என் மலர்
நீங்கள் தேடியது "Case"
- மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
- சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
ஒயிட்பீல்டு:
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இளம்பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர் பேசினார்.
அப்போது உங்களது வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது, அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் எனக்கூறி மற்றொரு நபர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உங்களை கைது செய்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்மநபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.84½ லட்சத்தை இளம்பெண் அனுப்பி வைத்தார்.
மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பறித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இதுபற்றி ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
- போலீஸ் அதிகாரி என கூறியதோடு, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பெண்ணை மிரட்டி பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி என கூறியதோடு, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வேறு வேறு எண்களில் அந்த நபர் தொடர்பு கொண்டதால், அந்தப் பெண் பீதி அடைந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், அந்தப் பெண்ணை மிரட்டி பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி கோட்டயம் தலப்பாலம் பகுதியை சேர்ந்த ஆல்பின் ஜானி (வயது 34) என்பவரை கைது செய்தனர்.
- வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிந்தாமணி:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா முருகமலா பேரூராட்சி யாகவகேட் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி அஞ்சலி. இவர்களது மகன் யஷ்வந்த் (வயது 8). இவன் யாகவகேட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில், யஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றான். அங்கு ஆசிரியை சரஸ்வதம்மா யஷ்வந்தை குச்சியால் தாக்கி உள்ளார்.
இதில், குச்சி அவனது கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் யஷ்வந்தின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் கூறினான். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர் யஷ்வந்தை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பெற்றோர் யஷ்வந்துடன் அரசு பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.
அங்கு இதுகுறித்து ஆசிரியையிடம் கேட்டனர். அப்போது அவர் எந்தவித பதிலும் கூறவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த நடராஜ் தனது மனைவி அஞ்சலியுடன் பட்லஹள்ளி போலீஸ் நிலையத்தில் மகனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த நடராஜ், மனைவி, மகன் யஷ்வந்துடன் சேர்ந்து அரசு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்லஹள்ளி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணய்யா ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் போலீசாருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் கிருஷ்ணய்யா வலியுறுத்தினார். இந்தநிலையில், மாணவனை தாக்கியதாக சரஸ்வதம்மா மற்றும் அரசு ஆசிரியர் சங்க தலைவர் அசோக், ஆசிரியர்கள் நாராயணசாமி, ஸ்ரீராமரெட்டி, வெங்கடராமன ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி துறை அதிகாரி உமாதேவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- சூதாட்ட விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது வழக்குப் பதிவு.
- நடிகர் பிரகாஷ் ராஜ் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர், "ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு பற்றியும், நான் நடித்த விளம்பரம் பற்றியும் சர்ச்சை நிலவுகிறது. அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இப்போது பதில் சொல்ல வேண்டி உள்ளது. அந்த விளம்பரத்தில் நான் நடித்தது உண்மைதான். அது தவறு என்று சில மாதங்களிலேயே தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த விளம்பரத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் ஆகி இருந்ததால் இடையில் அவர்களை நிறுத்திவிடும்படி என்னால் கேட்க முடியவில்லை.
2017-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் சமூக வலைதளத்தில் எனது பழைய விளம்பரத்தை பயன்படுத்தினர். இதை எதிர்த்து நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதற்கிடையே தற்போது என் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. போலீசார் எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்," என்று அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது மதுபான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
- மற்றொரு அமைச்சரான சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது முதல் மந்திரியாக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது. அதுபோல் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே, ஆம் ஆத்மி ஆட்சியின்போது பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி நடந்தது தொடர்பாக, முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் ரூ.571 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் திட்டத்திற்காக லஞ்சம் பெற்றதாக சத்யேந்திர ஜெயின் மீது மற்றொரு ஊழல் வழக்கை டெல்லி அரசின் ஊழல் தடுப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை டெண்டர் எடுத்த நிறுவனம், உரிய காலத்திற்குள் அந்தப் பணிகளை முடிக்காததால் ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்வதற்காக ரூ.7 கோடியை சத்யேந்திர ஜெயின் லஞ்சமாக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2023, மே மாதம் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.வினர் மீது வழக்குகள் போடப்பட்டது.
- வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
பல்லடம் :
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் லோகநாதன், நகர பொருளாளர் குங்குமம் ரத்தினசாமி,முன்னாள் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மோகன்தாஸ் காந்தி, நகர பிரதிநிதி சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குகள் ேபாடப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
- அரசு பஸ்சுக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவனை ஒரு கும்பல் தாக்கியது.
- இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை சூலப்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேஷ் (வயது 16). இவர் எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் கடந்த 21-ம் தேதி அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பஸ்சில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாண்டித்து ரை என்பவர் பஸ்சில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தில் சுரேஷ், பாண்டித்துரைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சுரேஷ் சம்பவத்தன்று காலை அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சீல்நாயக்கன் பட்டி பஸ் நிறுத்தம் அருகில் 30 பேர் கும்பல் நடு ரோட்டில் நின்று பஸ்சை வழி மறித்தது. அவர்கள் பஸ்சில் புகுந்து சுரேசை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
சுரேசை சக மாணவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீல்நாயக்கன்பட்டி பரமன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உள்பட 29 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது.
- பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் வேட்டைக்காரன் (35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45) கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மாவட்டத்தில் 580 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கார் மற்றும் வாகனங்களில் திரளாக புறப்பட்டு செல்கின்றனர்.
இந்த வாகனங்கள் பெரும்பாலும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்கள் வழியாகவே செல்கின்றன.
இந்த நிலையில் தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசார் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும், போக்குவரத்து சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர டிரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை வழியாக ராமநாதபுரம் செல்லும் ஒரு சில வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் டிரோன் காமிரா ஆகியவற்றின் காட்சிப்பதிவுகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை மாநகரில் மட்டும் விதிமுறைகளை மீறியதாக 494 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகள் வழியாகவும் தேவர் குருபூஜைக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. எனவே அந்தப் பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட 2 போலீஸ் சரகங்களிலும் 96 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிலைமான், கருப்பாயூரணி போலீசார் அந்த வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 580 வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- விதி மீறிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மேலும் அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
உசிலம்பட்டி
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.மூர்த்தி தேவர் கட்சியை சேர்ந்த 19 பேர் விதிமுறை மீறி வாகனத்தின் மீது ஏறி உசிலம்பட்டி வழியாக மதுரை சென்றனர்.
இவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மேல் இருந்தவர்களை கீழே இறங்கி வாகனத்தில் செல்லுமாறும் வாகனத்தின் மேல் ஏறக்கூடாது எனவும் கூறினர்.
இதில் வாகனத்தில் வந்தவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் போலீசார் வாகனத்தில் வந்தவர்களை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்கள் மீது தேவர் ஜெயந்தி விழாவிற்கு விதிமுறை மீறி வாகனத்தில் வந்ததாகவும், போலீசாருடன் தகராறு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தொழிலாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சாதி பெயரைச் சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம்(வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வரும் கண்ணுசாமியின் மகன் பூபாலன் என்பவர் தண்ணீர் சென்று கொண்டிருந்த மடையை அடைத்துவிட்டு அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தொடங்கியுள்ளார். இது குறித்து பூபாலனிடம் காசிலிங்கம் கேட்டபோது, பூபாலன் சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, காசிலிங்கத்தை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காசிலிங்கம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தா.பழூர் போலீசில் காசிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.