என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனப்பகுதி"

    • சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
    • கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வனத்துக்குள் சென்று வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், முள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குன்னூர் பகுதியில் தனித்தனி குழுவாக நடமாடி வருகிறது.

    ஊட்டியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பன் தற்போது தொட்டபெட்டா பகுதிக்கு சென்று லவ்டேல் பகுதியில் நடமாடி வருகிறது.

    இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று மாலை குன்னூருக்கு வந்தது. பின்னர் அந்த ஒற்றை யானை சாலையோரம் வழியாக சென்று அங்குள்ள செங்குத்தான மலைச்சரிவில் ஏறி வனத்துக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வேகமாக மலையேறி செல்வதை அங்குள்ள சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருவதால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். 

    • விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிகிறது.
    • கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.

    இரவில் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் வெளியேறும் யானையால் விவசாயிகளும், மோத்தங்கபுதுார் மக்களும் அச்சத்தில் உள்ளனர். தோட்டப்பகுதிகளில் புகுந்த யானை வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்தது. அங்கிருந்த வீட்டை ஒட்டி இருந்த வாழை மரங்களை முறித்து தின்று விவசாயிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

    சம்பவ இடத்துக்கு சென்ற சென்னம்பட்டி வனத்துறையினர், யானையை காட்டுக்குள் துரத்தினர். ஆனால் அந்த யானை மீண்டும் மீண்டும் அடுத்த அடுத்த நாட்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனச்சரகர் ராஜா தலைமையில் வனப்பணியாளர்கள் டிரோன் கேமாரவை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை. இதுகுறித்து வனச்சரகர் ராஜா கூறியதாவது;- எண்ணமங்கலம், கோவிலூர், மணல்காடு, மோத்தங்கபுதுார் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்குள் ஒற்றை யானை நடமாட்டம் இருக்கிறது. பலமுறை விரட்டியும் தொடர்ந்து யானை வெளியேறுவதை தடுக்க முடிய வில்லை.

    டிரோன் கேமராவை பயன்படுத்தி யானை நடமாட்டத்தை கண்டறிந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையை விரட்டும் வரை, இரவு நேரத்தில் வனப்பகுதி ஒட்டிய இடங்களிலும், பகலில் வனப் பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னம்பட்டி வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது.
    • வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், தாளவாடி, பர்கூர் வனச்சரக்கத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தண்ணீரை தேடி சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து வாகனங்களை வழிமறிப்பதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனத்துறை சார்பில் சோதனை சாவடி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று உணவுக்காக பண்ணாரி அம்மன் கோவில் வளாகம் அருகே அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.

    நீண்ட நேரமாக கோவில் வளாகத்தை அந்த ஒற்றை யானை சுற்றி வந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது.

    குறிப்பாக உணவு தண்ணீருக்காக யானைகள் வெளியே வருகின்றன. இதனால் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • தின்னப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திடீரென வனப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
    • வனத்துறையினரும் பொது மக்களும் இணைந்து தீயை முழுவதுமாக கட்டுப் படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூக்கனூர் அருகே அரூர்-தருமபுரி பிரதான சாலையில் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மூக்கனூர் அருகே தின்னப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திடீரென வனப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த பச்சிலைகளை வெட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள்ளாக வனத்துறையினரும் பொது மக்களும் இணைந்து தீயை முழுவதுமாக கட்டுப் படுத்தினர். இதனால் வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து அங்கிருந்த ஒருவர் தீயணைப்பு துறையினரிடம் ஒன்றரை மணி நேரமாக தீ எரிந்து கொண்டிருக்கிறது.

    தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்தால் வர முடியாது என தெரிவிக்கிறார்கள் என கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    அப்பொழுது தீயணைப்பு வீரரும், அவரிடத்தில் வர முடியாது என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீப்பற்றியது.
    • 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காணப்பட்டு வரும் சூழலில் அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிந்து வருகிறது.

    2-வது நாளாக தீ

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேக்கரையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியது.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் மேக்கரையை ஒட்டி உள்ள எருமை சாவடி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தற்போது தீ தொடர்ந்து பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக 2-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மழை இன்றி வனப்பகுதிகள் காய்ந்த நிலையில் காணப்படுவதால் அங்கு செல்வோர் தீ எளிமையாக பற்றும் வகையில் எந்த பொருளையும் எடுத்து ெசல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதிகளில் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.
    • கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரித்து நகரப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.தற்போது வடுமாங்காய் எனப்படும் சிறிய அளவிலான மாங்காய்கள் வரத்து துவங்கி உள்ளது. அவற்றை சேகரித்து வந்து கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- இயற்கையாகவே இம்மரங்கள் 70 மீ., வரை மிக உயரமாக வளரும். மார்ச் முதல் மே வரை சிறிய அளவிலான வடுமாங்காய்கள் காய்க்கும்.குரங்கு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் விரும்பி உண்ணும். ஊறுகாய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு வடுமாங்காய் அதிகம் பயன்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
    • பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.

    அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.

    • 2-வது நாளாக இன்றும் கணக்கெடுப்பு பணி தீவிரம்
    • 3 நாட்களுக்கு பிறகு தான் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலி, யானை, சிறுத்தை, மான் உட்பட ஏராளமான விலங்கு கள் உள்ளன.

    கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப் பட்டது. அப்போது 20 யானைகள் வசித்து வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்து யானைகள் கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்டத்திலும் வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். கோதையார், மாறாமலை, சாமிகுச்சி, ரோஸ்மியாபுரம், தாடகைமலை, அசம்பு, களியல் போன்ற பகுதிகளில் இந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

    அப்போது களியல் பகுதியில் 3 யானைகள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும் ஒரு சில பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருந்தது. காலை தொடங்கிய கணக்கெடுக்கும் பணி மாலை வரை நடைபெற்றது. கணக்கெடுப்பு குழுவினர் இரவு காட்டுப்பகுதியிலேயே கொட்டகை அமைத்து தாங்கினார்கள்.

    இன்று 2-வது நாளாக இந்த குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். யானைகள் சாணத்தை வைத்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளை காடுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். யானைகள் நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வருவதை வைத்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், குமரி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒரு சில இடங்களில் யானைகள் தென்பட்டதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கணக்கெடுக்க சென்ற ஒரு சிலரை தொடர்பு கொள்ள முடியாததால் முதல் நாளில் எத்தனை யானைகள் தென்பட்டது என்ற விவரம் தெரிய வில்லை. இன்றும் அந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை நீர் நிலைகளுக்கு வரும் யானைகளை கணக்கெடுக்க உள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு தான் குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும் என்றார்.

    • யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
    • கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • குமரி மாவட்ட வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம்
    • கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வனப்பகு தியில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்த்தியாக இருப்பதால், வன விலங்குகளும் ஏராளமாக உள்ளன. இவற்றை யாரும் வேட்டையாடாமல் இருக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அருகே உள்ள காற்றாலை மைதானத்தில் மிளா இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பூதப்பாண்டி வன சரகர் ரவீந்திரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அங்கு 3 வயது மிளா, துப்பாக்கி குண்டு பட்டு இறந்து கிடந்தது. இதனை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழக்குடி பகுதியில் நாட்டு வெடிகுண்டு மூலம் மிளா கொல்லப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு மிளா துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரிய வகை உயிரினங்கள் உள்ள குமரி வன பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டு வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டது. வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த கடுமை யான நடவடிக்கை யால் வேட்டை கட்டுப் படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தான் தற்போது பூதப்பாண்டி வன சரக பகுதியான ஆரல்வாய்மொழியில் மெல்ல மெல்ல துப்பாக்கி சத்தம் கேட்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மீண்டும் துப்பாக்கி கலாசாரம் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் துப்பாக்கியோடு வேட்டை யாடும் கும்பல் பற்றி எந்த தகவலும் வனத்துறைக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவம் வனத்துறையினர் சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    குண்டடி பட்டு இறந்த மிளாவை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அதன் உடலில் இருந்து மீட்கப்பட்ட தோட் டாக்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும், காவல் துறையினரும் இணைந்து துப்பாக்கி கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் இல்லை யென்றால் குமரி வனப் பகுதிகளில் உள்ள வன உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியக்கூடிய சூழல் உருவாகும் என பலரும் வேதனை தெரி வித்துள்ளனர்.

    • மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது.
    • மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆய்க்குடி செல்லும் சாலையில் மைனாபேரி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல், பறவைகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை உயிரினங்கள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் என அதிக அளவில் இம்மலைப்பகுதி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் புகை மூட்டத்துடன் லேசாக தீப்பிடித்த நிலையில் தற்போது வீசி வரும் காற்றால் மலை பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வருகிறது.

    இது குறித்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்கும் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது மலைப்பகுதி முழுவதும் தீ வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமானது. மலைப்பகுதியில் அதிகபடியாக வாழும் மான்கள், பறவைகள், பாம்புகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டு இருக்குமோ என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பகுதி மக்கள் வனத்துறையினர் வராத நிலையில் தென்காசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பகுதியில் பச்சை மரக்கிளைகளை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மலை அடிவாரத்தில் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    எனவே இந்த மலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மலைப் பகுதியாக அறிவித்து மலையை சுற்றி வேலிகள் அமைக்க வேண்டும். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றனர். மேலும் இன்று காலையிலும் தொடர்ந்து மலைப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×