 43.8 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    ×