என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை பிறப்பு"
- சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
- கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவில் சுமார் 140 கோடி பேர் வசிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த கடந்த 1994-ம் ஆண்டு ஒரு குழந்தை கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து முதியோர் மக்கள் தொகை உயர்ந்தது. இது சமூக, பொருளாதார பிரச்சனைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஒரு குழந்தை கொள்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் தற்போது ஒரு குழந்தை முறைக்கு பழகி விட்டனர். இதனால் கடந்த ஆண்டு 10 கோடிக்கும் குறைவான குழந்தைகளே அங்கு பிறந்துள்ளன. இந்தநிலையில் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது கருத்தடை சாதனங்கள், மாத்திரைகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் 13 சதவீதம் வரி விதித்து உள்ளது.
- இத்தாலி மலைப்பகுதி கிராமத்தில் பிறந்நத பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த 1990-களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
பாக்லியாரா டெய் மார்சி ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது, தகவல்களின்படி 20-க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். இத்தாலியின் பல மலைக் கிராமங்களைப் போலவே, இங்கும் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், முதியவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
இந்நிலையில், லாராவின் பிறப்புச் செய்தி பரவியதும், அக்கம் பக்கத்து கிராமத்தினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் அந்தக் குழந்தையைப் பார்க்கவும், அக்குடும்பத்திற்கு வாழ்த்துச் சொல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தாலிய ஊடகங்கள் இக்குழந்தையை "மிராக்கிள் பேபி" என்று கொண்டாடுகின்றன. ஏனெனில், மக்கள் தொகை குறைந்து வரும் இத்தாலிய கிராமங்களுக்கு இது ஒரு புதிய உயிர்ச்சக்தியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
- தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
- நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் ரேகா கல்பெலியா (வயது55). இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்த வேலை இல்லாததால் குப்பை பொறுக்கி பிழைப்பை நடத்தி வருகிறார்.
தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். 5 குழந்தைகள் பிரசவித்த சில நாட்களிலேயே இறந்து போயுள்ளது. மீதி குழந்தைகள் இவர்களுடன் வசதித்து வருகின்றனர். இதில் 5 பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பிணியானார். நேற்று பிரசவ வலியில் துடித்த அவர் ஜாடோல் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 17-வது குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் ரேகா கல்பெலியா பிரசவத்திற்கு அனுமதித்த போது இவருக்கு 4-வது பிரசவம் என்று அவர்கள் டாக்டரிடம் கூறியுள்ளனர். ஏற்கனவே வறுமையில் தவிக்கும் காவ்ரா கல்பெலியா தம்பதியினர் 16 குழந்தைகளை வளர்த்தெடுக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது.
குழந்தைகளின் பசியை தீர்க்க காவ்ரா கல்பெலியா 20 சதவீத வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.
அவரது மகள் ஷிலா கல்பெலியா கூறும் போது, எங்கள் குடும்பம் வாழ்வதற்கு பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் அனைவரும் நிறைய சிரமங்களை எதிர் கொண்டு வருகிறோம். எங்கள் தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர் என்றார்.
குப்பை சேகரிப்பதன் மூலம் உயிர்வாழும் எங்கள் குடும்பத்தினரால் குழந்தைகளுக்கு கல்வி வழங்க முடியவில்லை. "பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு வீடு எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் நாங்கள் வீடற்றவர்களாகவே இருக்கிறோம்.
குழந்தைகளுக்கு பசி தீர்க்க உணவும், கல்வி வழங்கவும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கும் போதுமான பண வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொந்தரவுகளை சந்தித்து வருவதாக 17 குழந்தைகளின் தந்தை காவ்ரா கல்பெலியா கூறியுள்ளார்.
- PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது, முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும்
- மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் .
2019-21 மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் 13 சதவீத குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. 17 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன. மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
டெல்லி ஐஐடி, மும்பை சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கர்ப்ப காலத்தில் காற்று மாசுபாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பிலிருந்து ரிமோட் சென்சிங் தரவைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
சுவாச மண்டலத்தை கடுமையாக சேதப்படுத்தும் நுண்ணிய துகள் பொருளான PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது, குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் PM 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிக அளவில் காணப்படுகிறது.
தென் மாநிலங்களில் இந்த சதவீதம் பொதுவாக குறைவாகவே உள்ளது.
பஞ்சாபில் அதிக எடை குறைந்த குழந்தைகள், 22 சதவீதம் உள்ளனர். டெல்லி, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே இதன் விளைவாக, சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, "வயதாகி விடும்" என்று எச்சரித்து வந்தனர். அது தற்போது உண்மையாகி வருகிறது.
ஏனெனில், அங்கு தற்போது இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது. அதாவது, பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.5,66,000 ($6,897.69) வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
"அதிகளவு முதியோர்கள், குறைந்தளவு இளைஞர்கள்" என்ற ஒரு ஏற்றத்தாழ்வான நிலையுடன் போராடும் சீனாவில் இந்த நிலையை எதிர்கொள்ள செய்வதற்காக பெரிய தனியார் நிறுவனம் செய்யும் முதல் முயற்சியாகும்.
400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, "பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன். ஒரு சாதகமான கருவுறுதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு, தனியார் நிறுவனங்களாலும் தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்" என்றார்.
சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோதுகூட தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் எனவும் 2021ம் ஆண்டே அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார பின்னணியில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மக்கட்தொகை எவ்வாறு அமையும் என்றும் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
- கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது.
- 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர். தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கணித்து உள்ளது.
ஆனால் தேசிய சராசரியை விட நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 1.98 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 1.70-ம், மேகாலயாவில் 1.5-ம், மத்திய பிரதேசத்தில் 1.49 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தென்மாநிலங்களான கேரளாவில் 0.22-ம், ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட இது மிக குறைந்த அளவாக இருக்கிறது. இருப்பினும் இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். 2020-ம் ஆண்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 783-ம், 2021-ம் ஆண்டில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 864-ம், 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 367-ம், 2023-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306-ம் உள்ளது.
ஆனால் இதுவரை இல்லாத அளவாக 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளனர். இது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவாகும். அதோடு, குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
அதன்படி 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. இது 11 சதவீத சரிவு ஆகும். அதேவேளையில் 2024-ம் ஆண்டினை 2023-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. இது 6.71 சதவீத சரிவு ஆகும்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உண்மை தான்.
2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆஸ்பத்திரிகளில் பிறப்பை பதிவு செய்ய 10 நாட்கள் வரை எடுத்து கொள்வார்கள். எனவே தற்போதைய கணக்கின் அடிப்படையில் இன்னும் சில குழந்தைகள் அதில் பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக இன்னும் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் வரை இதில் சேரலாம். எனவே இறுதி பட்டியலில் சில மாற்றங்கள் இருந்தாலும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் 2024-ம் குழந்தைகள் பிறப்பு குறைவு தான் என்றார்.
- 1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார்.
- தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன்(24லட்சம்) குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். Man with the golden arm என அறியப்படும் ஹாரிசன் கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸ்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1954 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் ஹாரிசன் ரத்த தானம் கொடுக்க தொடங்கினார். அன்று தொடங்கி கடந்த 2018 இல் தனது 81 ஆவது வயது வரை 1,173 முறை ரத்த தானம் கொடுத்து ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.

அவரது ரத்த தானம் மூலம் உலகம் முழுவதிலும் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஹாரிசன் உடைய ரத்தத்தின் பிளாஸ்மாவில் ஆன்டி -டி (Anti-D) என்ற அரியவகை Antibody உள்ளது.
இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும் தீங்கு விளைவிக்கும் Antibody களை தடுக்கும் வல்லமை கொண்டது. 2005 முதல் கடந்த 2022 வரை அதிக ரத்த பிளாஸ்மா தானம் கொடுத்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் தன்வசம் வைத்திருந்தார்.

அதன் பின் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். ஜேம்ஸ் ஹாரிசன் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






