என் மலர்
புதுச்சேரி
- தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் மேலும் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்றும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூரி, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக நாளை புதுச்சேரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
- போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர்.
புதுச்சேரி:
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி பெயரில் புதுவையில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்தமெய்யப்பன் (46) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் போலிமாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த குடோன்களில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அங்கு அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே டெல்லி மற்றும் ஆந்திராவிலும் போலி மாத்திரைகள் புழக்கத்தில் இருந்ததால் அந்த மாநில போலீசார் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது ஆந்திரா மற்றும் டெல்லி போலீசாரும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் 8 குடோன்களில் போலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அந்த குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
- விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.
அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.
அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர்.
- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது சீர்காழியை சேர்ந்த ரானா, காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் என தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 பேரையும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர். அப்போது கதவுகள் மூடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொழிற்சாலைக்கு வந்த டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் போலி மருந்து தொழிற்சாலை மற்றும் குடோன்களை சோதனையிட்டு போலி மருந்துகளை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வுக்காக மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி குழுவினரிடம் ஒப்படைத்தார்.
அதேபோல் 4 குடோன்களில் இருந்த பல கோடி மதிப்புள்ள போலி மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து, தொழிற்சாலை மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்தனர்.
- பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார்.
- புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் என்றார்.
புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், கடந்த செப்டம்பர் மாதத்தில் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 25 ஆண்களுக்கு மேலாக இருந்த பாஜகவில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சுவாமிநாதன் தவெகவில் நாளை இணைவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் விஜயை நேரில் சந்தித்து அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
- முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை முத்திரைப்பாளையம் பகுதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை முத்திரைப்பாளையம், மேட்டுப்பாளையம், சாணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி அருகில் பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை பொதுப் பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
- இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான கனிய முதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மின்துறை அனைத்து வீடுகளின் மின் மீட்டர்களை மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட வினியோகத்துறை திட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மத்திய அரசின் நிறுவனமான பி.எப்.சி.சி.எல். நிறுவனம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் மீட்டரை மாற்றுவதற்காக நுகர்வோர்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுமுற்றிலும் இலவசம். இந்த ஸ்மார்ட் மீட்டர்களால் மனித தவறுகளால் ஏற்படும் பிழைகள் மற்றும் சரியான நேரத்தில் பில் வராதது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.
நுகர்வோர் தங்களின் தினசரி மின் பயன்பாட்டை செல்போன் செயலி மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் தானியங்கி முறையில் ஸ்மார்ட் மீட்டர்கள் நுகர்வோர்களின் மின் தடங்கல்களை உடனுக்குடன் மின்துறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும் வசதி உள்ளது.
எனவே பொதுமக்கள் புகார் அளிக்க அவசியமில்லை. மின் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்படும். மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கட்டண வரிகள் எவ்வித மாற்றமுமின்றி 'போஸ்டு பெய்டு' கட்டணம் முறையே தொடரும்.
முதல் கட்டமாக இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சோலார் பொருத்தப்பட்ட வீடுகள், அரசுத்துறை, அரசு சார்ந்த உபயோகம், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பழுதடைந்த மீட்டர் உள்ள நுகர்வோர்கள் மற்றும் அதிக மின் பயன்பாட்டாளர்களுக்கு பொருத்தப்படுகின்றது. புதிய மின் இணைப்பு பெறுவோர் மற்றும் விருப்பமுள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
இந்த மீட்டர் தரம் ஏற்கனவே தேசிய தரக்கட்டுபாடு மையத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 சதவீதம் நுகர்வோர்களின் வீட்டில் 3 மாதங்களுக்கு பழைய மீட்டருடன் ஸ்மார்ட் மீட்டரையும் பொருத்தி, மின் பயன்பாட்டை ஒப்பீடு செய்து பிழை ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
- அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 01.07.2016-ம் ஆண்டு 7-வது ஊதிய குழு பரிந்துரை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் சில அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை சம்பளம் வேண்டாம் என்று கூறி 6-வது ஊதியக் குழுவின் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக தன்னாட்சி, கூட்டுறவு நிறுவனங்களில் 6-வது ஊதிய குழு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அண்மையில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு தன்னாட்சி நிறுனங்களில் 6-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
அதனடிப்படையில், புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 6-வது ஊதியக் குழு சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
இந்த அகவிலைப்படி 01.07.2025 முதல் 252 சதவீதத்தில் இருந்து 257 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இந்த 5 சதவீத அகவிலைப்படி உயர்வு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசுக்கு ஆண்டிற்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- விஜய் பாணியில் அரசியல் பிரவேசம்.
- காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் சார்லஸ் மார்ட்டின்.
ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மல்லை சத்யா நேற்று திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், டிசம்பரில் தானும் ஒரு கட்சியைத் தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வருபவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வருபவர். இதனால் சார்லஸ் பாஜகவின் 'பி டீம்' எனவும் புதுச்சேரி காங்கிரஸ் பல விமர்சனங்களை முன்வைத்தது.
இந்நிலையில் டிசம்பரில் தான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். 2026-ல் பாஜக சார்பில் போட்டியிடுவார் என பலரும் நினைத்திருந்த நிலையில், திடீரென புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஜார்லஸ், "டிசம்பர் மாதத்தில் கட்சி அறிவிக்கப்படும். தொடர்ந்து பாதயாத்திரை உள்ளிட்ட விஷயங்களை திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 30 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஜே.சி.எம் மக்கள் மன்றம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர்.
- முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில் அனைத்து திட்டங்களையும் என்.ஆர்.காங்கிரஸ்.,- பா.ஜ.க. கூட்டணி அரசு வேகப்படுத்தி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு தற்போது வழங்கப்படும் மாதத்தொகை ரூ.2 ஆயிரத்து 500 உயர்வு, மஞ்சள் ரேசன் கார்டு குடும்ப தலைவிகளுக்கும் மாத உதவி தொகை, முதியோர், விதவை உதவி தொகை ரூ.500 உயர்வு, அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை ஆகிய திட்டங்கள் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை கவரும் வகையில் முதல்-அமைச்சரின் புதுமை பெண்கள் என்ற பெயரில் ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ்,
* பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு கவர்னர் கைலாஷ்நாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
* இந்த திட்டத்தில் பயன்பெற புதுவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்ததன் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துகு்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் தேதியில் விண்ணப்பதாரரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
* ஒரு குடும்பத்தில் ஒரு பெண் அல்லது மாணவிக்கு மட்டுமே வாழ்நாளில் ஒருமுறை இந்த உதவி பெற தகுதியுடையவர் ஆவர். நீடித்த நோய் அல்லது இ-ஆட்டோ மானியத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் விண்ணப்பதாரர் தகுதியற்றவர்.
* விண்ணப்பதாரர் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மோட்டார் சைக்கிள் கியர் இல்லாத அல்லது மோட்டார் சைக்கிள் கியர் கொண்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* முதுகலைப் பட்டப்படிப்பாக இருந்தால், இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டப்படிப்பு மாணவியாக இருந்தால், முதுகலைப் பட்டப்படிப்புத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
* தூரமான பகுதிகளில் வசிக்கும் பணிபுரியும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணிபுரியும் பெண்கள், வேலைக்கான போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு நடத்தப்பட உள்ளது. இ-ஸ்கூட்டரின் விலையில் 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பி.எம்.இ.டிரைவ் திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். தேர்தலுக்கு முன் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
- நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
- பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க.வில் ஜெ.பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர்.
இவர் கடந்த 2006 முதல் 2011 வரை புதுவை நகராட்சி கோலாஸ் நகர் வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திடீரென இன்று அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதா அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுவை நகராட்சியில் கவுன்சிலராகவும், 2 முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன்.
2021-ம் ஆண்டு கட்சி பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள்.
நான் தொடர்ந்து கட்சி பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள்.
மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கட்சி வளர்ச்சிக்கும் வார்டு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை செய்து மக்களிடம் நற்பெயரும் பெற்றுள்ளேன்.
தற்போது என்னால் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற இயலாத சூழல் உள்ளது. எனவே நான் வகித்து வரும் புதுவை மாநில ஜெ.பேரவை செயலாளர் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன். கட்சி சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடியார், எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் அண்ணன் அன்பழகன் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். பதவி விலகிய பாஸ்கர் மாற்று கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.






