என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ்"
- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பின.
- கர்நாடகா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில் 4 சதவீதம் ஒதுக்கீடு தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அரசு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகையில் கர்நாடகா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில் டெல்லி நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பாராளுமன்ற மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதேவேளையில் கர்நாடகா மாநில அரசும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து அவையை நடத்த முடியாத அளவிற்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோன்று மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக பொய்யான பிரச்சினையால் பாராளுமன்றத்தை முடக்க வந்துள்ளது என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இன்று பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பாஜக முற்றிலும் போலியான பிரச்சனையுடன் வந்தது. இதனால் மிகவும் முக்கியமான பிரச்சினையான நீதிபதி யஷ்வந்த் வர்மா பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விவாதம் நடைபெற முடியாமல் போனது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி "பாஜக அவையை நடத்த விடக்கூடாது என்ற மனநிலையில் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. இன்றோடு பல நாட்கள் இதுபோன்று அமளியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த சாக்குபோக்கு அல்லது வேறு ஏதாவது காரணத்தை கண்டுபிடிக்கிறார்கள்" என்றார்.
"விரக்தியடைந்த பாஜக, அதன் மாநில மற்றும் மத்தியத் தலைமை மற்றும் அதன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் காங்கிரஸ் கட்சியையும் என்னையும் அவதூறு செய்ய என் மீது பொய்யான அறிக்கைகளைச் சுமத்தி வெட்கக்கேடான மற்றும் அப்பட்டமான பொய்களை கூறி வருகின்றனர்" என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
- பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விபரங்கள் மற்றும் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன.
இதில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்) மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யூ.டி.எப்.) ஆகிய 6 கட்சிகளிடம் ரூ.4,300 கோடி அதிகமாக நிதி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காமன்வெல்த் மனித உரிமைகள் முன் முயற்சி (சி.எச்.ஆர்.ஐ.) அமைப்பின் இயக்குனர் வெங்கடேஷ் நாயக் ஒரு ஆய்வை நடத்தி உள்ளார். அதில் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் கட்சி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகள் என 22 கட்சிகள் 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட போது ரூ.11,326 கோடி தொடக்க இருப்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தேர்தல் செயல்பாட்டின் போது ரூ.7,416 கோடி திரட்டி உள்ளன. அதில் ரூ.3,861.6 கோடி செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த நாளில் ரூ.14,848 கோடி மொத்த இறுதி இருப்பு தொகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி பா.ஜ.க. அதிகபட்சமாக ரூ.5,921.8 கோடி தொடக்க இருப்பு தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தொடக்க இருப்பு தொகையை அடிப்படையில் 22 கட்சிகளில் 9-வது இடத்தை பிடித்தது. இறுதி இருப்பு தொகை பொறுத்த வரை காங்கிரஸ் 12-வது இடத்தில் உள்ளது.
சி.எச்.ஆர்.ஐ.ஆல் கணக்கெடுக்கப்பட்ட 22 கட்சிகளில் மொத்தம் 1,595 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அவர்களில் 480 பேர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்வின்படி 22 கட்சிகள் பெற்ற மொத்த தொகையில் 84.5 சதவீதம் பாஜ.க. திரட்டியுள்ளது. அந்த கட்சியின் மொத்த தேர்தல் செலவு ரூ.1,738 கோடி என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இது 22 கட்சிகளில் மொத்த பிரசார செலவில் 45 சதவீதமாகும். ஊடக விளம்பரங்களுக்காக 22 கட்சிகளும் சேர்ந்து ரூ.992.4 கோடிக்கு மேல் செலவிட்டன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
- சிறுபான்மையினரை அரக்கர்களாக சித்தரிக்க பாஜக முயற்சி.
வக்பு வாரிய திருத்த மசோதாவை அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கடுமையாக சாட்டியுள்ளது. சிறுபான்மை சமூகங்களை அரக்கர்களாக சித்தரிக்கும் பாஜகவின் முயற்சிகளின் ஒரு பகுதி தான் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இன்று டெல்லியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியும் தேசிய செய்திதொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2024 இல் பாஜக கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா, தீவிரமான குறைபாடுகளை உடையது. இந்த மசோதா, மதங்களைக் கடந்து அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியலமைப்பு விதிகளை நீர்த்துப்போகச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தவறான பிரச்சாரத்தைப் பரப்புவதன் மூலமும், பாரபட்சங்களை உருவாக்குவதன் மூலமும் சிறுபான்மை சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிக்க முயற்சிக்கும் பாஜவின் உத்தியின் ஒரு பகுதியாகும்.
நமது தனித்துவமான பல மத சமூகத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் பாஜகவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்று.
தேர்தல் ஆதாயங்களுக்காக நமது சமூகத்தை நிரந்தர பிளவு நிலையில் வைத்திருக்க சிறுபான்மை சமூகங்களின் மரபுகள் மற்றும் நிறுவனங்களை சீர்குலைக்கும் முயற்சி இது.

வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக முந்தைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்கள், அமைப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம் குறைக்கப்பட்டு, சமூகம் அதன் சொந்த மத மரபுகள் மற்றும் விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை வேண்டுமென்றே இந்த மசோதா மூலம் பறிக்கப்படுகிறது.
வக்பு நிர்வாகத்தை பலவீனப்படுத்துவதற்காகவே தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிகள் எந்த காரணமும் இல்லாமல் நீக்கப்படுகின்றன. வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களைப் பாதுகாக்க சட்டத்தில் இப்போது அதிக பாதுகாப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அடிப்படையில், வக்பு திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். நடப்பு பாரளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழல் காங்கிரஸ் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
- துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.
குஜராத் மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அமித் சவ்தா பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். குஜராத் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் இறங்கும் மையமாகியுள்ளது என்றார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
ரசாயனங்களுடன் சாராயம் விற்கப்படுவதால் இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் காரணமாக மாநிலம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் தாராளமாக விற்கப்படுகின்றன. தண்டனை வழங்கப்படுவதில் குறைபாடு மற்றும் சில நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளாலும் இது ஏற்படுகிறது.
குஜராத் போதைப் பொருட்கள் இறங்கும் மையமாகிவிட்டது. துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தயாரித்ததாக பல மருந்து நிறுவனங்களும் பிடிபட்டுள்ளன. குஜராத் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது.
டீக்கடைகள் மற்றும் தெருவோர உணவு கூடங்களில் கூட போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. சமீபத்தில் சூரத்தில் ஒரு பாஜக தலைவர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
சமூக விரோத சக்திகள் பட்டியலை தயார் செய்ய குஜராத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதற்குப்பதிலாக உள்துறை நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்ய வெண்டும் வேண்டும்.
இவ்வாறு அமித் சவ்தா விமர்சனம் செய்தார்.
- அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது.
- அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தடையை மீறி போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட சூழலில் அண்ணாமலை, ஊடகங்களில் பேசும் போது, இனிமேல் காவல்துறையினருக்கு அனுமதி கடிதம் அளிக்க மாட்டோம், பா.ஜ.க.வுக்கு மரியாதை அளிக்காத காவல்துறையினரை தூங்க விடமாட்டோம் என்று மிரட்டியதோடு, டாஸ்மாக் கடைகளில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருக்கிறார். பிரச்சனைகளை தேடி அதற்காக போராட்டம் நடத்த முற்படுகிற அண்ணாமலை புதுச்சேரி உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட போராட்டம் நடத்துமா ?
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகத்தில் அமலாக்கத்துறையை தூண்டிவிட்டு வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆற்றல்மிக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இத்தகைய அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகிறது. இதை எதிர்கொள்கிற பேராற்றலும், துணிவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால் அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சி காரணமாக திடீர் திடீர் என போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்.
- மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்கசீப்பின் கல்லறையை அப்புறப்படுத்த வேண்டும் என சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் புயலை கிளப்பி வருகிறது. இதனால் அவுரங்கசீப் கல்லைறை இருக்கும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை காண்பித்துதான் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலவைர் ஹர்ஷ்வர்தன் சப்கால், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது "அவுரங்கசீப் கொடுங்கோல் ஆட்சி செய்தார். இன்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அவுங்கரசீப்புக்கு இணையாக கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். மதம் தொடர்பான விசயங்களுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருக்கிறார். ஆனால், சர்பாஞ்ச் சந்தோஷ் தேஷ்முக் கொலை போன்ற வழக்குகளில் எதுவுமே செய்யவில்லை" எனக் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது எனத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி. பகவத் கராத் இது தொடர்பாக கூறுகையில் "இது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கது. பட்நாவிஸ் மாநிலத்திற்கான நல்ல விசயங்களை செய்து வருகிறார். அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. விக்ஷித் மகாராஷ்டிரா நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார். காங்கிஸ் தலைவரின் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமானது.
தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் ஒப்பீடு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளனர்.
- விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, குண்டூர், காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர், ஐதராபாத், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களிலும் 600 முதல் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ெரயில்வே பாது காப்புப்படைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தொலைதூரத்தில் ஒரே நகரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதை முன்னுரிமையாக கொண்ட ரெயில்வே தேர்வு வாரிய முடிவால் விண்ணப்பதாரர்களிடையே பரவலான குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தேர்வு மார்ச் 18 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
மார்ச் 19-ந் தேதி தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களில் 90 சதவிகிதம் பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய தேர்வு முறையின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ரெயில்வே துறையில் வேலை பெறுவதற்கான தேர்வில் பங்கேற்க கடுமையான சிரமங்களையும், பொருட்செலவையும் ஏற்க வேண்டியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே துறையின் தேர்வுகள் அனைத்தும் சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அரசியல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
- பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
அமெரிக்க பாட்காஸ்டருன் பிரதமர் மோடியின் உரையாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஓடும் வீடியோவில் பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை, ஆனால் அவருக்கு அமெரிக்க பாட்காஸ்டருடன் உரையாடுவது பிடித்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் மோடியின் பாட்காஸ்ட் வீடியோ குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "ஊடகத்துறையை சேர்ந்தவர்களை செய்தியாளர் சந்திப்பில் சந்திக்க பயப்படும் நபர், வெளிநாட்டு பாட்காஸ்டருடன் உரையாடுவதில் விருப்பம் கொண்டுள்ளார்.
"பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்களை எதிர்கொள்ள பயம் கொண்டுள்ளவர், வலதுசாரி அமைப்பில் நங்கூரமிட்டுள்ள ஒரு வெளிநாட்டு பாட்காஸ்டரிடம் ஆறுதல் கண்டுள்ளார். மேலும், தனது அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்கும் ஒவ்வொரு நிறுவனத்தையும் திட்டமிட்டு அழித்து, சமீபத்திய வரலாற்றில் வேறு யாரும் எதிர்க்காத அளவுக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் விமர்சகர்களைத் துரத்தி செல்லும் அவர், விமர்சனம் தான் ஜனநாயகத்தின் ஆன்மா என்று சொல்லத் துணிந்துள்ளார்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- எல்லோரும் ஆளுங்கட்சியில் இணைந்தால் ஜனநாயக அமைப்பு சமநிலையை இழந்துவிடும்.
- நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து, எதிர்க்கட்சியில் நமது பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
படுதோல்வியடைந்த சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் கட்சித்தாவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கட்சி மாறுவார் என யூகங்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில் நான்கு நாட்கள் நடைபெறும் லத்தூர் சர்வதேச சினிமா விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில் பேசியபோது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி, விக்ரம் காலே, "தேஷ்முக் கட்சி மாறி ஆளுங்கட்சிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மந்திரியாக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்" என நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
இதற்கு லத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமித் தேஷ்முக் பதில் அளிக்கையில் "எல்லோரும் ஆளுங்கட்சியில் இணைந்தால் ஜனநாயக அமைப்பு சமநிலையை இழந்துவிடும். அது நம் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. எனவே, நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து, எதிர்க்கட்சியில் நமது பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்.
ஆளும் கட்சி பலம் பெற்று வருவதாக பலர் உணர்ந்தால், அவர்கள் கட்சி மாறக்கூடும். ஆனால் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளவும், எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.
- பட்னாவிசுக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல் வெளியானது.
- ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மகாயுதி கூட்டணி (பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) அமோக வெற்றி பெற்றது.
முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பதவியேற்று கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பதவியேற்று கொண்டனர்.
இதனையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமாறு துணை முதல்வர்களான ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் நானா படோல் அழைப்பு விடுத்துள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நானா படோல், "ஷிண்டேவும் அஜித் பவாரும் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால், நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொள்வோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் உங்களை தொந்தரவு செய்தால், நாங்கள் உங்களுடன் நின்று ஒன்றாக ஒரு அரசாங்கத்தை அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நானா படோலின் கருத்துக்கு பதில் கூற மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் மறுத்துவிட்டார்.
- 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.
சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்," தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவின் ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் வலிமை எமக்கும், எமது தாய்மொழியாம் தமிழுக்கும் உண்டு" என்றார்.
- மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
- 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.
அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.