மக்கள் தொகை அடிப்படையில் பல்லடத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் - ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற காட்சி. 
கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம் :

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com