search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடம்பாக்கத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது
    X

    கோடம்பாக்கத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி- பெண் உள்பட 2 பேர் கைது

    • தினேஷ் குமார் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
    • ஏமாற்றம் அடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    போரூர்:

    சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் 'சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்' என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார்.

    இவர் பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார். இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் பெண்கள் பலர் சான்றிதழ்களுடன் அலுவலகத்தில் வேலை கேட்டு குவிந்தனர்.

    அப்போது அவர்களிடம் முன்பதிவு கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலித்ததாக தெரிகிறது. அப்போது வேலை உறுதி ஆகிவிட்டது என்று ஆசை வார்த்தை கூறிய தினேஷ்குமார் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை வசூல் செய்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணம் கட்டியவர்கள் வேலை குறித்து கேட்டபோது தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதற்கிடையே தினேஷ் குமார் திடீரென தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏமாற்றம் அடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் நடத்திய விசாரணையில் தினேஷ் குமார் கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 3 இடங்களில் அலுவலகம் நடத்தி வேலை தேடும் பட்டதாரிகளை குறி வைத்து நூதன முறையில் ரூ.17 லட்சம் வரை சுருட்டி தப்பியது தெரிந்தது. அதற்கு உடந்தையாக பெண் ஊழியர் ஈஸ்வரி என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    இந்த நிலையில் தினேஷ்குமார் அரும்பாக்கம் பகுதியில் வேறு ஒரு பெயரில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விரைந்து சென்ற போலீசார் தினேஷ்குமார் மற்றும் ஈஸ்வரியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக சொகுசு வீடு கட்டி, கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். ஏற்கனவே இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு உள்ளது.

    அவர் இதேபோல் மதுரவாயல், ஒரகடம், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் அலுவலகம் நடத்தி பல லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்து உள்ளது.

    Next Story
    ×