என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள் தொகை"
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும்.
மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சுதந்திரம் பிறகு நடத்தப்படும்எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2027 இல் தொடங்கி மார்ச் 1 இல் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி படிவங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் தரவு சேகரிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன.
- நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது.
விவசாயத்தில் சிறுகுறு நிறுவனங்கள் தொடங்கி தொழில் முனைவோர்களாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும் என வழிகாட்டுகிறார் "சி சேஞ்ச் " ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனரும், வணிக யுக்தி ஆலோசகருமான எம்.கே.ஆனந்த்.
இதுகுறித்து, அவர் கூறியது: "பொருளாதாரம் தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது. அந்த வகையில் உலகளவில் குறுசிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பொருளாதாரத்தை அதிகரிக்கும் பிரதானக் காரணிகளாக உள்ளன. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் விவசாயம், குறுசிறு நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) நிறுவனங்கள் தான் பொருளாதார ஊக்கியாக உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் 7 கோடி குறு சிறு நிறுவனங்கள் உள்ளன. அதாவது, 7 கோடி தொழில் முனைவோர்கள் உள்ளனர். இதில் 12 கோடி பேர் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் 10 கோடி அளவுக்கு ஆண்டுக்கு வருமானம் ஈட்டினால் அவை குறு நிறுவனங்கள் என்றும், 100 கோடிகள் வரை ஆண்டு வருமானம் ஈட்டினால் சிறு நிறுவனங்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.500 கோடிகள் வருவாய் ஈட்டினால் நடுத்தர நிறுவனங்கள் அன்றும் அரசு வரையறுத்துள்ளது.
நாட்டின் மொத்த உற்பத்தியில் எம்எஸ்எம்இ தான் 30 சதவீதம் பங்காற்றுகிறது. அப்படிப் பார்க்கையில் இந்தியாவின் முதுகெலும்பு எம்எஸ்எம்இயைச் சார்ந்துள்ளது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எம்எஸ்எம்இ தொடர்பான "ஸ்டார்ட்அப்" என்பது பெருகி வருகிறது. 1 லட்சத்து 50 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் "ஸ்டார்ட்அப்" பில் பதிவு செய்து, புதிதாகத் தொழில் தொடங்க வந்துள்ளனர்.
மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில், அனைவருக்கும் வேலை என்ற இலக்கை அடைய தற்போது உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை போதவில்லை. ஆக, அனைவருக்கும் வேலை வேண்டும் என முடிவெடுத்தால், நிறைய தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் இங்கு அவசியம்.
இளைஞர்கள், படித்தவர்கள், வணிகயோசனை கொண்டவர்கள், சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், "ஸ்டார்ட்அப்" என்ற கலாச்சாரத்துக்குள் வரத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் "ஸ்டார்ட்அப்"பில் வருபவர்கள் தொழில்நுட்பத்தை சாந்துள்ளனர்.
எம்எஸ்எம்.இ மற்றும் விவசாயத்தில் ஸ்டார்ட்அப் தொழில்கள் மூலமாக தொழில்நுட்ப புரட்சி அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் பில் சிறுகுறு தொழிலுக்கான திட்டங்கள், வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள, வருகின்ற 17.08.2025 ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரஷியாவின் மக்கள்தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாகாணங்களின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை ரஷியா தொடங்கியிருந்தது. இருப்பினும், இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயனடைந்தனர். இது இப்போது பள்ளி மாணவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2023 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக உள்ளது. இது முன்பு 2.05 ஆக இருந்தது. இதற்கிடையில், டீனேஜ் கர்ப்பம் குறித்த கணக்கெடுப்பின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பை ரஷிய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்தியது.
இதில், 43 சதவீதம் பேர் ரஷியாவின் புதிய கொள்கையை ஆதரித்தனர், 40 சதவீதம் பேர் எதிர்த்தனர்.
இதற்கிடையே உக்ரைனுடனான போரில் சுமார் 250,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது.
ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது போல, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரஷியா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
- நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர்.
- ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும்.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியனாக (146 கோடியாக) அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள்தொகை அறிக்கை (UNFPA's 2025 State of World Population Report) தெரிவித்துள்ளது.
UNFPA அறிக்கையின்படி, 2025 இல் 1.46 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும். இது சுமார் 40 ஆண்டுகளில் 1.7 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளது, இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற மாற்றீட்டு விகிதத்திற்கும் (Replacement Rate) கீழே உள்ளது.
இந்தியாவின் 24% மக்கள் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 17% பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26% பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
நாட்டின் 68% மக்கள் (15-64 வயது) உழைக்கும் வயதில் உள்ளனர். 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 7% ஆக உள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் என UNFPA தெரிவித்துள்ளது.
இனப்பெருக்க நோக்கங்களை பூர்த்தி செய்ய இயலாமையே உண்மையான கருவுறுதல் நெருக்கடி என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பாலினம், கருத்தடை மற்றும் குடும்பம் தொடங்குவது பற்றிய சுதந்திரமான மற்றும் தகவலறிந்த இனப்பெருக்க தேர்வுக்கான மக்களின் திறனை மேம்படுத்துவதே இதற்கு மாற்று வழி என்று அறிக்கை கூறுகிறது. அனைவருக்கும்
UNFPA இந்தியா பிரதிநிதி ஆண்ட்ரியா எம் வோஜ்னார் கூறுகையில், கருவுறுதல் விகிதங்களை குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தாலும், மாநிலங்கள், சாதிகள் மற்றும் வருமானக் குழுக்கள் இடையே ஆழமான சமத்துவமின்மை நீடிப்பதாக தெரிவித்தார்.
- தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது.
- டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை இரு கட்டமாக நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், "மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.
- உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது.
நாட்டில் 49 மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
2021 குடிமைப் பதிவுத் தரவுகளின்படி இந்த உண்மை தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. இந்த பிறப்பு விகித குறைவு, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 7 மாவட்டங்களில் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இறப்பதை விடக் குறைவாக இருந்தது. அதேசமயம் 2021 ஆம் ஆண்டில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கிறது.

குறிப்பாக இந்த 49 மாவட்டங்களில் பெரும்பாலானவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
2019 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாவட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன, அப்படிப் பார்த்தால், இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கி வருவதாகத் தெரிகிறது.
இதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் 51 மாவட்டங்களிலும், பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப பாராளுமன்ற தொகுதிகளை வரையறுக்க மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இதனால் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என தென் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் இந்த புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
- எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
பல்லடம் :
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இனி, 800 கோடியில் ஒருவர் நாம்.
- நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.
நியூயார்க் :
நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.
ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்!
பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம்.
பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்...
'நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது' என்கிறார்.
அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது...
'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார்.
2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
- 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
- முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வரும் சீனாவில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தில் அதன் வயதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
2022ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 1,411,750,000 ஆக இருந்தது என்று பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இறுதியின் மக்கள் தொகையைவிட 850,000 குறைந்துள்ளது.
இதேபோல், பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது.
சீனாவின் மக்கள்தொகை கடைசியாக 1960ல் குறைந்தது. 1980ம் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கடுமையான "ஒரு குழந்தை கொள்கையை" சீனா 2016 ல் முடித்துக் கொண்டது. 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. ஆனால் சீன அரசு மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க தவறிவிட்டது.
குழந்தை பிறப்பு விகிதம் மந்தநிலையில் இருக்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்கல்வியை நாடுவது உள்ளிட்ட காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியுஜியன் பெங் கூறுகையில், " பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கையின் காரணமாக சீன மக்களும் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
மேலும், தம்பதிவகள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 10,000 யுவான்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்கில், ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 600 யுவான் செலுத்தி வருகிறது.
- சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 7 லட்சம்.
- இங்கு குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது.
காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை வெறும் 7 லட்சம் ஆகும். இதுதான் நாட்டிலேயே மிகவும் குறைவு. குழந்தை பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் பூர்வகுடி சமூகங்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது குறித்து முதல் மந்திரி பிரேம்சிங் தமங் கடந்த ஜனவரி மாதம் கவலை தெரிவித்தார். குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்த ஊதிய உயர்வு அளிக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், இரு குழந்தைகளுக்கு மேல் வைத்துள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. 2 குழந்தைகள் வைத்திருந்தால் ஒரு முன்பணம் பெறலாம். 3 குழந்தைகள் வைத்திருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு பெறலாம்.
கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவர் மட்டும் பெற்றுக்கொள்ளலாம். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்தச் சலுகை அமலுக்கு வருகிறது. ஆனால் குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கு இச்சலுகை கிடையாது.
- திருமண பதிவில் முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது.
- சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை அளித்து நீட்டித்து வருகின்றன.
சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது.
குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதால் திருமணங்கள், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் கடந்த 2022ம் ஆண்டில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்தது. சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது, இது 2021ல் 7.52 ஆக இருந்தது.
மக்கள் தொகையை அதிகரிக்க ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை தொடங்குவதாக சீனா கூறியது.
சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறைஅளித்து நீட்டித்து வருகின்றன.
- இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே இதன் விளைவாக, சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, "வயதாகி விடும்" என்று எச்சரித்து வந்தனர். அது தற்போது உண்மையாகி வருகிறது.
ஏனெனில், அங்கு தற்போது இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது. அதாவது, பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.5,66,000 ($6,897.69) வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
"அதிகளவு முதியோர்கள், குறைந்தளவு இளைஞர்கள்" என்ற ஒரு ஏற்றத்தாழ்வான நிலையுடன் போராடும் சீனாவில் இந்த நிலையை எதிர்கொள்ள செய்வதற்காக பெரிய தனியார் நிறுவனம் செய்யும் முதல் முயற்சியாகும்.
400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, "பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன். ஒரு சாதகமான கருவுறுதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு, தனியார் நிறுவனங்களாலும் தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்" என்றார்.
சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோதுகூட தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் எனவும் 2021ம் ஆண்டே அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார பின்னணியில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மக்கட்தொகை எவ்வாறு அமையும் என்றும் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.






