என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selvaperundhagai"

    • தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
    • பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தான்.

    எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பா.ஜ.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பா.ஜ.க. பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து நாளை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

    சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்க இருக்கிறோம்.

    மத்திய பா.ஜ.க. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த நாளை நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் தேர்தல் ஆணையம் மோசடியாக செயல்படுகிறது.

    பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து நவீன முறையில் வாக்குத் திருட்டை செயல்படுத்துகிறது.

    நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது.

    குடியுரிமை சான்றிதழை கொடு என்றால் என்னால் கூட தற்போது கொடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
    • வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை இபிஎஸ் தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மேலும் கூறியதாவது:-

    செல்வப்பெருந்தகையை கீழ்தரமாக விமர்சித்து நாலாந்தர பேச்சாளராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

    தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு தகுதியும் இல்லை. வசவு வார்த்தைகளை பொது வெளியில் எந்த தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பேசியிருக்கிறார்.

    விரக்தியின் விளிம்பில் உள்ள எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது.
    • மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது.

    ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது

    தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது" என்றார்.

    இந்நிலையில், "ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், பொருளாதார மேதையுமான ப. சிதம்பரம் எம்.பி., அவர்கள் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து கூறியிருப்பது சாதாரணமான விமர்சனம் அல்ல, அது மக்களின் அனுபவித்த கொடிய துன்பத்தை எடுத்துக் காட்டுகிறது.

    எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எச்சரித்ததே இதுதான் – ஜிஎஸ்டி மக்களின் முதுகெலும்பை முறிக்கிறது, வணிகர்களின் கனவுகளை நொறுக்கிறது, நடுத்தர மக்களின் உயிரையே சுரண்டுகிறது, ஏழைகளின் அடிப்படை வாழ்வையே பறிக்கிறது. ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு, எட்டு ஆண்டுகள் முழுவதும் செவிடாய் நடித்து வந்தது. இன்று மக்களின் கோப அலைக்கும் உண்மையின் நெருப்புக்கும் முன் தாங்க முடியாமல் பின்வாங்குகிறது.

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் முன்னரே தீவிரமாகக் கூறியிருந்தார்: 'ஜிஎஸ்டி மக்களுக்கான நிவாரணம் அல்ல, அது பாஜக அரசின் கொள்ளைக் கருவி' என்று. அந்த வார்த்தைகள் இன்று இடிமுழக்கம் போல் முழங்கி, பாஜக அரசின் பொய்முகமூடியைச் சிதறடிக்கின்றன. மக்களின் உழைப்பை கொள்ளையடித்து, இரத்தமும் வியர்வையும் பிழிந்து, தங்களின் கருவூலத்தை நிரப்பிக் கொண்ட இந்த அரசு, இப்போது மக்களின் எழுச்சியால் குலுங்குகிறது.

    இந்த நாட்டின் நிலம் எரிமலையைப் போலக் குலுங்குகிறது. மக்களின் கோபம் சுடும் காற்றல்ல் அது புயல். அந்த புயலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. மக்களின் சினம் தீப்பொறியாக மட்டுமல்ல, எரியும் எரிமலையாக வெடிக்கத் தயாராக உள்ளது. அந்த வெடிப்பு பாஜக அரசை அரசியல் மேடையிலிருந்து சாம்பலாக்கும்.

    சிறு சலுகைகளால் மக்களின் வேதனை அடங்காது. ஜிஎஸ்டி குறைப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும். மக்களின் வாழ்வைத் தொடும் ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளிலும், ஒவ்வொரு சேவையிலும் இந்த சுரண்டல் வரி முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் மக்கள் குரல் போர்க் குரலாக வெடித்து, பாஜக ஆட்சியை வரலாற்றின் குப்பைத்தொட்டியிலே தள்ளித் தீர்க்கும்.

    மக்களின் குரல் இனி ஒலியல்ல. அது நெருப்பு. அந்த நெருப்பு பாஜக அரசின் ஆட்சியை சாம்பலாக்காமல் விடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.
    • எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல்.

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தியவுடன், அதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.

    இன்று இந்தியாவில் மோடி அரசு என்றால் அது வாக்குத் திருட்டின் சின்னம். மக்களால் நேசிக்கப்படாததால் தேர்தலில் நேர்மையாக வெல்ல முடியாத அரசுதான் பா.ஜ.க. அரசு. சதி, வஞ்சகம், வாக்குத்திருட்டு என்ற மூன்று தூண்கள்மேல் தான் இந்த அரசு தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் தோல்வியையும் பயத்தையும் மறைக்கவே ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் என்ற சிரிக்கத்தக்க பொய்க்குற்றச்சாட்டு பவன் கெரா மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உண்மையை வெளிப்படையாகச் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை மௌனப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.

    ஆனால் இந்த நாட்டின் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள். வாக்குத் திருடனை வாக்குத் திருடன் என்றுதான் அழைப்போம். எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, பவன் கெரா அவர்களுடன் உறுதியுடன் நிற்கிறது. மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காங்கிரசின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது என பதிவிட்டுள்ளார் .

    • தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
    • தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7-ந் தேதி வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

    பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாடு இடத்தை இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் நடைபெற உள்ள வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் மாநாட்டுக்கு கால் கோள் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளேன்.

    இந்த மாநாடு ஒரு திருப்பு முனையான மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள். டெல்லியில் இருந்து மேலிட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியிலும், பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றும் புதிது அல்ல. உத்தரபிரதேசத்தில் இதுவரை 5 முறை பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதலமைச்சரிடம் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது கூட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் பிரதமர் மோடி. அவர் வெள்ளை அறிக்கை விடட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்கும்போது இந்த கொலை வழக்கில் சரியான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.

    இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இணக்கமாக உள்ளது. இந்த கூட்டணி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட கூட்டணி. தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்கக்கோரி சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நலம் கருதி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க நடத்தும் அவரது போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனாலும் அவரது உடல் நலம் முக்கியம்.

    ஜி.கே.மூப்பனார் ஒரு காலமும் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்தது கிடையாது. சமீபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கூட காங்கிரஸ் திடலில் தான்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். வெளியேறி உள்ளனர். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
    • அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

    திருச்சி துறையூரில் அம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயலாகும் என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.

    அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.

    அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

    சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள்.
    • மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.

    பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது பற்றி நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

    தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.

    இது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடித்து வருவதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதால் மோடி அரசு ஆடிப் போய் இருக்கிறது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது.

    வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள்.

    விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்டுள்ள சதித்திட்டங்கள் அம்பலமாகி உள்ளது.

    எப்படியெல்லாம் பானக மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக வாக்குத் திருட்டுகள் விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இந்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கன்னியாகுமரியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.

    அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 130-வது சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்க காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 10-க்கும் குறைவான மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளன.

    அந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு 30 நாட்கள் ஜெயிலில் அடைத்து எதிர்கட்சி தலைவர்களை ஒழிக்க பாஜக அரசு முயல்கிறது. எனவே எதிர்க்கிறோம்.

    அரசியல் அமைப்பு சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம்.

    எனவே அதை முறியடித்து தண்டனை கிடைத்ததும் பதவி நீக்கம் செய்வதை அமல்படுத்தியது காங்கிரஸ். இந்த சட்டம் அமலில் இருக்கும்போது அதில் புதிய திருத்தம் ஏன் செய்ய வேண்டும். இதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் புரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
    • “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

    ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய "ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது" என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

    இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.

    இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் "நியாயம் – சமத்துவம் – சமூக நீதி" என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.

    நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.

    உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி அவர்கள் நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய தொல்லியல் துறை கீழடி ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
    • கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

    கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

    ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

    இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

    இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் இந்த செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.

    இந்நிலையில், கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் நுட்பமான விவரங்களுடன் திருத்தி எழுத கேட்டுக்கொள்ளப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியுள்ளது.

    கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

    கீழடி ஆய்வறிக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்திய தொல்லியல் துறைக்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழின் கலாச்சார நாகரிகத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அரசு இயந்திரத்தை தமிழர்களுக்கும், தமிழரின் பண்பாட்டிற்கும் எதிராக பயன்படுத்துகிறார்கள்.

    சமஸ்கிருதத்திற்குத் தமிழைப் போல பழமையான வரலாற்றுச் சான்றுகள் இல்லாதபோது, தமிழுக்கு இவ்வளவு ஆழமான மற்றும் அதிகாரபூர்வ அங்கீகரிக்கப்பட்ட வரலாறு உள்ளது என்பதை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்.? அதனால்தான் கீழடி அகழ்வாயின் ஆய்வறிக்கையை வெளியிட தாமதப்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    மொழி, பண்பாடு, நிதி பகிர்வு, மாநில சுயாட்சி, கல்வி என அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    கீழடி ஆய்வு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
    • மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல்

    பிரதமர் மோடி தலைமையில் இன்று மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருப்பது ராகுல்காந்தி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரை தனது எக்ஸ் பதிவில், "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு, தலைவர் ராகுல்காந்தி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×