என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cheating"
- டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
- டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.
தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.
கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.
இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.
செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.
வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.
வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.
ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.
மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
- ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
- நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.
சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு வகைகளில் நூதன மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சில நேரங்களில் பொதுமக்கள் ஏமாந்து பணத்தை இழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சரண்ஜீத் கவுர் செல்போன் வாட்ஸ்-அப்பில் 2 போலீஸ் அதிகாரிகளின் படத்துடன் ஒரு அழைப்பு வருகிறது. அதில் தொடர்பு கொண்ட நபர், தான் டெல்லி காவல் துறையில் இன்ஸ்பெக்டர் என கூறுகிறார். பின்னர் அவர் அமைச்சரின் மகனை மிரட்டிய புகாரில் உங்களது சகோதரியை கைது செய்வதுள்ளதாக கூறி சரண்ஜீத் கவுரின் படத்தை அவரிடமே காட்டுகின்றனர். மேலும் நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.
இதை கேட்டு ஆவேசம் அடைந்த சரண்ஜீத் கவுர், என்னை கைது செய்ததாக என்னிடமே கூறி போலீஸ் அதிகாரிகளாக நடித்து பணம் பறிக்க முயன்றதை அம்பலப்படுத்திய காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுடன் அவரது பதிவில் இதுபோன்ற மோசடிகளை பற்றி எனக்கு தெரியும். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் என்னை காப்பாற்றி கொண்டேன். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதனால் நீங்களும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.
- நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
- கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம்:
சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.
அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது.
- போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன். இவரது மனைவி நந்தினி தேவி. இவர் திண்டுக்கல் மதுரை-சாலை அண்ணாமலை மில்ஸ் ரோட்டில் எஸ்.ஆர். நகரில் உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தில் மகளிர் குழு லோனுக்காக கடந்த 8 வருடத்திற்கு முன்பு அணுகியுள்ளார்.
அப்போது மகளிர் குழு லோன் மற்றும் வீடு கட்ட லோன் தருகிறோம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் சுமார் ரூ.40 லட்சம் வரை பொதுமக்களிடம் வசூல் செய்து அந்த நிறுவனத்தில் கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் 2 வருடமாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளனர். அவர்களுடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த நிறுவனத்திற்கு சென்ற போது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மகளிர் குழு லோன் வாங்கி தருவதாக மோசடி செய்த கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல்,தேனி ஆகிய பகுதிகளில் எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனம் நடத்தியதும், இதே போல் பல பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.சத்திய பிரியா, போலீஸ் சூப்பிரண்டு பி.சி.கல்யாண் ஆகியோரின் உத்தரவு படியும், டி.எஸ்.பி. குப்புசாமி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் செல்போன் டவரை வைத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சென்னை குரோம்பேட்டை அருகே செல்வராஜ் பதுங்கி உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி கூறுகையில்,
திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் எர்த் ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்றார்.
- சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார்.
- யூடியூப்பர் 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் 'தமிழ் உங்களில் ஒருவன்' என்ற யூடியூப் சேனலை அடிக்கடி பார்ப்பது வழக்கம். இதையடுத்து அந்த யூடியூப் சேனலைஅதை நடத்தி வரும் தமிழழகன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 வருடங்களாக தமிழழகனும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். தமிழழகன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் விவகாரம் வீட்டில் தெரிந்து விட்டதாகவும் தங்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதனால் சற்று விலகி இருக்குமாறும், பிரச்சனை முடிந்தவுடன் வீட்டில் பேசி உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறி அந்த இளம்பெண்ணை சமாதானப்படுத்தி உள்ளார்.
ஒரு கட்டத்தில் தமிழழகன் சொல்வது பொய் என தெரிந்த அந்த பெண் தமிழழகனிடம் கேட்டபோது அவரை அழைத்து சென்று மீண்டும் உல்லாசமாக இருந்து விட்டு இனி தான் சொல்லும் வரை என்னை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தமிழழகனிடம் கேட்டுள்ளார். ஆனால் திருமணத்துக்கு தமிழழகன் மறுத்து உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகப்பேர் பகுதியை சேர்ந்த யூடியூப்பர் தமிழழகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தமிழழகன் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து யூடியூப்பர் தமிழழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யூடியூப்பில் பெண்ணுரிமை, பெண்களின் நன்மை, பெண்களை அழ வைக்கக் கூடாது, பெண் பாவம் பொல்லாதது என்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்த யூடியூப்பர், 2 வருடங்களாக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
- பெண்களை மீண்டும் விண்ணப்பிக்க சொல்வது ஏமாற்று வேலை என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
- பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேலக்கால் கச்சராயிருப்பு, தென்கரை ஆகிய பகுதிகளில் இளைஞர் பாசறை உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவோம் என்று கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் சொல்லப்படுகிறது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்க ளில் ஏறத்தாழ 60 லட்சம் அரசின் சார்பிலே தள்ளு படி செய்யப்பட்டிருக்கிறது.
தகுதி இல்லை என்கிற காரணத்தினால் தள்ளுபடி செய்திருப்பது பெண்களுடைய வேத னையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது. தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும் முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.
பொதுவாக ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால் அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம்.ஏற்கனவே அரசு தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிப்பு செய்கிறது. இன்றைக்கு ஒரு கோடி ரூ.20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, 2 கோடி 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க. அரசு வழங்க முடியும்.
தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஒரு கோடி பேருக்கு தான் வழங்குவோம் என்று ஏன் கூறவில்லை? தற்போது முதலமைச்சர் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமை தொகை திட்டத்தை வழங்கி உள்ளோம் என்று கூறி யுள்ளார். ஆனால் இதில் 50 சதவீத மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது முழுமையாக வழங்கப் பட்டது என்று முதலமைச்சர் கூறினால் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட தயாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- திரும்பி வந்த கணவர் வாழ அழைத்த போது தாக்குதல் நடத்தினர்.
- இளம்பெண்ணின் கணவர் 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு இளம்பெண்ணின் கணவர் அவருக்கு திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்தார். இது குறித்து மாணவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
தனியாக குழந்தைகளுடன் வசித்த இளம்பெண்ணுக்கு அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் ஜெயிலில் இருந்ததால் இளம்பெண் வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். கள்ளக்காதலனும் அவரை அனுப்பி வைக்கவில்லை.
சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் அவரது மனைவியின் கள்ளக்காதலன் நடத்தி வரும் செல்போன் கடைக்கு சென்றார். அங்கு இருந்த வாலிபரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார்சைக்கிள் சாவியை எடுத்து இளம்பெண்ணின் கணவரின் வலது கை, தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்போன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
- போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின் ஐ.டி.யில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.
பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்பு கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் மூர்த்தி தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5-ந்தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில், போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரஷீதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கி உள்ளார். சொகுசு கார், மோட்டார்சைக்கிளில் பியூட்டியாக போஸ் கொடுத்து அவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும், அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.
ரஷீதாவுடன் பழகியதும் மூர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் பணத்தை அவருக்கு வாரி வழங்கி உள்ளார். பணத்தை சுருட்டிக் கொண்டு ரஷீதா ஓட்டம் பிடித்து விட்டார்.
இதற்கிடையே கடந்த மாதம் 20-ந்தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், எது கணவர் சத்ய கணேஷ், ரஷீதாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்கிறார் என கூறியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது.
பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த ரஷீதா, இதுவரை 8 திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமான ரஷீதாவின் போன் சுவிட்ச்-ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் ? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்யாண மன்னன்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக கல்யாண ராணிகளின் அட்ட காசம் அதிகரித்து வருகிறது. 8 கல்யா ணம் செய்துநகை, பணத்துடன் இன்ஸ்டா கிராம் அழகி தலைமறைவாகி உள்ளார்.
இதுகுறித்து தொளசம்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்கவில்லை என கூறியுள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம். புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்.ஐ. ஆர். பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளி ப்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் உள்பட 6 ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து பணம், நகை என அனைத்தையும் திருடிஏமாற்றினார் குறிப்பிடத்தக்கது.
அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆண்கள் திருமணம் செய்து மோசடி செய்த காலம் போய் ரஷிதா போன்ற கல்யாண ராணிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மோசடியில் இறங்கியிருப்பது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்க தொடங்கி உள்ளது. கல்யாணம் செய்பெது கொடுக்கும்வரை பெண்ணை பெற்ற பெற்றோர் மட்டுமல்ல ஆண்பி ள்ளைகளை பெற்றவர்களும் அலாட் ஆக இருக்கணும்போல....
- அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர்.
- விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே வள்ளுவர் நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அந்த 2 பெண்களும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஜோதி (வயது40), நடராஜன் ஆகிய 2 பேரும் சேர்ந்து வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதியமான்கோட்டை போலீசார் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களையும் மீட்டனர். அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் ஜோதியை கைது செய்தனர். நடராஜன் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- தினேஷ் குமார் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
- ஏமாற்றம் அடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
போரூர்:
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் 'சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்' என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார்.
இவர் பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார். இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் பெண்கள் பலர் சான்றிதழ்களுடன் அலுவலகத்தில் வேலை கேட்டு குவிந்தனர்.
அப்போது அவர்களிடம் முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலித்ததாக தெரிகிறது. அப்போது வேலை உறுதி ஆகிவிட்டது என்று ஆசை வார்த்தை கூறிய தினேஷ்குமார் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை வசூல் செய்ததாக தெரிகிறது.
ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணம் கட்டியவர்கள் வேலை குறித்து கேட்டபோது தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதற்கிடையே தினேஷ் குமார் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏமாற்றம் அடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் நடத்திய விசாரணையில் தினேஷ் குமார் கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 3 இடங்களில் அலுவலகம் நடத்தி வேலை தேடும் பட்டதாரிகளை குறி வைத்து நூதன முறையில் ரூ.17 லட்சம் வரை சுருட்டி தப்பியது தெரிந்தது. அதற்கு உடந்தையாக பெண் ஊழியர் ஈஸ்வரி என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் தினேஷ்குமார் அரும்பாக்கம் பகுதியில் வேறு ஒரு பெயரில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார் தினேஷ்குமார் மற்றும் ஈஸ்வரியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக சொகுசு வீடு கட்டி, கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு உள்ளது.
அவர் இதேபோல் மதுரவாயல், ஒரகடம், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் அலுவலகம் நடத்தி பல லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்து உள்ளது.
- ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது.
- திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
கடந்த வாரம் இவரது செல்போனிற்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் உங்களுடைய கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உங்கள் எண்ணிற்கு கமிஷன் தருவதாக கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து சேகர் தனது கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மெசேஜ் வந்த எண்ணிற்கு அனுப்பினார். அதைத்தொடர்ந்து சேகர் கூகுள்பே எண்ணிற்கு ரூ.150 வந்தது.
இதேபோல் சேகர் எண்ணிற்கு 3 எண்களில் இருந்து மெசேஜ் வந்தது. மெசேஜ் வந்த 3 எண்ணிற்கும் கூகுள் பே ஸ்கிரீன் ஷாட் அனுப்பினார்.
ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. இதனைக் கண்டு அதிர்ந்து போன சேகர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சேகர் எண்ணிற்கு மெசேஜ் வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது மதுரையை சேர்ந்தவர்கள் சேகர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் மதுரைக்கு சென்று பண மோசடியில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2. 63 லட்சத்தை பறிமுதல் செய்து சேகரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்