search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.
    • பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர், பாஜக அமைச்சர்களின் அணுகுமுறை, செயல்பாடுகள்தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    அவர்கள் ஏற்கனவே டெல்லியில் மத்திய மந்திரி மெக்வால், பாஜக தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களை சமரசப்படுத்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்தார். அவருடைய சமாதான முயற்சியும் கைகூடவில்லை.

    இதனிடையே புதுவை மாநில பா.ஜனதா செயற்குழுவில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.


    அதோடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றனர். 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் அமித்ஷாவை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு திரும்பிவிட்டனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து கூட்டத்தொடர் 15 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் சமரசம் அடையாத நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிருப்தியை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

    இது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய இறுதிகட்ட முயற்சியை பாஜக தலைமை எடுத்துள்ளது. இதற்காக நாளை (சனிக்கிழமை) பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வருகிறார். அவர் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    • வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

    ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.

    15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.

    • அரசியல் கட்சிகளும் ரேசன்கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன.
    • பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரேசன் கடைகள் மூடப்பட்டன.

    ரேசன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேசன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

    அரசியல் கட்சிகளும் ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன. நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ரேசன் கடைகளை எப்போது திறப்பீர்கள்? என பெண்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது விரைவில் ரேசன்கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டாக மூடிக்கிடக்கும் ரேசன்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான கோப்புக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதியும் அளித்துள்ளார். இதையடுத்து ரேசன்கடைகளை திறந்து மீண்டும் இலவச அரிசி, அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிகப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் கடந்தகாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிகப்பு ரேசன்கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு கிலோ ரூ.1 விலையில் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது.

    இதோடு பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி ரேசன்கடைக்கு சென்றார். வீட்டில் டென்னிஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அவர் அந்த உடையிலேயே சென்றார்.

    அங்கு ரேசன்கடை ஊழியர்களிடம் வழங்கப்படும் அரிசி, பருப்பு ஆகியவற்றை கேட்டு பெற்று அதன் தரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ரேசன்கடைகளில் மாதந்தோறும் என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது? என்ற விபரத்தையும் கேட்டறிந்தார்.

    புதுவையில் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க டெண்டர் விடப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காகவே தமிழக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டுள்ளார்.

    • சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.
    • நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணியை நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகிறது. இந்த நாய்கள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்திச்சென்று மிரட்டுவது வழக்கமாகி வருகிறது.

    கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.

    அருகில் இருந்த பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு காயம்பட்ட சுற்றுலா பயணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    • மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையிலான பலவிதமான மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

    புதுவையில் குறைந்த விலையில் விற்கப்படும் மதுபானங்களை பக்கத்து மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றும் அருந்தி வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    இந்த விஷசாராய சாவு சம்பவத்துக்கு புதுவையில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபோல் புதுவையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி சென்று குடித்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்து போனார்கள். இதனால் புதுவை சாராயக் கடைகளில் புதுவை கலால் துறை அதிகாரிகள் அனைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் புதுவையில் உள்ள மதுபான கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்களில் சிலர் கொள்ளை லாபம் ஈட்ட கலப்படம் செய்து விற்கப்படுவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப் படி தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் கலால் துறை அதிகாரிகள் புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரும் உடன் சென்றனர்.

    ஆய்வின்போது அனைத்து மது பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் பாட்டில்களின் சீல்கள் சரியாக உள்ளதா? என்றும் சோதனையிட்டனர்.

    மேலும் உயர் ரக மது பாட்டில்களில் மாதிரி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த கலால் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அங்கு மது குடித்துக்கொண்டிருந்த மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    • பா.ஜ.க. மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
    • உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்., பா.ஜனதா கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார்.

    தோல்விக்கு பொறுப்பேற்று தற்போதுள்ள அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், மற்றும் பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    ரகசிய கூட்டம் நடத்திய கையோடு, மாநில பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யுடன் டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ஆகியோரை சந்தித்தனர். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

    இதற்கிடையே பா.ஜ.க. மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், அதிருப்தி எம். எல்.ஏ.க்கள் நாளை (திங்கட்கிழமை) மாலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கும் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சர் மீது புகார் தெரிவிப்பதோடு புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்துவார்கள் என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.
    • தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி ரவுடி திருவேங்கடம், புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை, ஆகியோரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயந்து தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பிற மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். புதுச்சேரியிலும் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா உத்தரவின் பேரில் புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.

    இதே போல் அரியாங்குப்பத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.


    மேலும் தங்கும் விடுதிக்கு வருபவர்கள் விவரங்களை நிச்சயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை கேட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஓட்டல் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் யாரும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனை செய்த பின்னரே புதுச்சேரிக்கு அனுதிக்கின்றனர்.

    திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளத்திலும், கடலூர் சாலையில் முள்ளோடையிலும், விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டிலும் மற்றும் தமிழக எல்லையில் இருந்து வரும் உள்புற சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது.

    வானூர்:

    புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையோர பகுதிகளுக்கு மதுபாட்டில் கடத்தி வந்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், தென்கோடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் உருளையன்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 130 குவார்ட்டர் பாட்டில், 4 புல் பாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

    • பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
    • ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11-ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.

    இதில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராணி(16), செந்தாமரை(80), அவரின் மகள் காமாட்சி(45) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காத தால்தான் விஷவாயு உருவானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

    பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சீல் பி-டிராப் பொருத்தாததால்தான் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை துர்நாற்றம் நெடி அதிகரித்தது. இதனால் புதுநகர், மூகாம்பிகை நகர் பகுதி மக்கள் அச்சமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்று விசாரித்தனர்.

    மின்தடையால் பணி நடைபெறவில்லை. எனவே துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    சிவசங்கரன் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகளோடுஅங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரவு 9.30 மணியை தாண்டியும் மறியல் நடந்தது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் இரவு 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    • புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
    • புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    சவால்கள் நிறைந்த காலத்தில், குறிப்பாக எதிர் கட்சிகள் பலமான கூட்டணியை தாண்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது. புதுவை தொகுதியில் பாஜக தீவிரமாக போட்டியிட்டு 30 சட்டமன்ற தொகுதியிலும் கடுமையாக உழைத்து தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

    தேர்தலில் சுமார் 3 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளோம். இது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் வளர்ச்சி. இன்னும் 2 ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. 2026 தேர்தலுக்கு முன்பாக சமூகவலைதளங்களில் காங்கிரசின் குடும்ப அரசியல், துஷ்பிரயோகங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.


    புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வேலைகளை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.

    புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும். தேசிய தலைவர் நட்டா, மோடி ஆகியோர் வழிகாட்டுதல்களோடு இந்த பிரச்சனைகளை களைவோம்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெறும். புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவும். புதுவை மீது மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வி.பி.சிங். நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது46). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் சுபிக்ஷா (வயது13). அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை கொடுத்தனர்.

    ஆனாலும் மறுநாள் காலை காய்ச்சல் அதிகரித்ததால் சுபிக்ஷா பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மதியம் 3 மணி முதல் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார், மாலையில் அங்குள்ள தனியார் கிளினிக் டாக்டரிடம் சுபிக்ஷாவை காண்பித்தனர்.

    அங்கிருந்த டாக்டர் கதிர்காமம் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தார். அதன்படி இரவு 10 மணிக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம் சீராக வில்லை.

    மேலும் இ.சி.ஜி.யும் சீராக இல்லாததால் நள்ளிரவு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபிக்ஷா, பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
    • பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள்.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் இன்று புதுவையில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சார்பில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதன்பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவது நமக்கு நாமே சேர்த்துக்கொள்ளும் சிறப்பு. இந்த புனிதநாளில் தான் முத்துக்குமரப்ப ரெட்டியார் மறைந்துள்ளார். ரெட்டியார் சமூகம்தான் புதுவையில் அதிகளவு நிலம் வைத்திருந்தனர். அந்த சமூகத்திலிருந்துதான் முத்துக்குமரப்ப ரெட்டியார் சோசலிச இயக்கத்தை ஆரம்பித்து பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிராக விடுதலை போராட்டத்தை தொடங்கினார்.

    நெட்டப்பாக்கத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களுக்கு விடுதலை பெற்று, முதல் முதலாக தேசியக் கொடியை, சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த பெருமைக்குரியவர். சமுதாய நலனே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளனர். அவர்களின் வழியில் நம் பயணத்தை தொடர்வதுதான் நம் சமூகம் முன்னேற உகந்ததாக அமையும்.

    ஓரிரு நாளில் புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும். இந்த முறை பட்ஜெட் சிறப்பாக அமைய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    எந்த திட்டங்கள் பாதியில் நிற்கிறதோ அதற்கு முன்னுரிமை கொடுத்து முடிக்கப்படும். எழுச்சி மிகு புதுவை என்பதே எங்கள் நோக்கம், அதற்கான பயணம் தொடரும்.

    அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் விரைவில் இலாகா ஒதுக்கு வார் என நம்புகிறேன். பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள். புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி முதலில் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    என்கவுண்டர் கூடாது என்பதல்ல என் கருத்து. என்கவுண்டர் வராமல் இருக்க ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையிலான கட்ட பஞ்சாயத்துகள் இருக்கக்கூடாது என்பதே என் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×