search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal festival"

    • துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் பழஞ்சிறை தேவி கோவில் அமைந்துள்ளது.

    700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இந்த பிறவியிலேயே துன்பங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவார்.

    உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி. ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது.

    அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர்.

    உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக.

    இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

    நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது.

    ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர்.

    இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

     இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும் மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலில் பொங்கல் வைபவம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி கோவிலில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்பார்கள்.

    இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள். அதே போல் இங்கு நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார்.

    கோவிலின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்னோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும்.

    பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு 'பஞ்சபூத பொங்கல்' என்று பெயர் பெற்றது. நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கும். இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலை பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இந்த பாடலைக் கேட்டாலே அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    2024-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 10.55 மணிக்கு தேவியை பாடி காப்பு கட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித் துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார். மேயர் ஆர்யா ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வைப்பார்.

    திருவிழாவின் முன்னோடியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும், காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்ய கலசாபிஷேகம் நடைபெறும். மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே போல் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.

    விழாவையொட்டி, 17-ந்தேதி இரவு 9 மணிக்கு களமெழுத்தும் சர்ப்பபாட்டும், 18-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அஷ்டமங்கல்ய பூஜை நடைபெறும்.

    7-ம் திருவிழாவான 19-ந்தேதி அன்று பிரசித்திப் பெற்ற பொங்கல் வழிபாடு நடக்கிறது. அன்று காலை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது.

    மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இரவு 7.45 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து. இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி நடக்கிறது.

    20-ந்தேதி இரவு 7.40 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.
    • தொடக்கத்தில் மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என்று எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர்.

    தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடததப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். காளைகளை அடக்கி வெற்றி பெற்று காளையர்கள் பரிசுகளை குவித்து வந்தனர். இந்நிலையில் பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.

    இந்நிலையில் சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி. கே. டி. பாலன் கூறியதாவது:

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்பு, அலங்காநல்லூர் அருகேயுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெறும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தொடக்கத்தில் மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என்று எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர்.

    மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.

    முதல் மகளிர் ஜல்லிக்கட்டு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்க உள்ளோம். அதற்கான வடிவமைப்புப் பணிகள் நடக்கின்றன.

    மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் ஆண்களுக்கு வழங்குவது போல் கார், பைக் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்க உள்ளோம். உயிருக்கு ஆபத்து, காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.
    • லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

    இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

     முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு இன்று பகல் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட வசதியாக ஏராளமான மண்பானைகள் கோவில் அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கினர்.

    இதேபோல் பொங்கலிடும் இடத்தை பிடிப்பதற்கும் போட்டி இருந்தது. இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே பெண்கள் படுத்து தூங்கினர். இன்று காலை கோவில் நடை திறந்ததும் அவர்கள் வழிபாடு செய்து பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது.

    தொடர்ந்து பெண்கள், கோவில் வளாகத்தில் தொடங்கி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கல் வைத்தனர். திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளிலும் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் திருவனந்தபுரம் மற்றும் ஆற்றுக்கால் பகுதிகளில் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. திரும்பிய இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது.

    • ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றது.
    • ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா, உலக பிரசித்திப் பெற்றதாகும்.

    மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக கூறப்படும் இடம், இன்றைய கேரளா. `கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில், ஏராளமான பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயர் எதுவும் கிடையாது. அந்த அம்மன்கள் அனைவரும் அந்தந்த ஊர் பெயருடன் இணைத்து பகவதி என்றே அறியப்படுகின்றனர்.

    கேரளாவில் உள்ள ஒவ்வொரு பகவதி அம்மன் கோவில்களுக்கும் தனிச் சிறப்பு இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.

    கோவில் மட்டுமின்றி, அங்கு வீற்றிருந்து அருளும் ஆற்றுக்கால் பகவதி அம்மனும் தன்னுடைய அருள் சக்திக்கு சிறப்பு பெற்றவராக திகழ்கிறார்.

    இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த நிகழ்வில் பல லட்சம் பக்தர்கள், அதுவும் பெண்கள் மட்டுமே திரண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவது தனிச் சிறப்புக்குரியது.

     கோவில் வரலாறு

    சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்படுகிறது. தன் கணவன் கள்வன் இல்லை என்பதை நிரூபித்த கண்ணகி, மதுரையை தீக்கு இரையாக்கினாள். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்தின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற இடத்தில் இளைப்பாறினாள். அதன் நினைவாகவே அங்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டதாம்.

    பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய ஒரு சிறுமி வந்தாள். அந்த பக்தர், சிறுமியை அன்னையின் அம்சமாகவே பார்த்தார். பக்தர் அருகில் வந்த சிறுமி, "ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டு போய் விட முடியுமா?" என்று கேட்டாள்.

    ஆனால் அந்தச் சிறுமியை விட்டுப் பிரிய மனம் இல்லாத பக்தர், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, விருந்தளித்து உபசரிக்க எண்ணினார். அதை அந்த சிறுமியிடம் சொல்ல நினைக்கும் போதே, அந்தச் சிறுமி மறைந்து போனாள். வந்தது அம்மன்தான் என்பதை, அந்த பக்தர் உறுதிசெய்தார்.

    அன்று இரவு அந்த பக்தரின் கனவில் தோன்றிய அதே சிறுமி, "தென்னை மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்" என்று கூறினாள். மறுநாள் சிறுமி கனவில் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.

    பின்னர் அந்த இடத்தில் ஒரு சிறிய கோவிலை கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியடைந்தது என்கிறது இன்னொரு கோவில் வரலாறு.

    பொங்கல் திருவிழா

    இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, 10-ம் நாள் குருதி தர்ப்பண விழாவுடன் நிறைவு பெறும். முதல் நாள் விழாவில் கண்ணகி கதையை பாடலாகப் பாடி, பகவதி அம்மனை குடியிருத்துவர். கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் செய்து (அழைத்து வந்து) இந்த பத்து நாட்களும் இங்கே குடியிருக்கச் செய்தவதாக ஐதீகம்.

    மாசித் திருவிழாவின் 9-ம் நாள் விழாவாக பொங்கல் வைக்கப்படும். மதுரையை தீக்கிரையாக்கி வந்த கண்ணகி தேவியை, மன அமைதி கொள்ளச் செய்வதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்வதாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.

    மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்து வரவேற்றனர் என்ற மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை மையப்படுத்திதான், மாசித் திருவிழாவின்போது, பொங்கல் வைக்கும் வைபவம் நடத்தப்படுகிறது.

    பொங்கல் திருவிழா அன்று, கோவிலின் முன் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்து கண்ணகி வரலாற்றில் பாண்டியன் தன் தவறை உணர்ந்து மரணிக்கும் பாடல் பாடப்படும். அது முடிந்ததும் கோவில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் ஏற்றி வந்து, மேல் சாந்தியிடம் (தலைமை பூசாரி) வழங்குவார். அவர் கோவில் திடப்பள்ளியில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார்.

    பின்னர் அந்த தீச்சுடரை சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார். அதைத் தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்பாக செண்டை மேளமும், வெடி முழக்கமும், வாய் குரவையும் ஒலிக்கப்படும்.

    ஏனெனில் கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரின் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், சின்னசின்ன தெருக்கள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தபடி பெண்கள் பொங்கல் வைப்பார்கள். ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பல லட்சம் பெண்கள் பொங்கல் வைக்கும் சம்பவம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. (இந்த பொங்கல் வைக்கும் வைபவம், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

    முதன் முறையாக 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் இந்த சாதனை 30 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்ததாக பதிவானது.)

    பொங்கல் வைக்கும் நிகழ்வு முடிந்ததும், பிற்பகலில் குறிப்பிட்ட வேளையில் கோவிலில் இருந்து நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித நீர் தெளித்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். அப்போது வானத்தில் இருந்து விமானம் மூலமாக மலர் தூவப்படும்.

    அன்றைய தினம் இரவு ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வார். அம்மன் ஊர்வலம் செல்லும் வீதி அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் குத்துவிளக்கேற்றி அம்மனை வரவேற்பார்கள். மறுதினம் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் தன் இரும்பிடம் திரும்புவார்.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதி ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசலின் மேல் பகுதியில் ஆற்றுக்கால் பகவதி அம்மன், தன் நான்கு கரங்களில் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரம் தாங்கியும், அரக்கி ஒருத்தியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்திலும் அருள்பாலிக்கும் சுதைச் சிற்பம் உள்ளது.

    கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்ரகத்தின் கீழே அபிஷேக விக்ரகம் உள்ளது. அம்மனின் கருவறை 'ஸ்ரீகோவில்' என்று அழைக்கப் படுகிறது.

    வளாகத்தைச் சுற்றிலும் கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்ச நேயர் சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

     குத்தியோட்டம்

    இந்தத் திருவிழாவில் சிறுவர்களுக்காகவும் ஒரு வழிபாடு உள்ளது. இதனை 'குத்தியோட்டம்' என்கிறார்கள். 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்கலாம். அவர்கள் அனைவரும் மகிஷாசுரமர்த்தியின் காயமடைந்த போர்வீரர்களாக கருதப்படுகிறார்கள்.

    மாசித் திருவிழா தொடங்கிய மூன்றாவது நாள், இந்த வழிபாட்டை செய்யும் சிறுவர்கள் தலைமை பூசாரியிடம் வந்து பிரசாதம் பெற்று, கோவிலின் தனி இடத்தில் 7 தினங்கள் தங்கி இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள்.

    தினமும் நீராடி அம்மன் சன்னிதியில் ஈர உடையுடனேயே 7 நாட்களில் அம்மனின் 1008 திருநாமங்களை சொல்லி முடிக்க வேண்டும். பொங்கல் வைக்கும் நாள் அன்று, சிறுவர்களின் விலா எலும்புகளின் கீழ் பகுதியில் முருகனுக்கு அலகு குத்துவது போல் உலோகக் கம்பி கொக்கியால் குத்துவார்கள்.

    பொங்கல் வைத்து முடித்ததும், இந்த சிறுவர்கள் யானை மீது ஊர்வலமாக எழுந்தருளும் அம்மனின் முன்பாக அணிவகுத்துச் செல்வார்கள். மறுநாள் காலையில் சிறுவர்களின் உடலில் குத்தப்பட்டிருந்த கம்பிகள் அகற்றப்பட்டு விரதம் நிறைவுபெறும். இவ்வாறு செய்வதால், சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.

     

    தாலிப்பொலி

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் நாள் அன்று காலையில், 'தாலிப்பொலி' என்ற நிகழ்ச்சி நடைபெறும். சிறுமிகள் பலரும் தங்களை அலங்கரித்துக் கொண்டு அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள். இதில் பங்கேற்கும் அனைத்து சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர் கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனை வழிபடுவதற்கான பூஜை பொருட்கள் வைத்து, சிறு தீபம் ஏற்றிக் கொண்டு வருவார்கள். இவ்வாறு செய்வதால், சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது. அவர்களது அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    அமைவிடம்

    திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சிட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஆற்றுக்கால் திருத்தலம்.

    • மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.

    வருடம் தோறும் மாசி மக திருவிழா மற்றும் பொங்கல் விழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு சத்திய மங்கலம், கோயமுத்தூர், சேலம், கரூர் திருப்பூர், ஈரோடு, பெருந்துறை, கடம்பூர் மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

    பக்தர்கள் அடர்ந்த வன ப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இந்த வருட திருவிழாவுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது, பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதி களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகை யான நிபந்தனைகள் குறிப்பிட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்று கரு வண்ணராயர் கோவில் மாசி மக மற்றும் பொங்கல் திருவிழா தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதலே சத்திய மங்கலத்தை அடுத்துள்ள காராச்சி குறை சோதனை சாவடியில் 20 வண்டிகளுடன் பக்தர்கள் வந்தனர்.

     வண்டிகளை பவானிசாகர் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து பின்னர் வனப்பகுதிக்குள் அனுப்பினர். கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிடாய் வெட்டி வழிபட்டனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
    • லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கால் திருவிழா இந்த ஆண்டு நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.

    லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.

    இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ந்தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.
    • மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு பள்ளி ஆசிரியர்களான மகேந்திரன்-அழகுகோமதி தம்பதியின் 2-வது மகள் ஸ்ரீநிதா (வயது13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தனது 4 வயது முதல் முறைப்படி சங்கீதம் பயின்று வருவதோடு, பல்வேறு மேடைகளில் பாடல்கள் பாடி தனித் திறமை மூலம் பரிசுகளை வென்றுள்ளார்.

    ஸ்ரீநிதா அண்மையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் முதலிடம் பிடித்து பரிசை தட்டிச்சென்றார்.

    இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் பிரதமர்நரேந்திர மோடி பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த சிறுமி ஸ்ரீநிதா பிரதமர் முன்னிலையில் 'சத்தியம் சிவம் சுந்தரம்' என்ற பாடலை இனிமையாக பாடி அசத்தினார்.

    ஸ்ரீநிதாவின் குரல் வளத்தையும் பாடலையும் ரசித்த பிரதமர் மோடி, ஸ்ரீநிதாவிடம் 'மிக அருமையாக பாடினாய், மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியதோடு, தான் அணிந்திருந்த அங்கவஸ்திதரத்தை ஸ்ரீநிதாவுக்கு அளித்து பாராட்டினார்.

    இதுகுறித்து ஸ்ரீநிதா கூறுகையில், நான் டெல்லி சென்று பிரதமர் முன்னிலையில் பாட கிடைத்த வாய்ப்பு மற்றும் பிரதமரிடம் பாராட்டும் பரிசும் பெற்றது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்றார்.

    • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
    • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

    மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

    பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

    இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

    இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

    காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

    பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

    போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

    • பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது.
    • முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    தருமபுரி:

    தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாள் நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழாகோலம் பூண்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி அடுத்த முக்கல் நாயக்கன்பட்டியில் கயிறு இழுக்கும் போட்டி 2 கைகளிலும் செங்கல் தூக்கி நிற்கும் போட்டி, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் விளையாட்டுப் போட்டிகள், நடத்தப்பபட்டது.

    அதன் ஒருபகுதியாக, நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு 'சாப்பாட்டு ராமன் போட்டி' என்ற பெயரில் அதிக அளவில் சாப்பிட்டு சாதனை படைப்பவர்களுக்கு பரிசு வழங்கும் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில்,1 கிலோ சிக்கன் பிரியாணியை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கும் போட்டி நடந்தது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும், பெண்களுக்கான 25 பேர் பங்கேற்ற இப்போட்டியில் பிரியாணி குதுகலமாக சாப்பிடும் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஷாலினி (15) என்பவர் 1 கிலோ சிக்கன் பிரியாணி 4 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். அதைத் தொடர்ந்து, 1 கிலோ சிக்கன் வருவலை குறைந்த நேரத்தில் சாப்பிடும் போட்டி நடந்தது. இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.


    இதில் பச்சியப்பன் என்பவர் 1 கிலோ சில்லி சிக்கனை 5 நிமிடத்தில் சாப்பிட்டு முதல் பரிசை பெற்றார். முனுசாமி என்பவர் 1 கிலோ சிக்கனை 7 நிமிடத்தில் சாப்பிட்டு 2-ம் பரிசு பெற்றார்.

    இறுதி நிகழ்வாக, 2 லிட்டர் கூல்டிரிங்ஸ் குடிக்கும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதில் ராஜ்குமார் என்பவர் 2 நிமிடத்தில் 2 லிட்டர் கூல்டிரிங்ஸ்குடித்து முதல் பரிசை பெற்றார். இப்போட்டியால் முக்கல் நாயக்கன்பட்டி கிராமத்து மக்கள் நிகழ்ச்சிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

    • சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
    • பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் புறப்பட்டு சென்றனர். பஸ், ரெயில்கள், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு போனதால் 3 நாட்களாக சென்னை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் வெளியூர் பயணம் மேற் கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்னையில் இருந்து அரசு பஸ்களில் மட்டும் 3 நாட்களில் 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்து இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப பயணத்தை தொடங்கிவிட்டனர். கார், இருசக்கர வாகனங்களில் காலையில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள்.

    பகல் நேர ரெயில்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்து இரவுக்குள் வீடு வந்து சேர திட்டமிட்டு உள்ளனர். அரசு பஸ், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாலையில் புறப்பட்டு காலையில் வந்து சேரும் வகையில் பயணத்தை தொடங்குகின்றனர்.

    இதற்காக பல்வேறு நகரங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், ஓசூர், பெங்களூர், கோவை, சேலம் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளன.

    வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பஸ்கள் மற்றும் 2000 சிறப்பு பஸ்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    அதேபோல 1800 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 6 ஆயிரம் பஸ்கள் இன்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் அதிகாலையில் இருந்து சென்னைக்கு வரத் தொடங்கும். அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    அரசு பஸ்களில் ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆம்னி பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.


    நாளை (18-ந்தேதி) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் இன்று இரவுக்குள் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதனால் வந்தே பாரத், துரந்தோ, உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இடங்கள் நிரம்பியதால் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    கோவை, பெங்களூர், மற்றும் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களிலும் இடம் இல்லாததால் மக்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள், கார்கள் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்கு செய்கின்றனர்.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை அனைத்து அரசு அலுவல் பணிகளும் தொடங்குவதால் விடுமுறையில் சென்றவர்கள் பயணம் செய்தனர். ஒரு சிலர் மேலும் 2 நாட்கள் விடுப்பு போட்டுவிட்டு அதாவது 18, 19 விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் விடுமுறையிலும் இருக்கிறார்கள்.

    சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று பயணம் மேற்கொள்வதால் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களை விரைவாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் புகழ்பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டு பொங்கல் அன்று இங்கு பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நடைபெறும். இந்தாண்டு கோபலாபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 61-வது பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று காலை 250 பெண்கள் பால் குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    கோபாலபுரம், செங்கப்படை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் கோபாலபுரம் நாட்டாமை வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இதில் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து நாட்டாண்மை வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர். பல பெண்கள் சாமியாடினர்.

    மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளரும், கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவில் நிர்வாகியுமான ராமமூர்த்தி கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தும் உரிமையாளர்கள் அனைவரும் மாட்டு பொங்கல் அன்று நடைபெறும் முனியாண்டி சாமி கோவில் திருவிழாவில் பங்கேற்போம்.

    நேர்த்திக்கடனாக ஆடுகளை செலுத்தி அசைவ அன்னதானம் நடைபெறும். எங்கள் ஓட்டலின் தினசரி முதல் வருவாயை உண்டியலில் சேகரித்து இந்த திருவிழாவிற்கு பயன்படுத்துவோம். எங்கள் தொழில் சிறப்பாக நடைபெறவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறோம் என்றார்.

    ×