என் மலர்
புதுச்சேரி
- வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.
புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது.
- காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.
பிரதமர், முதல்-அமைச்சர் படம் மட்டும் அரிசி மற்றும் கோதுமை வழங்கும் பையில் இருந்தால் போதும் என கவர்னர் அறிவுறுத்தியதால், அவரின் படம் அச்சிடவில்லை என்றார்.
அப்போது த.வெ.க. தலைவர் விஜய், ரேஷன் கடைகள் செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்களை விசாரித்தால் ரேஷன்கடைகள் மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுவதை அறிந்து கொள்ளலாம். குறைகள் இருந்தால் சொல்லாம் என பதிலளித்தார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 386 ரேஷன்கார்டுகள் உள்ளது. காரைக்காலில் 60 ஆயிரத்து 225, மாகியில் 7 ஆயிரத்து 981, ஏனாமில் 15 ஆயிரத்து 498 என மொத்தம் 3 லட்சத்து 47 90 ரேஷன்கார்டுகள் உள்ளன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்துக்கு 521, காரைக்காலுக்கு 120, மாகிக்கு 16, ஏனாமுக்கு 31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதம் ரூ.3.25 கோடி செலவாகும் என்றார்.
- புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்
- லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார்
நீலம், வெள்ளை, சிவப்பு நிறத்தில் கையில் வேலேந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள், நெற்கதிருடன் LJK என பதிக்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்டது
கட்சியின் கொடிக்கு மும்மத பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.
இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
தற்போது புதிய கட்சியை தொடங்கியுள்ள சார்லஸ் மார்ட்டின், அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
- ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.
இதற்காக ஆண்டுதோறும் புதுச்சேரி மின்துறை வருவாய், செலவினங்களை ஆணையத்திடம் சமர்பிக்கும். வரவு, செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்பிக்கும்.
இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஓட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்பிக்கும். இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டண உயர்வை நிர்ணயம் செய்யும்.
பெரும்பாலும் புதுச்சேரி அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று அதற்கான அனுமதியை வழங்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அரசே மின் கட்டண உயர்வை ஏற்கும் என அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடி மின்துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா? என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளது. இதற்கான கோப்பு ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு ரூ.10 கோடி வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2025-2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப் பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்குமா? என இனிமேல்தான் தெரியவரும்.
- விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 12 நிமிடம் உரையாற்றிய அவருடைய பேச்சில் தெளிவுகள் இல்லை. புதுச்சேரி பற்றி புரிதல் விஜய்க்கு இல்லை.
மத்திய அரசு நிதி உதவி, சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதி, ரேஷன் கடை உள்ளிட்டு அனைத்துமே புதுச்சேரியில் உள்ளது. இதனாலேயே விஜய் பேசிய அனைத்து கருத்துகளும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய்யை கட்சி தொடங்க சொன்னதே புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தான். அப்படி இருக்கும் போது புதுச்சேரியில் விஜய் பொது கூட்டத்திற்கு ரங்கசாமி அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல என்றார்.
- புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது.
- எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கள், எஸ்.பி.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விஜய் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநில காவல்துறை 2 நிலைகளில் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கி கடைபிடிக்க வழிமுறைகள் வகுத்தது. புதுச்சேரி மாநிலம் 90 நாட்களுக்குள் 80 சதவீத குற்றபத்திரிகையை தாக்கல் செய்து இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 60 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் பிரிவில் கேரளா, புதுச்சேரி முதலிடத்தை பெற்றுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை மந்திரி புதுச்சேரி அரசை பாராட்டியுள்ளார். அகில இந்திய அளவில் பாகூர் போலீஸ் நிலையம் 8-ம் இடம் பிடித்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது.
பாகூர் போலீஸ் நிலைய போலீசார் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். வாரந்தோறும் காவல் துறையினர் மக்கள்மன்றம் நடத்தி குறைகளை தீர்த்து வருகின்றனர்.
இதுவரை 10 ஆயிரத்து 866 புகார் மனு பெற்று 98 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த டி.ஜி.பி., ஐ.ஜி. மாநாட்டில் புதுச்சேரியில் நடைபெறும் மக்கள் மன்றத்தை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் இதை நடத்த அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் புதுச்சேரி மாநிலத்துக்கு கவுரவம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் போது த.வெ.க. நிர்வாகிகளிடம் எனது வேலையை ஒழுங்காக செய்ய விடுங்கள் என்று ஆவேசமாக பேசியவர் ஆவார். இவரது இந்த ஆவேசமான பேச்சு சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
- சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
- தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தேர்தல் கூட்டணி ஜனவரி மாத இறுதியில்தான் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க புதிது, புதிதாக அரசியல் கட்சிகள் களம் இறங்கி வருகிறது. இந்த புதிய அரசியல் கட்சிகளில் தொகுதிதோறும் பிரபலமாக உள்ள வேட்பாளர் பிரமுகர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
சிலர் தற்போதே விரும்பிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். தங்கள் வேட்பாளர் பிரமுகர்களை பாதுகாக்க வேண்டிய பணியில் ஒவ்வொரு கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.
இதில் காங்கிரசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும்.
தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் முன்பாகவே காங்கிரஸ் 30 தொகுதிக்கும் விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது.
இதன்மூலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்த தொகுதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தனது யுக்தி மூலம் தங்களிடம் உள்ள வேட்பாளர் பிரமுகர்களை தக்க வைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.
புதுச்சேரியை பொறுத்தவரை இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் துறை அறிவிக்கும் வரை கட்சி தாவல்கள் சகஜமாகவே இருக்கும். இதனால் காங்கிரசின் புதிய யுக்தி கைகொடுக்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
- சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
- 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளுக்கான 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா, டிசம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், 746 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்த 191 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு முதல் 191 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு முதல் 192 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் 186 பேருக்கும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்படும். மொத்தம், 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய்பாணியில், அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டி வந்தவர்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டி
டிசம்பரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் பெயரை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு 'லட்சிய ஜனநாயக கட்சி' எனப் பெயரிட்டுள்ளார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய போது தனது கட்சியின் பெயரை அறிவித்தார். "மனித உரிமைகளைப் பரப்புதல் - உலகளாவிய கல்வியின் சக்தி" என்ற கருப்பொருளின்கீழ், பேசியபோது தனது கட்சிப்பெயர் "லட்சிய ஜனநாயக கட்சி" என அறிவித்தார். இந்த அறிவிப்பு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அவையில் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்.இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.

ஐ.நா. சபையில் சார்லஸ் மார்ட்டின்
இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தார். இந்நிலையில் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். புதுச்சேரியில் விரைவில் தொடக்க விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
- நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த தீபாவளி பண்டிகைக்கும் மளிகை, எண்ணெய், சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பாசிப்பருப்பு என ரூ.750 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இந்த பரிசு தொகுப்பில் 4 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ பாசிப்பருப்பு, 300 கிராம் பாண்லே நெய், ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அடங்கிய பை வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள், கவுரவ ரேஷன் கார்டுதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இந்த பரிசு தொகுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. கான்பெட் நிறுவனம் பரிசு தொகுப்பு கொள்முதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதில் நெய் அரசின் கூட்டுறவு நிறுவனமான பாண்லேவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று விஜய் குற்றம்சாட்டினார்.
- த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் மத்திய பா.ஜ.க. அரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் என்.ஆர்.காங்கிரசையோ, முதலமைச்சர் ரங்கசாமியையோ, த.வெ.க. தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. அதற்கு மாறாக முதலமைச்சர் ரங்கசாமியை புகழ்ந்து பேசினார்.
அவர் பேசும்போது, வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு எழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்து கொள்கிறது. இந்த புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்ததற்காக அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அதேநேரத்தில் பா.ஜ.க.வை விஜய் விமர்சனம் செய்தார். மத்திய பா.ஜ.க. அரசு மாநில அந்தஸ்து தரவில்லை, மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்கவில்லை, புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் வெளியேறும் என்ற பேச்சு உள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் ஏற்கனவே நட்புணர்வு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றதும் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ரங்கசாமி பேசினார். நேற்று நடந்த த.வெ.க. பொதுக் கூட்டத்தில் விஜய் பேசியதை முதலமைச்சர் ரங்கசாமி செல்போனில் நேரலையில் பார்த்து ரசித்து கேட்டார்.
இதனால் ரங்கசாமி வருகிற சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் விமர்சிக்காதது இதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. இதனை அரசியல் நோக்கர்கள் என்.ஆர்.காங்கிரஸ், த.வெ.க. கூட்டணிக்கு அச்சாரமாக கருதுகின்றனர்.
- கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது.
- பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அவரை பார்க்க சுமார் 5 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள், தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றனர்.
இதனால் மைதானம் அலங்கோலமாக காணப்பட்டது. கூட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்றதும், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் தன்னார்வலர்களுடன் இணைந்து, மைதானத்தில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.






