என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவாகரத்து"

    • தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
    • வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.

    மும்பை:

    குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டல் விடுத்தார். எனவே மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்தேன். ஆனால் எனது மனுவை குடும்ப நலக்கோர்ட்டு நிராகரித்து விட்டது.

    இந்து திருமண சட்டத்தின்படி பிரிந்து செல்வது, சந்தேகம், மிரட்டல், தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதன் அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் மனைவியிடம் இருந்து கணவருக்கு அதிரடியாக விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு அல்லது சமரசம் ஏற்பட எந்த சாத்தியமும் இல்லை.

    மனுதாரர் தனக்கு நேர்ந்த பல கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடும்நல கோர்ட்டு அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

    குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்ரவதை செய்வதற்கு சமமாகும். இதை சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    வார்த்தைகள், சைகைகள் அல்லது அசைவுகள் மூலம் இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, துணைவரால் அமைதியான சூழலில் திருமண உறவில் தொடர முடியாது. அத்தகைய திருமண உறவை தொடர வலியுறுத்துவது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்க கூறுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 2 வீடுகளின் உரிமையை அந்த பெண்ணுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
    • மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.

    மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார்.

    தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.

    இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார். 

    தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.

    ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார்.

    இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.

    "2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று மீரா வாசுதேவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. 

    • தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
    • மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.

    தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.

    திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது
    • நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    விவாகரத்து வழக்குகளில் நிரந்தர ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் வழக்கறிஞர் ஒருவருக்கும் குரூப்-ஏ இந்திய ரயில்வே அதிகாரியாக பணியாற்றும் பெண்ணுக்கும் கடந்த 2010 இல் நடந்த திருமணம் 14 மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக முறிந்தது.

    தனது மனைவி தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கூறி கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அதை மறுத்தார்.

    இதை விசாரித்த குடும்ப நீதிமன்றம், கணவரின் வாதங்களுடன் உடன்பட்டு விவாகரத்து வழங்கியது. இருப்பினும், நிரந்தர ஜீவனாம்சம் கோரிய மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனைவி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

    விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள மனைவி ரூ. 50 லட்சம் கோரியதும் தெரியவந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், "உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்கள் மட்டுமே பராமரிப்பு கோர வேண்டும். இந்த வழக்கில், மேல்முறையீட்டாளர் (மனைவி) நிதி ரீதியாக நிலையானவர்.

    அவர்கள் குறுகிய காலம் தான் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, குடும்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.  

    • சாஹல், தனஸ்ரீ தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர்.
    • சாஹல், தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

    இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.

    இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், தனஸ்ரீ குற்றச்சாட்டு குறித்து பேசிய சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரன். நான் ஏமாற்றவில்லை. நான் ஏமாற்றியதை நீங்கள் 2 ஆவது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக்கு, இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. நான் இதனை கடந்து முன்னேறி செல்கிறேன். நான் மீண்டும் இதை பற்றிப் பேச விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையிலும் என் விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • மனைவிக்கு 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
    • தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை இளைஞரும் அவரது தாயும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மனைவியை விவாகரத்து செய்ததோடு, மனைவி கொண்டு வந்த 120 கிராம் தங்க நகை, ரூ.18 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.

    புதிய வாழ்க்கையை தொடங்கும் விதமாக அவரின் தாய், மகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது துணி வாங்கிக்கொடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

    மேலும், விவாகரத்துக்குப்பின் தான் சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் இந்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

    இவரது இந்த செயலுக்கு கமென்ட்ஸில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவியை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

    வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.

    இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மம்தா தனது மகளுடன் தனியா வாடகை அறையில் வசித்து வந்தார்.
    • ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் விஸ்வகர்மா பின்தொடர்ந்து சென்றார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் கணவர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றார்.

    கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர் கஜ்னியைச் சேர்ந்த மம்தா சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் விஸ்வகர்மா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.

    குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இந்த தம்பதியினர் ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு 13 வயது மகள் உள்ளார். கணவன்-மனைவி இவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மம்தா தனது மகளுடன் தனியா வாடகை அறையில் வசித்து வந்தார். 

    இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று, ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் விஸ்வகர்மா பின்தொடர்ந்து சென்றார்.

    மம்தா ஸ்டுடியோவுக்குள் சென்று வெளியே வந்ததும் அவரை வழிமறித்து விஸ்வகர்மா வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார். அங்கிருந்தவர்கள் மம்தாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 

    • மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.
    • மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது.

    சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர், தன் மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனுதாரர் தன் மனைவிக்கு ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.

    அவரது படிப்புக்கான செலவாக 2.77 லட்சம் ரூபாயை தர மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம் அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார் என மனுதாரர் தரப்பில், அது தொடர்பான சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார்.
    • விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்தது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஹன்சிகா தனது கணவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் உள்ள தனது அம்மாவுடன் ஹன்சிகா வசித்து வருகிறார். கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சனைதான் இதற்கு காரணம் என்று பேசப்படுகிறது.

    ஹன்சிகா விரைவில் விவாகரத்து முடிவை நாட இருப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் இதனை சோஹைல் கட்டாரியா மறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் இந்த விவகாரத்தில் ஹன்சிகா மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

    இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் உள்ள கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா அதிரடியாக நீக்கி இருக்கிறார். விவாகரத்து என்று பேசப்படும் நிலையில் அதற்கெல்லாம் தூபம் போடுவது போல ஹன்சிகாவின் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

    இதனால் ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்தார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,

    அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

    கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சாய்னா நேவால், "சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு அவர்கள் தூரமாக இருக்கும்போது தான் தெரிகிறது. மீண்டும் தங்களது உறவை கட்டமைக்க முயற்சிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.
    • போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.

    மனைவி விவாகரத்து செய்ததால் மிகவும் வருத்தமடைந்த ஒருவர், ஒரு மாதமாக எதையும் சாப்பிடாமல், பீர் மட்டுமே குடித்து உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தாய்லாந்தில் நடந்தது.

    44 வயதான தவீசக் தனது மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டார். அவர்களுக்கு பதினாறு வயது மகன் இருந்தான். மகனை தவீசக்கிடம் விட்டுவிட்டு அப்பெண் வெளியேறினார்.

    மனைவி தன்னை விட்டுச் சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தவீசக், சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். நாள் முழுவதும் பீர் குடித்துக்கொண்டிருந்தார்.

    இதனால் அவரது உறுப்புகள் செயலிழந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. ஒரு தொண்டு நிறுவனம் தவீசக்கை மருத்துவமனையில் சேர்க்க முயன்றது.

    இருப்பினும், தொண்டு நிறுவனங்கள் அவரது வீட்டை அடைவதற்குள் தவீசக் இறந்துவிட்டார். போலீசார் அவரது அறையில் 100 பீர் பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.

    அதிகப்படியான மது அருந்தியதால் அவர் இறந்ததாக போலீசார் முதற்கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    ×