என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு: பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
    X

    பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு: பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

    • நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது.

    நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படுவதால், விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று முதலே வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு வருகின்றனர். இன்றும் அதிகாலை முதலே ரெயில்களிலும், பஸ்களிலும் செல்ல தொடங்கி உள்ளனர்.

    இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், வழியாகவும் இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏற்கனவே ரெயில்களில் இருக்கை நிரம்பி விட்ட நிலையில், புதிதாகவும் சிறப்பு ரெயில்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அவையும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. நேற்று அந்தியோதயா ரெயிலில் ஏற்கனவே பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியதால், நடைபாதை, படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்தனர். இன்றும் காலையிலேயே வந்த ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறிச்சென்றனர். இன்று மாலை இயக்கப்படும் அந்தியோதயா ரெயிலில் இடம் பிடிக்கவும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலு பயணிக்கவும் காலை முதலே ரெயில் நிலையத்தில் வரிசை போட்டு பயணிகள் இடம் பிடிக்க காத்திருந்தனர்.

    இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் நேற்று இரவு முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்பட்ட பஸ்களில் ஏராளமானோர் போட்டிப்போட்டு ஏறி பயணம் செய்தார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சாா்பில் நெல்லையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன.

    பயணிகளின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலைய போலீசார் பஸ் நிலைய நடைமேடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒலிப்பெருக்கு மூலமாகவும் பயணிகளுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருந்தது.

    Next Story
    ×