என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மிராக்கிள் ஆப் மைண்ட் தியான நிகழ்ச்சி!
    X

    உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

    • ஈஷா சார்பில் தமிழகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உலகில் அனைத்திலும் சிறந்த, சக்திவாய்ந்த, அற்புதமான கருவி மனித மனம்தான்.

    சென்னை:

    உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களும் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களும் பங்கேற்றனர்.

    உலக மனநல தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை மற்றும் தி சவேரா ஹோட்டல் சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" எனும் தியான நிகழ்ச்சி, சவேரா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. அதே போன்று ஈஷா சார்பில் தமிழகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்ற "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சியில் பாரத் மேட்ரிமோனி நிறுவனர் முருகவேல், சவேரா ஹோட்டலின் தலைவர் விவேக், நிர்வாக இயக்குனர் நினா ரெட்டி மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதனுடன் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சித்தா கல்லூரி உள்பட மயிலாப்பூர், அடையார், அண்ணா நகர், அம்பத்தூர், புரசைவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் இம்மானுவேல் அரசர் குரூப் ஆப் இன்ஸ்டியூசன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோவையில் விமானப்படை நிர்வாக கல்லூரி, சிங்காநல்லூர் ரேபிட் ஆக்சன் போர்ஸ் வளாகம், சூலூர் விமானப்படைத்தளம், குன்னூர் ராணுவக் கல்லூரி, ஐஎன்எஸ் அக்ரானி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும், திருப்பூரில் நிஃப்ட் கல்லூரி மற்றும் கோத்தகிரியில் இன்டர்நேஷனல் கம்யூனிட்டி பள்ளியிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் சேலம், ஓசூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மிராக்கிள் ஆப் மைண்ட் தியான நிகழ்ச்சி நடைபெற்றது.

    மனநலப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனநலப் பாதுகாப்பை மேம்படுத்தவும் உலக மனநல தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

    சத்குருவின் உலக மனநல தினச் செய்தியில், "நம் மனம் நம் பொறுப்பாகும் - நமது முக்கியமான பொறுப்பாகும். உலகில் அனைத்திலும் சிறந்த, சக்திவாய்ந்த, அற்புதமான கருவி மனித மனம்தான். வியக்க வைக்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், அசாதாரண தொழில்நுட்ப முன்னேற்றங்களும், மனித மனத்தின் வெளிப்பாடுகளே. இருப்பினும், உலகம் முழுவதும் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும், மோதல்களும், பேரழிவுகளுமே மனித மனத்தின் தயாரிப்புதான் .இந்த உலக மனநல தினத்தன்று, அற்புதமான கருவியான மனத்தை நம் வசமாக்கிக்கொள்ள உறுதி கொள்வோம்! நலமாக உள்ள மனம், பல அதிசயங்களை வெளிப்படுத்தி மனித வாழ்வை மேம்படுத்தும். மனதின் அதிசயத்தை அனுபவிக்க ஒரு நாளைக்கு 7 நிமிடங்கள் முதலீடு செய்வோம் என உறுதியளிப்போம்" எனக் கூறியுள்ளார்.

    https://x.com/SadhguruTamil/status/1976608679228227632

    உலகளவில் பெரும் சவாலாக உருவெடுத்து வரும் மனநல பிரச்சனைகளை கையாள தியானம் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை வலியுறுத்தி சத்குரு அவர்கள் 'மிராக்கிள் ஆப் மைண்ட்' எனும் இலவச தியான செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த இலவச செயலி மூலம், வழிகாட்டுதலுடன் வெறும் ஏழே நிமிடங்களில் மக்கள் தியானம் செய்ய முடியும். மக்கள் இந்த தியானத்தில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தம், பயம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுதலை, ஆழ்ந்த உறக்கம் மற்றும் மன அமைதி உள்ளிட்ட பலன்களைப் பெற முடியும்.

    மிராக்கிள் ஆஃப் மைன்ட் தியான செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அம்சங்களும் உள்ளன. இதில், மனஅழுத்தம், உறவுகள், உடல் மன ஆரோக்கியம் தொடர்பான சத்குருவின் உரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இச்செயலியில் துவக்கத்தில் 7 நிமிடங்கள் மேற்கொள்ளும் தியானத்தை 21 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம். கண்கள் மூடியிருந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவை நாம் அறிந்து கொள்ள உதவும் நினைவூட்டல் வசதிகளும் உள்ளன. இந்த செயலியை isha.co/mom

    என்ற இணைப்பில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

    Next Story
    ×