என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband and wife"

    • அனிதா மற்றும் அவரின் 5, 4 மற்றும் 3 வயதுடைய மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
    • நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனிதா (27) என்ற பெண் தனது கணவர் முன்சுன் கெவாட் மற்றும் 5, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகள்களுடன் டெல்லியில் வசித்து வந்தார்.

    முன்சுன் கெவாட் ஆசாத்பூர் மண்டியில் காய்கறி வியாபாரியாகப் பணியாற்றி வந்தார். அனிதா 2 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை 8:07 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரின் 3 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

    நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்திற்குப் பிறகு பெண்ணின் கணவரான முன்சுன் கெவாட் தலைமறைவாகியுள்ளார். அவரே இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

    கொலை செய்வதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கணவர் மது அருந்தச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆண் குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் புலனாகி உள்ளது.

    கொலை வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான முன்சுன் கெவாட்டை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு போன் செய்துள்ளார்.
    • முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது.

    மஹக் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14, சனிக்கிழமை அன்று தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசாரிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் பிப்ரவரி 15 ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

    அன்று மாலை 7 மணி அளவில் இருவரும் மீண்டும் குருகிராமிற்கு காரில் புறப்பட்டுள்ளனர்.

    ஆனால், வழியில் ஜஜ்ஜார் அருகே உள்ள பசோளர் கிராமத்தின் அருகே ஒரு ஒதுக்குப்புறமான பாதையில் சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டதாக அன்ஷுல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    அன்ஷுல் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.

    தீவிர விசாரணைக்குப் பிறகு அன்ஷுல் தானே மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அன்றைய தினம் காரில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதலில் கழுத்தை நெரித்தும், பின்னர் கத்தரிக்கோலால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக  தெரிவித்துள்ளார்.

    தடயங்கள் சிக்காமல் இருக்க கையுறைகளை அணிந்து இக்கொலையைச் செய்துள்ளார். காவல்துறையினர் அன்ஷுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டின் முற்றத்தில் இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அவனது சிரிப்பால் இந்த வீடு இறைவனின் ஆசிபெற்ற இடமாக இருந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் தார்தேயி என்ற கிராமம் உள்ளது.

    48 வயது கட்டிடத் தொழிலாளியான கிருஷ்ண பட்டேல் அனைத்து மனைவி ரமா பாய் மற்றும் 21 வயதான ஒரே மகன் ஆதித்யா பட்டேல் உடன் இங்கு வசித்து வந்தார்.

    கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஆதித்யா துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

    மகனின் மறைவுக்குப் பிறகு அந்தத் தம்பதியினர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை, கிருஷ்ண பட்டேல் - ரமா பாய் தம்பதியினர் தங்கள் வீட்டின் முற்றத்தில் இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர்கள் நான்கு பக்கக் கடிதத்தையும், ஒரு வீடியோ செய்தியையும் விட்டுச் சென்றுள்ளனர்.

    அதில், "எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமும், உலகமுமாக இருந்தவன் ஆதித்யா. அவன் ஒரு நல்ல மகன் மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பனும் கூட.

    அவனது சிரிப்பால் இந்த வீடு இறைவனின் ஆசிபெற்ற இடமாக இருந்தது. ஆனால், அந்த விபத்திற்குப் பிறகு இந்த வீடு நிசப்தமாகி விட்டது. அவன் எங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டான். அவனில்லாமல் எங்களால் வாழ முடியவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

    தமபதியின் தற்கொலையால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காவல்துறையினர் சம்பவம் க்ருய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
    • அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.  

    நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.

    ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.

    கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.

    • கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை.
    • அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் தற்கொலை செய்து கொண்டார்.

    கர்நாடக மாநிலம் தாவநகரே மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 2 மாதங்களுக்கு முன் ஹரிஷ் (30) என்பவரை மணந்தார்.

    கடந்த 23 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை. புகாரின் பேரின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது தெரியவந்தது.

    இதை அறிந்ததும், கணவர் ஹரிஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். ஹரிஷின் மரணச் செய்தியைத் தாங்க முடியாமல், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் (36) தற்கொலை செய்து கொண்டார். ருத்ரேஷ் சரஸ்வதியின் தாய்மாமன்.

    காவல்துறை விசாரணையில், சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. சரஸ்வதி மற்றும் அவரது காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.  

    • விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
    • அவர்களில் ஒருவர் 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், லாரன்ஸ்வில் பகுதியில் நடந்த குடும்பத் தகராறில், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் தனது மனைவி மீமூ டோக்ரா (43) மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தவர் 51 வயதான விஜய் குமார்.

    கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

    அங்கு வைத்தும் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, உறவினர்களான கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

    துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் வீட்டில் விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.

    அவர்களில் ஒரு குழந்தை 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்து விஜய் குமாரை கைது செய்தனர். குழந்தைகள் மூவரும் காயமின்றி தப்பினர்.

    அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளது. 

    • பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
    • கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் பொய்யானவை.

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிலுவுரு கிராமத்தை சேர்ந்தவர் லோகம் சிவநாகராஜு.

    சிவநாகராஜுவின் மனைவி லட்சுமி மாதுரி, கோபி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

    இதற்கு தடையாக இருந்த கணவனை கொல்ல திட்டமிட்ட மாதுரி கடந்த ஜனவரி 18 இரவு உணவாகப் பிரியாணியைத் தயார் செய்து, அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடித்துக் கலந்து தனது கணவருக்குக் கொடுத்துள்ளார்.

    பிரியாணி சாப்பிட்ட சிவநாகராஜு மயக்கமடைந்ததும், மாதுரி தனது காதலன் கோபியை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

    இருவரும் சேர்ந்து தலையணையால் சிவநாகராஜுவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.

    கொலையைச் செய்த பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் மாதுரி நாடகமாடியுள்ளார்.

    சிவநாகராஜுவின் உடலில் காயங்கள் மற்றும் இரத்தக் கறைகளைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீசில் புகார் அளித்தனர்.

    பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறச் செய்து கொல்லப்பட்டது உறுதியானது.

    கொலைக்குப் பிறகு மாதுரி சடலத்தின் அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாக வெளியான சில செய்திகள் வெளியான நிலையில் அவற்றை மாவட்ட எஸ்.பி மறுத்துள்ளார்.

    மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது காதலன் கோபி ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

    • கடந்த 2023-ம் ஆண்டு, ரச்சனாவின் கண் முன்னாலேயே அவரின் கணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • ரச்சனா யாதவ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர் ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.

    டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா யாதவ். இவர் ஷாலிமார் பாக் நலச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2023-ம் ஆண்டு, ரச்சனாவின் கணவர் விஜயேந்திர யாதவ், ரச்சனா கண் முன்னாலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ரச்சனா தான் முக்கிய சாட்சி ஆவார்.

    இந்த வழக்கில் 5 பேர் மீது குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர். 

    இந்நிலையில் நேற்று காலை ஷாலிமார் பாக் பகுதியில், ரச்சனா யாதவ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர்  ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். ரச்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    கணவர் கொலை வழக்கில் ரச்சனா சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காகவே, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளே இவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் பைக்கில் வந்த இருவர் சுட்டுவிட்டுத் தப்புவது பதிவாகியுள்ளது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

    • தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
    • சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பிரிந்து வாழும் கணவர் ஒருவர், தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 312-ன் கீழ் அந்தப் பெண் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

    இது தொடர்பாக அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தச் சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபோது, அவரை அதற்காகக் கட்டாயப்படுத்துவது அவரது உடல் மீதான உரிமையை பறிப்பதாகும்.

    இது பெண்ணை மன ரீதியான பாதிக்கும். மற்றவர்களின் உதவியின்றி குழந்தையைத் தனியாக வளர்க்கும் பொறுப்பு பெண்ணின் மீதே விழுகிறது. சட்டபூர்வமாக செய்யும் கருக்கலைப்பு குற்றமாகாது. 

    எனவே, கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணிற்கே உண்டு" என தெரிவித்து அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
    • திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் முகேஷ் ஜா என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் ஜாவும் அனிதாவும் ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில காலத்திலேயே அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

    அனிதா தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.

    தங்களது திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.

    அன்று இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற அனிதாவை வழிமறித்த முகேஷ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தலைமறைவான முகேஷை, நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அவர் போலீசாரைச் சுட முயன்றபோது, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

    • 1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
    • உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல் விசாரித்தார்.

    கருக்கலைப்புக்கு பெண்ணின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே போதுமானது என்றும் கணவனின் சம்மதமம் தேவையில்லை எனவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது 16 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    தனது கணவருடனான உறவு சரியில்லை என்றும், அவர் பிரிந்து வாழ்வதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல், "1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில்  , கருக்கலைப்புக்கு கணவனின் சம்மதம் தேவை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    தனது கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்று தீர்மானிக்க திருமணமான பெண்ணே மிகச்சிறந்த நீதிபதி. அவருடைய விருப்பம் மற்றும் சம்மதம் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்" என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    அந்தப் பெண் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அளவுக்கு உடல் ரீதியாகத் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு கருக்கலைப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

    • தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.
    • தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மறைக்கப்பட்டன.

    கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் மீது வரதட்சணை கொடுமை புகார் சுமத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் தேவேந்திர கெலாட் கடந்த 2018 இல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார்.

    திவ்யா அளித்த புகாரில், தனது மாமனார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கோரியதாகவும், தன்னை மீண்டும் மீண்டும் உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். பணம் கொண்டுவரவில்லை என்றால் உணவு கிடையாது என கூறி சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார். 

    கடந்த 2025, ஜனவரி 26 அன்று மதுபோதையில் இருந்த தனது கணவர் தன்னைத் தாக்கி, வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறியுள்ளார்.

    திருமணத்திற்கு முன்பே, தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்கள் தன்னிடம் மறைக்கப்பட்டதாக திவ்யா தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது மகளை பார்க்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் மத்திய பிரதேச போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதேந்திரா கெலாட், "யாராலும் எவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்" என்று கூறி, விரைவில் உண்மைகளை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார். 

    ×