என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly election"

    • தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
    • தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    அந்த வகையில் தமிழக பா.ஜ.க. கட்சியும் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி உள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே தமிழகம் வந்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.

    மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக பா.ஜ.க. கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிர் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழகம் முழுவதும் 66 மாவட்ட தலைவர்களும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, நிர்வாகிகள் அனைவரும் எப்படி பணியாற்ற வேண்டும், தேர்தலை சந்திப்பதற்கு என்னென்ன விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி கூறினார்.

    கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய பயிற்சி முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் பா.ஜ.க. தலைவர்கள், கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய தகவல்களை வெளியிடுகிறார்கள்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது பற்றியும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க. கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலிமை பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகனுடன் அவரது காரில் ஒன்றாக வந்து இறங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவருக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அட்சதை தூவி வரவேற்றனர். இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை வழக்கத்துக்கு மாறாக கலர் சட்டை அணிந்து வந்திருந்தார்.

    இன்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அடையாள அட்டையை பார்த்த பிறகே அனைத்து நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையை நடிகை நமீதா சால்வை அணிவித்து வரவேற்றார்.

    பா.ஜ.க. அலுவலகம் முன்பு கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாழை மரங்களும் கட்டப்பட்டு பா.ஜ.க. அலுவலக சாலை விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார்.
    • கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது. இதையொட்டி கட்சிக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 10-ந்தேதி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடக்க உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்க உள்ளார். மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.

    மாநிலத்தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    • நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.
    • அடுத்த விசாரணை ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் விளைவாக, 35 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் ஆய்வின்படி, சுமார் 12.5 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்திருந்தும், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. 17.5 லட்சம் வாக்காளர்கள் பீகாரை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டனர்.

    5.5 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்துள்ளனர். நேபாளம், வங்கதேசம்மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.

    வாக்காளர்கள் தங்கள் படிவங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் ஜூலை 25 வரை கால அவகாசம் தந்துள்ளது.

    இந்தத் திருத்தப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த வாக்காளர் நீக்கம் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

    குறைந்த அளவிலான நீக்கம்கூட ஒரு தொகுதிக்கு ஆயிரக்கணக்கான வாக்காளர்களைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    வாக்காளர் தகுதியைச் சரிபார்க்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

    இந்த நடவடிக்கையானது பீகாரின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
    • மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மக்களை சமாதானப்படுத்த முடியாவிட்டால், அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.

    மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாக, அவர் மக்களையும் அவர்களின் ஆணையையும் நிராகரிக்கிறார். மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கிறார்.

    ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொண்டு, நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள், மக்களுடனான உங்கள் தொடர்பு எங்கே இல்லை, அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்வது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.

    ஆனால் ராகுல் காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைவராக உள்ளார். பீகார் உள்பட வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்கால தோல்விகளுக்கு காங்கிரஸ் தலைவர் தனது சாக்குபோக்குகளைத் தயாரித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க.வுக்கு அடுத்த ஆண்டே ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறிய நிலையில் பொதுச்செயலாளர் பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.
    • இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.

    அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தே.மு.தி.க.வுக்கு அடுத்த ஆண்டே ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. கூறியதால் பொதுச்செயலாளர் பிரேமலதா அதிருப்தியில் உள்ளார்.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம்,

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். கூட்டணிக்கு அவரை வரவேற்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    * இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.

    * என்னைப் பொறுத்தவரை அவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம்.
    • நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.

    182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் (பாஜக) ஒரு வருடத்திற்கு முன்பு முதல்வரை மாற்றினார்கள். முதலில் விஜய் ரூபானி இருந்தார். அவருக்கு பதில் பூபேந்திர பட்டேலை ஏன் மாற்றினார்கள்? அப்போது விஜய் ரூபானியிடம் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

    விஜய் ரூபானியை தேர்வு செய்தபோது பொதுமக்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை. இது டெல்லியில் இருந்து எடுத்த முடிவு. ஜனநாயகத்தில் யார் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். 2016ல் நீங்கள் (பாஜக) கேட்கவில்லை. 2021ல் நீங்கள் கேட்கவில்லை.

    ஆனால் ஆம் ஆத்மி கட்சியில் நாங்கள் இதை செய்யவில்லை. நீங்கள் யாரை முதலமைச்சராக விரும்புகிறீர்கள் என்பதை பொதுமக்களிடம் கேட்டுத் தீர்மானிக்கிறோம். பஞ்சாபில் யார் முதலமைச்சராக வேண்டும் என்று மக்களிடம் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மக்களின் விருப்பத்திற்கு, நாங்கள் பகவந்த் மான் என்று பெயரிட்டோம்.

    குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் முதல்வர் வேட்பாளர்தான் குஜராத்தின் அடுத்த முதல்வர். எனவே இன்றே உங்கள் முதல்வராக யார் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

    இதற்காக, பொதுமக்களின் கருத்தை அறிய, 6357000360 என்ற எண்ணை வழங்குகிறோம். இந்த எண்ணில் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் செய்தி அனுப்பலாம் அல்லது குரல் செய்தி அனுப்பலாம். aapnocm@gmail.com என்ற மின்னஞ்சலும் செய்யலாம். எனவே, பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    நவம்பர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த எண் செயல்படும். முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி பொதுமக்களின் முன்வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • தேர்தல் அறிவிப்பு தொடர்பாக இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

    குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது.

    அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு 40 நாட்கள் இடைவெளி உள்ளது.

    தேர்தல் விதிகளின்படி, ஒரு மாநில தேர்தலின் முடிவு மற்றொன்றை பாதிக்காத வகையில், இரண்டிற்கும் குறைந்தபட்சம் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இன்று பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து அறவிக்க உள்ளார்.

    • 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
    • 55 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்றைய தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

    55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று தமது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை போட்டியிட்டாலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிரசும் உள்ளன. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ந் தேதி எண்ணப்படுகிறது.

    • திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.
    • அடுத்த ஆண்டு கோடை காலத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.

    புதுடெல்லி :

    புதிதாக பிறந்துள்ள 2023-ம் ஆண்டில், அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. முதலில், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    3 மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே கூறியுள்ளது. இந்த மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது.

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. நாகாலாந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சி நடத்துகின்றன.

    3 மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகாவில் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு சட்டசபை பதவிக்காலம் மே 24-ந் தேதி முடிவடைகிறது.

    கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.

    இந்த ஆண்டின் பிற்பாதியில் மிசோரம், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இம்மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

    5 மாநிலங்களிலும் தேர்தல் ஒன்றாகவே நடக்க வாய்ப்புள்ளது. மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியும் ஆட்சி நடத்துகின்றன.

    மேற்கண்ட 9 மாநிலங்களுடன் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. அங்கு 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. கடந்த நவம்பர் 25-ந் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு கோடை காலத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு நிலவரத்தை பொறுத்து, தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.

    அடுத்த ஆண்டு (2024) கோடை காலத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த சட்டசபை தேர்தல்கள் அரை இறுதி பந்தயமாக கருதப்படும் என்று தெரிகிறது.

    • மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடந்தது.
    • நாகாலாந்தில் 82 சதவீதமும், மேகாலயாவில் 74 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன.

    மேகாலயாவில் 21.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இங்கு ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் இருந்தனர். இவர்கள் 4 பேரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டசபையின் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக இருப்பார்.

    நாகாலாந்தில் 13.17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் பா.ஜ.க. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜ.க. கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதுபோல காங்கிரஸ் 23 இடங்களிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதியிலும், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

    இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடிக்கு முதலில் வந்த 5 வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

    இறுதியில் மேகாலயாவில் 82.42 சதவீத வாக்குகளும், நாகாலாந்தில் 74.32 சதவீத வாக்குகளும் பதிவானது.

    திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து திரிபுராவுடன், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
    • நாகாலாந்தில் என்.டி.பி.பி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்.

    புதுடெல்லி:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. 3 மாநிலங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    திரிபுராவில் பா.ஜ.க. 36-45, இடது சாரிகள் 6-11 டி.எம்.பி. 9-16 இடங்களைப் பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

    திரிபுராவில் பா.ஜ.க. 36-45 இடதுசாரிகள் 6-11 இடங்களைப் பெறும் என என் டிவி கணிப்பை வெளியிட்டுள்ளது.

    நாகாலாந்தில் என்.டி.பி.பி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்.

    மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    மேகாலயாவில் பா.ஜ.க. 5 , காங்கிரஸ் 3, என்பிபி -20, பிற கட்சிகள் 30 இடங்களைப் பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.

    நாகாலாந்து என்.டி.டி.பி 38-48, என்.பி.எப் 3-8 காங்கிரஸ் 1-2, பிறகட்சிகள் 5-15 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

    • திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
    • இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

    இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

    ×