search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள்"

    • வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக சமவெளி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள் வனத்தையொட்டிய அடிவாரப்பகுதியில் முகாமிட்டு அவ்வப்போது முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து காட்டு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் திரும்பி வந்துவிடுகிறது.

    இந்த நிலையில் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் அடுத்த கிரேக்மோர் எஸ்டேட் பகுதிக்கு வந்தன.

    பின்னர் அவை அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து பக்கத்திலுள்ள மளிகை கடையையும் உடைத்து பொருட்களை சேதப்படுத்தியது.

    இதனையடுத்து சுமார் ஒரு கி.மீ.. தொலைவுக்கு நடந்துசென்ற காட்டு யானைகள் கொலகம்பை பகுதியில் உள்ள ரேசன் கடையை உடைத்து அங்குள்ள பொருட்களை சூறையாடியது. பின்னர் அங்கு இருந்த ஒரு மூட்டை அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றது. தொடர்ந்து பஜார் பகுதியில் 2 மளிகை கடைகளை சேதப்படுத்தி காய்கறிகளை ருசித்தன.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானைகள் இன்று காலை கம்மந்து வனப்பகுதியில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    தொடர்ந்து வனச்சரகர்கள் ரவீந்திரநாத் (குன்னூர்), சீனிவாசன் (குந்தா) ஆகியோர் மேற்பார்வையில் ஊழியர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதபடி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காட்டு யானைகளின் அட்டகாசத்தால் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் பீதி அடைந்ததுடன் தூக்கம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது.
    • யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலையங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ராமாபுரம் பிரிவு பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லு (50) என்பவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று காலை வழக்கம் போல் மல்லு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்ற போது கரும்பு பயிர்களுக்கு இடையே 4 காட்டு யானைகள் முகாமிட்டபடி கரும்பு பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் நிர்மல் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகள் கரும்பு தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்டு உடனடியாக யானைகளை விரட்ட முயற்சித்தனர். பகல் நேரம் என்பதால் காட்டு யானைகள் கரும்பு தோட்டத்தை விட்டு வெளியேறாமல் போக்கு காட்டி வந்தது.

    இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்க வனத்துறையின் டிரோன் கேமரா குழுவினர் வர வழைக்கப்பட்டனர். டிரோன் கேமரா மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதில் கரும்புத் தோட்டத்தில் முகாமிட்ட 4 யானைகளும் ஆண் யானைகள் என தெரிய வந்தது.

    யானைகள் அப்பகுதியில் முகாமிட்டதை அறிந்த பொதுமக்கள் யானைகளை வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டமாக திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    கரும்பு தோட்டம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநில வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் தான் கரும்பு தோட்டத்தில் முகாமிட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து இரவு வரை டிரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இரவில் அந்த 4 யானைகளும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றது.

    இதன் பிறகு வனத்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தி உள்ளது. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி மல்லு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
    • யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சிக்கள்ளி கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் விவசாயி சங்கர் (30) என்பவர் தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிரை சேதாரம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.

    தொடர்ந்து வன விலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன.
    • காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது.

    வடவள்ளி:

    கோவை போளுவாம் பட்டி சரகத்துக்கு உட்பட்ட நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவற்றில் 7 யானைகள் நேற்று அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

    ஆனால் குட்டியுடன் கூடிய 4 யானைகள் மற்றும் ஒற்றை யானை ஆகியவை காட்டுக்குள் திரும்பாமல் ஊருக்குள் சுற்றி வந்தன. அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை முட்டத்து வயல் பகுதிக்கு சென்று அங்குள்ள ரேசன் கடையை உடைத்து அரிசியை தின்றுவிட்டு பின்னர் பூண்டி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதற்கிடையே குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் செம்மேடு புற்றுக்கண் கோவில் அருகே வந்தது. பின்னர் அங்குள்ள தனியார் பாக்கு தோட்டத்தில் முகாமிட்ட யானைகள் அங்கு விளைந்து நிற்கும் சணப்பை பயிர்களை தின்று தீர்த்தது.

    அப்போது காலைநேரம் என்பதால் பூண்டி சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்பட்டது. இதனால் மாலைவரை வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் போலீசார் உதவியுடன் பூண்டி சாலையில் போக்குவரத்தை நிறுத்தி தொடர்ந்து பட்டாசு வெடித்தும், ஜே.சி.பி. வாகனம் உதவியுடனும் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தனர். ஆனால் இரவு 8 மணிவரை காட்டு யானைகள் பாக்கு தோட்டத்தை விட்டு வெளியேவரவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் சுமார் 14 மணிநேரம் போராடி காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

    • காடுகளிலும், அதை சுற்றிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது வனத்துறையினர் யானைகள் மீது ஏறி ரோந்து செல்கின்றனர்.
    • காடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது.

    மழை காலத்தில் வனப்பகுதிகளை சுற்றிலும் வெள்ளம் மூழ்கியுள்ள நிலையில் இமயமலை அடிவாரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தேராய் காடுகளில் வனத்துறையினர் யானைகளில் ரோந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தேராய் காடுகளில் மழை காலங்களில் ரோந்து செல்வது வனத்துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது. காடுகளிலும், அதை சுற்றிய பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது வனத்துறையினர் யானைகள் மீது ஏறி ரோந்து செல்கின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், காடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடு முழுவதும் நாணல்கள் வளர்ந்துள்ளது. அப்போது வனத்துறையினர் பாகன்களை அழைத்து கொண்டு யானைகள் மீது அமர்ந்து காட்டை சுற்றி ரோந்து செல்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வனத்துறையினரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த இளம் யானைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • பராமரிக்கப்படும் யானைகளுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படுகிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் வடமேற்கு பகுதியில் சந்தகா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

    இது கடந்த 1982-ம் ஆண்டு டிசம்பரில் யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த காப்பகத்தில் தற்போது யானைகளுக்காக ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த இளம் யானைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் காடுகளில் மதம் பிடித்த யானைகளை அடக்குவதற்காக பயன்படுத்தப்படும் கும்கி யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த காப்பகத்தில் ஜகா, உமா, கார்த்திக், சந்து, மாமா மற்றும் சங்கர் என்ற பெயர் கொண்ட 6 யானைகளை 13 யானை பாகன்கள் மற்றும் உதவி பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள யானைகளுக்காக வனத்துறை அதிகாரிகள் இந்த பிரத்யேக உணவகத்தை திறந்துள்ளனர். இதுகுறித்து தலைமை பாதுகாவலரான சுசந்தா நந்தா கூறியதாவது:-

    யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் போது ஊட்டச்சத்து உணவு தேவைப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் யானைகளுக்கு உணவு அளிக்கப்படும்.

    ஒவ்வொரு யானைக்கும் அவற்றின் பெயரில் ஒரு சாவடி உள்ளது. யானைகள் தங்களின் சாவடியை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இங்கு பராமரிக்கப்படும் யானைகளுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படுகிறது. பின்னர் நடைபயிற்சி, சிறிய அளவிலான உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் வாழைப்பழம், தேங்காய், கேரட், கரும்பு மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்படுகிறது.

    மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ஒரு மணி நேரம் யானைகளின் குளியல் நேரம் ஆகும். அதன் பிறகு மதிய உணவாக கோதுமை, தினை, சோளப்பொடி, குதிரை வாலி, மஞ்சள், ஆமணக்கு எண்ணை மற்றும் உப்பு கலந்த வெள்ளம் வழங்கப்படுகிறது. இரவு உணவாக புல், மரக்கிளைகள், வாழைத்தண்டு, வைக்கோல் வழங்கப்படுவதாகவும் இந்த உணவகத்தில் இருந்து சிறிது தூரத்தில் யானைகள் ஓய்வெடுப்பதற்காக கொட்டத்தை அமைக்கப்பட்டுள்ளதாகவும் வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.
    • வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி கேர்மாளம், விளாமுண்டி, தலமலை, பவானிசாகர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    ஈரோடு வனக்கோட்டத்திற்குள்பட்ட தந்தை பெரியார் வனச்சரணாலயத்தில் ஈரோடு, அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி, தட்டக்கரை ஆகிய 5 வனச்சரகங்களும், சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட 20 வனச்சரகங்களும், தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் உள்ளிட்ட 8 வனச்சரகங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் உள்பட 7 வனச்சரகங்களும் உள்ளன.

    இந்த வனச்சரணாலய பகுதிகளில் ஆயிரக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. வனச்சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வனச்சரணாலயப் பகுதிகளில் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வசிக்கும் யானைகள் எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

    தற்போது வனச்சரகங்களில் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்தப் பகுதிகளில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவல்களை மத்திய வனத்துறை மூலம் அரசு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாப்பாளர் ராஜ்குமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி அதன் தொடர்ச்சியாக உள்ள மோயாறு பள்ளத்தாக்கு, சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வனக்கோட்டம் வரையிலான பகுதிகளில் இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்த வரை கடந்த ஆண்டில் 720-க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. தமிழகத்தில் நடைபெற்றதை போலவே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட யானைகளின் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரித்து இறுதியாக வனக்கோட்ட வாரியாக யானைகளின் இருப்பு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை மத்திய அரசு வெளியிடும்.

    சத்தியமங்கலம் வனக்கோட்டத்தைப் பொருத்த வரை யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளதால் யானைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை. யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பதை யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டு மொத்தமாக கணக்கீட்டின் அடிப்படையிலேயே தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்து வருகிறது.
    • சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, செந்நாய், கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்து வருகிறது.

    ஆனால் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வனம் பொழிவு இழந்து ஆறுகளிலும் நீர் வரத்து நின்று விடுகிறது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக பசி, தாகத்தோடு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவார பகுதியை நோக்கி வருவது வாடிக்கையான நிகழ்வாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு நிலவிய கோடை வெப்பத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்து விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து வனம் பசுமைக்கு மாறினாலும் ஆறுகளில் பெரிதாக நீர்வரத்து இல்லை. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருவதுடன் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் வளையபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலங்களுக்குள் புகுந்த யானைகள் மின்சார வேலி மற்றும் தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. இது குறித்த தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வருகை தந்த வனத்துறையினர் பார்வையிட்டனர். சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.
    • பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே திகினாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.

    இதை தொடர்ந்து யானைகள் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தையும், டிரான்ஸ்பார்மர் கம்பத்தையும் உடைத்து சேதம் செய்துள்ளது. சத்தம் கேட்டு இரவு காவலில் இருந்த விவசாயிகள் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது 2 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை அடுத்து யானைகளை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.

    தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த 2 காட்டு யானைகளும் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன. இதன் பிறகே விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர்.

    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    அவற்றில் பெரும்பாலானவை வாட்டார் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. கடந்த வாரம் அந்த வழியாக வந்த ஒரு காரை யானை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய யானை ஒன்று வால்பாறை-பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு வந்து அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சுற்றுலா பயணிகள் யானையை கண்டதும் குதூகலம் அடைந்து செல்பி எடுக்க முயன்றனர். இதனால் மிரண்ட காட்டு யானை அந்த வாகனத்தை விரட்டியது.

    வால்பாறை-பொள்ளாச்சி சாலைக்கு வந்த ஒரு காட்டு யானை, அந்த வழியாக சென்ற காரை துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,

    வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் திரியும் யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது.
    • தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மற்றும் தலமலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியே வருகிறது. அப்படி வெளியேறும் யானைகள் ரோட்டை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக கரும்பு ஏற்றி வரும் லாரிகளில் இருந்து கரும்புகளை ருசித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் வெயில் கொளுத்தியது. மாவட்டத்தில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வந்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிகளில் வெயில் காரணமாக கடும் வரட்சி நிலவியது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து கிடந்தது.

    அதே போல் வெயில் கொளுத்தியதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை மற்றும் நீர் நிலைகளில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. இதனால் நீர் நிலைகள் தண்ணீர் இன்றி காணப்பட்டது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம், கூட்டமாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வெளியே வந்தது.

    இந்த நிலையில் தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதே போல் தொடர்ந்து வனப்பகுதிகளில் அடிக்கடி சாரல் மழை தூறு கொண்டே உள்ளது.

    இதனால் தாளவாடி வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது. இதே போல் தாளவாடி வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்ந்து பச்சை பசேலென இருக்கிறது.

    தொடர் மழையால் தாளவாடி வனப்பகுதிகளில் உள்ள வன குட்டைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் மற்றும் வன விலங்குகளில் அங்கு உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதால் பெரும்பாலான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது குறைந்தது. ஆனால் ஒரு சில யானைகள் மட்டுமே வனப்பகுதியை விட்டு வெளியேறினாலும் அவை அமைதியான முறையில் ரோட்டை கடந்து சென்று விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகள் தொல்லையின்றி சென்று வருகிறார்கள்.

    இதே போல் அநதியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதிகளிலும் யானைகள்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி வெளியேறி வந்தன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள் நிரம்பி வருகிறது.

    இதனால் வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அந்த பகுதிகளில் குட்டைகளில் தண்ணீர் குடித்து வருகிறது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவது குறைந்து உள்ளது.

    • வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ஆலள்ளி, மரகட்டா, ஜார்க்கலட்டி, நொகனூர், நெல்லுக்குந்தி, ஜவளகிரி, அய்யூர், அஞ்செட்டி போன்ற பகுதிகளில் தனித்தனியாக ஒற்றை காட்டு யானைகள் சுற்றித்திரிந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த காட்டு யானைகள் தாக்கி கடந்த 2 மாதங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில், உள்ள திப்ப சந்திரம் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு உணவுத் தண்ணீர் தேடி ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்துள்ளது. இரவு நேரத்தில் கிராமத்தின் அருகே வந்த காட்டு யானை, அங்குள்ள வீட்டின் முன்பு நின்ற நாய்களை பிளிறியபடி துரத்தி சென்றது.

    இந்த காட்சிகளை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நீண்ட நேரம் சுற்றித்திரிந்த அந்த யானை, பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றது.

    இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல்அளித்தனர். விரைந்த வந்த வனத்துறையினர் யானை வந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், அச்சுறுத்தி வரும் காட்டுயானையை அடர்ந்தவனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ஒற்றை யானையை கண்காணித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×