என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்"

    • புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
    • பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து அங்கு தற்காலிக பேராசிரியராக சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது அங்கு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன்(வயது 55) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சமீபத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

    இதனிடையே இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் புகார் அளித்தாா.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கீதா, டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திட நேற்று முன்தினம் துணை வேந்தர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி, டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)-பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
    • பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் தொடங்கியது. கவர்னர், சிறப்பு விருந்தினர், துணை வேந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40622 பேர் பட்டம் பெறுகின்றனர். 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டத்தை பெறுகின்றனர்.

    இந்நிலையில், மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புறக்கணித்துள்ளார்.

    • சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
    • 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.

    முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

    விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    • தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    • தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "செட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

    நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரிய ராகலாம். செட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும்.

    அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் செட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.

    இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.

    இந்நிலையில் 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

    இதனை தொடர்ந்து, செட் தேர்வு நடத்து வதற்கான விண்ணப்பங்களை பெற்று தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்த தேர்வில் கலந்துக்கொள்ள சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் இருந்து இன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அந்த அறிவிப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக உதவி பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முதன்முறையாக இந்த தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×