search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money fraud"

    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
    • முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

    2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

    இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.

    எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

    • சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம்.
    • பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணத்தை தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி சமாதானப்படுத்தி கலெக்டரிடம் அழைத்துச் சென்றார்.

    கலெக்டர் சரயுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    அவரிடம் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் ரூபாய் என 13 கோடி ரூபாய்க்கு மேல் 305 நபர்கள் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர்.

    ஆனால் சீட்டு முடிந்தும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது தொடர்பாக போலீசிடம் புகார் செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு பணத்தை பெற்று தரவில்லை.

    பாதிக்கப்பட்ட 305 பேருக்கும் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    • தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் தினேஷ்குமார்.

    தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதிநேரம் வேலை இருப்பதாகவும், இதற்காக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

    இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த மெசேஜில் வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்து 21ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    அதன்பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார்.

    இதேபோல் கிருஷ்ணகிரி பவர்ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் அஜீன்குமார் (வயது27). இவரது செல்போனில் வந்த எஸ்.எம்.எஸில் வந்த குறுஞ்செய்தியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று வந்தது. அந்த லிங்க்கை கிளிக் செய்தபோது வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் அஜீன்குமார் ரூ.7லட்சத்து 35ஆயிரத்தை செலுத்தினார். பின்னர் அந்த மர்ம நபரின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜீன்குமார் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் புகார் தெரிவித்தார். இதேபோன்று ஓசூர் கே.சி.சி. நகரைச் சேர்ந்த ஷமீர் என்பவரின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்பட்டு மர்ம நபரின் வங்கி கணக்கில் ரூ.17 லட்சத்து 48 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை மர்ம நபர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மாவட்டத்தில் 3 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.38 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளியில் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் நடத்தி பொருட்கள் கொடுக்காமல் ஏமற்றியதாக தனியார் பைனான்ஸின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ராபர்ட் என்கின்ற ராஜன் மற்றும் அவரது சகோதரி வனிதா ஆகியோர் தனியார் பைனான்ஸ், தனியார் சிட்பண்ட்ஸ், தனியார் டிராவல்ஸ், தனியார் சிறு சேமிப்பு திட்டம், தனியார் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம், தனியார் சூப்பர் மார்கெட் என பல்வேறு நிறுவனங்களை போச்சம்பள்ளி தலைமையிடமாக கொண்டு நடத்தி வந்தனர்.

    தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கடந்த ஆண்டு சீட்டு நடத்தினார். அதில் நம்ப முடியாத வாக்குறுதிகளை அளித்து விளம்பரப்படுத்தினார். மாதம் ரூ.300 என ஒரு வருடத்திற்கு ரூ.3600 கட்டினால் சுமார் ரூ.9000 மதிப்புள்ள வீட்டு மளிகை பொருட்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தியிருந்தார். இதனை நம்பிய பொது மக்கள், இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவடங்களில் இருந்தும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த திட்டத்தில் பொது மக்கள் சேர்ந்தனர். பலர் ஏஜென்டுகளாக மாறி தங்களது கிராமத்தில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இந்த திட்டத்தில் இணைத்தனர்.

    இதனால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.9 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தற்போது தீபாவளி வந்தும் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு பதில் அளித்து வந்தனர்.

    தினமும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 100-க்கும் மேற்பட்டோர் பைனான்ஸ் நிறுவனம் முன்பு காத்திருந்து சென்ற நிலையில், பணத்தை ஏதாவது ஒரு வகையில் திருப்பி கொடுப்பார்கள் என எதிர்பாத்திருந்த பொது மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் இன்று தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் வனிதாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராபர்ட் என்கின்ற ராஜனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வனிதா கைது செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வரவே, போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அதிகளவில் திரண்ட பொதுமக்களை கட்டுப் படுத்த பர்கூர் சரகத்திற்கு உட்பட்ட பாரூர், நாகரசம்பட்டி, பர்கூர், பர்கூர் மகளிர், போச்சம் பள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட வனிதாவை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஒப்படைக்க அழைத்து செல்ல முயன்றபோது போலீஸ் வாகனத்தை தடுத்தனர். வாகனம் சென்ற பின்னர் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்காமல், மேலாளர் வனிதாவுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக குற்றம் சாட்டினர். அப்போது அங்கிருந்த பர்கூர் டி.எஸ்.பி. மனோகரன், அவர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவராக மனுக்களை அளிக்க கேட்டார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து வனிதாவை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர்கள் நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.

    இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி குறுந்தகவல் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் கூறும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றனர்.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.
    • அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளவர் சிவசங்கரன்.

    இவரது வீடு ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ளது. சிவசங்கரன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை அமலாக்கதுறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, நீங்கள் கடந்த 2 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

    அதற்கு சிவசங்கரன் எம்.எல்.ஏ. தாராளமாக விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

    அடுத்த சில நிமிடங்களில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு டிப்-டாப் உடையில் கம்பீரமான தோற்றத்தில் ஒருவர் வந்துள்ளார்.

    அந்த நபர் சிவசங்கரனிடம், போனில் பேசிய அமலாக்கதுறை அதிகாரி நான் தான் என கூறி வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சிவசங்கரன், அவரிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அந்த நபர் அடையாள அட்டையை கையில் கொண்டு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சிவசங்கரன் எம்.எல்.ஏ., உங்களின் உயர் அதிகாரிகளிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார்.

    அதற்கு அவர், உயர் அதிகாரிகள் பேசமாட்டார்கள் என தெரிவித்தார். இதனால் அந்த ஆசாமி மீது சிவசங்கரன் எம்.எல்.ஏ.வுக்கு சந்தேகம் எழுந்தது உடனே ரெட்டியார்பாளையம் போலீசுக்கும், அவரின் அலுவலக ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் போலீசாரும், சிவசங்கரன் எம்.எல்.ஏ.வின் அலுவலக ஊழியர்களும் வீட்டிற்கு வந்தனர். அதையடுத்து அந்த நபரிடம், போலீசாரும், ஊழியர்களும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    அதையடுத்து அவர்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்தனர். இதில் பயந்து போன அந்த நபர் தான் அமலாக்கத்துறை அதிகாரி இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

    பின்னர் அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவரிடம் வடக்குப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நபர், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் (வயது 35) என்பது தெரியவந்தது. வரதராஜன் ஆழ்வாரும், அவரது மனைவியும் வீட்டில் முறுக்கு, சோமாஸ் செய்து கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தது.

    அதாவது சிவசங்கர் எம்.எல்.ஏ. வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரில் உள்ள காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரத்திடம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லாஸ்பேட்டை சாந்தி நகரை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வைத்திய நாதனிடம் பணபரி வர்த்தனை மோசடி (மணி லாண்டரி) புகார் வந்ததாகவும் கூறி, அதனை மறைக்கவும் உயர் அதிகாரிகளை சரிகட்டவும் 2 எம்.எல்.ஏ.க்களிடம் தலா ரூ.1 லட்சம் லஞ்சம் தர பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் ஆகியோர் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனக்கூறி பணம் தர மறுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை அமலாக்கதுறை அதிகாரி என கூறி பேசியதும் தெரியவந்தது.

    போலீசின் பிடியில் சிக்கியுள்ள திருவொற்றியூரை சேர்ந்த வரதராஜன் ஆழ்வார் கூகுலில் எம்.எல்.ஏ., எம்.பி.களின் செல் நெம்பரை எடுத்து தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

    இதுபோல் திருமாவளவன் எம்.பி. உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.க்களை செல்போனில் தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி என்று பேசியதும் தெரிய வந்தது.

    அதோடு வரதராஜன் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தமிழக அமைச்சர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட ஏராளமான போட்டோக்கள் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதராஜன் ஆழ்வார் 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் புதுவைக்கு வந்து, உருளையன்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட்டில் வாடகைக்கு தங்கி இந்த மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    புதுவையில் இதுபோல் வேறு யாரிடமும் அமலாக்கதுறை அதிகாரி எனக்கூறி பணம் பறித்துள்ளாரா? இதில் அவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவசங்கர் எம்.எல்.ஏ. அளித்த புகாரின்பேரில் வரதராஜன் ஆழ்வார் மீது அரசு ஊழியர் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மூலக் கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (61). இவர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வந் தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெயர் முகவரி தெரியாத நபர் பணம் எடுத்து தருவதாக கூறியதையடுத்து கார்டை கொடுத்து பணம் ரூ.20,000 எடுத்து தருமாறு சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    அந்த நபர் கார்டை மெசினில் சொருகி விட்டு பணத்தை டைப் செய்ததாகவும், சுப்பிரமணியன் ரகசிய எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது பணம் வரவில்லை எனக் கூறி அந்த நபர் ஏற்கனவே வைத்திருந்த ஒரு போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டார். பின்பு சுப்பிரமணியன் அரண்மனை பகுதியில் இருந்தபோது அவரது செல் போனிற்கு ரூ.42,000 பணம் எடுத்திருப்பதாக குறுந்தக வல் வந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.

    • குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலுார்:

    காட்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 16 பேர், வேலுார் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

    அதில், குடியாத்தம் தாலுகா கமலாபுரத்தைச் சேர்ந்த சாம்ராஜ் (வயது 34) என்பவர் மத்திய, மாநில அரசின் பல்வேறு தொழில் முனைவோர் திட்டங்களின் கீழ் ரூ.50 லட்சம் வரை வங்கிக்கடன் பெற் றுத்தருவதாகவும், அதற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் கமிஷன் முன்கூட்டியே தரவேண்டும் என தெரிவித்தார்.

    அதை நம்பி 16 பேரும் கடந்த ஆண்டில் பல தவணைகளில் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் கொடுத்தோம். ஆனால், இதுவரை அவர் வங்கிக் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தவிட்டார். அதன்பேரில், குற்றப் பிரிவு டி.எஸ்.பி சாரதி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், வங்கிக்கடன் வாங்கித்த ருவதாக கூறி, சாம்ராஜ் ரூ. 29 லட்சத்து 66 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இந்நிலையில், சாம்ராஜ் தலைமறை வானார்.

    அவரை குற்றப்பிரிவு போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலை யில், பள்ளி கொண்டாவில் பதுங்கியிருந்த சாம்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    • பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் குறவன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா. இவர்களின் மகள் சந்தியா.

    இந்த நிலையில் சந்தியாவை நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வைத்து டாக்டராக்குவதற்கு சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ் டெய்லி, அமுது டெய்லி, மோனிகா, மார்க்டெய்லி ஆகிய 4 பேர் ரமேஷ் மற்றும் கல்பனாவிடம் ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து அவர்கள் 4 பேரிடம் கூகுள் பே மற்றும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாக வும் சுமார் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளனர்.

    அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர் சீட்டு வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை கேட்டபோது ரூ.40 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்து உள்ளனர்.

    மேலும் நிலுவையில் உள்ள சுமார் 15 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டனர்.

    இதுகுறித்து கல்பனா நேற்று 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளில் சம்சு மொய்தின் என்பவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் தங்கம், வெள்ளி பொருட்கள், திருமண சீர்வரிசை சாமான்கள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதன்படி ஏராளமானோர் ஏஜென்ட் மூலமாக செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் சீட்டு நிறுவனர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது.

    மேலும் அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தனியார் சீட்டு நிறுவனர் சம்சு மொய்தினை கைது செய்தனர்.

    இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் அவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க ப்படவில்லை.

    இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி -ஆரணி சாலையில் திடீரென குவிந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் தனியார் சீட்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கோஷமிட்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    மேலும் உயர் அதிகாரிகளிடம் கூறி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - ஆரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
    • இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அம்மன் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கலையரசன் (வயது29). இவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனில் வாஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையில் சிறிய முதலீடு செய்தால், அதிக சம்பளமும், அதிக கமிஷன் தொகையும் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை நம்பிய கலையரசன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டபோது, எதிர் முனையில் பேசிய மர்ம நபர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே அவர்கள் கூறிய வங்கி கணக்கில் கலையரசன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது மர்ம நபர்கள் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது மர்ம நபரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர். இதுகுறித்து கலையரசன் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் பத்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (39). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கும் முன்பு அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை தருவதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதனை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். அதன்பிறகு அவர் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதுகுறித்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து படித்த இளைஞர்களை குறிவைத்து இதேபோன்று ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபடும் மர்ம கும்பலை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுவதை தவிர்க்க இளைஞர்களுக்கு செல்போன் மூலம், ஒலி பெருக்கி மூலம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×