என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
    • ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த ஒரு சில விதிகள் புதுச்சேரி அரசால் திருத்தப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவர் இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதே போல் 2025-26-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வீதம் விடுபட்ட 328 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணம் மீனவர்கள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.

    • மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது.
    • ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.

    இந்நிலையில், 'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றுவது தொடர்பாக பிரதமர் மோடி மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இது கேரள மாநில மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது நமது சிறந்த கலாச்சாரத்துடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

    • பாலத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கட்டை வைக்கப்பட்டு உள்ளது.
    • மேம்பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் புதுச்சேரி திருவண்டார் கோவில் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கட்டை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக கோவை நோக்கி நள்ளிரவு 12 மணியளவில் சுற்றுலா வேன் சென்றது.

    திருவண்டார் கோவில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இதில் மேம்பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விசாரணை முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
    • இந்த வழக்கில் மற்ற 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் வில்லேந்தி (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான விநாயக மூர்த்தி (42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வில்லேந்தி கடந்த 9.7.2008-ம் ஆண்டு அவரது உறவினர்களான மகி, ரவிச்சந்திரன் ஆகியோருடன் நெட்டப்பாக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது விநாயகமூர்த்தி மற்றும் அவரது கூட்டளிகள் பாக்யராஜ், ஸ்ரீதர், கிருஷ்ணன், குப்பன் ஆகியோர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வில்லேந்தி, மகி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விநாயகமூர்த்தி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர் சல் முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதில் விநாயமூர்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மற்ற 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    • தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார்.
    • சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கூட்டணிக்காக காத்திருக்கிறது. த.வெ.க.வை காட்டி காங்கிரஸ் தி.மு.க.வுடன் தனது பேரத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் த.வெ.க. உள்ளது.

    புதுச்சேரியை பொறுத்தவரை ஆளும் என்.ஆர்.காங்கிரசுக்கும், த.வெ.க.வுக்கும் கூட்டணி ஏற்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப த.வெ.க. பொதுச்செயலளர் புஸ்சி ஆனந்த் மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய் இடையே நட்புறவு இருந்தது.

    ஆனாலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசின் உதவியின்றி நிர்வாகத்தை செயல்படுத்துவது கடினம். இதையெல்லாம் உணர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.

    இந்த நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. இதையடுத்து புதுவைக்கு 30 பேர் கொண்ட நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம்.

    சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர். புதுச்சேரி மக்களும் அரசியல் கட்சிகளை தாண்டி அவர்களுக்கு வாக்களிப்பது வழக்கம். இதனால் தமிழகத்தை போல புதுச்சேரியில் விஜய்யை மட்டும் முன்னிறுத்தி அரசியல் கட்சியாக த.வெ.க. காலூன்றுவது கடினம்.

    தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார். தமிழகத்தில் 1967-ல் தி.மு.க. முதலமைச்சராக அண்ணா துரையும், 1977-ல் அ.தி.மு.க. முதலமைச்சராக எம்.ஜி.ஆரும் ஆட்சியில் அமர்ந்தனர். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே 1972, 1974 என 2 முறை புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது.

    அதுபோன்ற மாற்றம் ஏற்பட புதுச்சேரியிலும் த.வெ.க. காலூன்ற விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியிலும் விசில் சத்தம் ஒலிக்கும்.

    • கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
    • புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14-ந்தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஒரு சில தொகுதிகளை மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவைக்கு பிரதமர் வருகை, தொகுதி பங்கீடு குறித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள்தான் இந்த சந்திப்பு நடந்தது.

    இதன் பின்னர் சுரானா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும். அதேநேரத்தில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு, நிர்மல் குமார் சுரானா வெளியேறியுள்ளார்.

    புதுவையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

    ஏற்கனவே தமிழகத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என ரங்கசாமி கூறியிருந்தார். அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

    இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலத்துக்கு, மாநிலம் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பார்கள்.

    இதுபோல கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    ஆனால் புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.

    அதுபோல தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கப்படாமல் இழுபறியாக இருந்து வருகிறது.

    த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்கள் சீட்டு, துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை தி.மு.க. பக்கம் செல்ல முடியாத அளவிற்கு நிறுத்தி வைத்திருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தலைவர் செல்வப்பெருந்தகை மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறாரே தவிர ராகுல் காந்தி கூட்டணி குறித்து இதுவரை எதுவும் கூறாமல் உள்ளார்.

    இதனால் எரிச்சல் அடைந்துள்ள தி.மு.க. தலைமை கூட்டணி ஆட்சி கிடையாது என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் த.வெ.க.,வால் தங்களை மதிக்காமல் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தி.மு.க., தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதில் தி.மு.க. தலைமையில் அமைக்கும் அமைச்சரவையில் முதல்-அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர் பதவிகளை தி.மு.க.வே வகிக்கும். இதற்கு கூடுதல் இடங்களில் வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.

    கடந்த தேர்தல் போல் இல்லாமல் புதுச்சேரியில் கூட்டணியில் 15 இடங்கள் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு, 2 கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை கூட்டணியுடன் போட்டியிடுவது என தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகவே கங்கிரஸ் அல்லாத கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. ஆலோசனை நடத்தியுள்ளது.

    • அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
    • தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

    காரைக்கால்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காரைக்கால் வந்தார். காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக அவர் கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் தாமரை சின்னத்துக்கு வர்ணம் தீட்டினார். நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அவர் எழுதினார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு காரைக்கால் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டுச்சேரி பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

    அதற்கான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது அவர் பங்கேற்கும் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற செய்யும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 நாள் பயணமாக தமிழக மற்றும் புதுவை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.
    • புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

    புதுச்சேரியில் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் பா.ஜக. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார்.

    அவருடன் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான மன்சுக் மாண்டவியா, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் வந்தனர். திருச்சி வந்த அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை அமித்ஷா நட்சத்திர ஓட்டலில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடந்தது. இதில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றி வியூகம், தொகுதி பங்கீடு, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முன் தேதியிட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் கோடை சிறப்பு தொகுப்புடன் சேர்த்து ரூ.5,000 வழங்கியதால் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கம் ஆகியவை தொடர்பாக அமித்ஷா விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இதனை எதிர் கொண்டு பெண் வாக்காளர்களை பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பக்கம் திருப்பி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் மத்திய மந்திரி அமித்ஷா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்துக்கு வந்தார்.

    அங்கு அவரை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அமித்ஷா அங்கிருந்து காரில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை வழியாக நகராட்சி சந்தை திடலை அடைந்தார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ர காளியம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். உலகின் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    நான் இங்கு வந்திருப்பதற்கு 2 நோக்கங்கள் இருக்கின்றன. முதல் நோக்கம் நமது பிரதமர் மோடி தலைமையிலும், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலும் இத்தனை ஆண்டு காலம் என்ன நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியலை, அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்க வந்திருக்கிறேன்.

    இந்த இந்தியா கூட்டணி இருக்கிறதே இவர்களுடைய தீய நோக்கம், அந்த திரையை கிழித்து எறிவதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 வேலைகளை செய்து இருக்கிறது. ஒன்று ஊழலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 2-வது விஷயம் முன்பு இங்கு இருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரியை டெல்லிக்கு அடிமையாக ஆக்கி வைத்திருந்தது.

    ஆனால் எங்கள் அரசு இங்கு சுயமாக செயல்படும் அரசுக்கு ஆதரவு அளித்து அதை உருவாக்கி இருக்கிறது. 3-வது பணி புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மையை நாங்கள் அமைத்திருக்கிறோம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.

    மோடி பிரதமராக ஆன பிறகு 2019-ல் முதல் முறையாக புல்வாமாவில் தாக்குதல் நடந்த பிறகு அவர்களின் வீடு புகுந்து தாக்கினோம். வான் வழியே சென்று தாக்குதல் தொடுத்தோம். முதல் துல்லிய தாக்குதல், பிறகு வான்வழி தாக்குதல், நிறைவாக ஆபரேஷன் சிந்தூரை அரங்கேற்றினோம். அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.

    பிரதமர் மோடியின் அரசை பார்த்து எந்த ஒரு தீய சக்தியும் கண்ணெடுத்து கூட பார்க்க முடியாது. இந்தியாவுக்கு பிரதமர் மோடி வலிமையை மட்டும் அளிக்கவில்லை. போதுமான பாதுகாப்பையும் அளித்துள்ளார். புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

    புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. புதுச்சேரியின் உரிமைகளை ஏலத்தில் விட்டவர் நாராயணசாமி. ரூ.15 ஆயிரம் கோடி என்பது புதுச்சேரியின் 3 ஆண்டு பட்ஜெட். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்தவர் நாராயணசாமி. அவரது ஆட்சியின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். நாராயணசாமிக்கு டெல்லி கஜானாவை நிரப்புவதுதான் வேலையாக இருந்தது. காங்கிரசால் புதுச்சேரி பின்னடைவை சந்தித்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரைக்கால் பா.ஜ.க. கிளை கமிட்டி நிர்வாகி ஒருவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

    அதன்பிறகு அமித்ஷா மாலையில் மீண்டும் திருச்சி புறப்பட்டு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்படுகிறார். அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால், திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
    • என்.ஆர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு.

    காரைக்காலில் நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் ரங்கசாமி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    அப்போது சட்டசபை தேர்தலில் கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்ப்பது மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    ஏற்கனவே, பா.ஜ.க-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது மற்றும் பா.ஜ.க மற்றும் என்.ஆர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

    • காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    பள்ளி கல்வி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் அவசியம். அதற்காக காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.

    ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலையை புதுச்சேரி அரசு உருவாக்கி அதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு 37 பேர் மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். இது மட்டுமின்றி என்ஜினீயர், செவிலியர் கல்லூரி என அனைத்து கல்லூரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.

    இப்போது மாணவர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் 6-ம் வகுப்பில் இருந்து லேப்டாப் கொடுத்தால் எளிதாக இருக்கும் என என்னிடம் கேட்டனர்.

    எனவே அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
    • காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வருகிறார்.

    காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் காலை 11 மணியளவில் அமித்ஷா வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு சாலை வழியாக சென்று, நகராட்சி திடலில் மதியம் 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றார். அமித் ஷாவின் வருகையையொட்டி சாலை முழுவதும் பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் இருந்து 350 போலீசார் வர உள்ளனர். மேலும் 7 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    6 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். செண்டை மேளம், தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மேலும், அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களில் கொடி, தோரணங்கள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விழா கோலம்போல காட்சியளிக்கிறது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மாநில பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் காரைக்காலிலேயே முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×