என் மலர்
நீங்கள் தேடியது "Cauvery Calling"
- விவசாயம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் முக்கியமான கருத்தரங்கம்
- கருத்தரங்கில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில், 'நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் - ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு' எனும் பிரம்மாண்ட கருத்தரங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
சத்குரு முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் பல கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிகளும் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கருத்தரங்கு தொடர்பான பத்திரிகையாளர் இன்று நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று பேசினார். கருத்தரங்கு தொடர்பாக பேசிய தமிழ்மாறன், "காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், மரம் சார்ந்த விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு மாபெரும் கருத்தரங்கு டிசம்பர் 27-ஆம் தேதி ஓசூரில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியில், 5 தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் 4 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில், விவசாயம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் முக்கியமான கருத்தரங்கமாக இது அமையவுள்ளது. இன்றைய சூழலில் விவசாய நிலங்களில் குறைந்து வரும் மண் வளம் என்பது சமூகத்திற்கான மிகப்பெரிய சவாலாக உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகள், மண் வளம் குறைந்து வருவதால் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்து, எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்படும் என்று எச்சரித்து வருகின்றன.

தமிழ்மாறன்
இதற்கு தீர்வளிக்கும் வகையிலேயே சத்குரு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கங்களை தொடங்கினார். விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் இரண்டும் ஒரே நேரத்தில் மேம்படும் வகையில் இத்திட்டங்களை அவர் வடிவமைத்தார். இவ்வியக்கங்கள் விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து களத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
குறிப்பாக மரம் சார்ந்த விவசாயம், விவசாய நிலங்களில் குறைந்து வரும் மண் வளத்தினை மீட்டெடுக்க மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது. மரம் சார்ந்த விவசாயம் என்பது, வழக்கமான பயிர்களுக்கு இடையே, வரப்பு ஓரங்களில் மரங்களை வளர்ப்பதும் அல்லது பிரதானமாக மரங்களை வளர்த்து அதனிடையே ஊடுபயிராக விவசாயம் மேற்கொள்வதாகும். இந்த விவசாய முறை ஒரே நேரத்தில் விவசாயிகளின் பொருளாதாரம், மண் வளம், நிலத்தடி நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துகிறது.
இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில், காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் ஆண்டுதோறும் பல கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் விவசாயிகள் கலந்தாலோசனை கூட்டங்களை நடத்துகிறோம்.அதன் தொடர்சியாகவே 'நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம் - ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு' என்ற தலைப்பில் பிரம்மாண்ட ஒரு நாள் கருத்தரங்கை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் டிச'27 ஆம் தேதி நடத்துகிறோம். இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வில், 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் இருக்கை, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு, உயர்வருமானம் தரும் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் பயிர் தொழில்நுட்பங்களை பகிர உள்ளனர். இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைவர் ரவி, சந்தன சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரையுள்ள தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சந்தை வாய்ப்புகளை விளக்குகிறார்.

இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் கண்டியண்ணன், மிளகு சாகுபடியில் ரகங்கள், வளர் தொழில்நுட்பம் மற்றும் அதிக விளைச்சல் பெறும் வழிகளை பகிர்கிறார். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முனைவர் செந்தில் குமார் மற்றும் சங்கரன் ஆகியோர் அவகேடோ உள்ளிட்ட உலகளாவிய தேவை கொண்ட பழங்கள், சிறு பழங்கள் மற்றும் நீடித்த நிரந்தர வருமான வாய்ப்புகள் குறித்து உரையாற்றுகிறார்கள்.
பூச்சியியல் வல்லுநர் செல்வம், ரசாயனமில்லா பூச்சி மேலாண்மை முறைகளையும், சென்னை ஐஐடி சிவசுப்பிரமணியன் மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பத்தையும் விளக்குகின்றனர். சந்தனம், ஜாதிக்காய் மற்றும் மிளகு விவசாயத்தில் முன்னோடிகளாக விளங்கும் 4 நான்கு மாநில விவசாயிகள் தங்கள் நேரடி அனுபவங்களை பகிர உள்ளனர்.
விற்பனை கண்காட்சி
விவசாயிகள் தங்களது உற்பத்தியை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யும் வகையில் இயற்கை விவசாய மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதனுடன் மியாசகி மா, அவகோடா, சந்தனம், மிளகு மற்றும் 54 வகையான பழ மரக்கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
சிறப்பு விருந்தினர்கள்
இக்கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை மற்றும் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இயக்குநர் சஞ்சய் கண்ணா மற்றும் டாடா மெடிக்கல் & டயக்னோஸ்டிக்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
முன்பதிவு அவசியம்
இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079, 94425 90081 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதில் தமிழ்நாட்டு விவசாயிகள் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும்" எனக் கூறினார்.
- காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய கருத்தரங்கு சாத்தூரில் இன்று நடைபெற்றது.
- வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை வளர்த்தால் விவசாயிகள் நல்ல வருமானம் பார்க்கலாம் என்றார் விளாத்திக்குளம் எம்.எல்.ஏ.
சாத்தூர்:
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'லட்சங்களை கொட்டி தரும் மானாவாரி மரப் பயிர் சாகுபடி'என்ற தலைப்பிலான விவசாய கருத்தரங்கு சாத்தூரில் உள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நிகழ்ச்சியில் பேசியதாவது:
33 சதவீதம் பசுமை பரப்பை அடைய வேண்டும் என்பது நம்முடைய இலக்காக உள்ளது. தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பு சுமார் 24 சதவீதமாக உள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் 3.8 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. அதை அதிகரிக்க எங்களால் முடிந்த செயல்களை நாங்கள் செய்து வருகிறோம்.
என்னுடைய சட்டமன்ற தொகுதியில் 'வனத்திற்குள் விளாத்திக்குளம்'என்ற பெயரில் 5 ஆண்டுகளில் 1 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக 25 லட்சம் பனை விதைகளையும் நட உள்ளோம்.
விவசாயிகள் ஆசைக்காக மரம் வைக்காமல், வாழ்விற்காக மரம் வைக்க வேண்டும். விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மானாவாரி மாவட்டங்களில் நெல், வாழை போன்ற மரங்களை நட்டு சிரமப்படுவதற்கு பதிலாக வேப்பமரம், நாவல், பனை கொடுக்காப்புளி போன்ற மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அவை மானாவாரியில் நன்கு வளர்ந்து நல்ல வருமானமும் தரும்.
நம் நாட்டிற்கு ஒரு நம்மாழ்வார் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நம்மாழ்வாராக உருவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுராம் பேசுகையில், "விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. பொதுவாக, கிராமங்களில் ஒரு வேப்பமரம் இருக்கும். அது எவ்வித பராமரிப்பும் இன்றி தானாக நன்றாக வளர்ந்து இருக்கும். அதேசமயம், ஏக்கர் கணக்கில் வேப்ப மரங்களை நாம் வளர்க்க விரும்பினால், நாம் எதிர்பார்ப்பதை போல் தானாக வளர்ந்துவிடாது. அதற்கென்று சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அந்த வகையில், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இக்கருத்தரங்கின் வல்லுநர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன். மரம் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் மிகவும் அவசியமானது. எனவே, இந்த தொகுதியில் மரம் வளர்க்கும் பணியில் என்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக உள்ளேன் என்றார்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு முன்னோடி விவசாயிகளும், விஞ்ஞானிகளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக, ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் ராமமூர்த்தி வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் 'கொடுக்காப்புளி'மர வளர்ப்பு குறித்தும் பேசினர். பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராஜன் சந்தன மர வளர்ப்பு குறித்தும், செட்டிநாடு மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் குருசாமி இலுப்பை மர வளர்ப்பு குறித்தும் பேசினர்.
காவேரி கூக்குரல் இயக்கமானது மரம் சார்ந்த விவசாயம் குறித்த பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வியக்கம் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் இதுவரை சுமார் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ரூ.3-க்கு விநியோகம் செய்யப்படுகிறது.
- கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது
- அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களில் வரப்போரங்களில் மரங்கள் நடலாம்.
கோவை:
உலக வன தினம் கொண்டாடப்படும் நிலையில், சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறுகையில், "நாங்கள் 2004-ம் ஆண்டு முதல் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். இதன் பயனாக, இதுவரை 8.4 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்போடு நடவு செய்துள்ளோம். 1,68,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயம் பற்றி தெரிந்துகொண்டு, அவர்களது நிலத்தில் மரங்களை நடவு செய்துள்ளனர்.
குறிப்பாக, மரம் சார்ந்த விவசாயம் மூலம் காவேரி நதியை மீட்டெடுப்பதற்காகவும், அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். இவ்வியக்கத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயித்து இருந்தோம்.
தமிழ்நாட்டில் சத்குரு ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வின் தாக்கத்தாலும், ஈஷா தன்னார்வலர்களின் செயல்பாட்டாலும் இந்த இலக்கை நாங்கள் மார்ச் 20ம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளோம். இதேபோல், கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு 1.30 கோடி மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், மரம் சார்ந்த விவசாய முறையின் பயன்கள் குறித்து கூறுகையில், "அனைத்து விவசாயிகளும் தங்களது நிலங்களில் வரப்போரங்களில் மரங்கள் நடலாம். அதிக நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகள், அவர்களுடைய மொத்த நிலத்தில் குறைந்தப்பட்சம் மூன்றில் பங்கு நிலத்தில் மரங்கள் நடலாம். மேலும், நிலம் முழுவதும் மரங்களை நடவு செய்து, மற்ற பயிர்களை ஊடுபயிராகயும் சாகுபடி செய்யலாம். இவ்வாறு விவசாயிகளின் தேவைக்கேற்ப பல்வேறு விதமாக மர விவசாயம் செய்ய முடியும். மர விவசாயத்திற்கு மாறுவதன் மூலம் விவசாயிகளின் வருமானம் 3 முதல் 8 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுமட்டுமின்றி, மரங்களில் சமவெளில் வளரக்கூடிய மிளகு ரகங்களை சாகுபடி செய்வதின் மூலம் கூடுதல் தொடர் வருமானத்தையும் பெற முடியும். மானாவாரி விவசாய நிலங்களிலும் மர விவசாயம் செய்வதற்கான தொழில் நுட்பங்களை ஈஷா வழங்கி வருகிறது.
ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஏற்ற வகையில், மண்ணுக்கேற்ற மரங்களை நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம். மேலும், விவசாயிகளுக்குத் தேவையான டிம்பர் மரக்கன்றுகள் மலிவான விலையில் கிடைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 40 ஈஷா நாற்று பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மரக்கன்றுகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு மரக்கன்று 3 ரூபாய் என விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அடுத்துவரும் மழைக்காலத்துக்கு தேவையான மரக்கன்று உற்பத்திக்கான ஆயத்தப் பணிகளையும் தற்போது துவங்கியுள்ளது. மர விவசாயம் குறித்த இலவச ஆலோசனைகள் பெறுவதற்கும், மரக்கன்றுகள் பெறுவதற்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என கூறினார்.






