என் மலர்
நீங்கள் தேடியது "Isha"
- ஈஷா சார்பில் தமிழகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது.
- உலகில் அனைத்திலும் சிறந்த, சக்திவாய்ந்த, அற்புதமான கருவி மனித மனம்தான்.
சென்னை:
உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களும் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களும் பங்கேற்றனர்.
உலக மனநல தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை மற்றும் தி சவேரா ஹோட்டல் சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" எனும் தியான நிகழ்ச்சி, சவேரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. அதே போன்று ஈஷா சார்பில் தமிழகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்ற "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல், சவேரா ஹோட்டலின் தலைவர் விவேக், நிர்வாக இயக்குனர் நினா ரெட்டி மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனுடன் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சித்தா கல்லூரி உள்பட மயிலாப்பூர், அடையார், அண்ணா நகர், அம்பத்தூர், புரசைவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் இம்மானுவேல் அரசர் குரூப் ஆப் இன்ஸ்டியூசன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவையில் விமானப்படை நிர்வாக கல்லூரி, சிங்காநல்லூர் ரேபிட் ஆக்சன் போர்ஸ் வளாகம், சூலூர் விமானப்படைத்தளம், குன்னூர் ராணுவக் கல்லூரி, ஐஎன்எஸ் அக்ரானி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும், திருப்பூரில் நிஃப்ட் கல்லூரி மற்றும் கோத்தகிரியில் இன்டர்நேஷனல் கம்யூனிட்டி பள்ளியிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் சேலம், ஓசூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மிராக்கிள் ஆப் மைண்ட் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனநலப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உலக மனநல தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சத்குருவின் உலக மனநல தினச் செய்தியில், "நம் மனம் நம் பொறுப்பாகும் - நமது முக்கியமான பொறுப்பாகும். உலகில் அனைத்திலும் சிறந்த, சக்திவாய்ந்த, அற்புதமான கருவி மனித மனம்தான். வியக்க வைக்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அசாதாரண தொழில்நுட்ப முன்னேற்றங்களும், மனித மனத்தின் வெளிப்பாடுகளே. இருப்பினும், உலகம் முழுவதும் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும், மோதல்களும், பேரழிவுகளுமே மனித மனத்தின் தயாரிப்புதான் .இந்த உலக மனநல தினத்தன்று, அற்புதமான கருவியான மனத்தை நம் வசமாக்கிக்கொள்ள உறுதி கொள்வோம்! நலமாக உள்ள மனம், பல அதிசயங்களை வெளிப்படுத்தி மனித வாழ்வை மேம்படுத்தும். மனதின் அதிசயத்தை அனுபவிக்க ஒரு நாளைக்கு 7 நிமிடங்கள் முதலீடு செய்வோம் என உறுதியளிப்போம்" எனக் கூறியுள்ளார்.
https://x.com/SadhguruTamil/status/1976608679228227632
உலகளவில் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் மனநல பிரச்சனைகளை கையாள தியானம் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தி சத்குரு அவர்கள் 'மிராக்கிள் ஆப் மைண்ட்' எனும் இலவச தியான செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த இலவச செயலி மூலம், வழிகாட்டுதலுடன் வெறும் ஏழே நிமிடங்களில் மக்கள் தியானம் செய்ய முடியும். மக்கள் இந்த தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தம், பயம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுதலை, ஆழ்ந்த உறக்கம் மற்றும் மன அமைதி உள்ளிட்ட பலன்களைப் பெற முடியும்.

மிராக்கிள் ஆஃப் மைன்ட் தியான செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அம்சங்களும் உள்ளன. இதில், மனஅழுத்தம், உறவுகள், உடல் மன ஆரோக்கியம் தொடர்பான சத்குருவின் உரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இச்செயலியில் துவக்கத்தில் 7 நிமிடங்கள் மேற்கொள்ளும் தியானத்தை 21 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம். கண்கள் மூடியிருந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவை நாம் அறிந்து கொள்ள உதவும் நினைவூட்டல் வசதிகளும் உள்ளன. இந்த செயலியை isha.co/mom
என்ற இணைப்பில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
- இறுதிப் போட்டிகள் சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன.
- போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.
ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும் பிரபல கவிஞருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் பங்கேற்று பேசினார்.

ஈஷா கிராமோத்சவம் வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு, அடையாளங்களை கடந்து செல்லும் தன்மை மற்றும் தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை ஆகிய பலன்களை விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் பெற முடியும்.
இதன் அடிப்படையில் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக விளையாட்டை கொண்டு வரும் நோக்கில், ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா சத்குருவால் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஈஷா கிராமோத்சவம்-2025:- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம்
ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் 17-ஆவது பதிப்பான "ஈஷா கிராமோத்சவம்-2025" தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட்டன.
இவ்விளையாட்டு போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 183 இடங்களில் நடைபெற்றது. இதில் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 63,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்பட்டது.
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்
ஈஷா கிராமோத்சவ போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். இதில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட மற்றும் மண்டல அளவிலான இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன.
இந்நிலையில் 6 மாநிலங்களுக்கு இடையேயான மூன்றாம் கட்ட இறுதிப் போட்டிகள் வரும் 21-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளன. இதில் 24 வாலிபால் அணிகளும், 18 த்ரோபால் அணிகளும் பங்கேற்க உள்ளன.
முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெறும். இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெற உள்ளது.
சிறப்பு விருந்தினர்கள்
இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க விளையாட்டு வீராங்கனை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
பரிசுத்தொகை
ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளின் முதல் 2 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. அதே போன்று இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ₹ 5,00,000, ₹ 3,00,000, ₹ 1,00,000, ₹ 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ₹67 லட்சம் வழங்கப்படுகின்றன.
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
இந்த திருவிழாவில் விளையாட்டுப் போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், தெருக்கூத்து கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனுடன் 30-க்கும் மேற்பட்ட தென்னிந்திய பாரம்பரிய உணவுகளின் பிரத்யேக அரங்குகளும் இடம்பெறவுள்ளன.
வண்ண கோலப் போட்டி
மேலும் பொது மக்களுக்கான வண்ண கோலப் போட்டி மற்றும் பல்லாங்குழி, மணி நடை, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம். கோலப் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு சத்குருவிடமிருந்து 33,000 ரொக்கப் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளது கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு புடவை பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.
- ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
- விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது.
மக்கள் இடையே இருக்கும் சாதி, மத மற்றும் இன அடையாளங்களை அழித்து ஒற்றுமையை கொண்டு வர விளையாட்டை ஒரு கருவியாக சத்குரு பயன்படுத்துகிறார் என்றால் அது மிகையல்ல. ஆமாம் சத்குருவால் துவங்கப்பட்ட ஈஷா கிராமோத்சவ திருவிழா விளையாட்டுகள் மூலம் கிராமங்களில் ஒற்றுமையை உருவாக்கி வருகிறது.
இது குறித்து முன்பு ஒரு முறை சத்குரு கூறுகையில், "ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை, உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.
அந்த வகையில் இதுகுறித்து, ஈஷா கிராமோத்சவ போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த மிதுன் என்ற இளைஞரிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறோம். இந்த வருடம் நாங்கள் இரண்டு அணிகள் மூலம் பங்கேற்றோம்.
ஆனால், ஒரு அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டது. மற்றொரு அணி கிளஸ்டர் அளவில் வெற்றி பெற்று, தஞ்சாவூரில் நடந்த டிவிஷனல் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால், தஞ்சாவூரில் சில தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் அந்தப் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
எங்கள் அணியில் விளையாடிய இருவர் காவல்துறையில் வேலை பெற்றுள்ளார்கள். இதனால், விளையாட்டில் ஈடுபடுவது அரசு வேலைவாய்ப்புக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வெளியூர்களுக்கு விளையாடச் சென்றாலும், எங்கள் அணியில் வேறு அணியைச் சேர்ந்த வீரர்களைச் சேர்த்து விளையாடுவதில்லை.
ஈஷா கிராமோத்சவப் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்து விளையாட வைப்பது விதிமுறையாக உள்ளது. இது கிராம இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. விளையாட தெரியாதவர்களையும் ஈஷா ஊக்குவிக்கிறது, இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
விளையாட்டை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். அதனால், மது, பாக்கு, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் அணியில் மூன்று மூத்த வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
நாங்கள் மூவரும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பந்து பயிற்சி அளித்து, புதிய வீரர்களை உருவாக்கி வருகிறோம். முன்பு எங்கள் ஊரில் விளையாடுவதற்கு மைதானம் இல்லை. அருகிலுள்ள ஊருக்கு சென்று விளையாடி வந்தோம்.
எல்லா இளைஞர்களும் ஒற்றுமையாக விளையாட வேண்டும் என்று எங்கள் ஊர்மக்கள் இணைந்து எங்களுக்கு மைதானம் அமைத்துத் தந்துள்ளனர். மைதானத்தில் மின்விளக்கு வசதியும் செய்து தந்துள்ளனர்.
இதனால், இரவு நேரத்திலும் விளையாட முடிகிறது. அவ்வப்போது போட்டிகளையும் நடத்தி வருகிறோம். எந்தவித பாகுபாடும் பார்க்காமல், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இதனால், வீரர்கள் மட்டுமல்லாமல், ஊரே ஒற்றுமையாக உள்ளது.
வெளியிடங்களில் விளையாடச் சென்றால், நுழைவுக் கட்டணமாக ஐநூறு முதல் ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். ஆனால், ஈஷா கிராமோத்சவப் போட்டிகளுக்கு ஒரு பைசா கூட கட்டணம் வாங்குவதில்லை. இலவசமாக விளையாட வைக்கிறார்கள். மேலும், வீரர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்கிறார்கள்.
இவையெல்லாம் ஈஷாவின் மீது எங்களுக்கு பெரும் மரியாதையை ஏற்படுத்துவதற்கு முக்கியக் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
- ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு பின்னால் செல்வது என்பது தான், இன்று நம் சமூகத்திற்கு முன் இருக்கும் மாபெரும் சவால். சட்டங்கள் மற்றும் காவல்துறை மூலம் போதை வஸ்துக்களின் புழக்கத்தை வேண்டுமானால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் இது முழுமையான தீர்வாக இருக்க முடியாது. இளைஞர்கள் அதனை நாடாமல் இருக்க செய்வதே, சரியான தீர்வாக இருக்க முடியும். இதற்கு ஒரு சமூகமாக நாம் பல்வேறு செயல்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில், போதை வஸ்துக்களை இளைஞர்கள் நாடாமல் இருக்க, விளையாட்டை ஒரு தீர்வாக ஈஷாவின் கிராமோத்சவம் முன்னெடுப்பு முன் வைக்கிறது. போதையில் இருந்து விடுபட, ஈடுபடாமல் இருக்க விளையாட்டு எப்படி தீர்வாக இருக்க முடியும் என்ற பொதுவான கேள்வி நம் எல்லாருக்கும் எழ வாய்ப்பு உள்ளது. ஆனால் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளால், ஈரோடு அருகே இளைஞர்கள் சிலர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒருசேரிபுதூரைச் சேர்ந்த வாலிபால் வீரர் பூபதி என்ற இளைஞரிடம் பேசினோம். "எங்கள் ஊரில் இரண்டு வாலிபால் அணி உருவாக்கினோம். அதில் ஒரு அணிக்கு நான் கேப்டனாக உள்ளேன்.
15 வருஷமாக வாலிபால் விளையாடுகிறேன். நான் சிவில் சைட் இன்ஜினியராக வேலை செய்கிறேன். எங்க அப்பா வாலிபால் விளையாண்டு வந்தாங்க. அதை நானும் பின்பற்றி விளையாடி வருகிறேன். விளையாடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியுது.
ஈஷா கிராமோத்சவம் போட்டிகளுக்கு முன்பு எங்க ஊர்ல ரொம்ப காலமாக விளையாட்டில் ஆர்வமில்லாம இருந்தோம். அந்த சமயத்துல எங்க பசங்க சிலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிட்டாங்க. ஈஷா கிராமோத்சவம் போட்டி அறிவிப்புக்கு பிறகு, எங்க ஊர் இளைஞர்களைத் திரட்டி 2 வாலிபால் டீம் அமைத்தோம். அதுல ஒரு டீமுக்கு நான் கேப்டனானேன்.
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள எங்க ஊர் இளைஞர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுனாங்க. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதால், நிறைய பசங்க குடிப்பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துட்டாங்க. ஈஷா விளையாட்டுப் போட்டி இளைஞர்களின் வாழ்க்கையை மாத்திடுச்சு. இதற்கு ஈஷாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
இந்த வருஷம் அந்தியூரில் நடைபெற்ற கிளஸ்டரில் ஜெயித்து விட்டோம். அதன் பிறகு, கோவையில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தோற்று விட்டோம். போன வருஷம் மண்டல அளவில் ரன்னர் வந்த நாங்க, இந்த வருஷம் காலிறுதியில் தோற்றது வருத்தமா இருக்கு.
ஆனாலும், என்ட்ரன்ஸ் பீஸ் இல்ல. போக்குவரத்து செலவுக்கு ஈஷா பணமும் தர்றாங்க. ஈஷாவோட இதுபோன்ற சேவைகள் தான், மக்கள் கிட்ட ஈஷாவை கொண்டு போய் சேர்க்குதுன்னு நினைக்கிறேன்.
தொடர்ந்து கிளஸ்டர் போட்டிகளில் ஜெயிக்கும் எங்கள் ஊரில் கிளஸ்டர் போட்டிகள் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் போது, எங்க ஊர்ல இருக்கும் விளையாட்டு ஆர்வமுள்ள பெண்களும் த்ரோபால் போட்டிகளில் பங்கேற்பாங்க. அதேபோல், ஆண்டுதோறும், ஒவ்வொரு கிராமத்தில் கிளஸ்டர் போட்டிகள் நடத்துனா, கிராமப்புற மக்களிடையே ஈஷா கிராமோத்சவம் பல மாற்றங்களை கொண்டு வரும். என் அனுபவத்தில் மற்ற போட்டிகளுக்கு போனால் வீட்டில் அனுமதிப்பதில்லை.
ஈஷா போட்டிகளுக்கு வீட்டில் மட்டுமில்ல. சமுதாயத்திலும் நல்ல பெயர் உள்ளது. அதனால, ஈஷா கிரோமத்சவம் போட்டிகளில் விளையாட எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்குது." என்றார்.
- ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.
- ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள்.
ஒரு பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள், எனக்குள் மற்றும் என்னை சுற்றி இருக்கும் பெண்களுக்குள் ஏற்படுத்திய மாற்றத்தைக் கண்ட பிறகு, இது உலகையே மாற்றும் வல்லமை உடையது என்பதை உணர்ந்தேன் என ஈஷா கிராமோத்சவ அனுபவம் பகிர்கிறார் ஆயிஷா.
ஈஷா கிராமோத்சவம் தன்னுடைய வாழ்விலும், கிராமத்திலும் உருவாக்கிய மாற்றங்கள் குறித்து நெல்லூர் மாவட்டம், கோட்டால் கிராமத்தை சேர்ந்த ஆயிஷா நம்மிடம் கூறுகையில், "ஈஷாவில் இருந்து விளையாட வாருங்கள் என்று அழைத்த போது, நான் மிகவும் தயங்கினேன், சின்ன வயதில் விளையாடியது பிறகு விளையாட்டு என்பதே என் வாழ்வில் இருந்தது கிடையாது.
ஆனால் இது கிராம மக்களுக்கான குறிப்பாக பெண்களுக்கானது எனக் கூறிய போது, என் வீட்டில் இருந்த அம்மா, பெரியம்மா, அண்ணி ஆகியோர் இணைந்து விளையாடத் துவங்கினோம். முதல் நாள் அந்த பந்து என் கைகளுக்கு வந்த உடனே விளையாட்டின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நேரம் சென்றது தெரியாமல் நாங்கள் விளையாடினோம்.
எங்களின் கிராமத்தில் இருந்து முதலில் என்னுடைய குடும்பத்தில் இருந்து மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டோம். அதில் 13 வயது முதல் கிட்டத்தட்ட 60 வயது வரை உள்ளவர்கள் இருந்தனர். என் அம்மாவுக்கு 50 வயது, பெரியம்மாவிற்கு 60 வயது, என் உறவுக்கார சிறுமிக்கு 18 வயது. நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடினோம். நாங்கள் போட்டிகளில் தோற்றாலும் இப்படி விளையாடியது எங்களுக்குள் பெரிய மகிழ்ச்சியை தந்தது.
என் பெரியம்மாவிற்கு ஒரு டிபன் கடை உள்ளது, அவரின் வாழ்க்கை முழுவதும் கடையில் வேலை செய்வது, பிறகு வீட்டில் வேலை செய்வது என்றே பார்த்து இருக்கிறேன். நாங்கள் விளையாடிய போது அவரின் முகத்தில் பெரிய புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்தேன்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே விளையாடும் போது பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும், அதனாலேயே வெளியே விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால் ஈஷா கிராமோத்சவத்தில் மிகவும் பாதுகாப்பான சூழல் இருக்கிறது.
நாங்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கிராமத்தில் இருந்து எங்கள் உறவினர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி விளையாடினோம். ஆனால் அடுத்த ஆண்டே மற்ற சமூகத்தை சேர்ந்த பெண்களும் எங்கள் அணியில் இணைந்தனர். சமூக வேற்றுமை என்பது எல்லாம் கடந்து நாங்கள் அனைவரும் ஒரே அணியாக விளையாடினோம்.
தனிப்பட்ட வகையில் நான் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களைச் சந்தித்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்தவுடன், அப்படி ஒரு பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. தற்போது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இலகுவாகவும் மாறி உள்ளது.
ஒரு பந்து உலகையே மாற்றும் என சத்குரு கூறி இருப்பார்கள். அந்த பந்து என் கைகளுக்கு வருவதற்கு முன்பு அது எனக்கு புரியவில்லை, ஆனால் தற்போது ஒரு விளையாட்டு எப்படி எனக்குள் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது, சமூக பிரிவினைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கிறது, உடல் ரீதியாக நம்மை உறுதியாக வைக்க உதவுகிறது என்பதை எல்லாம் பார்க்கும் போது, பந்து உலகை மாற்றும் என்ற சத்குருவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நிஜத்தில் அனுபவபூர்வமாக பார்த்துக் கொண்டிருகிறேன்." எனக் கூறினார்.
- சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
- ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கூக்கால் கிராமம் அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமான இடம். சுற்றுலா சார்ந்த தகவல்களையும் பயண அனுபவங்களையும் புது இடங்களையும் பகிரும் 'டிராவல் வீ-லாகர்ஸ்' மூலம் இந்த கிராமம் பிரபலமானது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கூக்கால் கிராமத்து இளைஞரின் ஆசையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
விளையாட்டு மூலம் கிராம மக்கள் மத்தியில் உற்சாகம், கொண்டாட்டம், ஈடுபாடு, ஒற்றுமை, உடல் உறுதி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில், சத்குருவின் ஈஷா அறக்கட்டளை ஆண்டுதோறும் கிராம மக்களுக்கான விளையாட்டுத் திருவிழாவை ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
அடிப்படையாக மக்களின் தினசரி வாழ்க்கையில் விளையாட்டை ஒரு அங்கமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
இந்த ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 3 வருடங்களாக விளையாடி வரும் மணி என்ற கூக்கால் கிராமத்து இளைஞர் இது குறித்து நம்மிடம் கூறுகையில், "கொடைக்கானலில் இருந்து 48 கிலோ மீட்டர் தாண்டி கூக்கால் ஊராட்சியைச் சேர்ந்தவன் நான். கொடைக்கானல் சுற்றுவட்டாரத்துல ஒரு ஊருக்கு 3 டீம் இருக்கு. 4 வயசுல இருந்து நான் வாலிபால் விளையாடுறேன்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டியில பிளஸ் 2 முடிச்சேன். இப்ப விவசாயம் பாக்குறேன். தினமும் தீவிரமா பிராக்டிஸ் பண்ணுவேன். எனக்கு இப்போ 37 வயசாச்சு, திருமணமாகி 3 குழந்தைகள் இருக்காங்க. என் வயசு உடையவங்க எல்லாரும் விளையாடுறத நிறுத்திட்டாங்க. நான், சின்ன பசங்களுக்கு வாலிபால் சொல்லித் தந்துட்டு, அப்டியே விளையாடிட்டு வறேன்.
எங்க டீம் சின்னாளப்பட்டியில் கிளஸ்டர்ல ஜெயிச்சோம். ஆனா, மதுரைல நடந்த டிவிஷனல் மேட்ச்ல தோத்துட்டோம். கிராமத்துல உள்ளவங்கள ஊக்குவிச்சு, விளையாட்டு வீரர்கள உருவாக்கும் நோக்கத்துல ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துறது நல்ல விஷயம். குறிப்பா, என்ட்ரன்ஸ் பீஸ், வேற பீஸ்ன்னு எதுவுமே எங்ககிட்ட எதுவும் அவங்க வாங்கல.
எங்க டீம் 3 வருஷமா ஈஷா கிராமோத்சவம் போட்டிகளில் கலந்துக்குறோம். போன ரெண்டு வருஷமா கிளஸ்டர்லயே தோத்துட்டோம். இந்த வருஷம், கிளஸ்டர்ல ஜெயிச்சு, டிவிஷ்னல் வரைக்கும் போயிருக்கோம். கிராமத்துல திறமை இருக்குற விளையாட்டு வீரர்களை ஈஷா கண்டெடுக்குது.
கிளஸ்டர், மண்டலப் போட்டிகளில் ஜெயிச்சு, அப்படியே கோவை ஈஷா ஆதியோகி வளாகத்துல பைனல்ஸ் விளையாடனும்ன்னு ஆசை. இந்த வருஷம் நடக்கல. வரும் வருஷங்கள்ல தீவிரமா முயற்சி செய்வோம். விளையாட்டு ஆர்வம் குறையும்போது, பசங்க போதை, கஞ்சா போன்ற வழியில போயிடறாங்க. குரூப்பா சேர்ந்து விளையாடும்போது, அந்த எண்ணம் மாறிடுது. விளையாடிட்டே இருக்குறதால உடம்ப ஆரோக்கியமா வெச்சுக்க முடியுது" என்றார்.
ஈஷா கிராமோத்சவம், கிராமத்து மண்ணில் இளைய மனங்களில் கனவுகளை விதைத்து, இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர்கிறது. மணி போன்ற இளைஞர்களுக்கு விளையாட்டின் மூலம் உற்சாகமும் நம்பிக்கையும் பரப்புகிறது இவ்விளையாட்டுத் திருவிழா.
- 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
- மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை:
ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கம், சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (13/08/2025) சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் 'மண் காப்போம் இயக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்று இக்கருத்தரங்கம் குறித்து பேசினர்.
சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான மெகா பயிற்சி கருத்தரங்குகளும், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5 முதல் 10 வரையிலான ஒரு நாள் களப்பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனுடன் கோவை செம்மேடு மற்றும் திருவண்ணாமலையில் மண் காப்போம் இயக்கம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி இயற்கை பண்ணைகளில் 3 மாத இலவச களப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளை, 'இயற்கை விவசாய பயிற்றுநர்களாகவும்' உருவாக்கி வருகிறோம். அவர்களின் பண்ணைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O
இன்றைய சூழலில் வேளாண் சார்ந்த சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை ஆர்வம் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. இன்று நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 - 40 சதவீதம் சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்களும் முக்கியமான இடம் வகிக்கிறது. இதற்கான எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது.
கடந்த ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பினை தொடர்ந்து இந்தாண்டு எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O நடத்தப்படுகிறது.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் தலைமையுரை ஆற்ற உள்ளார்.
கருத்தரங்கு பேச்சாளர்கள்
இக்கருத்தரங்கில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதன் வளர்ச்சிக்கு உதவும் MSME திட்டங்கள், பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்வது குறித்த யுக்திகள், சந்தைப்படுத்துவதில் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நபார்டு கடனுதவி திட்டங்கள் குறித்து நபார்டின் தலைமை பொது மேலாளர் ஆனந்த், டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து 10,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு பயிற்சியளித்த குளோபல் டெக்னாலஜி நிறுவனத்தின் வசந்தகுமார், வேளாண் வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் MSME அரசுத் திட்டங்கள் குறித்து வணிக யுக்தி ஆலோசகர் எம்.கே.ஆனந்த், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுடன் நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருள்கள் குறித்து தஞ்சாவூர் வசீகரா வேதா விஜயா மகாதேவன், மதுரை தனா ஃபுட் பிராடக்ட்ஸின் தனலட்சுமி விக்னேஷ், பனங்கருப்பட்டி தொழில் நுட்பங்கள் குறித்து தூத்துக்குடி ஃபாம் இரா நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.
கண்காட்சி
இந்த கருத்தரங்கில் வேளாண் சார்ந்த புதுமையான தயாரிப்புகளை கொண்ட 100-க்கும் மேற்பட்ட கடைகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஆக.16-ம் தேதி தொடங்குகிறது.
- மூன்று கட்டமாக நடைபெறும் போட்டிகளில் மொத்த பரிசுத்தொகையாக ரூ.67 லட்சம் வழங்கப்பட உள்ளது.
கோவை:
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும் ஆக.16ம் தேதி தொடங்குகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் போட்டிகளில் மொத்த பரிசுத்தொகையாக ரூ.67 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். (முன்பதிவுக்கு;- isha.co/gramotsavam, மேலும் தகவல்களுக்கு;- 83000 30999)
சத்குருவால் தொடங்கப்பட்ட 'ஈஷா கிராமோத்சவம்', பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக "ஈஷா கிராமோத்சவம்-2025" ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்.
நம் கிராமிய வாழ்வியலில் இருந்த பல்வேறு கலாச்சார அம்சங்களை நாம் இழந்து விட்டோம். இதனால் கிராம மக்களின் வாழ்வில் உற்சாகம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கூடுதலாக கிராமங்களில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பு இல்லாத சூழல்களால் இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் நிலையும் இருக்கின்றது.

இந்நிலையில் கிராம மக்களின் வாழ்வில் உற்சாகத்தை மீட்டெடுத்து, கொண்டாட்ட உணர்வை கொண்டு வருவதற்கான ஒரு முன்னெடுப்பாக ஈஷா கிராமோத்சவ திருவிழா சத்குருவால் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இளைஞர்கள் போதை பழக்கங்களிலிருந்து விடுபடவும், சாதிய தடைகளை உடைத்து, பெண்களுக்கு வல்லமை அளிக்கவும் உதவுகிறது.
மேலும் இது தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்படுகிறது.
இது குறித்து சத்குரு கூறுகையில், "ஈஷா கிராமோத்சவம், விளையாட்டின் மூலம் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. விளையாட்டு, சமூகப் பிரிவுகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும்; இதுதான் விளையாட்டின் சக்தி. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை உற்சாகமான விளையாட்டு மூலம் அழிக்க முடியும். இது ஒரு சிறந்த விளையாட்டு வீரராக மாறுவது பற்றியது அல்ல, மாறாக வாழ்நாள் முழுவதும் விளையாட்டு தன்மையுடன் இருப்பது பற்றியது. ஒரு பந்தை முழு ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் வீச முடிந்தால், பந்து உலகத்தையே மாற்றும். உற்சாகமாக விளையாடுவதன் மகிழ்ச்சியை நீங்கள் அறிய வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
ஈஷா கிராமோத்சவம்-2025;- 6 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம்
ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமப்புற விளையாட்டு திருவிழா மிக விரிவாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் ஆண்களுக்கான கைப்பந்து (வாலிபால்) மற்றும் பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையாட இருக்கின்றனர். அதில் குறிப்பாக 5,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களும் களமிறங்கவுள்ளனர்.
இந்த போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். முதல் நிலை கிளஸ்டர் அளவிலான போட்டிகள் இம்மாதம் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும். இதனையடுத்து ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகளில் மாற்று திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெறும்.
இப்போட்டிகளில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்களால் மட்டுமே அணிகள் உருவாக்கப்பட முடியும். தொழில்முறை வீரர்கள் அணிகளில் இடம்பெற முடியாது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். (முன்பதிவுக்கு;- isha.co/gramotsavam , மேலும் தகவல்களுக்கு;- 83000 30999)
பரிசுத்தொகை
ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகளின் 3 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முதல் நிலை போட்டிகளில் முதல் நான்கு இடங்களை வெல்லும் அணிகளுக்கு முறையே ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 மற்றும் ரூ.3,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. அதே போன்று மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ரூ.12,000, ரூ.8,000, ரூ.6,000 மற்றும் ரூ.4,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.
இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ரூ.5,00,000, ரூ.3,00,000, ரூ.1,00,000, ரூ.50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ரூ.67 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
இந்த திருவிழாவில் விளையாட்டு போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின் தவில் - நாதஸ்வரம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும், பொது மக்களுக்கான கோலப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனுடன் சிலம்பம் போட்டிகளும் நடைபெற உள்ளன.
ஈஷா கிராமோத்சவத்தை ஒருங்கிணைத்து நடத்தும் ஈஷா அவுட்ரீச், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 'தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக (NSPO)'அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2018ல் இந்திய அரசின் 'ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்' விருதும் வழங்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களான ராஜவர்தன் சிங் ரத்தோர் மற்றும் கர்ணம் மல்லேஸ்வரி போன்ற விளையாட்டு பிரபலங்கள் இதற்கு முந்தைய இறுதிப் போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
- சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக விருது எனப் புகழாரம்.
- கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'க்ரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு "ப்ளூ டங்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக க்ரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெர்மனியில் செயல்பட்டு வரும் "க்ரேட்டர் (Greator)" எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் "ப்ளூ டங்" (Blue tongue) என்ற விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து க்ரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன. நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.
அதனால்தான் இந்த ஆண்டின் "ப்ளூ டங்" விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், " உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தை விட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் மட்டும் ‘ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)’ மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 'ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)' மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (05-06-2025) ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதனுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.
இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இவ்வியக்கம் மூலம், கடந்த நிதி ஆண்டில் (2024 – 25) 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு இந்த சுற்றுச்சூழல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு கூறுகையில், "UNFCCC இன் COP29 மற்றும் UNCCD இன் COP16 உச்சி மாநாடுகளில் நாங்கள் முன்நிறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உலகளாவிய காலநிலை நிதியில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளை அடைகிறது என்பதாகும்.
காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம், இது தான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரம் நடும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன.
காவேரி கூக்குரல் இயக்கம் 2024 ஆம் ஆண்டில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மாநில அளவில் 2 பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளையும், மண்டல அளவில் 6 நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இதில் 8,721 விவசாயிகள் பங்கேற்றனர்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM), மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மரம் சார்ந்த விவசாயம் குறித்து நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்தனர்.
இவ்வியக்கம் மூலம் 2024 ஆம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5), வன மகோற்சவ வாரம் (ஜூலை 1-7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மற்றும் உலக மண் தினம் (டிசம்பர் 5) போன்ற முக்கிய நாட்களில், 506 மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈஷா நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதற்காக கடலூரில் 85 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும், திருவண்ணாமலையில் 15 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும் இவ்வியக்கம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் 40 விநியோக நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
- ஈஷா யோகா மையம் தங்கள் கிராமத்தில் அமைந்து இருப்பது பெருமை அளிப்பதாக ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் பேச்சு
- வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்க கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
கோவை:
ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அமைப்புகளை கண்டித்து ஆலாந்துறை சுற்றுவட்டார கிராம மக்கள் இன்று (நவ.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுபள்ளம், மத்வராயபுரம், முட்டத்துவயல், முள்ளாங்காடு, தாணிக்கண்டி, மடக்காடு, நல்லூர்வயல்பதி, பட்டியார்கோயில்பதி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பழங்குடி மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் ஈஷாவால் தங்களுடைய கிராமங்கள் அடையும் பயன்கள் குறித்து பேசியதுடன், பயன்களை தடுக்க அந்நிய சக்திகள் சூழ்ச்சிகள் செய்வதாக குற்றம்சாட்டினர்.
தாணிகண்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி. காய்த்ரி பேசுகையில், "வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிகண்டி, மடக்காடு, முள்ளாங்காடு உள்ளிட்ட ஏராளமான பழங்குடி கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஈஷாவையே சார்ந்து உள்ளோம். ஈஷாவின் உதவியால் மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கி ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
எங்களுடைய குழந்தைகளை ஈஷா தான் படிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இரவு எத்தனை மணிக்கு அழைத்தாலும் ஆம்புலன்ஸ் அனுப்பி எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எங்களுடைய பழங்குடி மக்களின் நிலங்களை ஈஷா ஆக்கிரமித்துவிட்டதாக சிலர் பணத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் பொய். என்னுடைய அம்மா முத்தம்மாளும் இந்த பொய் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. உண்மை என்னவென்று எங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் நாங்கள் எப்போதும் ஈஷாவிற்கு ஆதரவாகவே இருப்போம்" என்றார்.
போளூவாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யும் காலத்திற்கு முன்பு இருந்தே நாங்கள் ஈஷாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறோம். ஈஷா வந்த பிறகு தான் எங்கள் பகுதிக்கு சாலை வசதிகள், பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள் கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் ஈஷா தன்னார்வலர்கள் செய்த உதவிகளை நாங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டோம். பிரதமர் உட்பட உலகமே போற்றும் ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் அமைந்து இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இந்நிலையில் சில போலி அமைப்புகள் பணத்திற்காகவும், விளம்பரம் தேடி கொள்வதற்காவும் ஈஷாவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழும் எங்களுக்கு உண்மை எது? பொய் எது என்று தெரியாதா? சிலர் வெளியூரில் இருந்து பணம் கொடுத்து வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து ஈஷாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் எங்கள் கிராமத்தில் தேவையற்ற குழப்பத்தையும், அமைதியை சீர்குலைக்கவும் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எங்களுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.
குமார் என்பவர் பேசுகையில், "சத்குருவின் வழிகாட்டுதலில் நாங்கள் தொடங்கிய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பலன்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடி மக்களின் பெயர்களை பயன்படுத்தி இந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்க கூடாது. அதை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து அவர்களின் பொய் பிரச்சாரத்தையும் சதி திட்டத்தையும் முறியடிப்போம்" என்றார்.
- தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உர கடை என பல்வேறு வழிகளின் வருமானம் ஈட்டி வருகிறது.
- விரைவில் ரூ.50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறார்கள்
கோவை:
ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி (Annual Turn over) புது சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (நவம்பர் 30) நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உர கடை என பல்வேறு வழிகளின் வருமானம் ஈட்டி வருகிறது.
கடந்தாண்டு இதில் அதிகப்பட்சமாக, தேங்காய் விற்பனையின் மூலம் ரூ.14.92 கோடியும், உர கடையின் மூலம் ரூ.1.26 கோடி கோடியும் மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.
2022-ம் ஆண்டில் 5621 டன் தேங்காய், 7066 டன் தேங்காய் மட்டை, 252 டன் காய்கறிகள், 2.7 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவை இந்நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் அவர்கள் பொது கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில், "ஈஷாவின் ஆதரவோடும், விவசாய உறுப்பினர்களின் பங்களிப்போடும் நாம் கூடிய விரைவில் ரூ.50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறோம். நம்முடைய விவசாயிகளின் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், தேங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
நாம் தொடர்ந்து நல்ல படியாக விவசாயம் செய்ய வேண்டுமானால், மண் வளம் மிகவும் அவசியம். எனவே, சத்குரு ஆரம்பித்துள்ள 'மண் காப்போம்' இயக்கத்தின் பரிந்துரைகளின் படி மாதிரி பண்ணைகளை நம்முடைய கிராமங்களில் உருவாக்க வேண்டும். மண் பரிசோதனை செய்வதை எளிமையாக்கும் வகையில், 'நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை' உருவாக்கவும் நம்முடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என்றார்.
இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் வேலுமணி, நாகரத்தினம், கிட்டுசாமி மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் வெங்கட் ராசா, அருணகிரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்நிறுவனம் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி அகாடமி (ICAR - NAARM) 'சிறந்த வளர்ந்து
வரும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற விருதை கடந்த செப்டம்பர் மாதம் வழங்கி கெளரவித்தது. இதேபோல், 2021 ஆண்டு தமிழக அரசின் 'சிறந்த எப்.பி. ஓ' விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.






