என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
- வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
- சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர்.
தளி:
தேன்கனிக்கோட்டை நகரில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் மரக்கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானை ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது.
இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சாலை ஓரத்தில் காட்டு யானை நீண்ட நேரம் நின்றதால் அந்த வழியாக பயணம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் வாகனங்களுடன் அப்படியே நின்றனர்.
நீண்ட நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் ஆபத்தையும் மீறி காட்டு யானை நிற்பதை பொருட்படுத்தாமல் தங்களது வாகனங்களில் பயணம் செய்தனர். ஏராளமான வாகன ஓட்டிகள் காட்டு யானைக்கு பயந்து இருபுறங்களிலும் வெகுநேரம் காத்திருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு உள்ளே விரட்டினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து சென்றனர்.
இந்த ஒற்றை யானை சாலை ஓரங்களில் அவ்வப்போது வந்து நின்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே வாகனங்களை மறிக்கும் இந்த யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






