என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant"

    • கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.
    • யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    கேரள மாநிலத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதால், சில நேரங்களில் பிரச்சனை ஆகி விடுகிறது.

    இதனால் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளின் படியே, கேரளாவில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொச்சி அருகே கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, திடீரென பாகனை தள்ளிவிட்டு அதிவேகமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள திரிபுனித்து ராவில் பூர்ணத்ரயீசர் கோவில் இருக்கிறது. கேளர மாநிலத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு விஷ்ணு அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இதனால் அவற்றில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பூர்ணத்ரயீசர் யானைகளை விரும்பும் கடவுளாக கருதப்படுவதால், இந்த கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.

    இந்தநிலையில் பூர்ணத்ர யீசர் கோவில் திருவிழாவிற்காக கோட்டயத்தில் இருந்து சாமப்புழா உன்னி கிருஷ்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு முன்னால் உள்ள அத்தாழ சீவேலிக்கான கோபுர நுழைவு வாயிலின் அருகே அழைத்துவரப்பட்ட போது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது.

    இதையடுத்து அந்த யானை, தன் மீது அமர்ந்திருந்த இரண்டாவது பாகனை கீழே விழச்செய்துவிட்டு ஆக்ரோஷத்துடன் வேகமாக ஓடியது. அந்த யானை கோவில் வளாகத்தை சுற்றி வேகமாக ஓடியபடி இருந்தது. இதனை கோவிலில் இருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் கோவில் வளாகத்தில் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த யானை கோவிலின் மேடைக்கு அருகே நின்றது. ஆனால் ஆக்ரோஷம் தனியாமல் தலையை வேகமாக அசைத்த படி நின்றது.

    இதையடுத்து கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கோவில் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    பல்லுருடடி அழகிய காவு கோவிலில் இருந்து யானை படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பிறகு யானையை சாந்தப்படுத்தி அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர். பின்பு அந்த யானை கோவிலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே கோவிலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவகார்த்திகேயன், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.

    6 மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஆண்டு வண்டலூர் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‛பராசக்தி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் நாட்டு வெடி குண்டை விழுங்கியதால், இரண்டு வயது பெண் யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குத்தியாலத்தூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, இறந்து கிடந்த யானை குட்டியின் உடலைக் கண்டெடுத்தனர்.

    வனத்துறை கால்நடை மருத்துவர் நடத்திய முதற்கட்ட சோதனையில், யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    யானை குட்டியின் பிரேத பரிசோதனையில், அது சக்தி வாய்த்த நாட்டு வெடிகுண்டை விழுங்கியதால் வாய் சிதைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

    காட்டுப்பன்றிகள் அல்லது யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க விவசாயிகள் இது போன்ற வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

    இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

    அவர் தனது விளைநிலத்தைப் பாதுகாக்க இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    உயிரிழந்த யானை குட்டியின் உடல், வனத்துறை விதிகளின்படி அதே இடத்தில் புதைக்கப்பட்டது.  

    • உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ராஞ்சி:

    சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.

    இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:

    உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.

    இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.

    பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
    • சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர்.

    தளி:

    தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது.

    இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சாலை ஓரத்தில் காட்டு யானை நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அப்படியே நின்றனர்.

    நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர். ஏராளமான வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு உள்ளே விரட்டினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர்.

    இந்த ஒற்றை யானை சாலை ஓரங்களில் அவ்வப்போது வந்து நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே வாகனங்களை மறிக்கும் இந்த யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உணவு பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
    • பாகனுடன் யானையைக் காணவில்லை என உரிமையாளர் புகார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யானையைக் காணவில்லை என ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது, வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்பவர், பலமு மாவட்டத்தில் உள்ள ஜார்காட் பகுதியில் இருந்து யானையையும், பாகனையும் காணவில்லை. யானையைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும், யானைக்கான உரிமை எண்ணையும் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக வன அதிகாரி "பலமுவில் உணவு பற்றாக்குறை காரணமாக, அதன் உரிமையாளர் யானையை ராஞ்சிக்கு கொண்டு வந்தார். அங்கிருந்து மர்சாபூருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். பலமுவில் யானையை பாகனிடம் ஒப்படைத்தார். அதன்பின் யானையுடன் பாகன் மாயமானார். வன சரக அதிகாரி இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

    • மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
    • மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன.

    திருச்சி:

    வன விலங்குகளில் உருவத்தில் பெரிய அளவில் இருந்தாலும் யானைகள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரினமாக உள்ளது. அதனால்தான் அவை கோவில்களில் கடவுளுக்கு அடுத்தபடியாக ஆன்மிக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பது பழமொழி.

    ஆனால் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் என்றாலும் சரி, தனியார்களால் பராமரிக்கப்படும் யானைகள் ஆனாலும் சரி அவற்றின் முதுமை காலம் என்பது அவற்றுக்கு மிகவும் சோதனையான காலமாகவே அமைந்துவிடுகிறது. வயது முதிர்வின் காரணமாக யானைகள் வியாதிகளால் உடல் நலிவுறும்போது அவற்றை பராமரிக்க முடியாமல் யானைகளின் உரிமையாளர்களும், பாகன்களும் நிலை தடுமாறி விடுகிறார்கள். காரணம் உருவத்தில் பெரியதாக இருப்பதால் அவற்றுக்கு அதிக அளவில் உணவு தேவைப்படுவது போல், மருத்துவ சிகிச்சைக்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்த பிரச்சனையின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் எம்.ஆர்.பாளையம் என்ற இடத்தில் வயதான யானைகளை பராமரிப்பதற்காக யானைகள் மறுவாழ்வு மையம் வனத்துறையால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட 9 யானைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த மையத்தில் உள்ள யானைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இங்குள்ள யானைகளில் 71 வயது கோமதி, 60 வயது சுமதி, 64 வயது சுந்தரி, 66 வயது இந்திரா ஆகியவை தசைபிடிப்பு காரணமாக கால்வலியால் அவதிப்பட்டு வருகின்றன. இந்த யானைகளின் கால்வலியை போக்குவதற்காக வனத்துறை சார்பில் மறுவாழ்வு மைய வளாகத்தில் 'ஹைட்ரோதெரபி' எனப்படும் நீர் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்திற்கு 4 யானைகளும், தினமும் அவற்றின் பாகன்கள் மற்றும் அவற்றின் உதவியாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் நீராட வைக்கப்படுகின்றன. மற்ற யானைகள் இரண்டு நாளுக்கு ஒரு முறை இந்த நீர் சிகிச்சை குளத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அவை குளத்தில் நீராடி மகிழ்கின்றன.

    இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'யானைகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இந்த குளத்தில் நிரப்பப்படுகிறது. குளத்து நீரால் அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் கால்வலியால் அவதிப்பட்ட யானைகளின் நடவடிக்கையில் சிறிது மாற்றத்தை காண முடிகிறது' என்றனர்.

    • மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்தது.
    • அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டப்பாடியில் இரவு நேரத்தில் ஒரு காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.

    மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்ததால் அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்க போராடி வருகின்றனர். 

    • மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்டது.
    • முதலில் ரயிலின் ஓசையைக் மிரண்ட யானை, பின் வளத்திற்கும் சென்றது

    மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

    ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

    ரெயில் நின்றபிறகு யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது. 

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது.
    • ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையில் வந்து கரும்பு வாகனங்களை எதிர்பார்த்து அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்பாரண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சாலையோரம் சுற்றித்திரிந்தது. அந்த வழியாக கரும்புகளை ஏற்றி வாகனம் வருகிறதா என ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி பார்த்தது. அப்போது சத்தியமங்கலம் இருந்து தாளவாடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கும்பாரண்டு அருகே செல்லும் போது ஒற்றை யானை அந்த லாரியில் கரும்பு இருக்கிறது என நினைத்து லாரியை துரத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் பயத்தில் லாரியை வேகமாக இயக்கினார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் உயிர் தப்பினார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவ்வழியாக வந்த லாரியில் கயிற்றை கட்டி பள்ளத்தில் இருந்த லாரியை மீட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமீப காலமாக வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடக்கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.

    • யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும்.
    • ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும்.

    யானைகள்...

    குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம்.

    உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்... அது மிரண்டால்.... தாங்காது. துவம்சம் செய்துவிடும்.

    யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

    உலக அளவில் 2 வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. இந்த 2 வகையான யானைகளுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

    குறிப்பாக ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் காணப்படுகின்றன அவைகள் 'மக்னா' என்று அழைக்கப்படுகின்றன.

    ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு மேலாக நீண்டு இருக்கும். ஆசிய யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு கீழே இருக்கும். கால்விரல்களை பொறுத்தவரை ஆப்பிரிக்க யானைகளுக்கு முன்னங்காலில் 4 அல்லது 5 விரல்களும், பின்னங்கால்களில் 3 அல்லது 4 விரல்களும் இருக்கும். ஆசிய யானைகள் முன்னங்கால்களில் 5 விரல்களும், பின்னங்கால்களில் 4 விரல்களும் இருக்கும். முதுகு பகுதியானது ஆப்பிரிக்க யானைகளுக்கு குழிவிழுந்து காணப்படும். ஆசிய யானைகளின் முதுகு பகுதி வளைந்து காணப்படும்.

    ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் காணப்படுகின்றன.

    ஆண் யானை 14 முதல் 15 வருடத்திலும், பெண் யானை 12 முதல் 13 வருடத்திலும் பருவமடையும். யானையின் கர்ப்பகாலம் 21 முதல் 22 மாதங்கள் ஆகும். யானைகளுக்கு கண்பார்வை மனிதனைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் நுகரும் தன்மை அதிகம். யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.



    யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.

    யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன. சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது. யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.

    யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது. எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.

    எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.

    • பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன.
    • சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கருமலை, சிறுகுன்றா, வெள்ளமலை, புதுத்தோட்டம், தாய்முடி, நடுமலை அம்மையப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.

    மேலும் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டின் பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு சென்றது.

    அப்போது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குட்டியுடன் நின்ற 3 யானைகள் சாலையை வழிமறித்து நின்றன. இதனை பார்த்த அரசு பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பயணிகளும் பீதி அடைந்தனர்.

    அரசு பஸ் டிரைவர் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். தொடர்ந்து பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

    வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் சாலையோரம் ஒதுங்கி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பருவமழைக்கு பிறகு மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரோட்டில் இரவு நேரத்தில் செல்வோர் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மேலும் யானைகள் எதிரில் தென்பட்டால், சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அவை விலகி சென்று விடும். ஹாரன் ஒலித்து யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

    ×