அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? - ஈஷா சிவராத்திரி விழாவில் எஸ்.பி.வேலுமணி-பிரேமலதா சந்திப்பு

தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன சிவராத்திரி விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக? - ஈஷா சிவராத்திரி விழாவில் எஸ்.பி.வேலுமணி-பிரேமலதா சந்திப்பு
Published on

தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்து இருந்தார்.

தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பிரேமலதா ஒரே மேடையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.

இந்த நிலையில் மீண்டும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்குள் கூட்டணி வடிவத்தை இறுதி செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு கோவையில் நேற்று நடந்த சிவராத்திரி விழா தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் கூறி வருகிறார்கள்.

நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கியமாக இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

முன்வரிசையில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பானது அ.தி.மு.க. பா.ஜ.க. தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்றும் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் தான் தங்கி உள்ளார். அவருடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.

மேலும் கோவையில் தங்கி இருக்கும் பிரேமலதா விஜயகாந்த்தை கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மகா சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார். நேற்று பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த சந்திப்பு இயல்பாக நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தபடி தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை நிச்சயம் அமைப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com