என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
- ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இன்றைக்கு இந்த பட்டுக்கோட்டை நகரத்திலே இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை செங்கிப்பட்டியிலே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன்.
தஞ்சை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டெல்டா பகுதி கருணாநிதி மனசுக்கும் சரி, அண்ணாவுடைய மனசுக்கும் மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. நம்முடைய முதலமைச்சர் 'நானும் ஒரு டெல்டாக்காரன்' தான் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார். டெல்டா மாவட்டத்தில் கருணாநிதி செல்லாத இடங்களே இல்லை. திராவிட இயக்கத்துடைய போர்ப்படை தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியை தந்த மண் இந்த பட்டுக்கோட்டை மண். பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளையெல்லாம் கேட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தவர் தான் கருணாநிதி. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அந்த பட்டப் பெயரை கொடுத்ததே. பட்டுக்கோட்டை அழகிரி தான்.
அண்ணா, கருணாநிதி சிலைகளை தமிழ்நாடு முழுவதும் நாம் திறக்கிறோம் என்றால் அவர்களுடைய கொள்கைகளை, லட்சியங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம்.
இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த 'விடியல் பயண திட்டம்'. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார். பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார்.
மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார்.
அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை.
எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அடுத்து வருகிற 50 நாட்கள் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு நின்று இன்று சபதம் ஏற்போம் என்பார்.
- மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.
- தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தரவு தொடர்பு துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
- தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு அவர் விளக்கம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதேபோல் செங்கோட்டையனும் அரசியலுக்காக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் இருந்த போது தனிப்பட்ட முறையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த போது பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்தார். தற்போது அவர் பா.ஜ.க.வை விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நயினார் நாகேந்திரன் குறித்தும் பேசி வருகிறார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் சென்றால் வள்ளலார் ஆட்சி என்பார். தூத்துக்குடி சென்றால் வ.உ.சி. ஆட்சி என்பார். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த ஆட்சி என தெரியவரும்.
தனியாக கட்சி தொடங்கிய விஜய் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த கூடாது. தனது சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். மேலும் 30 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகிறார். ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்கள் தி.மு.க.வில் எதுவும் அறுவடை செய்ய முடியுமா என்பதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 800 காளைகளை மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகந்தன், துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர்கள் சரவணகுமார், ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர் பிரபாகர் தலைமையிலான குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதே போல் மாடுபிடி வீரர்கள் 350 பேரை வட்டார மருத்துவ அலுவலர் ஜெனி தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் 7.40 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் விஜயன், கிழக்கு தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித் குமார், வி.ஏ.ஒ. ரிச்சர்டு ஆகியோர் உடன் இருந்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் குட்டி புலி, வீரா, வெடிகுண்டு, கருப்பு, அசுரன், வெள்ளப் பறவை உள்ளிட்ட பல்வேறு விதவிதமான பெயர்களில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டத்தில் காளையை அடக்கிய பாலகுரு பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் ஆள் மாறாட்டம் செய்வதை தவிர்க்க மாடுபிடி வீரர்களின் கையில் வண்ண கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர் பாலமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 22) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், திண்டுக்கல் டவுன் போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திக், சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 340 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, அண்டா, குடம், சைக்கிள், குத்து விளக்கு, வயர் கட்டில், குக்கர், பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது.
- ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
ஒகேனக்கல்:
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும்.
அதிகளவு நீர் ஓடும் போது அருவியில் குளித்து மகிழவும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் அதிகளவு சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவர்.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்வர்.
தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று 200 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
இதனால், காவிரி ஆற்றில் மூழ்கி கிடந்த பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன. பல்வேறு இடங்களில் பறந்து விரிந்த காவிரி ஆறு நீரின்றி கருங்கல் பாறைகளாகவும், சிறு, சிறு ஓடைகளாகவும் காட்சியளிக்கிறது.
ஒகேனக்கல் மெயின் அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. ஐவர் பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
கர்நாடக அணிகளில் இருந்து உபரி நீர் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில் ஆங்காங்கே தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று குறைந்துள்ளது.
கோடை காலம் துவங்கும் முன்பே கர்நாடகாவில் மழை குறைந்ததாலும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
நீர்வரத்து மேலும் குறைந்ததால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கான தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் கோடை சுற்றுலா இந்த ஆண்டு கடுமையாக பாதிப்பு நிலை ஏற்படும்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 27). நேற்று இரவு இவரும், இவரது அண்ணன் மகள் பிரமில் லாஸ்ரீ (7) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கீதா (29) ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் மதுரை-தேனி மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், ராஜகுரு ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பிரமில்லாஸ்ரீ, சங்கீதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செக்கானூரணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த ராஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த குழந்தை பிரமி லாஸ்ரீ, சங்கீதாவையும் போலீசார் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராஜகுரு மனைவி கவுசல்யா செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சரக்கு வாகனம் ஓட்டி வந்த டிரைவர் குறவகுடியை சேர்ந்த பாண்டி (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சரக்கு வாகனம் மோதி குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
- 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை :
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அறநிலையத்துறை இவ்வளவு சிறப்பாக செயல்படமுடியும் என காட்டியவர் சேகர்பாபு.
* தான் செயல்பாபு என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டிருப்பவர் அமைச்சர் சேகர்பாபு.
* தி.மு.க. ஆட்சியில் 4,192 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
* 8,423 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.
* 19 திருக்கோவில்களில் முதலுதவி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* 12 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
* 5 லட்சம் பேர் கலந்து கொண்ட முருகன் மாநாட்டை நடத்தி காட்டினோம்.
* உலகிற்கே தனிப்பெருங்கருணை என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார்.
* பசிப்பிணியை போக்கும் திட்டங்கள் தான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள்.
* வள்ளலார் தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர்.
* வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை.
* அனைத்துலக வள்ளலார் மாநாட்டை குறிக்கும் விதமாக நினைவுத்தூண் அமைக்கப்படும்.
* வள்ளலார் சன்மார்க்க பயிற்சி பள்ளி அரசு சார்பில் அமைக்கப்படும்.
* 3 இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் அமைக்கப்படும்.
* வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.
* தலைநகர் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றார்.
- வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
- தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.
இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
- பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
- சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள்.
மதுரை:
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்' என்று கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும் சசிகலா அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார்.
தமிழக அரசியலில் தன்னை மீண்டும் நிலை நிறுத்த சசிகலா தனிக்கட்சி தொடங்க எடுத்து வரும் முயற்சிகளால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
- இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவை உள்ளன.
சர்தார் படேல் சாலையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர். சாலை) தொடங்குகிறது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான இங்கு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரூ.61 கோடியில் 'எல்' வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தில் ஒருவழி வாகன போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, சர்தார் படேல் சாலையில் இருந்து ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் மட்டும் 652 மீட்டர் (அணுகு சாலை உள்பட) நீளம் கொண்ட இந்த 'எல்' வடிவ மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில், அடையாறு பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாகவும் இந்த பாலம் இருக்கும். கிண்டியிலிருந்து அடையாறுக்கும், ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களும் தடையின்றி செல்லலாம்.
வாகன ஓட்டிகளின் கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் தடுப்புசுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வகையில் குறுக்குவெட்டு சாய்வுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த 'எல்' வடிவ மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மேம் பாலத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மேம்பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த மேம்பாலம் அந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ராமாபுரம்: மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு.
அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்.
வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, பல்லையா தெரு 1 முதல் 4வது தெரு வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ. காலனி, சர்மா நகர்.
- வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
- கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.
பல்லடம்:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வியாபாரிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இக்குழு சார்பில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோரிடம் கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மகாலில் இன்று நடைபெற்றது.
இதில் 2 மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கனிமொழி எம்.பி., பங்கேற்காததால் அமைச்சர்கள் முத்துசாமி ,கோவி.செழியன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மனுக்களை வாங்கி கருத்துக்களை கேட்டறிந்தனர்.






