search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
    • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.
    • லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திர ரத வல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு குருப்பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    1-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி 5.21 மணிக்குள் பரிகார மகாயாகம், மகா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
    • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

    இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    • பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார்.
    • சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்த சிறுமி அடுத்தடுத்து 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உறையூர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரரைண நடத்தினர்.

    மணப்பாறையை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவருடன் மணப்பாறையில் உள்ள ஒரு லாட்ஜியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர்.

    பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, திருச்சி அருகேயுள்ள கல்லணைக்கு பேருந்தில் சென்று, அங்கிருந்த பூங்காவில் சுற்றித் திரிந்துள்ளார். இரவு வெகு நேரமானதால் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிந்து கொண்ட அவர், சிறுமியை மத்திய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து கோவைக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன் பின் சிறுமியிடம் பணத்தை கொடுத்து அவரை திருச்சி செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி மறுநாள் திருச்சி வந்தார். வீட்டுக்கு செல்ல விரும்பாத அச்சிறுமி, மணப்பாறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முடிவு செய்து, பேருந்தில் ஏறி மணப்பாறை வந்துள்ளார். மணப்பாறை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய சிறுமியிடம் அங்கிருந்த ஒரு நபர் பேச்சுக் கொடுத்துள்ளார்.

    சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் சிறுமிக்கு உடைகள், காலணி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து, சிறுமியை ஒரு விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகேசனை போக்சோவில் கைது செய்தனர்.

    மேலும் சிறுமியை கோவைக்கு அழைத்து சென்ற மர்மநபர் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவை ஆராய்ந்து விசாரணை நடத்தி அவரை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    குறிப்பாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    ஏற்காடு பகுதியில் கோடை விழா மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து கிடக்கிறது.

    மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் அதிகளவில் வெயில் நிலவி வருவதால் அடிக்கடி வனப்பகுதியில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. வனத்துறையினர் விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை ஏற்காடு மலைபாதை 8 வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனப்பகுதியில் மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி சுமார் 4 ஏக்கர் பரப்பளவிற்கு எரிந்தது. இதனால் மலைப்பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க கடுமையாக போராடினர் ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீ கொளுத்தி விட்டு எரிந்தது.

    இதையடுத்து சேலத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைப்பாதையில் இருபுறமும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணிநேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வெப்பத்தை தணித்தனர்.

    காட்டுத்தீ காரணமாக மலை பாதை முழுவதும் புகையும் சாம்பலுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    • நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது.

    மதுரை:

    சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மதுரை சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 21-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மறுநாள் தேரோட்டமும் நடந்தது.

    பின்னர் தீர்த்தவாரியுடன் நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது.

    இதற்கிடையில் அழகர்கோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 21-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்றைய தினம் காலை 6.02 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் `பச்சைப்பட்டு' உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 10 லட்சத்திற்கும் அதிகமான கூட்டம் கூடியதால் மதுரை நகரமே ஸ்தம்பித்தது.

    பின்னர் வழி நெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் அன்று மாலையில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு இரவு 11 மணி அளவில் வந்து சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

     சாப விமோசனம்

    அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர். குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    • நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது.
    • அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக அங்கு சிறிய குளம் ஏற்படுத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் பூக்களை மிதக்கவிட்டனர்.

    குளத்தில் மண்டூக முனிவரின் உருவச்சிலை ஒன்று இருந்தது. அதன் அருகில் நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பூஜைகள் முடிந்து கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் பெற்றதை விளக்கும் விதமாக நாரை பறக்கவிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தநிகழ்ச்சி முடிந்த உடன் மதியம் 3.30 மணி அளவில் இதேபகுதியில் உள்ள அனுமார் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கிளம்பினார்.

    நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் அழகர் காட்சி தந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

    மோகினி அவதாரத்தில் உலா

    இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி அளவில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வருகிறார். பகல் 2 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 11 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார்.

    அதே கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார்.

    மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 27-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.32 மணி அளவில் தனது இருப்பிடம் சென்று அடைகிறார்.

    • மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது.
    • குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ்துறையில் குதிரைப்படை போலீஸ் பிரிவும் ஒரு அங்கமாக இருக்கிறது. மிகப்பெரிய பாரம்பரியத்தை உள்ளடக்கிய குதிரைப்படை போலீஸ் பிரிவு நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1926-ம் ஆண்டு 54 குதிரைகளுடன் சென்னை போலீசின் ஒரு அங்கமாக குதிரைப்படை பிரிவு தோற்றுவிக்கப்பட்டது.

    அந்த கால கட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் குதிரைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ரோந்து செல்வதற்கு குதிரைப்படைதான் பேருதவியாக இருந்தது. தற்போதும் குதிரைப்படை சென்னை போலீசுக்கு உற்ற துணையாக செயல்படுகிறது.

    மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின்போது இந்த குதிரைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.

    விநாயகர் சிலை ஊர்வலம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும் குதிரைப்படை போலீசார் முக்கிய பங்காற்றுகிறார்கள். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் போலீஸ் அரங்கில் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண உடை அலங்காரத்தில் இந்த குதிரைகள் நிறுத்தப்படுவதும் வழக்கம்.

    தற்போது சென்னை போலீஸ் குதிரைப்படை விளையாட்டுகளிலும் பங்கேற்கிறது. சமீபத்தில் போலீஸ் குதிரை விளையாட்டு போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் குதிரைப்படையை சேர்ந்த குதிரைகள் சாகசங்களை நிகழ்த்தி வெற்றி வாகை சூடி பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது.


     

    தற்போது சென்னை குதிரைப்படை போலீசில் 12 பெண் குதிரைகளும், 13 ஆண் குதிரைகளும் என 25 குதிரைகள் உள்ளன. சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குதிரைப்படை பிரிவு செயல்படுகிறது. இங்கு 40 குதிரைகள் இடம் பெறும் வகையில் வசதி வாய்ப்புகள் உள்ளது. நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள இந்த தருணத்தில் புதிதாக மேலும் 5 குதிரைகள் சேர உள்ளது.

    டெல்லியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து புதிய குதிரைகளை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்க உள்ளனர். நூற்றாண்டு விழாவை காண உள்ள குதிரைப்படை போலீஸ் பிரிவை புதுப்பொலிவுடன் சீரமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.

    அதன் மூலம் புதிதாக குதிரை லாயங்கள் கட்டப்படுகின்றன. பழைய லாயங்கள் இடிக்கப்படுகிறது. இந்த குதிரைப்படை பிரிவு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் தலைமையக கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. குதிரைப்படையை சிறப்பாக செயல்படுத்த இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் தலைமையில் 2 பெண் போலீசார் உள்பட 19 போலீசார் பணியில் உள்ளனர்.

    குதிரைகளை பராமரிப்பதற்கு தனியாக பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள். 8 வயதில் குதிரைகள் வாங்கப்படுகின்றன. அவற்றிற்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 வயது வரை குதிரைகள் போலீசில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றன. 20 வயது நிரம்பியவுடன் அந்த குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. பின்னர், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அந்த தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து குதிரைகள் தங்களை ஆயுட் காலத்தை முடித்துக் கொள்கின்றன. குதிரைப்படையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.
    • தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    கோடை காலம் தமிழ்நாட்டில் தொடங்கி வாட்டி வதைத்து வருகிறது. ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயிலின் கொடுமை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.

    அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அந்தவகையில் நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும், அதற்கு முந்தைய நாள் ஈரோட்டில் 109 டிகிரியும் என வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. இது மேலும் வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்தே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை எச்சரிக்கும் விதமாக இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், இயல்பைவிட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர்.

    இதில் இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    பொதுவாக வானிலை ஆய்வு மையம் வெயிலின் அளவை செல்சியஸ் என்ற அளவிலேயே குறிப்பிடுகிறது. அதனை 'பாரன்ஹீட் டிகிரி' என்ற அளவில் மாற்றுகிறோம். அந்த வகையில் மேற்சொன்ன செல்சியஸ் அளவின் படி பார்க்கும் போது, இயல்பைவிட 5 டிகிரி முதல் 9 டிகிரி வரை வெப்பம் அதிகரித்திருக்கும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மற்ற இடங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100.4 டிகிரி வரை வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

    • விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்ற புகார் எழுந்தது
    • இந்த புகாரின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம்

    ஏப்ரல் 22 அன்று விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்து, அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் நிறுத்தாமல் சென்றதாக ஊடகங்களில் புகார் எழுந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து ஓட்டுனர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசுவை பணிநீக்கம் செய்துள்ளனர்.

     

    • குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது.

    குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி மற்றும குரூப் சி தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.

    105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் பதவி) தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடைபெறுகிறது.

    605 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறுகிறது.

    730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- டிப்ளமோ/ஐடிஐ நிலை தேர்வு நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

    50 பணியிடங்களுக்கான வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் தரம் II (முதன்மை) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.b 

    ×